Monday, September 24, 2012

இனி நான் உறங்கட்டும்

பாரதப்போரின் நாசத்தால், உயிரிழந்த பங்காளிகளுக்கு பிண்டம் வைக்க யுதிஷ்டிரன் தலைமையில் விதவைகள் உட்பட எல்லோரும் கங்கை நதிக்குச் செல்கின்றனர். ஓடும் நதியில் ஈரத்துடன் நின்றிருக்கும் தர்மனிடம் குந்தி நெருங்கிச் சென்று பின்வருமாறு சொல்கிறாள்: “மகனே, முதலில் கர்ணனை நினைத்துக்கொள். அவனே எனக்கு மூத்த மகன்.”. நதியினும் வேகமாக, காற்றினும் வேகமாகப் பயணம் செய்யும் மனம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கிறது. பாண்டவர்கள் எல்லோரும் உறைகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, யுதிஷ்டிரன் மன அழுத்தம் கொண்டு – நாட்டைத் துறந்து கானகம் செல்ல முடிவெடுக்கிறான். பீஷ்மர், துரோணர், துருபதன், திரௌபதியின் ஐந்து குமாரர்கள், அபிமன்யு போன்றோர் அடுத்தடுத்து பாரதப் போரில் மடிந்த போது வனம் செல்லத் துணியாதவன். ‘கர்ணன் தனக்கு மூத்தவன்’ என்று தெரிந்ததும் ‘வனம் செல்லத் துனிகிறாரே!’ என்ற திரௌபதியின் மனவோட்டத்தின் பின்னல்களால் ஆன நாவல். அதனுடைய ஓர்அத்தியாயம் உங்களுக்காக...

பதினொன்றாம் அத்தியாயம் – பகுதி 1




தனது துயரக்கதைகள் அத்தனையையும் கண்ணீர் மல்க உரைத்த திரௌபதியின் ஆற்றாமையைக் கேட்ட கிருஷ்ணனின், அழகிய முகத்தில் – புன்னகையின் வெண்மலறொன்று பூத்தது... ஆனால், அந்த புன்னகையின் வெண்மை படர்ந்த முகத்தில் – புருவங்கள் துடித்து மேலேறி நெற்றியில் சுளிவுகள் கோடிட்டு, கடினமான உள்ளுணர்வுகளின் சுருள்களை நிமிர்த்தன. விசித்ரமேயான மனோலயத்தின் இனிமை – ஒரே நேரத்தில் அவளை மகிழச் செய்வதாகவும் – வேதனை கொள்ள வைப்பதாகவும் தோன்றியது. ஆதரவற்ற பரிதாப நிலையில் – அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், திரௌபதி. அத்தனை வேதனைகளையும் கொட்டித் தீர்த்து விட்ட மனதுடன் – வலுவிழந்த உடலாலும் துவண்டுபோன நரம்புகளுமாகிய அந்த நிலையில் – அவளது கண்கள், புலப்படாத ஏதோ ஒரு பற்றுக்கோட்டைத் தேடி அலைவதுபோல் இருந்தன. அவளது கண்களில் தெளிந்த ஏதோவொரு மாபெரும் வியப்பின் நுட்ப நிலையை கண்டறிந்தவன் போல – மீண்டும் ஒரு புன்முறுவலுடன் கிருஷ்ணன் பேசலானான்: 

“திரௌபதி, இப்பரந்த பிரபஞ்சத்தின், அகண்டாகரமான தன்மையும் அதன் சாய்ந்தாட்ட இயக்கத்தின் தத்துவமும் புலப்படாத ஒன்று. அந்த புலப்படா தன்மையிடம் நீ பிகு கொண்டிருக்கிறாய் என்பது ஸ்பஷ்டமான உண்மை. இன்று உன்னை அலைக்கழிக்கும் பாராமுக பீதி – யுதிஷ்டிர பீமார்ச்சுனர்களிடமுள்ள பாராமுகமும் – என நீ தவறாக அர்த்தம் செய்கிறாய். பெற்ற தாயைக் காட்டிலும் உன்னிடம் அன்பு கொண்ட குந்தியிடம் கூட பாராமுகம் இருப்பதாக நீ தவறாக அர்த்தம் கொள்கிறாய். கர்ணனைப் பற்றிய துயர நினைவுகள் முன்னாள் நீ அன்னியையாக ஒதுக்கப்படுவதாக – வியாகூலப் படுகிறாய். அவர்களது இதயப்பாதையில் – உனது எண்ணவோட்டங்கள் ஒத்துவராத நிலையில் – வாழ்க்கையில் அனைத்திலும் நீ தனியாக்கப் படுவதாகவும், அனைவரிடமிருந்தும் நீ விலக்கி வைக்கப்படுவதாகவும் எண்ணி வியாகூலம் கொள்கிறாய்... ஆனால் மானிட வாழ்க்கையில் – மானிட ஜீவியின் இதய இயக்கங்களில், முற்றிலும் சூன்யமான, முற்றிலும் சகிக்க வொண்ணாத – ஒரு தனிப்பகுதி உண்டென்பதை நீ உணர்ந்திட வேண்டும். ஒரு நபர், சில நேரங்களில் அவனிடமிருந்தே தனியாக்கப்படுகிறான்! தன்னிடமே அந்நபருக்கு வேற்றுமை மனோபாவம் தோன்றுகிறது. அந்த நிலை, முற்றிலும் சகிக்க வொண்ணாத சூன்யமே ஆகும்! நபர் ஒருபோதும் சுயதரிசனம் காணமுடியாத அந்த அவஸ்தை – தான் அன்பு கொண்டவர் பாலுள்ள பாராமுகம் என அவன் தப்புக் கணக்குப் போடுகிறான். அன்பு கொண்ட சோதரியே – உன்பால் எனக்குத் தோன்றும் அனுதாபத்தின் பயன் இன்மையை நினைத்து என்னிடமே நான் பரிதாப்பப்படுகிறேன். கடலோரத்தின் சிப்பிச் சிதறல்கள் சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்கின்றன. நித்தியமாகிய – எதிர்ப்புணர்வில் அவை தவிக்கின்றன! அந்த எதிர்ப்பிற்கும், அந்த பரிதாப உணர்விற்கும் காரியகாரண பந்தம் என்ன இருக்கிறது? என்ன பலன் இருக்கிறது? அந்த அளவு அர்த்தமற்றது – செயல்திறன் அற்ற நபர்களாகும் சிப்பிச் சிதறல்கள் - சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்வது!” 

உரத்த குரலில் – ஆத்மவிசாரணை செய்வதுபோல – நினைவுகள் தாமாகவே குரல் எழுப்புவதுபோல கிருஷ்ணன் தொடர்ந்து பேசலானான்: 

“கர்ம பாசத்தால் சிக்கிக்கொண்ட மானிடன், கர்மத்தின் வேதனையிலும், போதையிலும் மயங்கிப்போய் வாழ்கிறான். அதற்கே உரிய சலனங்களும் தன்மைகளும், சுய இச்சையால் செய்யும் கர்மாக்கள் எனவும் பிரம்மித்துப்போய் மானிடன் ஆவேசத்தோடு வாழ்கிறான். ஆனால், பரமாத்ம தத்துவமறிந்த மேன்மக்களுக்கு ஒரு நிமிஷமல்ல, எல்லா நிமிஷங்களிலும் இந்த கர்மபாச பிணைப்பு துக்கமேயாகும்! மூடமனங்கள் – அதனை, சுகமென்றும் சாபல்யமெனவும் தப்பர்த்தம் கொள்கின்றன. தனித்தன்மைகள் கொண்ட மகாத்மாக்கள் கூட – பிரம்மம் கலந்த மன ஈடுபாட்டால் சில நேரங்களில் அதில் சுகம் கண்டு மகிழ்ச்சி கொள்ளவும் – துக்கம் கண்டு அழுதரற்றவும் செய்கின்றனர்!” 

கடினமான தத்துவ உரைகளின் அந்த புகைமண்டலத்தைப் பார்த்து சலனமற்று அமர்ந்திருந்த திரௌபதியை நோக்கி, மீண்டும் புன்முறுவல் செய்தான் கிருஷ்ணன். அப்பொழுதுதான் பிரக்ஞை உலகிற்கு மீண்டு வந்தவள் போல – கிருஷ்ணன் அமர்வதற்கென பீடம் ஒன்றினை நகர்த்தியிட்டு உபசரணை செய்தால் திரௌபதி. பீடத்திலமர்ந்தவன் – மீண்டும் புன்முறுவல் மாறாமலே தொடர்ந்தான்:

“திரௌபதி! ஆயுளை முடித்துக் கொண்ட கர்ணனுக்கும் உயிரோடிருக்கும் யுதிஷ்டிரனுக்கும் மட்டுமின்றி – நாம் அத்தனை பேருக்குமே கர்மபந்தத்தின் சலனமிக்க கண்ணிகள் அற்றுப்போய் விட்டது என்பதை நீ அறியவில்லை. இனி, நம்மிடம் மிஞ்சி நிற்பது அனுஷ்டானங்கள் மட்டுமே! கர்மாக்கள் ஒதுக்கி, பலனளவில் வாழ்வு நிச்சலம் கண்டாயிற்று! ஆனால் வாழ்க்கை அனுஷ்டானங்களாகிய மற்றொரு பகுதியிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மாதிரி நபர்களுக்கு மார்க்கம் இல்லவே இல்லை! கர்ம வாழ்க்கையின் பொலிவு மிக்க பார்வையால் – அனுஷ்டானங்கள் நிறைந்த – வாழ்வுப் போராட்டத்தைக் காண நீ வீணாக முயற்ச்சி கொள்கிறாய். அன்பு கொண்டவர் மத்தியிலிருந்து உன்னை தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக நீ – தப்பாக எண்ணிக் கொள்கிறாய். உண்மையில் – நீ ஒதுக்கப்பட்டவளாக இருப்பது – உனக்குள்ளாக மட்டுமே என்பதை நீ அறியவில்லை. 

அடிவானத்தில் கருநிற மேகப் படலங்களின் முதுகில் குதித்தேறி வரும் காலைச் சூரியன் – நீலிமை படர்ந்த உயர் வானத்தில் தலைதூக்கி – துடிப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். இரவில் பெய்த மழையில் கழுவி சுத்தம் கொண்ட பட்சிளைகளின் மேல் அவனது சிரிப்பு பிரதிபலிப்பு கொண்டது. அவை, வெள்ளி போல பளபளத்தன. பரிபூர்ண எழில் தேடிக்கொண்டுவிட்ட சூரிய பிம்பத்தை நோக்கி – திடமான தனது வலக்கரத்தை தூக்கியவாறு கிருஷ்ணன் சொல்வான்: 

 “அதோபார் திரௌபதி – வானத்தின் துல்யமான நீலப்பரப்பில் வெள்ளியின் பளபளப்போடு சூரியபிம்பம் சோபிதம்கொள்கிறது. வாழ்க்கையாகும் பசும் தளிர்க் கூட்டத்தில், பச்சை நிறம் போர்த்திய வசந்தத்தில், மந்தகாசத்தின் திளக்கத்தால் அவன் பன்மடங்கு எழில் சேர்க்கிறான். சுகம் மிக்க, வாழ்வோடு இயைந்த அவனது இளம் கதகதப்பில் – இயற்கை சுகித்து – புல்லரிப்புக் கொள்கிறது. இந்நிலை, அந்த தேஜசின் வளரும் சுழற்சியின் ஒரு வீழ்ச்சி மட்டுமே... பிந்துக்களில் ஒரு பிந்து! முகம் கருத்த புலர் வேளையில், அடிவானின் முகத்தை துடிக்க வைத்து, நீரடியிலிருந்து சுவர்ண ஜாஜ்வல்யத்துடன் அவன் உயர்ந்து வந்தான். இனி...? இனியும் சில வினாடிகளுக்குப் பின்னர்...? அந்நேரம் அவன் வானத்தின் உச்சியை நோக்கி குதித்துப் பாய்வான். இயல்பே ஆகிய சொந்த சூட்டில் சுயமாக சுட்டுக் கொண்டு, கோபங்கொண்டு வானமத்தியில் ஏறிவந்து ஜ்வாலிப்பான்! வெளிச்சத்தின் காட்சிகளைக் காட்டும், வெளிச்சத்தின் அதிகோரமான எல்லைக்கோட்டில் – எதிர்கொண்டு உற்றுப் பார்ப்பவரது பார்வையை இகழச்செய்தவாறு – உக்ரமாக அவன் சுட்டுப் பொசுக்குகிறான்! விடியலில் ஆலோலம் பாடி குளிர்வித்த – பசுமையைச் சுட்டெரித்திட அதுபோதில், அவன் துடிப்பு கொள்கிறான். சமுத்திரங்களை வற்றி வறட்சியிலாழ்த்திட முடியாததில் அவன் கோபத்துடன் படபடப்பு கொள்கிறான்... அன்புக்குரிய திரௌபதியே – ஆயுட்காலத்தின் வளர்ச்சியின் நிலைக்கலங்களில் ஒன்றேயான மத்தியானப்பொழுது, அவன் பின்னும் வருத்திக் கொள்கிறான்... கடைசியில் – எரிந்து அடங்கும் சிதாமண்டலம்போல – சாம்பலும் கனல் கட்டைகளுமாக குவிந்த மேற்கு வானச்சரிவில் – பரிதாபம் கொண்ட கம்பீரத்துடன், ரத்தம் ஒழுக அவன் மாண்டு மடிகிறான்... அதுவும் விருத்தியின் ஒருவித வீழ்ச்சிதான்! பல்வேறு வித வீழ்ச்சிப் படலங்களில் – ஒன்று!” 

சிறியதொரு ஓய்விற்குப் பிறகு கிருஷ்ணன் தொடர்ந்தான்: :”கிருஷ்னையே! இயற்கையின் இயல்பு நசீகரங்களை எல்லாமே, நீ – கொடும் மத்தியான உக்ரமாக காணுகிறாய். மாறி மாறியும் மாற்றங்களை வெறும் மாற்றம் மட்டுமே என நீ தப்புக் கணக்கு போடுகிறாய்... அந்திப் பொழுதுகளை பார்த்து பெருமூச்சு உதிர்க்கும் யுதிஷ்டிரனிடம் – மத்தியானப் பொழுதின் உக்ரகற்பனை யிலேயே நின்றவாறு நீ தனிப்பட்டவளாகி விடுகிறாய்! உனது இந்த மனநிலை – அர்த்தமற்றதென நீ அறிந்திடல் வேண்டும்!” கர்ணனை இழக்கப்பட்ட துக்கத்தால் பற்றற்ற நிலையில் கடத்தும் யுதிஷ்டிரானது மன அவசங்களின் தன்மையை கிருஷ்ணன் அவளுக்குச் சொன்னான். யுதிஷ்டிரனின் அண்ணன் பதவிக்கு முற்றிலும் உகந்தவனே கர்ணன். அவனைக் கொன்றது பற்றியுள்ள தாபம் – தர்மாத்ஜனுக்கே இயல்பான கொடும் தாப நிலை என்பதை விளக்கி கிருஷ்ணன் விவரித்தான்: 

“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி – சாத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே என்பதை நீ அறிய வேண்டும். அன்பிற்குரியவளே, உன்னிடம் நானொரு உண்மையைச் சொல்வேன் – ஒரு தத்துவத்தைச் சொல்வேன் - விதியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தியிருக்கும் அபாக்யவாங்களின் வினாசம் விதியால் வரையறுக்கப்பட்டதுதான். நாசத்தின் தாறுமாறான சட்டவரம்பை மீறிட கடவுளுக்கு கூட உரிமையில்லை. காரண காரிய பந்த வரையறையுள் நாசத்தின் ஆக்கினைக்கு உட்பட்டு நின்றுதான் விதி தன் கைங்கர்யங்களை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனது அபூர்வ சிருஷ்டிகளின் நாசத்திற்காக, விதி, அதிகடினமான வரையறைகளை உருவாக்குகிறது. குந்தியின் மூத்த புத்திரனாகிய கர்ணனது நசிவிற்கு ஆக்கம் குறித்திட்ட நாள்தான், உன் நினைவில் என்றுமே மாயாத அதே அந்த நாள்! தர்மியாகிய சூரியபுத்திரனது மாற்றமுடியாத விநாசத்திற்கு – துகிலுரியும் அந்த நாளில் – அவனது சிரிப்பு முத்திரை குத்தியது. 

தனது சிந்தனைகளின் தொடர்ச்சியே போல அவன், தனக்குள் முணுமுணுத்தான்: 

“க்ஷத்திரிய வம்சத்தின் சமூக நாசத்திற்கு முதல்கோடு குறித்திட்ட சபிக்கப்பட்ட துர்தினம்!” 

வாய்மூடிய சிந்தைகளின் மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது போல கிருஷ்ணன் தொடர்ந்தான்: 

“தக்க நேரத்தில் ரகசியத்தை வெளிப்படுத்திடாமல் – க்ஷத்திரிய குலத்தை ஒட்டுமொத்தமாக விநாசத்தின் பாதை நோக்கி ஏன் இழுத்து விட்டாய் என்று நீ கேட்கின்றாய். விதியின் வன்மை மிக்க ஆக்கினைகளை மீறிட உன்னால் முடியாது. யாருக்குமே அது சாத்தியமன்று. இதோ, என்னால் கூட அது முடியாத ஒன்று. ஆனால் கர்ணனிடம் – அவனது நிஜத்தன்மையை ஒருமுறை வெளிப்படுத்தினேன்.” 

வியப்பு மேலிட்ட திரௌபதியிடம் – தான் கர்ணனை சந்தித்ததைப் பற்றி கிருஷ்ணன் விவரிக்கலானான். 

மூலம் : பி. கே. பலகிருஷ்ணன் 
 தமிழாக்கம்: ஆ மாதவன் 
 பதிப்பு: சாகித்ய அகாடமி 
விலை: 100 ரூபாய் 
 பக்கம்: 105 - 109

Wednesday, April 11, 2012

யுகத்தின் கண்ணாடி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது

எழுத்தாளர் அரவிந்தனுடன் உரையாடும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. அவருடைய “குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது”” என்ற காலச்சுவடில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கியமான கதைகள் அடங்கிய தொகுப்பு. எம்.வி. வெங்கட்ராம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான “காதுகள்”” பற்றிய விமர்சனம் படித்ததுண்டு. அதில், முழு நாவலும் வாசித்து முடிக்கும் வரை காதுக்குள் ஓர் உரையாடல் கேட்டுக்கொண்டே இருக்கும் என்றிருந்தது. அதுபோலவே அரவிந்தனின் ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதோ ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மனக்குழப்பத்தின் மௌன எண்ணங்கள் கூட ஒழுங்கற்ற ஒலியுடன் கதைகளில் வெளிப்படும் நுட்பத்தை அழகாகக் கையாண்டிருப்பார். கதைகளை வாசித்து முடித்ததும் அவரைச் சென்று பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்தது. கேணியில் ஒரு முறை சந்தித்தும் அதிகம் பேச முடியாமல் போனது. சமீபத்தின் ஒருநாள் “நம்ம சென்னை” இதழின் அலுவலகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. கால ஓட்டத்தில், படித்த கதைகளின் கருப்பொருள் திட்டுக்களாக பதிந்திருந்தாலும், கோர்வையாக அதைப் பற்றி எதையும் பேச இயலவில்லை. எனவே, பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஆனந்த விகடன் வெளியீட்டில் அவர் எழுதிய “சுட்டி மகாபாரதம்”” வந்திருக்கிறது. அதைப் பற்றிய பேச்சு சுழன்று குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற புத்தகத்தில் வந்து நின்றது. அதனைத் தமிழில் “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என விகடனுக்காக சாருகேசி மொழி பெயர்த்திருப்பதைத் தெரியப்படுத்தினார். உடனே சென்று வாங்கிக்கொண்டேன்.

மகாபாரதத்தின் எத்தனையோ பதிப்புகள் உலகின் பல மொழிகளில் இதுவரை வெளியாகியுள்ளன. மீள் புனைவின் அடிப்படையிலும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் கால இடைவெளியில் சமைக்கப்படுகின்றன. பாரதக் கதையை “நன்மைக்கும் தீமைக்குமான தர்ம யுத்தமாகக் கருதுவது” ஒருவகை. குடும்பச் சண்டையின் நீட்சியாகவும், பங்காளிகளுக்கான குடுமிப்பிடிச் சண்டையின் “பழிக்குப் பழி” காப்பியமாகவும் பார்ப்பது இரண்டாவது வகை. இந்த இரண்டு வித நோக்கிலிருந்தும் சற்றே வித்தியாசப்பட்டு, கதாபாத்திரங்களின் இயல்பான குணாம்சத்தையும் உளவியல் கூறுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆழமாக அலசி, தற்கால மனிதர்களின் வாழ்வியல் அம்சங்களுடன் மிகுந்த நிதானத்துடன் ஒப்பிட்டு, தனக்குக் கிடைத்த சொந்த அனுபங்களையும் இடையிடையே பகிர்ந்துகொண்டு மனிதக் கூறுகளின் சமூக விழுமியத்தை பொதுப்படைத் தன்மையில் இந்நூலில் ஆய்வு செய்கிறார்.

கட்டுரை ஆசிரியரின் விசாரணை கதாபாத்திரங்களின் உளவியல் ஒப்பீட்டையும் தாண்டி “தர்மம்” குறித்த ஆராய்ச்சியில் சில குறிக்கோள்களை முன்வைத்து நகர்கிறது. அவருடைய முதல் குறிக்கோள் “ஆசையை எப்படிக் கையாள்வது?”. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு ஓர் உரிய இடம் இருக்கிறது. இரண்டாவது குறிக்கோள் ‘பொருளாதார வசதி’. “வறுமையான சூழலில் வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?””. மூன்றாவது குறிக்கோள் “தர்மம்” சார்ந்த வாழ்க்கை”. கடைசி குறிக்கோளாக நம்முடைய சிக்கலான வாழ்விலிருந்து விடுதலை.

எதையும் புறக்கணிக்காமல், எந்த ஒன்றையும் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்ப்பதே நம் தத்துவங்கள் உபதேசிக்கும் உட்பொருள். இதனையே “நிஷ்காம கர்மம்”” என்று கீதையின் சாரங்கள் சொல்கின்றது. “தர்மமும், நேர்மையும் தற்போதைய சூழலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறதா?”” என்பதை யதார்த்த வாழ்வின் உட்சிக்கல்களில் பயணித்துக் கொண்டே, இதிகாச மனிதர்களின் மதிப்பீடுகளை அலசுவதோடு தற்கால மனிதர்களின் குண இயல்புகளுடன் ஒப்பீடும் செய்கிறார் குர்சரண் தாஸ். உதாரணமாக...

அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் துரியோதனன் – பொறாமை, பேராசை, கோவம், வெறுப்பு, சூழ்ச்சி, சிறுபிள்ளைத் தனம் போன்ற எதிர்மறை மனித உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவமாக துரியோதனனின் ஆளுமை பாரதக் கதையில் கட்டியெழுப்பப்படுகிறது. இதனால் உண்டாகும் வாழ்வின் மீதான நிச்சயமற்ற தன்மையே அவனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது. குறுக்கு வழியில், அதிகாரத்தைக் கையிலெடுக்கத் துணியும் ஒவ்வொருவரும் துரியோதனனைப் போலவே எண்ணத் துவங்குகிறார்கள். சமீப காலத்திற்கும் இது மிகவும் பொருந்துகிறது. அதிகார அரசியலே தற்கால சமூகக் கட்டமைப்பை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சபையினர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் திரௌபதி – ஆண்கள் வீற்றிருக்கும் சபையில் திரௌபதியின் முந்தானையைப் பற்றி இழுக்கிறார்கள். அதுவே உக்கிரப் போரின் துவக்கமும் கூட. கட்டிய கணவன்மார் உட்பட ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும், அவர்களுடைய அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறாள் திரௌபதி. கௌரவ சபையில் அவளுக்காகப் பரிந்து பேச யாரும் முன்வரவில்லை. துரியோதனனின் இளைய சகோதரன் விகர்ணன் மட்டுமே கடிந்து கொள்கிறான். அந்த வகையில் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் பெண்ணாக திரௌபதியைக் கருதலாம். தற்காலச் சூழலிலும் பெண்கள் துகிலுரியப்படுகிறார்கள். அவர்கள் மீதான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் பெண்கள் அமைப்பும் குரல் கொடுக்கிறார்கள்.

கீழ்குடியில் வளர்ந்து அடையாளச் சிக்கலால் அல்லல்படும் கர்ணன் – ஒருவனுடைய முக்கியத்துவம் பிறப்பை வைத்தா? அல்லது தான் சார்ந்த சமூகத்தை வைத்தா? என்ற நுட்பமான சமூக விவாதத்தை கர்ணனே துவக்கி வைக்கிறான். அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். வேலைக்காரிக்குப் பிறந்த விதுரனும் இதே சிக்கலை வேறு விதமாக எதிர்கொள்கிறான். நியாயம் பேசுவதற்காக அவனுடைய குரல் உயரும் போதெல்லாம் சத்ரிய அரசர்களால் இகழப்படுகிறான். காட்டில் வளரும் ஏகலைவனையும் இவர்களுடன் ஒப்பிட்டுப் பேசலாம். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய கல்வி மற்றும் திறமைக்கான மரியாதை மறுக்கப்படுகிறது. மூன்று பேருமே வெவ்வேறு சூழலில் சிக்கிக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள். படித்து முன்னேறி நல்ல பதவிக்கு வந்து அதிகாரத்துடன் ஆளுமையாக வளம் வந்தாலும், சாதிய ஒடுக்கு முறையால் வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலித்தையும் கர்ணனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பத்திரிகையாளர் சந்திப்பில் கதறியழும் உயர்நீதிமன்ற நீதிபதியையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். கட்டைவிரலை இழந்த ஏகலைவனைப் போல பலரும் வெளியில் தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும் நிதர்சனமே.

குருவம்சத்தைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் பீஷ்மர், தர்மத்தை நிழலெனத் தொடரும் யுதிஷ்ட்ரன், போர்க்களத்தில் துவண்டு நிற்கும் அர்ஜுனன், விஸ்வரூபம் எடுக்கும் சூழ்ச்சிக்கார கிருஷ்ணன், ஆந்தை போல இரவில் முழித்து துரோகம் இழைக்கும் அஸ்வத்தாமன் என இதிகாசப் பாத்திரங்கள் யுகங்கள் கடந்தும் வாழ்வியல் கோட்பாடுகளை முன்வைக்கின்றன.

வாழ்வு என்பதை ”நம்மைக் காலம் தான் சமைக்கிறது”” என்று யுதிஷ்டிரன் வர்ணிக்கிறான். கர்ணனுடைய வர்ணனை சற்றே வித்தியாசமானது. “நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உலகம் வேகமாகக் கடந்து செல்கிறது” என்கிறான். அஸ்தினாபுர அரியணைதான் வாழ்வின் மீதான துரியோதனனின் ஒரே நம்பிக்கை. காற்றின் அசைவில் நாகமெனப் படமெடுக்கும் கற்றைக் கூந்தலை அள்ளி முடிக்க வேண்டும். எனவே “நீசர்களுடைய இரத்தத்தைத் தடவி, கூந்தலைக் கழுவி அள்ளி முடிப்பேன்” என்கிறாள் திரௌபதி. ஒட்டுமொத்த சத்ரியர்களின் வாழ்வே யுத்தத்தை முன்வைத்து நகர்வது. “வீர மரணம்” சொர்க்கத்தை வசப்படுத்தும்” என்ற நம்பிக்கை உடையவர்கள் மாவீரர்கள். (தற்காலத்தில் மத அடிப்படைவாதிகளின் தற்கொலை தாக்குதலை இதிகாச ‘வீர மரண’-த்துடன் ஓர் இடத்தில் நுட்பமாக ஒப்பிடுகிறார் ஆசிரியர்).

மனித குணம் தீய குணங்களால் வார்க்கப்பட்டது. எனவேதான் யுத்தம் ஆரம்பிக்கிறது. போர் தொடங்கும் முன் பாண்டவர்களுக்கு “நற்செயல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாண்டுவின் புத்திரர்களே, வெற்றியைப் பெற ஏதாவது உபாயத்தை மேற்கொள்ளுங்கள்” என கிருஷ்ணர் உபதேசிக்கிறார். அதன் பிறகு குருக்ஷேத்ரப் போர் “தர்ம யுத்தம்” என்ற பெயரில் நடக்கிறது.

பகடையாட சம்மதித்து சத்ரிய தர்மத்திற்கு உட்படுவதுடன், யக்ஷனின் கேள்விகளுக்கும் தர்மத்துடனே பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். என்றாலும் பல ஆண்டு வனவாசத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போதும் தர்மத்திலிருந்து பிசகவில்லை. தன்னுடைய வாழ்நாளில் அவன் சொன்ன ஒரே பொய், உக்கிரமான போர் சூழலில் “என்னுடைய மகன் இறந்துவிட்டானா?” என்று துரோணர் கேட்கும் கேள்விக்கு மட்டும் தான். அதற்கு தருமபுத்திரர் “அஸ்வத்தாம அதங்குஞ்சித” என்கிறான். “போர் யானை” என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்கிறான். இதனைக் கேட்ட துரோணர் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பாண்டவர்களின் வெற்றிக்கு இந்தப் பொய்யும் உதவி செய்கிறது. கிருஷ்ணனே அவரைப் பொய் சொல்லத் தூண்டுகிறார். இறுதியாக போரில் வென்று பாண்டவர்கள் அரியணை ஏறுகிறார்கள்.

“நான் இந்த உலகையே வென்றுவிட்டேன்... ஆனால் என் உறவினர்கள் எல்லோரையும் அழித்தபின். என்னுடைய பேராசை குறித்து, மனம் வலியால் துடிக்க, எண்ணிப் பார்க்கிறேன்: இந்த வெற்றி எனக்கென்னவோ தோல்விபோல் படுகிறது” என யுதிஷ்டிரன் புலம்புகிறான். மன சஞ்சலத்துடன் சில ஆண்டுகள் அரசாட்சி செய்துவிட்டு, அதன் பிறகு அபிமன்யுவின் மகன் பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு கானகம் செல்லத் தீர்மானிக்கிறான். பின் உபவாசமிருந்து மனித உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அப்பொழுது, அவன் வளர்த்த நாயும் பிரிய மனமில்லாமல் உடன் செல்கிறது. நாயை சொர்க்கலோகத்தின் உள்ளே விட தேவலோகக் காவலர்கள் மறுக்கிறார்கள். மனித உணர்வுகள் அவனை ஆட்கொள்கிறது. எனவே “நாயுடன் மட்டுமே சுவர்க்க லோகம் செல்வேன். இல்லையேல் மேலான வாழ்க்கை கிடைப்பதாயினும் வேண்டாம்”” என்று மறுத்து விடுகிறான் யுதிஷ்டிரன். பாரதக் கதையின் இந்த இடத்தில் தான் தர்மத்தைக் கண்டுணர்ந்ததாக கட்டுரையாசிரியர் சொல்கிறார். விலங்குதானே என்று பாவிக்காமல், தன்னை நம்பி வந்ததால் அதனுடைய நலனையும் தர்மர் யோசிக்கிறார். தன்னைத் தவிர அர்ஜுன, பீமா மற்றும் உடன் வாழ்ந்த அனைவரும்” நரகத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மனத்துயர் அடைகிறான். உடனே சொர்க்கத்தைத் துறந்து நகரத்திற்குச் செல்லத் தீர்மானிக்கிறான். எல்லா ஜீவராசிகளுக்காகவும் இறக்கப்படும் யுதிஷ்ட்ரனின் இந்த செயல் மேன்மையானது. மகிழ்வோருடன் சேர்ந்து மகிழ்வதும், துயரத்தில் இருப்பின் எல்லா ஜீவராசிகளுடனும் சேர்ந்து அழுவதும் தான் உயர்ந்த மனிதப் பண்பு என்பதை நிரூபிக்கிறான். இதையே மகாபாரதமும் சுட்டிக் காட்டுகிறது.

“யாருடைய மனதில் பிறர் நலன் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பதே செயலிலும் சிந்தனையிலும், சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம்” என்றால் என்ன என்று தெரியும்.

நவீன இந்தியாவில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. தன்னலத்தோடு வாழ்வதே புத்திசாலித்தனமாகவும், அறிவாளித்தனமாகவும் கருதப்படும் தற்காலச் சூழலில் சமதர்மம் கேலிக் கூத்தாகக் கருதப்படுகிறது. கலைகளும் விஞ்ஞானமும் விண்ணைத்தொட்டு மேகப் பொதியில் சுற்றப்படுகின்றன. தனிமனித பொருளீட்டும் சக்தியும் உயர்ந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்த அதே அளவிற்கு தீமையும் வளர்ந்து நிற்கிறது. முன்னேற்றமும், சமூகச் சீர்கேடும் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே வளர்கிறது. அவற்றில் பயணிக்கும் நம்முடைய மனசாட்சி மட்டும் ஏன் தர்மம் குறித்து சிந்திப்பதில்லை?. மனிதப் பண்புகளை இடக்காலால் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் வெற்றியை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். யுத்தத்திற்குச் செல்லும் மாவீரனைப் போல. யுகத்தின் கண்ணாடி ரசம் உதிராமல் இருக்கிறது. ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் உடலாமே. நம்முடைய சிரிப்பும், அழுகையும் கண்ணாடி பிம்பமாகத் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு ஓடலாமே!

நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குர்சரண் தாஸ்

“இந்தியா அன்பௌன்ட்” என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தின் நூலாசிரியர். பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம். பிபிசி-யால் படமாகவும் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகங்களான “டைம்ஸ் ஆப் இந்தியா””, “நியூஸ் வீக்””, “நியூயார்க் டைம்ஸ்””, “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்””, “ஃபாரின் அஃபேரஸ்”” போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். “எ ஃபைன் ஃபேமிலி”” என்ற நாவலும், “தி எலிஃபென்ட் பாரடைம்”” என்ற கட்டுரை நூலும், “த்ரீ இங்கிலீஷ் ப்ளேஸ்”” என்ற நூலில் பலருடைய கவிதைகள் மற்றும் கதைகளையும் தொகுத்திருக்கிறார்.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அங்கே வேதாந்தமும், தத்துவமும், சமஸ்கிருதமும் பயின்றவர். “P & G” இந்திய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து, அதன் பின், ஆறு நாடுகளில் வேலை பார்த்து, 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளர் ஆனவர். தற்போது டெல்லியில் வசிக்கிறார்.

Saturday, March 3, 2012

புத்தகம் பேசுது – விடுபட்டவை

கடந்த ஜனவரி புத்தகக் கண்காட்சியை (புத்தகக் கண்காட்சி 2012) ஒட்டி வெளிவந்த புதிய புத்தகங்களையும், அதிகம் விற்பனையாகும் ஒரு சில நல்ல புத்தகங்களையும் பரிந்துரை செய்யுமாறு ஒவ்வொரு பதிப்பகத்தையும் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்டு ஒரு பட்டியலை தயார் செய்திருந்தேன். ஏறக்குறைய எழுபது புத்தகங்களை பதிப்பக நண்பர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள். அதனை புத்தகம் பேசுது இதழில் பிரசுரம் செய்ய முன்வந்தார்கள். தகவல்கள் நான்கு பக்கங்களுக்கு மேல் நீண்டு விட்டதால் சில புத்தகங்களை பற்றிய தகவல்களை நீக்க வேண்டி வந்தது. நண்பர்களின் கவனத்திற்கு அதனை இங்கு பகிர்கிறேன். நன்றி...

1. எனது ஊர் – நூல் வரிசை (ஆழி பதிப்பகம்)

ஒவ்வொரு நகரமும் தனித்தன்மையானது. பல சிறப்புகளை உடையது. தமிழகத்திலுள்ள சுமார் 200 நகரங்களின் சிறப்புகளையும் வரிசையாக அறிமுகம் ஆழி பதிப்பகம் முற்பட்டிருக்கிறார்கள். அதன் துவக்கமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 8 நகரங்களை தனித் தனி நூலாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஊரின் வரலாறு, முக்கிய நபர்கள், சிற்றுளா தளம், அரசியல், பொருளாதாரம், புகைப்படங்கள் என போதுமான தகவல்கள் அதில் இருக்கிறது.

2. ஏன் இந்த உலைவெறி? – விமர்சகர் ஞாநி (ஞானபானு பதிப்பகம்)

தொடர்ந்து 25 வருடங்களாக அணு உலைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் ஞாநி, அணு உலை குறித்த அபாயங்களையும், விபரீதத்தையும் “அணு உலைகள் வரமா? சாபமா?” என்ற கேள்வி பதில் தொகுப்பாக இந்நூலை கொடுத்திருக்கிறார். தமிழக மக்களுக்கு ஞாநியின் பிறந்தநாள் பரிசு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

3. முல்லைப் பெரியாறு – சிக்கலும் தீர்வுகளும் (நம்ம சென்னை)

முல்லைப் பெரியாறு அணையினால் தமிழக கேரள மாநில அரசுகளின் சிக்கலையும், அணையின் கட்டுமானத்தைப் பற்றியும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் நூல்.
ஆசிரியர்: டி. ஐ. ரவீந்திரன்

4. அழிக்கப் பிறந்தவன் – யுவ கிருஷ்ணா (“உ” பதிப்பகம்)

எல்லோருக்கும் தெரிந்த நபரை எடுத்துக்கொண்டு அவரைச் சுற்றிச்சுழலும் நிஜ உலகின் நெருக்கடிகளை புனைவின் தன்மையில் முன்வைக்கும் நூல். படம் வெளிவந்த உடனே கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் திருட்டு விசிடி-யை மைய இழையாக வைத்து புனையப்பட்ட வித்யாசமான நாவல். பத்திரிகையாளர் யுவ கிருஷ்ணானின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வாளோர் ஆடும் மலை – டிராஸ்கி மருது (தடாகம்)

டிராஸ்கி மருதுவின் வண்ண ஓவியங்களை தூரிகையால் எழுதிய புத்தகம். இந்திய மன்னர்களை தோற்றத்தினால் மயக்காமல் தேர்ந்த ஆய்வுக்கு உட்படுத்தி எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஆராய்ந்து வரைந்த வண்ண ஓவியப் புத்தகம்.

6. ராமாவும் உமாவும் – திலீப் குமார் (சந்தியா பதிப்பகம்)

பெங்களூருவில் உள்ள “சங்கம் ஹவுஸ்” அறக்கட்டளையின் சார்பில், ஆகஸ்ட் 2011-ல் தரங்கம்பட்டியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் (Tranquebar Project) பங்கேற்றபோது எழுதப்பட்ட குறுநாவல் ‘ராமாவும் உமாவும்’. அதனுடன் 2002-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி வெளிவந்த மூன்று சிறுகதைகளையும் சேர்த்த தொகுப்பு. திலீப்குமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. மகா பெரியவர் – பகுதி 1 & 2 – பீ. சுவாமிநாதன் (திரிசக்தி)

நெகிழ வைக்கும் காஞ்சிப் பெரியவரின் பக்தி அனுபவங்களை, அவருடைய அரிய புகைப்படங்களுடன் வியக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட புத்தகம்.

8. திராவிட மாயை – சுப்பு (திரிசக்தி)

தமிழ் ஹிந்து இணைய இதழில் “போகப் போகத் தெரியும்” என்ற தலைப்பில் சுப்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

9. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் (கிழக்கு பதிப்பகம்)

“சட்டம் இயற்றும் பிரதிநிதிகள் முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்க வேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப் படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.அப்போது உதவியது, இப்போது சாத்தியமா?” என்ற விவாதத்தை முன்வைக்கும் ஜெய மோகனின் நூல்.

10. ராஜராஜ சோழன் – ச ந கண்ணன் (கிழக்கு பதிப்பகம்)

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார். கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. சுவாரஸ்யமான நாவல் தன்மையில் அமைந்த ச.ந. கண்ணனின் முக்கியமான நூல்.

11. எக்ஸைல் – சாரு நிவேதிதா (கிழக்கு பதிப்பகம்)

விறுவிறு தன்மையில் அமைந்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சமீபத்திய நாவல். வெளியீடு நடந்த அன்று முதல் இரண்டு பிரதிகள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது. கிழக்கு அரங்கில் இந்த ஆண்டு அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று.

12. பொன்னியின் செல்வன் (விகடன் பிரசுரம்)

பல பதிப்பகங்கள் இதே வரலாற்றுப் புதினத்தை வெளியிட்டிருக்கிறது. என்றாலும் படங்களுடன் கூடிய ஐந்து பாகங்களாக விகடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

13. ஆனந்த விகடன் பொக்கிஷம் (விகடன் பிரசுரம்)

பல்வேறு காலகட்டங்களில் விகடன் இதழில் வெளியான அரிய தகவல்களை, படங்களுடன் சமீபத்திய வெளியிடப் பட்டத்தின் தொகுப்புப் புத்தகம்.

14. வரலாற்று நாணயங்கள் – இரா கிருஷ்ண மூர்த்தி (தினமலர்)

கொங்கு, மலையமான், பெருவழுதி, வட்டெழுத்து மற்றும் சோழர் காலத்து நாணயங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரைகள். தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ண மூர்த்தி எழுதிய சங்ககால நாணயங்கள் பற்றிய நூல்.

15. விதியின் கதை – த. செ. ஞானவேல் (தோழி வெளியீடு)

விகடனில் பணிபுரிந்த ஞானவேல் சக்திமசாலா நிறுவனத்தின் உரிமையாளர்களான துரைசாமி – சாந்தி துரைசாமி பற்றியும், வியாபாரத் துறையில் அவர்கள் சாதித்த தருணங்களையும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல்.

16. அயல் மகரந்தச் சேர்க்கை – ஜி குப்புசாமி (வம்சி பதிப்பகம்)

நோபல் விருது பெற்ற முக்கியமான பத்து இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுடைய முக்கிய படைப்பும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். ஜி குப்புசாமி தமிழில் இதனை மொழிமாற்றம் செய்திருக்கிறார்.

17. பிரமிள் விமர்சனக் கட்டுரைகள் - வம்சி பதிப்பகம்

கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் பிரமிள் எழுதிய “வெயிலும் நிழலும், வரலாற்றுச் சலனங்கள்” ஆகிய இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள்.

18. நிழல் வலைக் கண்ணிகள் – குட்டி ரேவதி (வம்சி பதிப்பகம்)

பெண்ணின் உடல் மொழி, சமூகம் மற்றும் சங்ககால பெண் படைப்புகளின் உடல் பற்றிய கருத்தாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை நூல்.

19. வேல ராமமூர்த்தி கதைகள் (வம்சி பதிப்பகம்)

வேல ராமமூர்த்தியின் மொத்தக் கதைகள் அடங்கிய தொகுப்பு.

20. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி – சீனச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)

கம்யூனிச யுத்தத்திலும், அதற்குப் பிறகும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றான இந்த நூலிலுள்ள சிறுகதைகள். 13 எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.

தமிழில்: ஜெயந்தி சங்கர்

21. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து – வெல்ஷ் மொழிச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)

மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் உடையவர்கள். அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த சிறுகதைகள் இவைகள்.

தமிழில்: அரவிந்தன்

22. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு பதிப்பகம்)

2005-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழர் உணவு சிறப்பிதழின் கட்டுரைகளை மேலும் விரிவுபடுத்தி செழுமையாக வெளிவந்துள்ள கட்டுரை தன்மையிலான நூல்.

23. சோஃபியின் உலகம் – கிளாசிக் வரிசை (காலச்சுவடு பதிப்பகம்)

இதுவரை 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக வாசகர்களைக் கொண்டுள்ள நூலகக் கருதப்படும் பொஸ்டைன் கார்டெர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம். ஆர் சிவக்குமார் இதனை காலச்சுவடு பதிப்பகத்திற்காக மொழி பெயர்த்திருக்கிறார்.

24. விகடன் ஆல்பம் - விகடன் பிரசுரம்

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் சிறு வயது முதல் தொகுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் ஆல்பம்.

25. மரங்கொத்திச் சிரிப்பு – ச. முத்துவேல் (உயிர் எழுத்து பதிப்பகம்)

இடைவிடாத வாசிப்புப் பயிற்சியாலும் எழுத்துப் பயிற்சியாலும் நல்ல கவிதை மொழி முத்துவேலுக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப் பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. -(முன்னுரையில் பாவண்ணன்)

26. அழகம்மா – சந்திரா (உயிர் எழுத்து பதிப்பகம்)

எளிய மனிதர்களின் நம்பிக்கைகள், சூழ்நிலைகள் அவர்களைப் படுத்தும் பாடு, வாழ்வின் சுழலில் முரண்களை எதிர்கொள்ளும் விதத்தை சந்திரா தனது கதைகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். வளர்ந்து வரும் பெண் படைப்பாளிகளில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவர்.

Saturday, February 25, 2012

போதையூட்டும் புத்தக வாசனை

“இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சி நடைபெறுவது சந்தேகமே” என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி விவாதத்திற்கு உள்ளானது. என்றாலும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே முடிவெடுத்தபடி ஜனவரி 5ஆம் தேதி ஆரம்பித்து 17ஆம் தேதிவரை புத்தகங்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 35 ஆண்டு களாக இத்திருவிழா சென்னையில் நடை பெற்றுவருகிறது.

70களின் இறுதியில் 22 கடைகளுடன் ஆரம்பித்து, இத்தனை ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது பப்பாசி என்று அழைக்கப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI). கடந்த சில ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியின் எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

இந்த ஆண்டில் 383 புத்தக உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 500க்கும் அதிக மான கடைகளில் பொதுப் புத்தகங்களும், சிற்றிதழ்களும், பாடப் புத்தகங்களும், ஒலிப் புத்தகங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டு நூல்களும் கிடைக்கும்படி காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒன்பது பெரிய நுழைவாயில்களுடன் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப் பட்டிருந்தது.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களே கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது போன்ற மொழிகளில் குறைந்த புத்தகங்களே காணக் கிடைத்தன. சுயசரிதம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், தத்துவம், பொருளாதாரம், சமையல், ஜோசியம், மருத்துவம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கக் கிடைத்தாலும் கல்வி, இலக்கியம், அரசியல், ஆன்மீகம் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட புத்தகங்களையே மக்கள் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு எங்கு திரும்பினாலும் கண்ணில் பட்டது கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன். இது பல்வேறு பதிப்பகங் களால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புதினத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு மலைப்பை ஏற்படுத்துகிறது. படங்களுடன் வெளிவந்த விகடனின் பொன்னியின் செல்வன் நாவலை அதிக வாசகர்கள் விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிந்தது.

கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் பல படைப்பாளிகளின் கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரைகளின் புத்தக வெளியீடுகள் தொடர்ந்து நடைபெற்றவாறே இருந்தன. மூத்த எழுத்தாளரான திலீப்குமாரின் ‘ரமாவும் உமாவும்’ துவங்கி, இளம் தலைமுறை படைப்பாளியான ச. முத்துவேலின் முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு’வரை பல நூல்கள் இதில் அடக்கம்.

மலையாளம், வங்கம், ஆங்கிலம், சீனம், வெல்ஷ், ரஷ்ய மொழி முதலான பல மொழிகளின் முக்கியமான படைப்புகள் அனுபவம்மிக்க மொழி பெயர்ப்பாளர்களின் தமிழாக்கங்களாக வந்திருக்கின்றன. சொந்த மொழிப் படைப்புகளைக் காட்டிலும் மொழி மாற்றப் படைப்புகள் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருப்பதைக் காண முடிந்தது. கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும், நொறுங்கிய குடியரசு, பஷீரின் படைப்புகள், சோஃபியின் உலகம் போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், மாணவர்கள், குறுந்தட்டுக்கள்

பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை உள்ளடக்கிய குறுந்தட்டுக்கள் நிறையக் கடைகளில் கிடைத்தன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், கணக்குப் பாடங்களும்,

நடுநிலை மற்றும் பிளஸ் 2 மாணவர் களுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட எல்லா பாடங்களும் குறுந்தட்டுக்களாக உள்ளன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு துவங்கி 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து பாடங்களுக்குமான குறுந்தட்டுகளும் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு வினா விடைகளும் குறுந்தட்டுக்களில் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், இலக்கணக் குறுந்தட்டுக்கள் மற்றும் இதர பயிற்சி வீடியோ சி.டி.க்கள் கிடைத்தாலும் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் துவக்க வார்த்தைகள் மற்றும் 1 முதல் 9 வரையான எண்களைப் படங்களுடன் உள்ளடக்கிய மரத் தால் செய்யப்பட்ட கன சதுர விளையாட்டுப் (கீஷீஷீபீமீஸீ சிuதீமீs) பொருள் பலரையும் கவர்ந்தது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது மொழியிலுள்ள வார்த்தைகளை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இது உதவும். ஆங்கிலத்தில் இதுபோல நிறையவே இருக்கின்றன என்றாலும் தமிழுக்குப் புதிய வரவு. விலை ரூபாய் 400ஆக இருந்தாலும் பலரும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

ப்ரெய்லி முறையிலான நூல்கள்

இந்திய மொழிகளில் முதன் முறையாகப் ‘ப்ரெய்லி’ முறையில் படிக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் க்ரியா பதிப்பகம் தயாரித்திருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட தற்கால க்ரியா தமிழ் அகராதியை 57 தொகுதிகளாகப் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்

இதனை கண்காட்சியில் வைக்கிறார் கள். ப்ரெய்லி அகராதியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல் கின்றனர். மேலும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களையும் தொடர்ந்து பிரெய்லி முறையில் கொண்டு வருகிறார்கள். இந்தியப் பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து செய்யும் இந்தப் பணிக்குக் காக்னிசென்ட் நிறுவனம் 11 லட்சம் நிதி கொடுத்து உதவி செய்திருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்காக க்ரியா நிறுவனமும் நான்கு லட்சம் ரூபாயைச் செலவிட்டிருக்கிறது என்று க்ரியாவில் பணிபுரியும் கவிஞர் ஆசைத்தம்பி கூறினார்.

எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு

புத்தகத் திருவிழாவின் ஆகச் சிறந்த விஷயமாக எழுத்தாளர் - வாசகர்கள் பங்குபெற்ற ‘நேருக்கு நேர்’ சந்திப்பைக் குறிப்பிடலாம். முதன்முறையாக பப்பாஸி இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுற்றியெழும் இரைச்சல்களுக்கு மத்தியில், திறந்த வெளி அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. சந்திப்பில் அசோகமித்திரன், சா. கந்தசாமி, பிரபஞ்சன்,பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், இரா. நடராஜன், அழகிய பெரியவன், மனுஷ்யபுத்திரன், பாமா, சாரு நிவேதிதா, இந்திரா பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன்போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பெரிய பொருட்செலவில் கண் காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் நடத்தப்படும் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, பாராட்டுரை போன்றவற்றிலிருந்து முழுவதும் வித்தியாசப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சி. பத்திரிகையாளர் ஞாநி மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் முன்னின்று இந் நிகழ்வை நடத்திக்கொடுத்தார்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப் பான வசதிகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சங்கடங்கள், சிக்கல்கள்

பாதாள ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதால், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரும் புதிருமாக வாகன நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கக் கடந்த ஆறு மாத காலமாக ஊழியர்கள் படாதபாடு படுகிறார்கள். இந்த நிலையில் கண்காட்சிக்கு அப்துல் கலாம் அழைக்கப்பட்டபோது முக்கிய நுழைவாயில்கள் எல்லாவற் றையும் அடைத்துவிட்டார்கள். இதனால் சிறு குழந்தைகளும், வயதானவர்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பின்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் இதனால் நெருக்கடியைச் சந்தித்தனர். உச்சப் பாதுகாப்பு வளையத்தில் இருப் பவர்களைச் சம்பிரதாயத்திற்குக் கூப்பிட்டுப் பொதுமக்களை அவதிப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.

விழாவின் இரண்டு நாட்கள் திடீரென மழை பெய்தது. என்றாலும் புத்தகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வந்தவர்கள் எல்லோரும் குறைபட்டுக்கொண்ட ஒரே விஷயம் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகளின் விலையைப் பற்றித்தான். ஒரு கோப்பை காப்பியின் விலை ரூபாய் 20. எந்தவித உணவாக இருந்தாலும் குறைந்தது ரூபாய் 50 செலவு செய்ய வேண்டியிருந்தது. (நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரின் ஆஸ்தான சமையல் குழுவினர் என்ற துண்டுக் காகிதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் எஸ்.வி. சேகரின் உறவினர்கள் என்று நினைத்துவிட்டார்களோ!). ஏன் ஒரே ஒரு உணவகத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? இரண்டு அல்லது மூன்று உணவகங்கள் இருந்தால் வாசகர்களுக்குத் தேர்வுசெய்ய வழி இருக்கும். தான் வைத்ததே விலை என்று எந்த ஒரு தனி உணவகமும் நினைக்க முடியாது.

கண்காட்சியின் மிக மோச மான விஷயமாகக் கழிவறை ஏற்பாட்டைச் சொல்ல வேண்டும். கழிவறையை நெருங்கும்போதே மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திவிடுகிறது கழிவறைக்குச் செல்லும் பாதை. மோசமான பாதையில் அதைவிட மோசமான நாற்றத்தைச் சகித்தபடி சென்றால் கிடைப்பது மிகக் கொடுமை யான அனுபவம். “கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு ஐந்து மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தேன்” என்று சாரு நிவேதிதா தன் இணைய தளத்தில் எழுதியிருப்பது கழிவறைகளின் தரத்துக்குப் பொருத்தமான ‘சான்றிதழ்’.

இதுபோன்ற குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டுக் கண்காட்சியை எதிர் நோக்குகிறார்கள் புத்தகங்களின் காதலர்கள்.

நன்றி: நம்மChennai இதழ்

Tuesday, January 17, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

புத்தகக் கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். "என்ன புத்தகம் வாங்கலாம்?", "புதுவரவில் எந்தெந்த புத்தகங்கள் சிறந்தது?" போன்ற பல கேள்விகள். கடந்த ஆறுமாத காலமாக ஓயாத பயணம், அலைச்சல், தொழின்முறை சந்திப்புகள் என்றே கழிந்துவிட்டது. விட்டில் பூச்சி வெளிச்சத்தை நேசிப்பதைப் போலத்தானே சிலபல முயற்சிகளையும் வாழ்க்கையில் துணிந்து எடுக்கவேண்டி இருக்கிறது. அணு உலையால் வம்சமே பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்றாலும் துணிந்து அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கிறோம். மக்களை மயக்கும் சமாதானங்களையும் கூச்ச நாச்சம் இல்லாமல் முன்வைக்கிறோம். தெரியாத விஷயத்தில் சுய விருப்பம் சார்ந்து நாம் எடுக்கும் முடிவுகளும் அப்படிப்பட்டதே. பரிட்சார்த்த முயற்சிகளும் அணு உலையைப் போன்றதே. கரணம் தப்பினால் வம்சத்தின் மரணம் கண்முன்னே நிகழ்ந்துவிடும். இங்கு "வம்சம்" என்பது என்னை நேசிக்கும், என்மேல் நம்பிக்கை வைக்கும் நண்பர்களாக இருப்பதுதான் வேடிக்கை.

"என்ன வேலை செய்யிருங்க கிருஷ்ணா?" என்று சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் பத்மஜா கேட்டிருந்தார்.

"சும்மாதாங்கா இருக்கேன். ஆனால் வேலை செய்தபோது உழைத்ததை விட, வெறுமனே இருக்கும்போது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது" என்று அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன்.

"உண்மைதான் கிருஷ்ணா. முடிந்த வரை கூடுமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரங்களிலும் கிடைக்காது. உங்களுக்கான அபூர்வ தருணங்கள் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். கவித்துவமாக...

அக்கா சொல்லியது போலவே அபூர்வ தருணங்கள் தாமாகவே அமைகிறது. "அனுபங்கள்" சக மனிதர்களைப் போல வீட்டு வாசலின் முன்வந்து நிற்கிறது. அவற்றை குசலம் விசாரித்து அனுப்பிவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டின் சரிபாதி ஓடிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களே பக்கங்கள் புரட்டப்படாமல் இருக்க, இந்த ஆண்டும் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. புனைவில் எதையுமே வாங்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடனே புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். சுயவிதிகள் பல்லிலிப்பதுதானே வாழ்வின் நுட்பமான நிதர்சனம். இந்த ஆண்டும் காலச்சுவடு புத்தகங்களையே அதிகம் வாங்க நேர்ந்தது. முக்கியமான சில புத்தகங்களை இந்த ஆண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். விலைதான் சற்று கூடுதல். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், சத்தம் கேட்கும் நேரத்தை எதிர்பார்த்து, விரைந்து ஓட வேண்டும் என்ற முழுப் பிரக்ஞையுடன். இந்த ஆண்டும் திட்டமிட்ட காரியங்கள் நிறையவே இருக்கிறது. வாசிப்பதற்கான நேரம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்தே சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றின் பட்டியல் இதோ...

காலச்சுவடு பதிப்பகம்
1. ஆனைவாரியும் பொன்குருசும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
2. உண்மையும் பொய்யும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
3. சங்கராபரணி - மாலதி மைத்ரி
4. நீலி - மாலதி மைத்ரி
5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு நேர்முகம்
6. மனக்குகை ஓவியங்கள் - சுந்தர ராமசாமி
7. வன்முறை வாழ்க்கை - கண்ணன்
8. திரும்பிச் சென்ற தருணம் - பி ஏ கிருஷ்ணன்
9. பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - ஓ. ரா. ந. கிருஷ்ணன்
10. நவீன நோக்கில் வள்ளலார் - ப சரவணன்
11. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் - க. பூரணச்சந்திரன்
12. சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்
13. கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்
14. திரைவழிப் பயணம் - உமா ஷக்தி
15. கச்சத்தீவும் இந்திய மீனவரும் - வி சூரிய நாராயணன், கே. முரளிதரன்
16. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - ஜெயந்தி ஷங்கர்
17. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து - அரவிந்தன்
18. உமாவரதராஜன் கதைகள் - உமா வரதராஜன்
19. தமிழ் இதழ்கள் - ரா. அ. பத்மநாபன்
20. சோஃபியின் உலகம் - யோஸ்டைன் கார்டெர் (ஆர். சிவக்குமார்)

க்ரியா பதிப்பகம்
21. மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந முத்துசாமி
22. தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் - பியர் பூர்தியு

பாரதி புத்தகாலயம்
23. உணவு நெருக்கடி - ஏ. பாக்கியம்
24. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச தமிழ்ச்செல்வன்
25. அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச தமிழ்ச்செல்வன்
26. நந்தி கிராம் – அருணன்
27. இன்னொரு சென்னை - க மாதவ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
28. நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சமந்த முதலியார்
29. இலக்கிய இதழ்கள் - இ. சுந்தரமூர்த்தி, மா. ரா. அரசு
30. நாவல் கலையியல் - முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்
31. தமிழ் நாடகம் - நேற்றும் இன்றும் - முனைவர் கு. பகவதி

சாகித்ய அகாடமி பதிப்பகம்
32. மௌனத்தின் குரல் - வாஸந்தி
33. பருவம் - எஸ் எல் பைரப்பா – பாவண்ணன்
34. கயிறு - தகழி சிவசங்கர பிள்ளை - சி ஏ பாலன்

காவ்யா பதிப்பகம்
35. ந.முத்துசாமி கட்டுரைகள் - சி. அண்ணாமலை
36. நாடகம் - பதிவும் பார்வையும் - சி. அண்ணாமலை
37. தீராநதி - இலக்கிய இதழ் ஆய்வு - உ சஞ்சை
38. பழமொழிக் கதைகள் - முனைவர் சு. சண்முகசுந்தரம்

தமிழினி பதிப்பகம்
39. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் - முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ்
40. பகல் கனவு - எம் எஸ் கல்யாணசுந்தரம்
41. அம்மாவின் அத்தை - கி அ சச்சிதானந்தம்
42. தேவதேவன் கதைகள் - தேவதேவன்
43. மீனுக்குள் கடல் - பாதசாரி
44. புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார்
45. அ. முத்துலிங்கம் கதைகள் - முழுத்தொகுப்பு

NCBH

46. சிற்பங்களைச் சிதைக்கலாமா? - வெ. இறையன்பு
47. சங்க இலக்கியத்தில் வேளாண சமுதாயம் - பெ. மாதையன்
48. நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - இரவீந்திரபாரதி

சாளரம் பதிப்பகம்
49. அசோகர் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்
50. கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

உயிர்மை பதிப்பகம்
51. காளி நாடகம் - உன்னி. ஆர் (சுகுமாரன்)
52. அன்புள்ள கி.ரா.வுக்கு - தொகுப்பு: கி. ராஜநாராயணன்
53. கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் - ஆர் முத்துக்குமார்
54. அன்று பூட்டிய வண்டி - ந முத்துசாமி
55. துயில் – எஸ்ரா
56. நெடுங்குருதி - எஸ்ரா

பொன்னி பதிப்பகம்
57. அம்பாரம் - சிறுகதைகள் - பூமணி
58. காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ்
59. ஜென் கதைகள் - சேஷையா ரவி (அகல்)
60. மஞ்சள் வெயில் யூமா வாசுகி (அகல்)

சந்தியா பதிப்பகம்
61. மரங்கள் (நினைவிலும் புனைவிலும்) - மதுமிதா(சுபா ஆண்டி கொடுத்தது)
62. ராமாவும் உமாவும் - திலீப்குமார்

உயிர் எழுத்து பதிப்பகம்
63. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
64. மரங்கொத்திச் சிரிப்பு - ச. முத்துவேல்

65. மனுஷி - பாமா (விடியல்)
66. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)
67. தபால்காரன் - க.நா.சு (பானு பதிப்பகம்)
68. சென்னையும் நானும்... (நம்ம சென்னை)
69. ஏன் இந்த உலை வெறி - ஞாநி (ஞானபானு)
70. சூர்ப்பனகை - கே.வி.ஷைலஜா (வம்சி பதிப்பகம்)
71. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி (கவிதா)
72. ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
73. ஏழு தலைமுறைகள் - அலக்ஸ் ஹேலி (சவுத் விஷன்)
74. சாமியாட்டம் - யெஸ். பாலபாரதி (அன்னை ராஜேஸ்வரி)
75. அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில்: எம் எஸ் (பாதரசம்)
76. ஒரு ஏழை ஏறி வந்த ஏணி - முக்தா சீனிவாசன் (திருக்குடந்தை)
77. சிக்மண்ட் ஃபிராய்ட் - தி.கு. இரவிச்சந்திரன் (அலைகள் பதிப்பகம்)
78. நாடகப் பனுவல் வாசிப்பு - தொகுப்பு: வீ. அரசு, கோ. பழனி (மாற்று)
79. பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழு (HRPC - TN)
80. ஞாலம் போற்றும் பாலம் ஐயா - வழக்கறிஞர் சீ. ஜெயராமன் (ஜெயகீதா)
81. பிரமிள் படைப்புகள் - தொகுப்பாசிரியர்: கால. சுப்பிரமணியம் (அடையாளம்)

ஆவணப் படங்கள்

1. பாலம் கலியாணசுந்தரம்
2. அம்மாப்பேட்டை கணேசன் ஆவணப்பதிவு
3. தீக்கொழுந்து (தேயிலை விவசாயிகள்)
4. பச்சை ரத்தம் (புலப்பெயர்வு பற்றிய கள ஆய்வு)
5. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
6. முல்லைப் பெரியாறு ஆணை உண்மைகள்
7. இன்றும் வாழும் சோழ மன்னர்கள் கள ஆய்வு
8. மூழ்கும் நதி

Wednesday, January 4, 2012

புத்தகக் கண்காட்சி 2012

புத்தகத்திற்காக அலைந்த காலங்கள் சுவாரஸ்யம் நிறைந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பின், பல மணிநேர பணம் செய்து, பதிப்பகத்தின் முகவரி கண்டுபிடித்து புத்தகங்கள் வாங்கிய காலம் கூட உண்டு. “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அதற்கெல்லாம் புண்ணியம் கட்டிக் கொண்டார். ஒரு தொலைபேசி உரையாடலில் எல்லாம் முடிந்து விடுகிறது.

இரண்டு வருடங்களாக கண்காட்சியை ஒட்டி ஏராளமான நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. வாசித்து வியந்த எழுத்தாளர்களையும், புத்தக வாசிப்பால் உறவாடும் நண்பர்களையும் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும், புதுப்புது விஷயங்களைத் தேடித் திரிந்தாலும் கடந்த ஆண்டில் புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கேணி சந்திப்பு சார்ந்தும் எழுத முடியாத சூழல்.

1. சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு),
2. பாலு சத்யா சிறுகதைகள் (வம்சி, அம்ருதா),
3. அவன்-அது=அவள் – பாலபாரதி (தோழமை),
4. அன்பின் வழி - க நா சு
5. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள்

-ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதுவும் படிக்க இயலவில்லை. இந்த புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நகர வாழ்வின் சிக்கல்களுக்கு உள்ளாகும் மனித இருப்பின் ரெண்டுங்கெட்டான் தனத்தை பாலுசத்யா தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். திருநங்கைகள் குறித்த பாலபாரதியின் நாவலும் அதன் தன்மையில் முக்கியம் வாய்ந்ததே. நீலாநதி –எனும் லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் முழுவதும் வாசிக்க இயலவில்லை. படித்த வரை வித்யாசமான வாசிப்பனுபவமாகவே அமைந்தது. இந்தப் புத்தகங்களை அழுத்தமாகவே நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

சமீபத்தில் ஏற்பாடாகியிருந்த “அழகர்சாமி குதிரை” திரைப்பட கலந்துரையாடலுக்காக “கனகதுர்கா – வம்சி செளியீடு” தொகுப்பிலுள்ள சில கதைகளை வாசிக்க நேர்ந்தது. மீள் வாசிப்பிலும் சிறுகதைகள் ஃபிரெஷ்ஷாகவே இருந்தது. இணையத்திலும் முன்போல் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முகநூலில் நண்பர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையில் நேரம் கழிந்து விடுகிறது.

காலச்சுவடு பதிப்பகத்தில் நல்ல பல புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். ஏற்கனவே சில புத்தகங்களுக்கு முன்பணம் கூட செலுத்தியிருக்கிறேன். சென்ற வருடமே சாகித்ய அகாடமி அரங்கிற்குச் சென்று ஏராளமான மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வாங்கப்பட்டும் பக்கங்கள் புரட்டப்படாமல் இருப்பது நெஞ்சைப் பிசைகிறது.

சென்றவருடப் புத்தகப் பரிந்துரை

இந்த ஆண்டிற்கான விழா இதோ துவங்கிவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும், தத்துவ விசாரணை புத்தகங்களையும் பட்டியலில் வைத்திருக்கிறேன். நண்பர்கள், சிலருடைய படைப்புகளை கூகிள் பஸ்சில் குறிப்பிட்டிருந்தார்கள். கூகுள் நிறுவனம் பஸ்சை நிருத்திவிட்டமையால் நண்பர்கள் இங்கு மீண்டும் பரிந்துரை செய்யவும்.

உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

(முற்றும்)

மேலும் சென்னை புத்தகக் காட்சியில் தினசரி படைப்பாளியுடன் நேருக்கு நேர் நிகழ்த்சி “க.நா.சு” நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற இருக்கிறது. தினமும் மாலை F-35 அரங்கில் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம். பின்வரும் அட்டவணையில் முக்கியமான படைப்பாளிகள் விழாவில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.

வெ 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி

சனி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்

ஞா 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி - எஸ்.ராமகிருஷ்ணன்

தி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்

செ 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்

பு 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்

வி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்

வெ 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்

சனி14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்

ஞா 15- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்

தி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா

செ17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்