Friday, September 24, 2010

அரவிந்தன் சிறுகதைகள்

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அக்கா (ஜெயா) கொட்டிவாக்கத்தில் குடியிருந்தாள். அவளுடைய மகள் நான்கு மாதக் குழந்தை(அனைன்யா). நண்பகலில் கூட இருள் கவிழ்திருக்கும் வீடு என்பதால் கொசுத் தொல்லையைக் கேட்கவே வேண்டாம். வியாதிகள் சென்னையை உலுக்கிய காலம் என்பதால் ஹாரிபோட்டேரில் வரும் மாஜிக்கல் ஸ்டிக் மாதிரி mosquito bat-ஐ கையில் வைத்துக் கொண்டு கொசுக்களை நோக்கிப் பறந்து கொண்டிருந்தாள் (அவளுடைய மகளுக்காக). கொசுக்கள் 'ழீங்' என்ற ஒலியுடன் அவளுக்கு முன்னே மிதந்துகொண்டிருந்தன. Bat - ல் கொசுக்கள் பட்டவுடன் 'பட்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தன. வேட்டையாடிய களைப்பில் மூச்சு வாங்க அக்கா பக்கத்தில் அமர்ந்தாள். குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது.

மூச்சை இழுத்துவிட்டபடி 'உனக்கு ஒன்னு தெரியுமாடா?' என்று கேட்டாள்.

'தெரியாது' என்று சொன்னால் என்னுடைய அக்கா திட்டமாட்டாள். 'தெரிஞ்சிக்கோடா தடிப்பயலே' என்று அன்புடன் சொல்லித் தருவாள். ஆகையால் 'தெரியாது' என்று சொன்னேன்.

'உலகத்தில் கொசு மாதிரி பூச்சிகள் பறக்கரதாலதான், அதெல்லாம் ஏற்படுத்தக் கூடிய சப்தத்தில் தான் உலகமே ஒரு சமநிலையில் இருக்குதாம்' என்றாள்.

எனக்கான ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன்.

தொடர்ந்து 'ஆசிய கண்டத்தில் சைனாவில் என்று நினைக்கிறேன், பட்டாம்பூச்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக பறக்குமாம். அதன் பலனாக அமெரிக்கக் கண்டத்தில் ஏதோ ஓர் இடத்தில் மழை பொழிகிறதாம். விஞ்ஞானிகள் கூட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள்.

நான் மெளனமாக அவள் சொல்லியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். அக்கா அவளுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள். பூச்சிகளின் ஒலிகள் என்னுள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

என் அக்கா சொல்லியது உண்மையோ? பொய்யோ? எனக்குத் தெரியாது. உலகையே சமநிலைப் படுத்தும் ஒலிகள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. யோசனைகள் இரைச்சலாகி கற்பனைகளின் இழைகளுக்கு இட்டுச் சென்றன. அரவிந்தனின் சிறுகதைகளும் இதுபோன்ற மௌனங்களாலும், உணர்வுகளாலும் ஒலிகளாலும் உருப்பெற்றவைதான்.

மனம் தனது பெருவெளியில் விந்தைகளை சுரந்தபடியே இருக்கிறது. மௌனம் தனது மாய விரல்களால் உணர்ச்சியின் நரம்புகளை மீட்டியபடியே இம்சை செய்கிறது. உடம்பிலுள்ள நுண்ணிய துளைகள் யாவும் காதுகளாகி அவற்றின் அதிர்வுகளை வாங்கியபடியே இருக்கின்றன. ஒரு மாயச்சுழியில் அதிர்வுகள் சிக்கி பேரிரைச்சலை உண்டு பண்ணும் சூழ்நிலைகளை தான் அரவிந்தன் சிறுகதைகளாக்கி இருக்கிறார்.

நாகதோஷம், வலி, சலனங்கள், மழை தீர்ந்த மரம், குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது ஆகிய கதைகள் அவருடைய எழுத்தில் நன்றாக வந்திருக்கிறது. மௌனத்தின் குரல் இதயத்திலும், இதயத்தின் தாளம் மௌனத்திலும் சங்கமிக்கும் வித்யாசமான கதைகள்.

எழுத்தாளர் அரவிந்தன் காலச்சுவடு இதழின் ஆலோசனைக் குழுவில் ஒருவராக இருக்கிறார். 'இந்தியா டுடே' போன்ற இதழ்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிருபராக வேலை பார்த்தவர். இவருடைய கட்டுரைத்தொகுப்பு கூட காலச்சுவடில் வெளிவந்துள்ளது. தொகுப்பிலுள்ள கதைகள் கூட காலச்சுவடு, இந்தியா டுடே, புதிய வார்த்தை, பன்முகம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தவைகள் தான்.

புத்தகத்தைப் பற்றி பின்னட்டையிலுள்ள வாசகம்:

*********************************************************
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைக்குள் பாம்புகளை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. - தேவிபாரதி
*********************************************************
http://www.ensorkal.blogspot.com - அரவிந்தன் வலைப்பூவைத் தொடங்கி நேரமின்மையால் தொடர்ந்து பதிவிடாமலே இருக்கிறார். அவ்வப்பொழுது உங்களுடைய கதைகளையும், கட்டுரைகளையும் பதிவேற்றலாமே என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன். அவருக்கும் அந்த எண்ணம் இருப்பதாகச் சொல்லி இருந்தார். இந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி அவர் எழுதியுள்ள முன்னுரை மட்டும் அவருடைய வலைப் பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

புத்தகத்தைப் பற்றிய தகவல்கள்:
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர்: அரவிந்தன்.
விலை: 60 ரூபாய் /-

3 comments:

நட்புடன் ஜமால் said...

ஆச்சர்யமாய்தானிருக்கு அக்கா சொன்னது ...

வழமை போல நல்ல அறிமுகம்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல அறிமுகம் கிருஷ்ணா! நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life