Saturday, December 4, 2010

எனது மதுரை நினைவுகள்

கேணி ஓவியர் சந்திப்பு - மனோகர் தேவதாஸ்

ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றியுள்ள இடமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சூழ்நிலையை சமாளித்தவாறே நம்முடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். கலைந்த பாதச்சுவடுகள் பாதைகளெங்கும் ஏராளமாக விரவிக் கிடக்கிறது. ஏற்படுத்திய பாதங்களை நாம் யோசிப்பதே இல்லை. விரையும் பயணத்தில், பதிந்த சுவடுகளை சிதைத்து விட்டுச் செல்கிறோம். காற்றின் கைகள் வருடும் முன் நம்முடைய தடயங்களை அடுத்தடுத்த ஜோடிக்கால்கள் வேகமாகச் சிதைக்கிறது. இதில் நம் பயணத்தின் அடையாளம் தான் என்ன!?,

மனோகர் தேவதாஸின் வாழ்க்கைப் பயணம் - அலையின் கரங்கள் தீண்ட முடியாத, ஈரக்கால்கள் பதிந்த வசீகரத் தடயம் போன்றது. வாழ்க்கையின் இருப்பே கேள்விக்குறியாகும் பொழுது "அடுத்தது என்ன?" என்ற ஐயம் எழும். எதிர்மறையான தருணங்களை சாதகமாக மாற்றும் பொழுதுதான் வாழ்வின் சுவையான பகுதியினை அனுபவிக்க முடிகிறது. இவருடைய வாழ்க்கை ஊகிக்க முடியாத திருப்பங்களை உடையது. திருப்பங்கள் உறைய வைக்கக்கூடிய அதிர்ச்சியை அளித்தாலும் அதிலிருந்து மீண்டு சாதனை படைத்தவர். அந்த சாதனைகளில் இந்தப் புத்தகமும் ஒன்று.

1940-களின் தொடக்கத்திலிருந்து அவர் வாழ்ந்த மதுரையை சுற்றியே நாவல் நகர்கிறது. பச்சை கிணறு, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், யானை மலை, வைகை ஆறு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், ரயில்வே காலனி என்று நண்பர்களுடன் சுற்றிய பல இடங்களின் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில் மதுரை மக்களின் மனநிலை மற்றும் வாழ்வியல் நிலை, சுதந்திர இந்தியாவில் அவர்களுடைய மனநிலை மற்றும் வாழ்வியல் நிலையினை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளின் உரையாடல் மூலம் அழகாக சொல்லிச் செல்கிறார்.

இந்த புத்தகத்தை எழுத நேர்ந்ததின் கட்டாயத்தை கேணி சந்திப்பில் மனோகர் தேவதாஸ் கூறிய பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது. Green Well Years - என்று ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதி இருக்கிறார். அவருடைய நண்பர்கள் மற்றும் எழுத்தாளர் அசோகமித்ரனின் முயற்சியினால் தான் தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்.

தூங்கா நகரமான மதுரை வீதிகளில் உலாவ வேண்டுமென்பது நீண்ட நாள் விருப்பம். இதுநாள் வரை அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. சபரி மலைக்கு சென்றபொழுது அதற்கான வாய்ப்பு கிடைத்தும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது. நேரில் சென்று பார்த்திருந்தால் கூட மனோகர் தேவதாஸ் காட்சிப்படுத்தும் புராதன மதுரையை என்னால் உள்வாங்கி இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இன்று மதுரை எவ்வளவோ மாறி இருக்கலாம். மாற்றம் எல்லாவற்றிற்கும் பொதுவானதுதானே? அந்த விஷயத்தைக் கட்டுடைத்து காலத்தின் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ எடுத்துச் செல்லும் பக்கும் படைப்பாளிக்கு மட்டும் தானே இருக்கிறது. அந்த வேலையை தான் ஓவியர் மனோகர் தேவதாஸ் இந்த நாவலில் செய்திருக்கிறார். மதுரைவாசிகள் அவசியம் படித்து அனுபவிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.மற்றவர்களும் வாசித்து மகிழலாம்.


புத்தகம் தொடர்புடைய இதர பதிவுகள்:

1. எனது மதுரை நினைவுகள் - எழுத்தாளர் தமிழ்மகன்
2. எனது மதுரை நினைவுகள் - பதிவர் பிரேம்குமார்

எனது மதுரை நினைவுகள்
ஆசிரியர்: மனோகர் தேவதாஸ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

பின் குறிப்பு: மனோகரின் கலைப் படைப்பு எதை நீங்கள் வாங்கினாலும், அந்தப் பணம் ஏழை மக்களின் கண் மருத்துவ செலவிற்குப் பயன்படுகிறது. அவருடைய "வாழ்த்து அட்டைகள், ஓவியங்கள், புத்தகங்கள்" அனைத்தும் விலைக்குக் கிடைக்கிறது.

5 comments:

CS. Mohan Kumar said...

தங்களின் உயர்வான எண்ணம் பாராட்டுக்குரியது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்

அன்பேசிவம் said...

கிடைச்சது கிருஷ்ணா, உன்னோட மெசெஜும் கிடைச்சது, :-) அவசியம் வாங்குறேன் கிருஷ்ணா...

Joe said...

you have given my Japanese blog link? wow!

மணிஜி said...

அவசியம் படிக்கிறேன் கிருஷ்ணா..நன்றி

Prasanna Rajan said...

மதுரை இன்றளவிலும் மிகப்பெரிய கிராமம் தான். ஒவ்வொரு முறை தேனியிலிருந்து மதுரை செல்வது எனக்கு சுகானுபவம். மதுரையின் மனிதர்களும் அத்தனை மாறிவிடவில்லை...