Wednesday, February 23, 2011

திருநங்கையின் வலி - வித்யா

சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.

அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.

கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.

உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?
"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."

நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...
"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."

உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?
"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."

இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.
"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."

ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?
"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."

Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.
"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."

அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...
"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."

அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?
"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."

அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...

"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"

அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?

"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"

அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.

திருநங்கை - பயணங்கள்

உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.

பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.

வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: லிவிங்ஸ்மைல் வித்யா.

தொடர்புடைய பதிவு:

நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்

‘நான் சரவணன் வித்யா’
ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா
விலை: 100 ரூபாய்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html

7 comments:

மணிஜி said...

நானும் வாசித்திருக்கிறேன் கிருஷ்ணா..வலி..

krishnakrishna said...

//அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே//

உண்மை கிருஷ்ணா

Romeoboy said...

கி.பி நான் இந்த புத்தகத்தை ரொம்ப நாட்களுக்கு முன்பே வாசித்து இருக்கிறேன். முதல் அத்தியாயம் ரொம்ப வேதனை தந்தது. நான் எழுதிய இந்த புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை இங்க படிச்சி பாருங்க .. http://ennaduidu.blogspot.com/2009/10/blog-post_29.html

நீங்களும் திருவொற்றியூர் ஏரியா வா ??

Unknown said...

I was from Ponneri, when I was doing my PG. So it happend to cross Thiruvatiyur everyday...

அ.மு.செய்யது$ said...

புனேவில் இருக்கும் போது இந்த புத்தகம் வாசித்திருக்கிறேன் கிருஷ்ணா.

இதில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்வார்கேட் பகுதிகளில் நானும் சுற்றித் திரிந்திருக்கிறேன்.பல அரவாணிகள் அங்கு கடை கேட்பதைக் காணும் போதெல்லாம் இந்த புத்தகத்தின் வரிகள் நினைவுக்கு வரும்.

படித்து முடித்தவுடன் அரவாணிகள் மீதிருந்த ஒருவித அறுவெறுப்பு முற்றிலுமாக என்னை விட்டு அகன்றது.

நிர்வாண‌ம்,டிரெயின் கேட்ட‌ல்,நீட்ட‌ல் விகார‌ம்,சேலை அணிந்து முத‌ன் முறையாக‌ த‌ன் அப்பாவை ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ அனுபவ‌ம்.

நிஜ‌மாக‌வே உலுக்கியெடுத்த‌ன‌.

அன்பேசிவம் said...

கிருஷ்ணா, சமீபத்தில்தான் சந்தோஷ் சிவனின் ‘நவரசா’ படம் பார்த்தேன், எழுதினேன். இதையும் படிக்கனும். நீயும் நவரசா பாரு, கிருஷ்ணா.

Anonymous said...

I must read this book. Thanks for the post..