ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: 45 ரூபாய்
சூரியன், சந்திரன், கடல் என ஒவ்வொன்றாக உலகத்தைப் படைத்த இறைவன் ஆறாம் நாள் ஆணைப் படைக்கிறான். ஆண் தனியாளாக தோட்டத்தில் சுற்றி அலைகிறான். "இவனுக்கு ஒரு துணையை ஏன் படைக்கக் கூடாது?" என்று கடவுள் யோசிக்கிறார். ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து பெண்ணை படைக்கிறான். நிர்வாணிகளான ஆணும் பெண்ணும் கபடமில்லாமல் சந்தோஷமாகச் சுற்றித் திரிகிறார்கள்.
கடவுள் அவர்களிடம் "இந்தத் தோட்டத்திலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்து அனுபவியுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு ஆப்பிள் இருக்கிறது அதை மட்டும் எடுக்காதீர்கள்... புசிக்காதீர்கள்..." என்று கூறுகிறார். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.
சாத்தான் பாம்பின் வடிவில் அவர்களுக்கு ஆசை கட்டுகிறது. "ஆப்பிளை சாப்பிட்டால் நீங்களும் கடவுள் ஆகலாம். நல்லது கெட்டது எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று உபதேசம் செய்கிறது. சாத்தானின் பேச்சுக்கு மயங்கிய பெண் ஆப்பிளை சாப்பிடுகிறாள். ஆணுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அதன் பிறகு சுகமான நிர்வாணம் அவர்களுக்குக் கூச்சத்தை அளிக்கிறது. கூச்சத்தைப் போக்க ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். மென்மையான இறைவனின் வருகையைக் கண்டு பயப்படுகிறார்கள்.
சாத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அதன் மூலம் ஆதமும், ஏவாளும் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஏமாற்றிவிட்டார்கள்.
ஏமாற்றுவது தவறு என்று சாத்தானுக்கும், ஆதாமிற்கும், ஏவாளுக்கும் ஏன் தெரியவில்லை? இப்பொழுது என் எதிரில் வந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?... நிற்க.
நல்லது கெட்டதை யோசித்து அவர்களை நான் கேள்வி கேட்கிறேன் என்றால் அவர்கள் சாப்பிட்ட ஆப்பிளின் எச்சம் என்னிலும் உள்ளதா?
நான் மட்டுமா நீங்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் எத்தனை கேள்விகளைக் கேட்டு சக மனிதர்களைக் காயப்படுத்துகிறீர்கள். கீழுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியையேனும் நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
1. ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?
2. உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
3. இவ்வளவு செய்யறேன்...ஆனாலும் என்னை யாரு மதிக்கிறா?
4. என்னை எதுக்கு படிக்க வச்சீங்க?
5. நெனச்சி நெனச்சி பேசினா எப்படி?
6. என்ன ஊரு இது... மனுஷன் வாழுவானா?
7. எதுக்கெடுத்தாலும் பொய்யா?
8. வாய்விட்டு எப்படி கேக்குறது?
9. உன்னால ஒரு வேலை சாப்பாடு போட முடியுமா?
10. வீட்டுல சும்மாவே இருந்தா எப்படி?
11. நான் அழகா இருக்கேனா?
12. எனக்குன்னு யாரு இருக்கா?
13. ஏன் இப்படி இருக்கீங்க?
14. எதுக்காக இவ்வளவு அவசரம்?
15. ஒரு ஆலாலே என்ன செய்ய முடியும்?
மேலுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் உங்கள் மீதோ அல்லது நீங்கள் சக மனிதர்கள் மீதோ வீசி இருப்பீர்கள். ஆகவே ஒரு சில கேள்விகளை நாம் வாழ்கையில் சந்தித்துதான் ஆகவேண்டும். தவறுகளிலிருந்தோ அல்லது இயலாமையிலிருந்தோ சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.
தவிர்க்க முடியாத அந்தக் கேள்விகளை உள்வாங்கி, தனது சொந்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி ஆனந்த விகடனில் S. Ra தொடராக எழுதியது புத்தகமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு குட்டிக் கதையையும் சொல்லி நம்மை அசர வைக்கிறார் எஸ். ராம கிருஷ்ணன். கட்டுரைக்கு ஏற்றாற்போல் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தேர்வுசெய்த ஓவியங்கள் பாராட்டும்படியாக உள்ளது. அழகான குட்டிக் கதைகளைக் கொண்ட அற்புதமான கட்டுரைகள். கண்டிப்பாக வங்கிப் படிக்கலாம்.
Details: Kelvikuri (Rs.45) - S.Ramakrishnan, Vikatan publications, chennai.





