Thursday, January 6, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - முதல் நாள்

நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்ல நினைத்தேன். டிக்கெட் கௌண்டரில் யாருமே இல்லை. போலீஸ் மாமாவிடம் விசாரித்ததில் "அதெல்லாம் இன்னைக்குக் கிடையாது உள்ள போங்க" என்றார். புதுப்பெண்ணை அலங்கரிப்பதைப் போல முதல்நாள் அரசு விழாவுக்கான மேடை தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு சுற்று சுற்ற உள்ளே சென்றேன். அங்கிங்கெனாதபடி எங்கும் புத்தகங்கள். ஆனால் எந்தப் பதிப்பகம்? எத்தனையாவது அரங்கு? என்பதெல்லாம் தெளிவில்லாமல் இருந்தது. கால் போன போக்கில் சென்ற பொழுது கிழக்கின் அரங்கு தென்பட்டது.

ஹரன்பிரசன்னாவின் விரல்கள் காற்றில் எதையோ தேடிக்கொண்டிருக்க, விட்டத்தைப் பார்த்து மந்திரம் ஓதுவது போல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கவிஞர்களின் செயல்களை ஆராய்வதற்கில்லை. பாராவின் "காஷ்மீர்" கிடைத்துவிட்டது. பத்ரியின் "ஸ்பெக்ட்ரம் சர்ச்சை" கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு விமலாதித்த மாமல்லன் புத்தக வெளியீட்டில் பாராவை சந்திக்க நேர்ந்தது. அலகிலா விளையாட்டு புத்தக சந்தையில் கிடைப்பது சந்தேகம் தான் என்றார். அதையும் மீறி நாவலை அச்சில் பார்த்தது மகிழ்வாய் இருந்தது. புத்தகத்திற்கான பணத்தைக் கொடுக்க பிரசன்னாவிடம் நெருங்கினேன்.

"வாங்க Sir..." என்றார்.

"நான் Sir இல்ல... கிருஷ்ணபிரபு..."

அவருடைய வேலையில் குறியாக பணத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டார். தோளை யாரோ தொடுவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் பத்ரி. உடன் மருதனும் நின்றுகொண்டிருந்தார். அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்படும் பொழுது மருமகனிடமிருந்து அழைப்பு வந்தது.

வெளியில் வந்தால், இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய, அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்துவிடுமோ என்று அரசியல் மேடைக்கு அருகில் செல்ல பயப்படுபவன் நான். இருந்தாலும் அவரிடம் சென்று பேசினேன்.

"உங்களை டேஃக் சென்டரில் பார்த்திருக்கிறேன். அருமையாக கதை சொல்கிறீர்கள்."

"ஒ சரி சரி... நீங்க என்ன பண்றீங்க..."

"சும்மா தான் இருக்கேன்."

தனது பையிலிருந்த அமுதசுரபி இதழின் பிரதியைக் கொடுத்து, "அலுவலகத்துக்கு வாங்க நிறைய பேசலாம்" என்று கிளம்பினார். புராண கதைகளில் வரும் உளவுபார்ப்பவர்கள் ராஜாவிடமிருந்து முத்திரை மோதிரத்தை வாங்குவது போல வாங்கிக்கொண்டேன். மருமகனை அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றேன். அவனுடைய நண்பருக்கும் சேர்த்து சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது.

காலச்சுவடை நெருங்கும் பொழுது கவிஞர் சுகுமாரன் நின்று கொண்டிருந்தார். "இவர் தாண்டா மதிலுகள் மொழிபெயர்ப்பாளர்" என்று மருமகனுக்கு அறிமுகப்படுத்தினேன். கூச்சம் அவனுடைய முகத்தில் நிழலாடியது. "பாத்துமாவின் ஆடு, ஆமென், பூக்கள் உறங்கும் நேரம், தாய்ப்பால், மீஸான் கற்கள், பால்யகால சகி, மதிலுகள், சப்தங்கள்" போன்ற புத்தகங்களை வாங்கிக் கொண்டு க்ரியா சென்றோம். திலீப் குமாரின் "கடவு" வாங்கிக்கொண்டு மீண்டும் கிழக்கு அரங்கிற்கு வந்தோம்.

குழந்தை வளர்ப்பு புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தால் பா ராகவன். மருமகனைக் கூப்பிட்டு அறிமுகம் செய்தேன்.

"பாரா கூட ஏதாவது பேசப் போறயாடா?" என்றேன்.

கூச்சத்தில் வெளிறி தலை கவிழ்ந்தான். பாரா எங்களிடமிருந்து நகர்ந்த பொழுது, "அவர் எல்லா எடத்துக்கும் போயிட்டு வந்து அலகிலா விளையாட்டு எழுதினாரா மாமா?" என்றான்.

"அவரிடமே கேட்க வேண்டியதுதானே?" என்று மீண்டும் பாராவை அழைத்து அவனிடம் நிறுத்தினேன். அதைப்பற்றி அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க நண்பர் சலீமுக்காக நிலமெல்லாம் ரத்தம், மாயவலை ஆகிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வெளியில் வந்தோம். இறுதியாக புறப்படும் பொழுது வெங்கட் செல்பேசியில் அழைத்தார்.

"டேய்... புத்தக கண்காட்சிக்கு ஜெயாவோட வந்திருக்கேன்... நீ எங்க இருக்க?"

மாமாவா என்னுடன் பேசியது!? விடுமுறை நாட்களில் நானோ? அக்காவோ? புத்தகம் படிக்க நேர்ந்தால், வலது காலால் என்னையும் இடது காலாம் அக்காவையும் விசைகொண்டு உதைப்பவர். அவரே தொடர்ந்து பேசினார்.

"Entrance-ல இருக்கேன் வந்து பாரு."

"என்ன வெங்கட் ஆச்சர்ய படுத்துறீங்க? வேலைக்குப் போகலையா?" என்றேன்.

"ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா கிளம்பிட்டோம்டா? ஏதாவது புக்ஸ் இருக்கான்னு பாக்க வந்திருக்கோம்."

எனக்கான ஆச்சர்யம் பல மடங்கானது. என்னுடைய அக்காவிற்கு எழுத்தாளர் ரமணி சந்திரன் மிகவும் பிடிக்கும். அதன் பிறகு அ முத்துலிங்கம் அதிகம் வாசிப்பாள். சமீபமாக பா.ராகவன் இணையத்தில் எழுதுவதை விரும்பிப் படிக்கிறாள்.

"பா ராகவன் இருக்காரு ஜெயா. அவரோட பேசறயா?"

"Oh Yes நிச்சயமா..."

பா ராகவனை நெருங்கும் பொழுது விமலாதித்த மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை இலக்கிய குஸ்தியாக இருக்குமோ? என்று தயங்கினேன். நீண்ட தவத்தைக் களைத்த பாராவை இலக்கியக் கூட்டங்களில் வேறு பார்க்க முடிகிறது. எனினும் இடையில் குறுக்கிட்டு அக்காவிற்கு அறிமுகப் படுத்தினேன்.

பரவச தயக்கம் நீங்கி இயல்பான பேச்சு வெளிப்பட்ட பொழுது அவருடைய எழுத்தில் தனக்குத் தெரிந்த குறையைத் தெரிவித்தாள்.

அடடா... ராகவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறாரோ என்று நினைத்த நேரத்தில் ஆராய்ச்சி மாணவனின் தீவிர கவனிப்போடு அக்காவின் வார்த்தைக்கு செவி கொடுத்தார்.

"நீங்க சொல்ற குணம் எழுத்ததாளனுக்கு இருக்கலாம், ஆனால் எழுத்தில் தெரியக் கூடாது. அப்படி இருந்தால் அதை சரி செஞ்சிடனும்." என்று விருப்பத்துடன் மென்மையாகப் பேசினார். மாமல்லன் அருகில் இருந்ததால் நிறைய நேரம் பேச இயலவில்லை. வேறொரு நாள் அவரிடம் பேசலாம் என கிளம்பினோம்.

நானும் அக்காவும் காலச்சுவடை நோக்கிச் செல்ல. வெங்கட் ஜே.கிருஷ்ண மூர்த்தி, புத்தா என தத்துவங்களை தேடிக்கொண்டிருந்தார். கிடைக்கும் புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு தவம் செய்வது போல நின்றுவிடுகிறார். சமயத்தில் நாலு கால் பாய்ச்சலில் ஓடிவிடுகிறார்.

"என்ன ஜெயா இது? மனுஷன், நம்மள விட மோசம் ஆயிட்டாரு!"

"எனக்கே தெரியலடா. இப்பல்லாம் புத்தகம் கையுமா தாண்டா அலையறாரு..." என்று மாமாவைப் பின்தொடர்ந்து அக்கா ஓடினாள். அவர்களுக்கு நான் கையசைத்ததை இருவருமே பார்க்கவில்லை. அசைத்த கையை அசைத்தவாறே திரும்பினேன். மீண்டும் கவிஞர் சுகுமாரன். நாளைக்குப் பார்க்கலாம் சுகுமார்ஜி.

"இன்னைக்கே திருவனந்தபுரம் போறேன்."

"அப்போ, எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டேன்.

"சொல்லுங்க..." என்றார்.

காதோடு காதாக, என்னுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தினேன். என்னிலிருந்து விலகி கண்ணிமைகளை மெதுவாக மூடி, தலையை ஒருபுறம் சாய்த்து, சப்தம் எழாமல் உதடுகளை வெட்டிச் சிரித்தார். அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியும். மின்னஞ்சலை சரிபார்க்கக் கிளம்பினேன்.

2 comments:

Prasanna Rajan said...

அப்புடி என்ன பாஸ் ரகசியம் பேசுனீங்க??

yeskha said...

// Prasanna Rajan said...
அப்புடி என்ன பாஸ் ரகசியம் பேசுனீங்க?? //

அதான் ரகசியமாச்சே....