Friday, January 7, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - இரண்டாம் நாள்

முதல் நாளிருந்த குளறுபடிகள் ஓரளவிற்கு சரிசெய்யப்பட்டு இருந்தது. உள்ளே நுழைவதற்கு ரூபாய் 5 செலுத்தினேன். உயிர்மை பதிப்பகத்தில் சில புத்தகங்களை பார்வையிடச் சென்றேன். உயிர்மையின் புத்தக விநியோகஸ்தர் தானசேகர் அங்குமிங்கும் ஓடி புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். மூஞ்செலி கருவாடை நுகர்வது போல (சைவமாக இருந்தால் மசால்வடை) ஒரு பையன் எஸ்ரா மற்றும் சுஜாதாவின் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் கொஞ்சமாகவா எழுதி இருக்கிறார்கள்!. சிறுவனின் ஆராய்ச்சியை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

உயிர்மையைக் கடந்து தமிழினி சென்றேன். "காலச்சுமை" - Sold Out என்பதில் மிக்க வருத்தம். இனி அடுத்த பதிப்பு வந்தால் தான் உண்டு. கிழக்கில் கூட அதே பையனை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவனை கடந்து பல அரங்கினுள் நுழைந்து கடைசியாக சந்தியா பதிப்பகம் சென்றேன். சிறிது நேரத்தில் அதே பையன் வந்து சேர்ந்தான். இம்முறை அவனிடம் ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது.

"அந்த கனமான புத்தகம் என்னது?"

அடுத்த நொடி பையிலிருந்த புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்தான். தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகள்.

"ஒ... உங்களுக்கு வரலாறு பிடிக்குமா?"

"இல்லன்னா எனக்குப் பறவைகள், விலங்குகள் பற்றி படிக்கப் பிடிக்கும். அதைப் பற்றி புத்தகங்கள் கிடைக்கல. வரலாறும் பிடிக்கும். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்கள் பிடிக்கும்" என்று மருதன், முத்துகுமார், பாரா எழுதிய புத்தகங்களை குறிப்பிட்டுப் பேசினான். மேலும் ஞாநியின் ஓ பக்கங்களுக்கும் ரசிகனாம். 'தேர்தலில் ஏன் ஓட்டுப் போடவேண்டும்?' என்ற ஞாநியின் கட்டுரையைப் படித்துவிட்டு, அதனை துண்டுச்சீட்டில் அச்சிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரியில் விநியோகம் செய்தானாம். எழுத வேண்டும் என்ற ஆர்வம் வேறு இருப்பதாகக் கூறினான்.

"பிறகு எழுத வேண்டியது தானே?"

"இல்லண்ணா... யார பாக்குறது, எப்படி பேசறதுன்னு தெயயலண்ணா..." என்று அப்பாவித் தனமாகக் கூறினான்.

பறவைகள் பற்றி மா கிருஷ்ணன் எழுதிய புத்தகம்(காலச்சுவடு), பிஞ்சுகள் - கிரா(அன்னம்) ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். இவனை என்ன செய்வது என்று மூளைக்குள் குடைச்சல் ஏற்பட்டது. ஒன்று பாராசூட்டில் கட்டி கிழக்கின் மொட்டை மாடியிலிருந்து தள்ளி விட வேண்டும் அல்லது கல்லைக் கட்டி கேணியில் தூக்கிப் போட வேண்டும். இரண்டில் எதைச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பாலு சத்யாவும், பா ராகவனும் கடற்கரைக் காதலர்கள் போல கைவீசி ஜோடியாக நடந்தபடி எதிரில் வந்தனர்.

"கும்பிடப் போன தெய்வம் ... என் குறுக்கே வந்ததையா..." என்றவாறு ஒரு காலைத் தூக்கி, கையைக் கூட நடராஜர் சிலை மாதிரி தூக்கிய பாதத்தை தொட்டும் தொடாமலும் இருக்குமாறு உள்ளங்கையை முறம் மாதிரி வைக்காத குறையாக நின்றேன். இந்த கோலத்தை ராகவன் எப்படி கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. எங்களைப் பார்த்ததும் சிரித்தார். வேகமாக பேன்ட் பாக்கட்டில் கையை விட்டார். விரல்களுக்கிடையில் சற்றே மினுமினுப்பாகத் தெரிந்தது. பேனா கத்தியாக இருக்குமோ? என்று பாதுகாப்பிற்காக "கனகவேல் காக்க" என முணுமுணுத்தவாறு பின்னால் நகர்ந்தேன். பாலித்தீன் பையில் இருந்த சிகப்பான பொருளை உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டுக்கொண்டார். அதன் நெடி தவழ்ந்து வந்து என் மூக்கில் ஏறியது. வந்த தும்மலை கட்டுப்படுத்திக்கொண்டு சிறுவனை அறிமுகப் படுத்தினேன்.

"தம்பி, இவருதாம்பா பாரா. பக்கத்துல இருக்கறது பாலுசத்யா. ரெண்டு பேருமே கிழக்கில் எழுதறாங்க."

"தெரியும்ணா... உங்களுடைய புத்தகம் படிச்சிருக்கேன் சார்" என்றவாறு பாராவிடம் திரும்பினான். அதன் பின் ராகவன் ஒரு கேள்வி கேட்டார். அதுவரை நான் கூட அந்தக் கேள்வியைப் பற்றி யோசிக்கவில்லை. அது எப்படி என்னை விட பாரா புத்திசாலியாக இருக்கலாம். அவர் கேட்ட கேள்வி...

"உன் பேர் என்ன?"

"ஜகன். வேலூர் மாவட்டம்..." என்று அவன் சொல்லியபோது நான் குறுக்கிட்டேன். "எப்படியும் இவனோட பேர மறந்துடுவிங்க. பிறகு எதுக்கு கேக்குறீங்க?" என்றேன். பாராவை மடக்கிய மெதப்பில் சிரித்தேன்.

வாயில் போட்ட சிகப்புப் பொருளை ஒரு பக்கமாக ஒதுக்கியவாறு "இது என் சொந்த தம்பியோட பேரு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்" என்றார். தொடர்ந்து என்னைப் பார்த்து...

"இந்த மாதிரி ஆளுங்கள நீ எங்கடா புடிக்கிற?" என்றார்.

"மிஸ்டர் ராகோவன், இதெல்லாம் பாசத்தால சேத்தே கூட்டோம்..." என்றேன்.

ஞாயமாக அவருடைய காதிலிருந்து வழிந்திருக்க வேண்டிய தாம்பூல செங்குருதி, இதழ்களை மீறி வெளியில் வந்து மின்னியது. அது என் முகத்திற்கு இடம்பெயரும் முன் அங்கிருந்து கிளம்பினேன்.

ஞானபானுவின் கடைவாசல் திறந்து ஞாநி அமர்ந்திருந்தார். குழந்தைப் பருவம் அழகெனில், இரண்டாம் குழந்தைப் பருவம் அதைவிட அழகு. ஞாநி கண்ணைக் கவரும் குர்தா அணிந்திருந்தார். அருகில் சென்று "உங்களுடைய இளம் வாசகர்" என்று அறிமுகப் படுத்தினேன். நெஞ்சில் கைவைத்து அவருடைய காதருகே தட்டுத் தடுமாறி பையன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

ஞாநி, தேர்தல் குறித்த உங்களுடைய கட்டுரையின் முக்கியமான குறிப்புகளை, "ஏன் ஓட்டுப் போட வேண்டும்?" என்று கையடக்க துண்டுச் சீட்டில் அச்சிட்டு அவனுடைய கல்லூரியில் விநியோகித்து இருக்கிறான் என்றேன். நெருக்கமான புன்னகையுடன் அவனைப் பார்த்தார். "அவசியம் கேணிக்கு அழைத்து வாருங்கள் சந்திக்கலாம்" என்றார். சிறிய ஓட்டெடுப்பில் பங்கெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மருதன் கிடைத்தால் அறிமுகப்படுத்தலாம் என்று கிழக்கு நோக்கி சென்றேன். முத்துக்குமாரின் தோலில் கைபோட்டபடி நின்று கொண்டிருந்தார். முதுகைச் சொறிந்தேன். இருவரும் திரும்பினர். ஒரே சொறியில் இரண்டு முகங்கள்.

"இவர் உங்களோட வாசகர்" என்று அறிமுகப்படுத்தினேன். இருவரும் நேசமுடன் கைகுலுக்கினர். பையனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. "ஹே... இவங்களோட எந்த புத்தகத்தை படிச்சிருக்க சொல்லு? என்று மிரட்டினேன்.

"அதெல்லாம் கேட்கக் கூடாதுங்க..." என்று முத்துக்குமார் கண் சிமிட்டினார்.

சிறிது நேர உரையாடல் முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். உயிர்மையில் எஸ்ரா இருக்கிறாரா என்று பார்க்கச் சென்றோம். 6 மணிக்கு மேல் வருவார் என்று தனசேகர் தெரிவித்தார். அதுவரை பொறுமை இல்லாததால் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

"அண்ணா... உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம்ணா... இதெல்லாம் நடக்கும்னு நெனைக்கவே இல்லண்ணா..."

"எனக்கும் உன்னைப் பார்த்ததில் ரொம்பரொம்ப சந்தோசம்."

"மருதன் நல்லா எழுதராருண்ணா. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாடியும் 50 புத்தகம் Reference கொடுக்கராருண்ணா" என்றான்.

"மருதன் மாதிரியே நெறைய பேரு எழுதறாங்க தம்பி. நேரம் இருந்தால் அவங்களைக் கூட படிங்க... ஆமா, அது எப்படி கிழக்கு புத்தகங்கள் உங்களுக்குத் தெரிய வந்தது?"

"ரேடியோவுல விளம்பரம் வருமே..."

20 வயது மட்டுமே பூர்த்தியான பையனின் பதில் இது. சரியான முறையில் விளம்பரம் செய்தால் புத்தகங்கள் அனைத்தும் விலைபோகும் என்பதற்கு உதாரணம் இந்த பதில். இதர பதிப்பகங்களும் முழித்துக் கொண்டால் சரி.

8 comments:

Cable சங்கர் said...

வியாபாரத்தில் விளம்பரம் முக்கியம்.. பிரபு

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு பிரபு. பையன் அதிர்ஷ்டசாலிதான். இப்படி நிறைய 20 வயதுகளை புத்தகங்களை நோக்கி கைபிடித்துக் கூட்டிச்செல்லவேண்டியது இன்றைய சூழலில் மிக முக்கியமானது.

நன்றி பிரபு.

அன்பேசிவம் said...

// ஒன்று பாராசூட்டில் கட்டி கிழக்கின் மொட்டை மாடியிலிருந்து தள்ளி விட வேண்டும் அல்லது கல்லைக் கட்டி கேணியில் தூக்கிப் போட வேண்டும்.//

கிருஷ்ணா.... :-)

Unknown said...

நிச்சயமா கேபிள்... உங்களுடைய புத்தக வெளியீட்டிற்கு வரமுடியாததில் வருத்தமே...

Unknown said...

20 வயதில் நானும் திக்குத் தெரியாமல் அலைந்தவன் சரவணா...

:-))

Unknown said...

அவன் Safeஆ லாண்ட் ஆகணும், ஆழக் கால் ஊன்றனும் என்பதற்காக வந்த Flow...

ஹ ஹ ஹ ஹா

priyamudanprabu said...

அருமையான பகிர்வு

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, krishna