Wednesday, February 23, 2011

திருநங்கையின் வலி - வித்யா

சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.

அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.

கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.

உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?
"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."

நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...
"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."

உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?
"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."

இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.
"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."

ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?
"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."

Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.
"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."

அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...
"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."

அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?
"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."

அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...

"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"

அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?

"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"

அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.

திருநங்கை - பயணங்கள்

உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.

பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.

வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: லிவிங்ஸ்மைல் வித்யா.

தொடர்புடைய பதிவு:

நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்

‘நான் சரவணன் வித்யா’
ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா
விலை: 100 ரூபாய்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html

Friday, February 4, 2011

சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்

தஞ்சை வாழ் மக்களுக்கு கலையார்வம் அதிகம். கேபிள் சங்கர் மட்டும் விதிவிலக்கா என்ன? "சினிமாவின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

"அதற்கு என் தந்தைதான் காரணம், மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அளவில்லா சினிமா காதல் உள்ளவர். நடிகர், நாடகாசிரியர், ஒரு திரைப்படம் இயக்கி அது பாதியில் நின்றிருக்கிறது. அவரின் ஆர்வம்தான் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது" என்று சொல்லியிருந்தார்.

இவர் படித்தது Diplomo in Mechanical Engineering. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் என்.வி.நடராஜன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பின் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனமும், கடா எனும் படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு பெயரிடபடாத படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ப்ரான்ஸில் உள்ள 'டான்' எனும் தமிழ் சேனலுக்காக 'நிதர்சனம்' எனும் குறும்படமும், மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட 'மெளனமே...', அதற்கடுத்து எடுத்த ஆக்ஸிடெண்ட் எனும் குறும்படமும் இவருடைய குறிப்பிடத் தகுந்த படைப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சிறு வேடமேற்று நடித்தவர். 'உயிரே கலந்தது' - சென்னை ஏரியாவுக்கும், 'எங்கள் அண்ணா' - செங்கல்பட்டு ஏரியாவுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விநியோகஸ்தராக செயல்பட்டவர்.

வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, குறும்பட இயக்குனராக, நடிகராக ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் விநியோகஸ்தரான அவருடைய அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அவையனைத்தையும் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறார். வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது. பதிவுகளின் தொகுப்பு கிழக்கு வெளியீட்டின் மூலம் புத்தகமாகக் கிடைக்கிறது.

சினிமா வியாபாரம் - அறிமுகம், 1, 2, 3, 4, 5

தெருக்கூத்து, தப்பாட்டம், காவடிச் சிந்து, நாட்டியம், பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவத்தை விடியவிடிய கண்விழித்துப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அப்படி இருக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் காட்சி ஊடகமான சினிமா முதலிடம் வகிப்பதில் ஆச்சர்யம் இல்லை. 200 கோடியில் தயாராகும் சினிமா முதல், 2 கோடியில் தயாராகும் சினிமா வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் வெளியாகிறது. இவற்றில் வந்த சுவடு தெரியாமல் பெட்டியில் பதுங்குபவை சில. வெள்ளி விழா, வைர விழா என்று பாராட்டைப் பெறுபவை ஒரு சில.

இளைய தளபதி என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் நடித்த "காவலன்" திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே. திரைப்படத்தை வெளியிட அரங்குகள் கிடைக்கவில்லை. கார்போரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. லீனா மணிமேகலையின் "செங்கடல்" தணிக்கை குழுவினரால் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி, கதை திருடுதல், பைனான்சியர் பிரச்சனை போன்ற பல சிக்கல்களையும் தாண்டி ஒரு படத்தின் வெற்றி , தோல்வி நல்ல கதையம்சத்தாலும், பார்வையாளனாலும் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை... அது தவறு என்பதை விளக்க போதுமான ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

***************************************************************

பின்னட்டை வாசகம்:

பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவி-க்கு வந்துவிடுகின்றன. எனில், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர் யார்?

விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப் போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்க்ஷனை குவிக்க வேண்டுமா என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

கோடி கோடியாப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது, வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சமன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ஒரு திரைப்படம் எப்படி எல்லாம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணனின் இந்தப் புத்தகம் திரைத் துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஓர் அத்யாவசியக் கையேடு.

முன்னட்டை வாசகம்:

தியேட்டரில் படத்தைத் திரையிடுவது, டிவி சேனலுக்கு விற்பது மட்டுமல்ல DVD/VCD உரிமை, ஆடியோ கேசட்/ CD உரிமை, இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமை, பிறமொழி மாற்று உரிமை, ரீமேக் உரிமை, பேருந்து / ரயில், விமான ஒளிபரப்பு உரிமை, மெர்சண்டைசிங் உரிமை, ரேடியோ ஒலிபரப்பு உரிமை என பல வழிகளிலும் தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கலாம். நான் நன்கு அறிந்த சினிமாவின் அறியாத வியாபாரப் பக்கங்கள்.

***************************************************************

"சினிமா என்பது மற்ற வியா​பா​ரம் மாதிரி கிடை​யாது.​ வித்​தி​யா​ச​மான வியா​பா​ரம்.​ வீடு கட்டி விற்​பது மாதிரி இல்லை.​ கோடி கோடி​யாய் சம்​பா​தித்து விட​லாம் என யாரும் இந்த துறைக்கு வந்து விடா​தீர்​கள்.​ கன​வு​க​ளு​டன் ​ வாருங்​கள்.​ இது கலை சார்ந்த வியா​பா​ரம்.​ சில வியா​பா​ரங்​க​ளில் மட்​டும்​தான் சந்​தோ​ஷம் கிடைக்​கும்" - இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் கமல்ஹாசன். இங்கு ஒரு சூஃபிக் கவிதையை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"பாதுகாப்பு வேண்டுமென்றால், கரையில் நில்
பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுள் செல்."
-சூஃபி கவிஞர் சா' அதி

சினிமா என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் விஷயம். சினிமாவின் ஏதேனும் ஒரு கூறு நம்மை நொடிக்கு நொடி சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனினும் அவற்றை வியாபாரம் செய்வது அச்சுறுத்தல் நிறைந்தது. அதனைத் தெரிந்து கொள்ள உதவும் கையேடு தான் இந்தப் புத்தகம்.

தொடர்புடைய பதிவுகள்:
1. திரைப்படத் தொழில் - தினேஷ்
2. சினிமா வியாபாரம் - பரிசல்காரன்
3. சினிமா வியாபாரம் - அகநாழிகை


சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-