Wednesday, April 14, 2010

செல்லுலாயிட் சித்திரங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு சீன வரலாறு மற்றும் சீனத் தலைவர்களைப் பற்றி தமிழில் புத்தகங்கள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன். கிழக்கு, ஆழி மற்றும் NCBH பதிப்பகங்களில் சில புத்தகங்கள் கிடைத்தன. அப்படியே ஸ்பென்சர் பிளாசாவிலுள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்த வேறொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

லேண்ட்மார்க் (www.landmarkonthenet.com)- இணைய தளத்தின் ஆன்லைன் மார்க்கெட்டிங் குழுவில் நானும் ஒருவனாக இருப்பதால், அங்கு விற்கப்படும் பல வகையான புத்தகங்களில், எந்த இடத்தில் அதிக நபர்கள் கூடுகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மணி நேரம் செலவு செய்தேன். மதிய வேளையில் சென்றிருந்ததால் மிதமான கூட்டமே இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகம், பாட சமந்தப்பட்ட புத்தகம், புனைவு மற்றும் அபுனைவு என ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிட்டு தமிழ் புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.

'அர்த்தமுள்ள இந்துமதம்' கனமான ஒரே புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். பதிப்பகத்திற்கே
நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டு, மேலும் சில புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஓர் இளம் காதல் ஜோடி சென்றார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எங்கு செல்கிறார்கள் என்று பார்த்தேன். டிஸ்கௌண்டில் சில புத்தகங்களை அடுக்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அதன் அருகிலேயே காமசூத்ரா புத்தகங்கள் சிறியதும் பெரியதுமாக அடுக்கியிருந்தார்கள். அவற்றிலிருந்து ஒரு சிறிய புத்தகத்தை எடுத்த காதலன் அந்தப் பெண்ணிடம் காட்டிச் சிரித்தான். அவள் மிரட்சியுடன் அக்கம் பக்கம் பார்த்தாள். அப்படியே நான் அவர்களை கவனிப்பதையும் பார்த்துவிட்டாள். நான் கூச்சத்துடன் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். 'செல்லுலாயிட் சித்திரங்கள் ஆசிரியர் - தமிழ்மகன்' என்றிருந்தது. அடடே... நம்மாளோட புத்தகமான்னு எடுத்துக் கொண்டு cash counter-க்குச் சென்றேன். எனக்கு முன்னாள் அந்தப் பையன் ஆசையாக எடுத்த சிறிய புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())((

தளபதிக்கு ஆண் குழந்தை, தலைக்கு பெண் குழந்தை, சூப்பர் ஸ்டார் இமயமலை செல்கிறார், அவருக்கு இவருடன் காதல், இளம்புயல் ஹாலிவுட்டில் நுழைகிறது - இந்த விஷயங்கள் தலைப்புச் செய்திகளாக வராத நாளிதழோ, வார இதழோ, சாட்டிலைட் சேனல்களோ இன்று இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அதனால் தான் எறும்பு இனிப்புக் கட்டியைச் சுமந்து கொண்டு இங்குமங்கும் அலைவது போல ரசிகனும் அதீத ஆசையினால் நட்சத்திரங்களின் முகவரியைத் தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைகிறான். அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான்.

"ஒருத்தனை மொட்டை மாடியில நிக்க வச்சி சினிமா வெளிச்சம் போட்டு காட்டிடும் மாமா" என்று மருமகன் எப்பொழுதாவது சொல்லுவான்.
அந்த வெளிச்சத்தில் நனைந்தவர்களின் வாழ்க்கை விசித்திரம் நிறைந்தது. சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில் சீண்டுவாரில்லாமல் இருந்தவர்கள், திறமையும் அதிர்ஷ்டமும் இருந்து தனது பங்களிப்பின் மூலம் உச்சத்தை அடைந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கைப் பாதையே மாரிவிடுகிறது. சுதந்திரத்தையும், நிம்மதியையும் இழந்து நட்சத்திரங்கள் என்ற டை மொழியை அடைந்த பிறகு அவர்களின் ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுகிறது. முக்கியமாக அவர்களின் அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களின் ஆவல் அளவிட முடியாதது. என்னதான் ஆவல் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்காது. நிருபர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு அமையும். தமிழ்மகன் சினிமா நிருபராகவும், வண்ணத்திரை இதழின் எடிட்டராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளதால் சுவாரஸ்யமான அனுபவங்கள் அவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து உயிரோசையில் கட்டுரையாக எழுதி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

ஒன்றிற்கு இரண்டாக சம்பவங்களைத் திரிப்பதாலும், கிசுகிசு செய்திகளையும் பத்திரிகைகள் வெளியிடுவதால் நிருபர்களுக்கு எல்லா நேரங்களிலும் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தமிழ் மகனுக்கும் ஒன்றிரண்டு அனுபவங்கள் அப்படி நடந்திருந்தாலும், மற்ற அனுபவங்கள் மென்மையானதாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது. குறிப்பாக நடிகர் சூர்யா, அஜித், அரவிந்சாமி, ரஜினி, செல்வா, சிவாஜி, மணிரத்னம், ஷங்கர், AR ரகுமான் மற்றும் நடிகை வினோதினி, கௌதமி, ரோஜா, தேவிகா, மனோரமா, ஷகிலா போன்றவர்களுடனான அனுபவங்கள் பிரபலங்களின் மற்றுமொரு மென்மையாக முகத்தினைக் காட்டுவதாக இருக்கிறது.

ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் சக மனிதர்களின் மீதான நேச உணர்வுகளையும் காட்டும் அனுபவக் குறிப்புகள் இவை. நட்சத்திரங்கள் தங்களின் சுயத்தை இழந்துதான் திரையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக எளிமையாக, எந்தவித அலங்கார பூச்சுக்களும் இன்றி இயல்பாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பிரபலங்கள் என்ற மாயையைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும் தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார். ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடிய அருமையான அனுபவக் குறிப்பு.

ஒரு சில கட்டுரைகளை அவருடைய வலைத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது:


1.
அஜித், ஷங்கர், வினோதினி பற்றி
2.
சரத் குமார், சோனியா அகர்வால் பற்றி
3.
ரஜினி, மனோரமா, சிவசக்தி பாண்டியன் பற்றி
4.
எஸ் ஏ சந்திரசேகரன், சன் டி வி, ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவி பற்றி
5. எஸ்.எஸ்.ஆர், AR ரகுமான், சுஜாதா பற்றி
6. துள்ளுவதோ இளமை, இயக்குனர் சீமான் பற்றி
7. கஸ்தூரி, முரளி பற்றி

மேலும் படிக்க அவருடைய வலைத் தளத்தில் 'நினைவலைகள்' என்ற லேபுளுக்குச் செல்லவும்.
புத்தகம்: செல்லுலாயிட் சித்திரங்கள்
ஆசிரியர்: தமிழ்மகன்
பக்கங்கள்: 208
விலை: ரூ.100/-
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

4 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வெ. சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழில் முதலில் சீனாவைப் பற்றி வெளிவந்த புத்தகம் அது!

Unknown said...

எங்கு கிடைக்கிறது கிருஷ்ணா. பதிப்பகத்தின் பெயரைச் சொல்ல முடியுமா?

கிருஷ்ண மூர்த்தி S said...

பதிப்பகத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால், உடுமலைடாட்காமில் கிடைக்கிறது. விலை ரூ.150/-

http://www.udumalai.com/?prd=&%232970;&%233008;&%232985;&%233006;&%232997;&%233007;&%232985;&%233021;%20&%232997;&%232992;&%232994;&%233006;&%232993;&%233009;.&page=products&id=4783

Unknown said...

தகவலுக்கு நன்றி கிருஷ்ணா.