Thursday, September 24, 2009

நிழல் - சினிமா இதழ்

ஆசிரியர்: திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் பதிப்பகம்
விலை: 30/- ரூபாய்

ஒரு நாள் முத்து ஃபோன் செய்து, "மாமா... நீங்க நிழலில் சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுங்களேன். எனக்குத் தெரிந்தவர் தான் இதழின் ஆசிரியர். முயற்சி செய்யுங்களேன்." என்று அன்புடன் கூறினான்.

"அடேய், சினிமா என்ன சாதாரண விஷயமா? கம்ப சூத்திரம்டா, அதில் நிறைய தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டு இருக்கு. "கேமரா, ஒளிப்பதிவு, பாடல், இசைக் கலப்பு, பின்னணி இசை, எடிட்டிங், கலை இயக்கம், etc..." இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் முறைப்படி இல்லையென்றாலும் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு எழுதுவது தான் நல்லது.

நமக்குத் தெரிந்தது எல்லாம் கதை, இயக்கம், வசனம் மற்றும் திரைக்கதை மட்டுமே. குறைந்த புரிதலை வைத்துக் கொண்டு எழுதினால் கட்டுரை நல்லா இருக்காது. நமக்கு எதுக்குடா வீண்வேலை" என்று கூறிய பதில் அவனை எந்த அளவிற்குக் காயப்படுத்தி இருக்குமோ தெரியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு "சதத் ஹசன் மண்டோ"வின் படைப்புகளை வாங்குவதற்காக (யாரோ படிப்பதற்கு வாங்கி திருப்பித் தரவில்லை) நிழல் பதிப்பகத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது ஒரு இதழையும் கூடவே வாங்கிப் படித்ததாக ஞாபகம். சினிமாவைப் பற்றி இருந்ததால் மீண்டும் அந்த இதழைப் படிக்கும் ஆர்வம் வரவில்லை.

தற்போது நிழல் எப்படி வெளிவருகிறது என்று பார்ப்பதற்காக எழும்பூர் புத்தகக் கடைகளில் தேடினேன். எங்கும் கிடைக்காததால் உடன் வேலை செய்யும் நண்பன் கார்த்திக்கிடம் சொல்லி எனி இந்தியனிலிருந்து வாங்கி வரச் சொன்னேன்.

9-ஆம் ஆண்டு இதழ் என்று முகப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.

பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதழில் படிக்கக் கிடைத்தன. யாழ்ப்பாண குறும்பட ஆர்வலர் ராகவன் தனது குறும்பட பயிற்சி மற்றும் முதல் குறும்படமான "மூக்குப்பேணி"யைப் பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார். கன்னட சினிமாவைப் பற்றி விட்டல் ராவ் கட்டுரை எழுதியிருக்கிறார். ராஜகோபால் எழுதியுள்ள "எக்ஸ்ப்ரஷனிஸமும் ஜெர்மன் சினிமாவும்" கட்டுரை சினிமாவை நுணுக்கமாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரசாத் ஃபிலிம் லேபரட்டரி செயல் இயக்குனர் சிவராமன் "கேமரா நின்ற பிறகு என்ன நடக்கிறது..." Post Production பற்றி விளக்குகிறார்.

ஓவியர் மற்றும் கலை இயக்குனர் மருது, Y.G. மகேந்திரன் போன்றோருடைய நேர்காணல்களும், நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு தொடரில் N.S. கிருஷ்ணன், மதுரம் பற்றியும், நெறியாலும் பெண்கள் கட்டுரையில் பெண் படைப்பாளிகளைப் பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

கடைசி பக்கத்தில் DFT மாணவர் கார்த்திக்கின் புகைப்படங்கள் கண்ணைக் கவரும் படி இருக்கிறது. இந்த இதழில் முதல் எட்டுப் பக்கங்களில் ஏராளமான எழுத்துப் பிழை இருந்தது. திருநாவுக்கரசை நேரில் பார்த்து இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மற்றபடி இதழ் அருமையாக இருந்தது.

சினிமா, குறும்படம், ஆவணப்படம் மற்றும் உலகப் படங்களைப் பற்றி தமிழில் வெளிவரக் கூடிய தமிழிதழ்களில் "நிழல்" முக்கியமான இதழ். ஆசிரியர் திருநாவுக்கரசு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த இதழை நடத்திக் கொண்டு வருகிறார்.

சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் குறும்பட போட்டிகள், அது தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன. விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பல கல்லூரிகளும் இந்த இதழின் சந்தாதாரராக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சினிமாவின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்த இதழைப் படிக்கலாம்.

*****************
சினிமாவைப் பற்றி எனக்குப் பிடித்த வரிகள்:

"எல்லோரும் இரண்டு வேலை செய்கிறார்கள். ஒன்று அவர்களுடைய சொந்த வேலை மற்றொன்று சினிமாவை விமர்சனம் செய்வது." என்று யாரோ ஒரு கட்டுரையாளரின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் மூன்றாவதாக ஒரு வேலையை செய்கிறார்கள் அது கிரிக்கெட்டைப் பற்றி விமர்சனம் செய்வது.

*******************

சினிமா சமந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை "நிழல் பதிப்பகம்" தமிழில் வெளியிடுகிறார்கள். தொடர்புக்குக் கீழுள்ள முகவரியை அணுகலாம்.

Address:
Nizhal Pathipagam,
Editor: Thirunavukarasu,
12/28 Rani Anna nagar,
Chennai - 600 078

Mobile: 94444 84868
E-mail: nizhal_2001@yahoo.co.in

Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை - புதிய இதழ்

புதிய இதழ், விற்பனைக்கு அல்ல தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு தபாலில் வந்திருந்தது.வார இதழா? மாத இதழா? என்ற எந்தக் குறிப்பும் இல்லை. விமர்சனத்தையும் வரவேற்பையும் பொறுத்து விலை மற்றும் கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டுரையே வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்! என்று அசத்தலாக இருந்தது. சாய்னா நெஹ்வால் (மேட்மின்ட்டன்), இளவழகி (கேரம்), மித்தாலி ராஜ் (கிரிக்கெட்), தீபிகா & ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), ஷாமினி (டேபிள் டென்னிஸ்) போன்ற விளையாட்டில் சாதனைப் படைத்த பெண்களைப்பற்றிய கவர் ஸ்டோரி. ஜி. கோமளா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

”உதவி காத்திருக்கு” என்ற பகுதியில் ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற ஆனால் கல்வி கற்பதில் ஆர்வமிருந்தும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு அரசும் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து உதவிகள் செய்ய முன்வந்திருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலதிக விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தொலைபேசி இலக்கங்கள் : 9900906338.

"எஞ்சினியரிங் கவுன்சலிங்" - கவுன்சலிங் என்றால் என்ன? அதை கிராமப்புற மாணவர்கள் எப்படி அணுகுகிறார்கள், தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து தரப்படுகின்றது என்று பதிவர் ஆதிஷா மற்றும் யுவன்கிருஷ்ணா எழுதி இருக்கிறார்கள்.

அடுத்து "வாமணன் திரைப்படம் பற்றிய விமர்சனம்" என்பதால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன்.

"கேள்வி நேரம்" என்ற பகுதியில் இயக்குனர் சீமானுடன் சென்னை லயோலாக் கல்லூரி ஊடகக் கலை மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊடக மற்றும் மார்க்கெட்டிங் துறை மாணவர்களும் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் சலிக்காமல் பதிலளித்துள்ளார்.கவின் மலர் இதனைத் தொகுத்துள்ளார்.

அடுத்து "கடவுள் எங்கே இருக்கிறார் - மின்னஞ்சலில் வந்த சிந்தனை" என்ற பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அப்துல் கலாம் - அவருடைய கல்லூரி நாட்களில் வகுப்பு பேராசிரியருடன் நடத்திய உரையாடல். ரிஷிகுமார் மூலம் இந்த ஆன்மீக உரையாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

"எச்சரிக்கை ஆபத்து நெருங்குகிறது" என்ற பகுதியில் இந்திய இளைஞர்களின் சக்கரைக் குறைபாடு விகித அதிகரிப்பும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய துணுக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

"பைக் வாங்குவது எப்படி?" - இருசக்கர வாகனகளை வாங்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பகுதியில் இருக்கிறது.

அடுத்துள்ள கவிதைப் பகுதியில் பதிவர் மற்றும் பகுதி நேர நிரூபர் உமாஷக்தி அவர்களின் "புத்தரும் நானும்" கவிதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

பொதுவாக வார, மாத இதழ்களின் நடுப்பக்கங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களால் அலங்கரிக்கப்படும். இந்த இதழில் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தை காஷ்மீரின் ஷேக் அப்துல்லா - ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவிலிருந்து, தமிழ்நாட்டில் கலைஞர் - ஸ்டாலின் -அழகிரி - கனி மொழி வரை இந்திய அரசியல் தலைவர்களின் ஜனநாயக விரோத செயலை விளக்குமாறு படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

"பைக்கில் ஒரு பயணம்" - நீலாங்கரை அடுத்துள்ள ஆலம்பறா கோட்டை பற்றிய கட்டுரை.

"கோடம்பாக்கத்தில் சுனாமி" - தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் பாய்ச்சல் என்ற கட்டுரை கிராமத்திலிருந்து வந்து தற்போது நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பாண்டியராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மற்றும் நாடோடிகள் சசிகுமார் பற்றிய சினிமா கட்டுரை. அழகாக எழுதி இருக்கிறார்கள்.

"அச்சத்தை வென்றது எப்படி?" - கவிஞர் வைரமுத்துவின் முதல் மேடைப் பேச்சையும், அதில் அவர் பட்ட கஷ்டங்களையும் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல பேச்சாளர் ஆனதையும் குறித்த அருமையான கட்டுரை.ஒவ்வொரு இதழிலும் சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து அருணா ஸ்ரீனிவாசின் "நிறைவு" சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

"தவறு செய்தவர் ஆசிரியர் - தண்டனை அனுபவிப்பது மாணவன்!" பகுதியில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவால் எந்த சலுகைகளையும் பெற முடியாமல், அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கும் மாணவரைப் பற்றிய கட்டுரை.

எல்லாமே ஓசி - இ-கலப்பை மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரை.

புத்தக அறிமுகம் (தமிழ் மொழி) - "எங்கே எனது அல்வாத் துண்டு?" கே.ர மணி மொழிபெயர்த்த பிரசித்தி பெற்ற Who moved mycheese? புத்தகத்தைப் பற்றிய பரிந்துரை என அசத்தியுள்ளார்கள்.

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பத்திரிகைத் துறையில் செயல்பட விரும்புவோர் புதிய தலைமுறை இதழினை அணுகலாம். திரு மாலன் அவர்களின் பத்திரிகைப் பணி அழைக்கிறது என்ற பதிவில் அதற்கான அறிவிப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை வெற்றியின் உச்சியைத் தழுவ வாழ்த்துக்கள்.

-கிருஷ்ண பிரபு