Saturday, August 28, 2010

கனக துர்கா - பாஸ்கர் சக்தி

வெளியீடு: வம்சி பதிப்பகம்
ஆசிரியர்: பாஸ்கர் ஷக்தி
விலை: 250 ரூபாய்

சென்னையில் முதன் முறையாக நடைபெற்ற
வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டில் தான் 'கனக துர்காவை' வாங்க நேர்ந்தது. விழா நடைபெறுவதற்கு முன்பாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகத்தில் ஒன்றை கையில் எடுத்தேன். மேற்புற அட்டையைத் தலைகீழாக ஒட்டி இருந்தார்கள். புத்தகத்தை நேராக வைத்து உள் அட்டையைப் பார்த்தேன். பாஸ்கர் ஷக்தி தலைகீழாக சிரித்துக் கொண்டிருந்தார். பவாவிடம் கொடுத்தேன். அவர் திருப்பிப் பார்த்துவிட்டு "யாருப்பா அங்க, இத மொதல்ல மறைச்சி வையுங்க... பாஸ்கர் பார்த்தா கொன்னுடுவான்" என்று யாருக்கோ பதில் சொல்லிவிட்டு, "இப்போ புத்தகத்தை எடுக்காதீங்க. வேற நெறைய புக்ஸ் இருக்கு, நல்லதா பார்த்து எடுத்துக்கோங்க..." என்றார்.

விழா முடிந்ததும் நல்ல புத்தகமாக ஒன்றை எடுத்துக்கொண்டு பாஸ்கரிடம் நீட்டினேன். "அவ்வளோ பெரிய ஆளா நான்! ஆட்டோகிராஃப் எல்லாம் கேக்குறீங்க?" என்று சிரித்துக் கொண்டே கையொப்பமிட்டார். அப்படியே, "இலட்சுமண பெருமாள், கா சீ சிவக்குமார் எல்லாம் என்னை விட நன்றாக எழுதுவார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். இந்த மென்மையான, உயர்ந்த குணம் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று.

அவருடைய மனிதத் தன்மை அவரைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லோருமே வியக்கக் கூடிய ஒன்று. அதைப் பற்றிய தமிழ்நதியின் சுவாரஸ்யமான பதிவு:

பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…


பாஸ்கரைப் போலவே அவருடைய கதைகளும் மென்மையான வாசிப்புக்கு உகந்தவை. கிராமத்து நினைவுகளை புன்னகையுடன் அசைபோச வைப்பவை. தொகுதியில் மொத்தம் 31 கதைகள் இருக்கிறது. எல்லா கதைகளுமே வாசிப்பவருக்கு நிறைவைத் தரக் கூடிய கதைகள். எள்ளல்களுடனும், நக்கல்களுடனும் கதை நகர்ந்து சென்றாலும் வாசிப்பின் முடிவில் எதோ ஒரு துக்கத்தை நம்மீது கவிழ்த்துவிட்டுச் செல்லக் கூடியவை. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் பொழுது சில அடிப்படை விஷயங்கள் சிதைக்கப்படுகிறது. நாகரீக வாழ்க்கை, உயர்ந்த வாழ்க்கை என்று நாம் நம்பக் கூடிய விஷயத்திற்காக தினம் தினம் சிதைத்துக் கொண்டிருக்கின்ற கிராமம் சார்ந்த வாழ்க்கையையும், மனிதர்களையையும் இந்தக் கதைகளில் பாஸ்கர் ஷக்தி அடையாளப் படுத்தியுள்ளார்.

கார்த்திகா வாசுதேவன் பதிவில் அழகர்சாமியின் குதிரை தொகுதியிலுள்ள பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் பற்றி சிறு குறிப்பு படிக்கக் கிடைக்கிறது: http://mrsdoubt.blogspot.com/2009/07/blog-post_28.html

பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, வேலப்பர் மலை, தம்பி லட்சுமணா, காளான், வீராச்சாமி பிகாம், எழுநாள் சூரியன் எழுநாள் சந்திரன், அழகர் சாமியின் குதிரை என்று ஒவ்வொரு கதையைப் பற்றியும் சிலாகித்துப் பேசலாம். இவருடைய அழகர் சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது உபரித் தகவல்.

தொகுதி முழுவதையும் வாசித்துவிட்டு பைத்தியக்காரனின் உதவியுடன் பாஸ்கரிடம் பேசினேன்.

"உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் பாஸ்கர். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் கிருஷ்ண பிரபு பேசுகிறேன்" என்றேன்.

"கேணிக்கு வருவிங்களே அவர் தானே. உங்களை எனக்குத் தெரியும். சொலுங்க..." என்றார்.

எனக்கான ஆச்சர்யத்துடன், "உங்களுடைய கனக துர்கா தொகுப்பிலுள்ள சிறுகதைகள் நன்றாக வந்திருக்கின்றன பாஸ்கர். நீங்க இந்த மாதிரி எழுதுவீர்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய பால்யகால வாழ்க்கையின் சிறுவயது அனுபவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. சந்தோஷமாக இருக்கிறது" என்றேன்.

"ஒ மொத்தத்தையும் படிச்சிட்டிங்களா. நன்றி..."

"உங்களுடைய எழுத்தில் இறுக்கம் இல்லை. ஆனால் எதையோ அசைத்துவிட்டுச் செல்கிறீர்கள்..."

"நம்ம கேரக்டர் அப்படி.... 25 வயசு வரை நடந்ததைத் தானே எழுதி இருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கே..." என்றார்.

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." என்று பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பார். டிவி சீரியல், திரைப்படம் என்று இதர பணிகள் அவருடைய காலை இழுத்தாலும், எழுதுவதற்கான அவகாசம் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றே வாசகனாக ஆசைப்படுகிறேன். பாம்பு அதனுடைய தோலை உரிக்கும் கால அவகாசமும், வலியும் என்னுடைய புத்திக்குத் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவருடைய இன்னுமொரு தொகுதியின் பக்கங்களை புரட்டுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்.

பாஸ்கர் சக்தியின் இதர பங்களிப்புகள்:

மெகா சீரியல்: மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம்
திரைப்படம்: எம்டன் மகன், வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல

Saturday, August 14, 2010

பீக்கதைகள் - பெருமாள் முருகன்

வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
விலை: 60 ரூபாய்

காலச்சுவடு பொறுப்பாசிரியர்களில் ஒருவரான பெருமாள் முருகனின் இந்தப் புத்தகத்தை வாங்கக் கையில் எடுத்தவுடன், சிறுவயதில் டவுசரை கழட்டிவிட்டு மலம் கழிக்க ஓடிய நாட்கள் ஞாபகம் வந்தது. எனக்கு 12 வயது முடியும் வரை என்னுடைய கிராமத்தில் ஒருவர் வீட்டில் கூட கழிப்பறைகள் இல்லை. வெயில் நாட்களில் வயல்வெளிகளை நோக்கியும், மழைக்காலங்களில் கல்கத்தா நெடுஞ்சாலையை நோக்கியும் ஓடிக்கொண்டிருப்போம். அரசாங்கத்தில் மானியம் தந்த பொழுதுதான் எல்லோரும் கழிப்பறை கட்டத் தொடங்கினோம். ன்று எல்லோர் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது என்றாலும் வயல்வெளியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மணிச் சத்தும் வருங்கால விவசாயமும் - என்ற கட்டுரையில் மனிதக் கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது என்று படிக்கும் வரை "ஏன்தான் இப்படி அகண்ட வெளியை அசிங்கம் செய்கிறார்களோ" என்று அங்காளி பங்காளிகளைப் பொருமிக் கொண்டிருந்தேன். இதன் மற்றொரு பக்கம் நகரத்தில் (சென்னை) முதன் முறையாக சிறுநீர் கழிக்க பணம் கொடுத்த பொழுது "இதக் கூடவாடா பணமாக்குவிங்க" என்று வருத்தப் பட்டிருக்கிறேன்.

முன்பிருந்த கிராமங்களில் கழிவு நீரை வீட்டிலுள்ள தோட்டத்திற்கும், இதர திடக் கழிவுகளை வயல்களுக்கு உரமாகவும் சேர்த்து விடுவார்கள். இன்று கிராமமோ நகரமோ கழிவு மேலாண்மை என்பது சவாலான விஷயம் தான். நம்முடைய வசதிக்காக அதனை அருகிலுள்ள நீர் நிலைகளிலோ அல்லது ஆழமாக பள்ளம் வெட்டி அதில் சேர்பித்தோ தற்காலிகமாக தப்பித்திக் கொள்கிறோம். இயற்கை சுழற்சி இங்குதான் தடைபடுகிறது. கருங்கடல் போல் காட்சியளிக்கும் மெரினாவில் கால் நனைப்பவர்கள், மலம் கலந்த சாக்கடையில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை என்றுதான் உணர்வார்களோ தெரியவில்லை. சென்னையின் மத்தியத் தர ஹோட்டல்களில் குடிநீர் காலங்களாகவே இருக்கிறது. அந்த நேரங்களிலெல்லாம் 'கிணறு வெட்ட பூதம்' என்ற பதிவு வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சென்னையில் 42.16 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்பொழுது 50 லட்சத்தைத் தாண்டி இருக்கலாம். இது தவிர வேலைக்காகவும், வியாபாரமாகவும், சுற்றுளாவுக்காகவும், இதர காரணங்களுக்காகவும் தினம் தினம் வந்து செல்பவர்கள் வேறு. சராசரியாக 50 லட்சம் லிட்டர் சிறுநீரும், அதற்கேற்ற மலமும், சளியும், எச்சிலும், துப்பாலும், வாந்தியும் என்று மனிதனால் மட்டுமே வெளியேற்றப்படும் கழுவுகள் நம்மைச் சுற்றித் தான் பயணிக்கின்றன. கூவமும், அடையாறும், மெரினாவும், ஆங்கிலேயன் கட்டிய பாதாளக் கால்வாயும் நம்முடைய கழிவுகளைத் தாங்கியே நோயுற்றுள்ளன. இன்று பல பேரூராட்சிகளும் சென்னையைப் போலவே பெருநகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் கூட இதேதான் கதி.

சிறுநீர் கழிக்கப்படாத கரண்ட் கம்பன்களைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். மலம் கழிக்கப்படாத நடை மேடைகளே சென்னையில் இல்லை. நான் ஒவொரு அடியையும் ஜாக்கிரதையாகவே எடுத்து வைக்கிறேன். அதைக் கழித்தவர்களுடைய அவஸ்தை எனக்குப் புரிந்தே இருக்கிறது. நான் மூச்சைக் கூட தயங்கித் தயங்கியே உள்ளிழுக்கிறேன். ஒவ்வொரு மூச்சிலும் சிறுநீரின் ஈரமும், மலத்தின் துர்நாற்றமும் சேர்ந்தே இருக்கிறது என்ற உண்மை என்னை பாடாய்ப்படுத்துகிறது. ஐம்பூதங்களில் வானையும், நெருப்பையும் தான் மனிதக் கழிவுகளை இட்டு நிரப்பாமல் மிச்சம் வைத்திருக்கிறோம்.

மனிதன் வெளியேற்றும் கழிவுகள் இயற்கையை நாசப்படுத்துகிறது. இயற்கை உபாதையோ மனிதனை சங்கடப்படுத்துகிறது. சில நேரங்களில் அவமானப்படுத்துகிறது.பயணத்திலோ, புதிய இடத்திலோ, தமக்குப் பழக்கமில்லாத முறையிலோ, மரணப் படுக்கையிலோ அவசரம் அழைக்கும் பொழுது செய்வதற்கு எதுவும் இல்லை. இங்குமங்கும் ஓடி, நெளிந்து சுருங்கி அடுத்தவர்களால் பரிகாசமாகப் பார்க்கப்படுகிறோம். ஒரு மனிதன் அவசரத்தில் ஒதுங்கி வைப்பது மட்டுமே மலம் அல்ல. அவசர வாழ்க்கையில் சக மனிதனை ஒதுக்கினால் அவனும் மலமே. சூழ்நிலைகளும் சங்கடங்களும் தான் அதனை நிர்ணயிக்கின்றன. அவைகளே இங்கு கதைகளுக்குக் கருவாகின்றன. 'மலத்தை' மையமாக வைத்த சங்கடங்களைத் தான் பெருமாள் முருகன் கதைகலாக்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அனுபவத்தை ஏற்படுத்திச் செல்கிறது. இங்கும் சில கதைகள் ஏதோ ஓர் இறுக்கத்தை இறக்கிவிட்டுச் சென்றன. அவையெல்லாம் மலச்சிக்களுக்கான உணர்வை ஏற்படுத்திச் சென்றன. சில கதைகள் என்னை இளகச் செய்தன. அவையெல்லாம் மலம் கழித்த உணர்வை ஏற்படுத்திச் சென்றன.

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளின் சிறு குறிப்பினை நண்பர் ஜெயகுமாரின் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.


நூலாசிரியரைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் பதிவு:



Saturday, August 7, 2010

சொல்லில் அடங்காத வாழ்க்கை - ஷாஜி

வெளியீடு : உயிர்மை
ஆசிரியர்: ஷாஜி
தமிழில்: ஜெயமோகன்
விலை: 120 ரூபாய்

இசை, கேட்பவர்களின் உணர்வுகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடிய விஷம். உணர்ச்சிகளின் வடிகாலாகவும், காயங்களின் ஆறுதலாகவும் உயிரினங்களை அற்றுப்படுத்தக் கூடிய விஷயம். எனவே ஆத்மாவுடன் இணைந்து ஒரு படைப்பைக் கொடுக்கும் பொழுதுதான் கலைஞர்கள் பிரகாசிக்கிறார்கள். ஆகவேதான் ரசிகர்களும் அவர்களின் பின்னால் ஓடுகிறார்கள். இசை பல பரிமாணங்களில் உலகமெல்லாம் ரசிக்கப்படுகிறது. 'கிளாசிக், செமி கிளாசிக், லைட் மியூசிக், பாப்,ராக்' என்று தனித் தனியாக இசையைக் கொண்டாடும் ரசிகர்கள் எங்கும் இருக்கிறார்கள். ரசிகர்களின் இசை மீதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலைஞர்கள் கால இடைவெளியில் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். சில உன்னதமான கலைஞர்கள் காலத்தால் மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

மகுடி ஊதும் பாம்பாட்டிகளும், நாதஸ்வரம் இசைக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களும் தான் எனக்கான சிறுவயது ஆதர்சனங்கள். ஒரு கைப்பிடி அரிசிக்காக மகுடி இசையும், நாதஸ்வர இசையும் எங்கள் தெருக்களில் வழிந்தோடி இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருமுறை எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுதும் எங்களுக்கான பிரம்மிப்புகளை சுமந்துகொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின்னாலுள்ள வலியினை, வறுமையினை, வாழ்க்கைப் பின்புலங்களை ஒருநாளும் அறிந்ததில்லை.

அடைகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டினை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவருவதைப் போல குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்ததும் என்னை பெரிதும் ஆக்ரமித்த விஷயம் திரையிசைதான். 'இசையமைப்பாளர்கள், பாடக பாடகிகள், பாடலாசிரியர், கருவிக் கலைஞர்கள்' என்று பிரித்தறியத் தெரியாமல் எல்லாவற்றையும் ஒன்றாக உள்வாங்கி சந்தோஷித்த ஆரம்ப நாட்கள் வானொலி முன்பும், தொலைக் காட்சி முன்புமே கழிந்திருக்கின்றன. கல்லூரி வாழ்க்கையில் தான் திரைப்படத்தின் பல்வேறு கூறுகளையும், திரையிசையின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மூலம் பல பரிமாணங்களும், பங்களிப்பாளிகளின் திறமைகளும் தெரியவந்தது. மகுடி இசையின் மயக்கத்தைக் காட்டிலும் போதையான நாட்கள் அவை. குறிப்பாக பாடகர்கள் மீதும், கருவி இசைக் கலைஞர்கள் மீதும் எனக்கு இருந்த போதை அளவிட முடியாத ஒன்று. அவர்களில் ஒருவரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று பல பெயர்களைக் குறித்து வைத்திருந்தேன். இறுதியில் நான் பார்த்த ஒரே பாடகி ஜானகி அம்மா மட்டுமே.

எனக்கு ஒருமுறை வாய்த்த அனுபவம் பன்னாட்டு இசை நிறுவனங்களில் வேலை செய்ததால் ஷாஜிக்கு பலமுறை கிடைத்திருக்கிறது. அந்த அனுபவங்களையும், அவருடைய சிறுவயதில் ரசித்த கலைஞர்களின் வாழ்க்கையையும் கட்டுரைகளாக்கி இருக்கிறார். சலில் சௌத்ரி, மெஹ்தி ஹசன், பாப் மார்லி, ஏ எம் ராஜா, ராஜ்குமார், மன்னா டே, ஃபிரெடி மெர்குரி, MSV, கீதா தத், S ஜானகி, போனிஎம், RK சேகர் என்று பலரைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஜெயமோகன் உயிர்மைக்காக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஷாஜியின் தமிழ் வலைப்பூவில் வாசிக்கக் கிடைக்கிறது. (http://musicshaji.blogspot.com)

ஷாஜியின் இளையராஜா பற்றிய கருத்துக்களுடன் கொஞ்சமும் ஒத்துவராதவன் நான். நாளை மதியம் (Aug 8 2010) கேணி சந்திப்பிற்கு செல்ல இருப்பதால் அவரைப் பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்குமென்று வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்து மறைந்த மேதைகளைப் பற்றிய மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புபோல் அமைந்துள்ள புத்தகம் என்பதால் டிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.