Thursday, May 22, 2014

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக்


“நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஓர் உடல். என் கடைசி மூச்சை வெகு நேரத்திற்கு முன்பே நான் விட்டிருந்தாலும் என் இதயம் துடிப்பதை நிருத்திவிட்டிருந்தாலும் எனக்கு நிகழ்ந்திருப்பது என்னவென்று அந்தக் கொலைகார இழிஞனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.” – இப்படித் தான் ஆரம்பிக்கிறது ‘என் பெயர் சிவப்பு’. (தமிழில்: ஜி குப்புசாமி, பக்கம்: 9) 

“இந்த நாவல நீ அவசியம் வாசிக்கனும்டா” என்று நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகனுக்குப் பரிந்துரை செய்திருந்தேன். முதல் அத்தியாயத்தின் (மேலுள்ள) ஆரம்ப வர்ணனைகளைப் படித்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனே என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். நான்கூட “என்னவோ? ஏதோ?” என்றுதான் எடுத்துப் பேசினேன்.

“மாமா... நீங்க காக்க-காக்க – சூர்யா நடிச்ச – கெளதம் வாசுதேவ் மேனனுடைய படத்தைப் பார்த்திருக்குறீங்களா?” என்றான்.

“எதுக்குக் கேக்குற?” என்றேன்.

“இல்ல... என் பெயர் சிகப்பு படிச்சிட்டு இருக்குறேன்... அதான் கேக்குறேன்...” என்றான்.

“மொழங்காலுக்கும் மூக்கு நுனிக்கும் எதுக்குடா முடிச்சுப் போடுற?” என்றேன்.

“இல்ல மாமா... அதுல சூர்யாவ பிஸ்டல்ல சூட் பண்ணி ஆத்தோரத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. ஒரு பொனம் பேசுறா மாதிரிதான் அந்தப் படம் ஆரம்பிக்கும். கெளதம் வாசுதேவ்மேனன் – என் பெயர் செகப்பு நாவல்ல இருந்து அந்த மொதல் காட்சிய மட்டும் சுட்டு இருப்பாரா?” என்றான். உண்மையிலேயே எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. படத்தின் முதல் சீனைக் கண்டுகளித்து, நாவலின் ஆரம்ப அத்தியாயத்தையும் வாசித்த நண்பர்கள் தான் இதற்கான பதிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (மற்றபடி படத்தின் கதைக்கும், இந்த நாவலுக்கும் துளிக் கூட சமந்தமில்லை.)

இந்நாவல் ஒருவனது கொலைக்கான பின்னணியைத் துப்பறியும் கதைதானென்றாலும், அரசு, அரசியல் என்ற இணைத் தண்டவாளங்களின் மீது பயணிக்கும் ஓட்டமான் சாம்ராஜ்ஜிய அரசவை நுண்ணோவியர்களின் வாழ்வானது தடம்புரளும் ஒரு நுட்பமான புள்ளியை - மரபான தொன்மக் கலாச்சாரத்தின் போக்கில், மேற்கத்திய நவீன பரீச்சார்த்த முயற்சிகள் உட்புகும்போது பழைமைவாதிகளுக்கு உண்டாகும் மனச்சஞ்சலங்களை – யதார்த்த மனிதர்களுடன் சாயலுடன் நாவலை நகர்த்திச் செல்கிறார் ஓரான் பாமுக்.

துருக்கிய மொழியில் “Benim Adim Kirmizhi” 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல் - 2001-ஆம் ஆண்டு Erdag M. Goknar என்பவரால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாமுக்கின் இதர படைப்புகள் முன்னமே ஆங்கிலத்தில் வெளி வந்திருந்தாலும், “My Name Is Red” தான் 2006-ல் அவருக்கான நோபல் பரிசு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் “மை நேம் இஸ் ரெட்” பாமுக்கின் மற்ற படைபுகளிலிருந்து ஒருபடி கீழே வைத்துத்தான் கறாரான இலக்கியவாதிகள் பார்க்கப்படுகிறது என்கிறார்கள். (இதிலிருந்தே இது சாமானிய வாசகர்களின் பிரதி என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே.!)

இஸ்தான்புல்லைத் தலைநகரமாகக் கொண்ட ஓட்டமான் சாம்ராஜ்ஜியத்தை, சுல்தான் மூன்றாவது மூர்த் 1574 முதல் 1595 ஆண்டு வரை ஆண்டுவருகிறார். நுண்ணோவியங்களிலும் ஓவியச்சுவடிகளிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஓட்டமான் அரசர் இவரே என்கிறார்கள். “கைவண்ண மலர், திருவிழா மலர், வெற்றி மலர்” ஆகிய ஓவியச் சுவடிகள் என பல முயற்சிகளும் இஸ்தான்புல்லில் இவரது ஆசையின் பேரில் தான் உருவாகின. இந்நாவல் இவரது ஆட்சிக் காலத்தில் தான் நிகழ்கிறது.

என் பெயர் சிவப்பு - ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டைச் சிறப்பிக்கும் பொருட்டு நுண்ணோவிய மலர் ஒன்றை வெளியிடும் பொறுப்பை குருநாதர் ஒஸ்மானிடம் - மூன்றாவது மூர்த் ஒப்படைகிறார். வெனிஸ் மன்னருக்கு அந்த ஓலைச்சுவடியை இரகசியமாகப் பரிசளித்து நட்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் மூர்த் |||. ஆகவே, வெனிஸ் ஓவிய பாணியும் நுண்ணோவிய மலரில் வெளிப்படுமாறு கேட்டுக்கொள்கிறார். சுல்தானின் விருப்பப்படி ஒஸ்மானும் - எனிஷ்டே எஃபெண்டியிடம் பொறுப்பினை ஒப்படைத்து, “வசீகரன் எஃபெண்டி, வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ்” ஆகிய ரகசிய உறுப்பினர்களைக் கொண்டு சுவடி வேலையைத் துரிதப்படுதுகிறார். ஓவிய வேலைகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, மெருகோவியனான வசீகரன் எஃபெண்டியை – இதே குழுவில் வேலை செய்யும் மூன்று பேர்களில் ஒருவன் கொலை செய்து, பாழுங்கிணற்றில் பிரேதத்தை வீசி எறிகிறான். இந்தப் பாழுங்கிணற்றிலிருந்து தான் பிரேதம் பேசத் துவங்க நாவல் ஆரம்பிக்கிறது. கொலை நடக்கும் அதே நாளில் எனிஷ்டே எஃபெண்டியின் மருமகன் (கருப்பு எஃபெண்டி) – பனிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். ஆகவே, கொலைப் பழி அவன் மீது சந்தேகத்துடன் திரும்புகிறது.

எனிஷ்டே எஃபெண்டியின் ஒரே மகளான ஹெகுரேவை – இளம் வயதில் கருப்பு காதலித்து, அவளை அடைய முடியாத விரக்தியில் தூரதேசம் செல்கிறான். ஹெகுரேவை குதிரை வீரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் அவளது தந்தை. போருக்குச் சென்ற ஹெகுரேவின் கணவன் – வீடு வந்து சேராததால், இரண்டு பிள்ளைகளுடன் (ஷெவ்கெத், ஓரான்) தந்தையின் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். ஹெகுரேவின் கணவன் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பச் செய்து, ஹெகுரேவை அடையத் துடிக்கிறான் அவளுடைய கொழுந்தன் ஹசன். அதற்காக எஸ்தர் என்ற சலவைத் தொழிலாளியைத் தூதனுப்புகிறான். கருப்பும் – கணவனை இழந்து நிற்கும் ஹெகுரேவிடம் தனது காதலைப் புதுப்பித்து, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புவதை எஸ்தர் மூலம் சொல்லி அனுப்புகிறான்.

கொலைக்கான பின்னணி ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ‘ஹெகுரே – கருப்பு – எஸ்தர் – ஹசன்’ என முக்கோண காதல் இடையோடுகிறது. ஹிஜிரா ஆயிரமாவது நுண்ணோவிய மலர் வெளியிடவேண்டிய தேதி நெருங்குவதால் சுவடியை முடிக்க வேண்டிய நெருக்குதல் குருநாதர் ஒஸ்மான், எனிஷ்டே எஃபெண்டி மற்றும் பிற நுண்ணோவியர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தான் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஹெகுரே தனது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தனிமரம் ஆகிறாள். எனவே, சிறுவயதில் காதலித்த கருப்பு எஃபெண்டியை மணந்துகொள்ள உள்ளுக்குள் விரும்புகிறாள் ஹெகுரே. நுண்ணோவியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் கருப்பின் தலையில் விழுகிறது. (கருப்பு வந்து சேர்ந்த அன்றுதான் கொலை நடந்துள்ளது.)

“கொலை – காதல் – துப்புத் துலக்குதல்” என்ற அளவோடு படைப்பானது இருக்குமாயின் சாதாரண ஜனரஞ்சக நாவலாகத் தான் இருந்திருக்கும். “துருக்கிய பின்புலத்து நுண்ணோவியர்களின் பின்புலம், அது சார்ந்த முன் தயாரிப்புகள், ஓவிய கலாச்சார மரபுகளுடன் – இஸ்லாமிய மதம் கொண்டுள்ள தாக்கம் – பழைமைவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமான முரண்பாடு” என ஏராளமானவற்றை அள்ளித் தெளித்து படைப்பை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார் பாமுக். அதுவே வாசக மனநிலையின் மேலான தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

பிரேதம் (வசீகரன் எஃபெண்டி), கருப்பு, கொலைகாரன், ஹெகுரே, குருநாதர் ஒஸ்மான், மாமா (எனிஷ்டே எஃபெண்டி), எஸ்தர், சிவப்பு, நாய், நாணயம், மரணம், குதிரை, ஓரான் (ஷேகுரேவின் இளைய மகன்), வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ், ஓவியங்களிலுள்ள உருவங்கள் என உயிருள்ள மனிதர்களும், உயிரற்ற பொருட்களும் கதாப்பாத்திரங்களாக தத்தமது நிலையைச் சொல்லிக்கொண்டு செல்லச் செல்ல நாவல் முழுப் பரிமாணம் கொள்கிறது. நவீனத்தை நோக்கி நகரும் மனிதர்களின் வேட்கையையும், அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் மனிதர்களின் ஞாய வாதங்களையும் ஒருசேர இதில் முன்வைக்கிறார். மதத்தைக் கட்டுடைக்கும் “மேற்கத்திய நவீன கலாச்சாரம், ஹெகுரேவின் மறுமணம்” என பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஹதீஸ் (இறைவன் தனக்குச் சொல்லியதை நபிகள் நாயகம் உலகிற்குச் சொன்னது) மனித மேன்மைக்கான விஷயங்களைத் தான் சொல்கிறது. தண்ணீர் குடிப்பது முதல் சிறுநீர் கழிப்பது வரை பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. உருவ வழிபாடு கூடாது என்பதால், அதன் பொருட்டு ஓவியங்களும் இஸ்லாமிய மரபில் தடை செய்யப்பட்டது.

குர் ஆன் ஓவியர்களை விலக்கி வைத்திருந்ததினால் அவர்களை யாரும் மதித்ததில்லை. (பக்கம்: 526)

இறைவனின் படைப்புக்கு மாறான மேம்படுத்தப்பட்ட ஓவியமாகச் சுவடியை உருவாக்கினால் இறைவனின் தீர்ப்பு நாளில் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதுதான் பிரதிமையில் நவீனத்தை உட்புகுத்தும் நுண்ணோவியர்கள் மீது பழைமைவாத ஓவியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஹதீஸை மீறி வாழக் கூடாது என்பதல்ல, அப்படி வாழ்ந்தால் கேடு மனிதர்களுக்குத் தான் என்கிறார் நபி. பெண்களின் மறுமணம் கூடாது என்று இறைதூதர் அருளிய ஹதீஸில் சொல்லப்படவில்லை. பெண்கள் தனியாக இருந்தால் அது கேடுகளுக்கு வழிவகுக்கும், ஆகவே ஓர் ஆண் – ஊனமுற்ற பெண்ணையும், ஆதரவற்ற பெண்ணையும், போரில் கணவனை இழந்த பெண்ணையும் தான் இரண்டாவதாக அல்லது அதற்கு மேலும் திருமணம் செய்யலாம் என்கிறார் நபி.

ஹதீஸிலிருந்து வழுவாமல் இருந்து, ஓவிய மரபைக் காக்கும் பொருட்டுத்தான் மெருகாளன் வசீகரன் எஃபிண்டி கொல்லப்படுகிறான். கொலைகாரனே அதனைப் பதிவும் செய்கிறான். மரபை மீறுவது குருநாதர் ஒஸ்மானுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. ஓவியத்தின் பொருட்டு மரபைக் காக்க நினைக்கும் குருவும் சிஷ்யனும், ஆழ்மன காம எண்ணத்தில் மரபை மீறி யோசிக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சியின் விவரணையில் அவனது வன்புணர்ச்சி செய்ய நினைக்கும் ஓரினக் காம வேட்கை விருப்பங்கள் வெளிப்படுகிறது. குருநாதர் ஓஸ்மானும் ஓவியப் பட்டறையின் பதின்பருவத்து மாணவர்களைப் பார்த்து காம வேட்கை கொள்ளும் விவரணைகளும் ஆழ்மன எண்ணங்களாகப் பதிவாகி இருக்கிறது.

கொலைகாரன்: குருநாதர் ஒஸ்மானுக்கு செல்லம் ஒருவன் இருந்தான். எப்போதுமே அவன் கூடச்செல்வானென்றால் ஓவியக்கூடத்தில் வதந்திகளும் ரசக்குறைவான நகைச்சுவை வம்புகளும் பரவுமென்பதால் வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒருவனென்று குருநாதர் குறிப்பிட்டு வைத்துவிட்டார். (பக்கம்: 159)

குருநாதர் ஒஸ்மான்: காலை நேரங்களில் என் வீட்டு வாசலில் அவன் வந்து நிற்கும்போது, வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தவுடன் என் உள்ளத்தில் எழுகின்ற கிளர்சியைப் போல இவனைப் பார்த்தல் உண்டாவதில்லை என்பதை சொல்லவேண்டி இருக்கிறது. (பக்கம்: 420)

வண்ணத்துப்பூச்சி: நான் பலாத்காரம் செய்யப்போகும் ஓர் அழகிய சிறுவனின் பிருஷ்டத்தை உள்ளங்கையால் ஏந்துவதைப் போல, நான் வரைந்ததையும் பற்ற வேண்டும் போல இருந்தது. (பக்கம்: 442)

குருநாதர் ஒஸ்மான்: அந்தக் காதலன் சின்னஞ்சிறு பாதங்களும் சருகு போன்று மெல்லிய சருமமும் பெண்ணைப் போன்ற சாயலும் கொண்டிருந்த ஒரு பலவீனமான இளைஞன். அவனது மெல்லிய முழங்கையைப் பார்கையில் அதனை முத்தமிட்டுவிட்டு உடனே செத்துப்போய் விடலாமா என்று தோன்றவைக்கிறது. (பக்கம்: 504)

கொலைகாரன்: சிறார்களோடு பாலுறவு கொள்கிற, கஞ்சா புகைக்கிற, நாடோடியாய் அலைகிற, எல்லாவித நெறிபிறழ்ந்த நடத்தைகளிலும் ஈடுபடுகின்ற ஒரு துறவியர் மரபின் கடைசிச் சீடன் நான் என்பதை வசீகரன் தெரிந்துகொண்டால், என் மீது அவனுக்கு பயம் வரும். (பக்கம்: 626)


நுண்ணோவியம் சார்ந்து மரபிலிருந்து வழுவாமல் நிற்க நினைக்கும் ‘கொலைகாரனும், மதகுருவும்’, காம இச்சை சார்ந்த எண்ணங்களில் மனச் சிதறல் கொள்கிறார்கள். ஒருபால் வேட்கை மட்டுமல்ல கருப்பின் இயற்கைக்கு முரணான காம வேட்கைக்கு முதலில் தயங்கும் ஹெகுரே – படுத்த படுக்கையாக ஊனப்பட்டிருக்கும் கருப்பின் வேட்கையைத் தீர்ந்து வைக்கிறாள்.

ஹெகுரே: பாரசீகக் கவிஞர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக எந்த காரணத்திற்காக இந்த ஆணின் சாதனத்தை ஓர் எழுதுகோலுக்கும் பெண்களான எங்கள் வாய்களை மைக்கூடுகளுக்கும் ஒப்பிட்டு வந்திருக்கின்றனர் என்பதை முற்றிலுமாகப் புரிந்துகொண்டேனா என்று சொல்ல முடியவில்லை. (பக்கம்: 648)

ஹெகுரே: மரண வாடை அடித்துக் கொண்டிருந்த அந்த அறையில் இருந்த என்னை அப்போது பரவசப்படுத்திக் கொண்டிருந்தது என் வாயிலிருந்த அந்தப் பொருள் அல்ல. (பக்கம்: 648)


உயிர்ப் பெருக்கத்தைத் தவிர்த்த இதர முறையிலான உடலுரவுகள் ஏற்புடையது அல்ல என்கிறார் இறைதூதர். நபிகளின் வாழ்வியல் மேன்மைக்கான கட்டளைகளாகட்டும், இதர அறிவார்த்த ஒழுக்க விதிமுறைகளாகட்டும் - மனித உணர்வுகளுக்கு முன் இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதையே காலக் கண்ணாடி, மனிதர்களின் வாழ்வு மூலம் பிரதிபலிக்கிறது. புற ஒழுக்கங்களை மரபின் அளவீட்டில் நூல்பிடித்துப் பின்பற்ற நினைக்கும் சமூகம், தனிமனித ஒழுக்கத்தில் கட்டற்று அலைகிறது. அதைத்தான் பாமுக் இந்நாவலில் வரலாற்றின் துணைகொண்டு ஆராய முற்படுகிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தமிழுக்கு பாமுக்கைக் கொண்டு வந்ததில் ஜி. குப்பிசாமியின் கடினப் பிரயாசை இருக்கிறது. “மூலத்தை விட ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்திருக்கிறது” என்று ஒரு மேடைப் பேச்சில் பகிர்ந்துகொண்டாராம் ஓரான் பாமுக். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துவிட்டு “ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழாக்கத்தில் இந்நாவல் இன்னும் செறிவாக வந்திருக்கிறது” என்கிறார் தீவிர வாசகரும், மூத்த எழுத்தாளருமான அ. முத்துலிங்கம். மேலும், “ஓரான் பாமுக் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்துப் பார்க்க வாய்ப்பில்லை. அப்படி வாசிக்க நேர்ந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைக் காட்டிலும், தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது” என்று சொல்லியிருப்பார் என்கிறார் முத்துலிங்கம்.

ஜி குப்புசாமியுடனான உரையாடலில் இதுசார்ந்த பேச்சு வந்தபோது, “அதெல்லாம் வாய்ப்பே இல்லிங்க. மூலத்துல இருக்கறதுல 80% விஷயங்கல மொழியாக்கத்துல கொண்டுவந்தாலே பெரிய விஷயம் தான். இதெல்லாம் பாமுக் மற்றும் முத்துலிங்கத்தின் பெருந்தன்மை” என்று பகிர்ந்துகொண்டார்.

“இத அ.முத்துலிங்கம் மட்டும் சொன்னா பரவாயில்லையே. சுகுமாரன், நாகரத்தினம் கிருஷ்ணா, ஜெயமோகன், எஸ்ரா”ன்னு எல்லாருமே சொல்றாங்களே என்றால், “பாருங்க மொழி பெயர்ப்பாளன் கண்ணாடி மாதிரி. அதில் விழும் பிம்பம் தான் மூல நாவல்னு முத்துலிங்கம் சொல்றாரு. ஆனா... என்னைப் பொருத்தவரை ‘என் பெயர் சிவப்பு’ என்ற பிம்பம் நல்லா வந்திருக்குதுன்னா..! அந்த பிம்பம் விழும் கண்ணாடி குப்புசாமி என்கிற மொழிபெயர்ப்பாளனாகிய நானில்ல. உண்மையில் கண்ணாடியானது தமிழ் மொழி. அது மொழியின் சிறப்பு” என்கிறார் ஜி குப்புசாமி.

இப்படிச் சொல்வது மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் பெருந்தன்மை. காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முறையான அனுமதி பெற்று - ஏறக்குறைய 18 மாதங்கள் தினந்தோறும் உழைத்து இந்நாவலை மொழியாக்கம் செய்ததாகத் தனது நேர்முகத்தில் குப்புசாமி பதிவு செய்திருக்கிறார். இந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னை முன்னிருத்திக் கொள்ளாத கவர்ச்சியும் மெச்சத் தகுந்த விஷயங்கள்.

இலக்கிய ரசனையின் முக்கிய அம்சமே மொழி தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் மொழியானது கண்ணாடியாக இருக்கலாம். அ. முத்துலிங்கம் தவறாகச் சொல்லிவிட்டார். மொழி பெயர்ப்பாளர்கள் கண்ணாடியல்ல. அதன் பின்னால் பூசப்பட்டுள்ள மெல்லிய ரசக் கலவை. கண்ணாடி எத்தனை கனமானதாக இருந்தாலும், மெல்லிய ரசக்கலவை பூசப்படவில்லையேல், தெளிவான பிம்பத்தைக் காண்பது இயலாத காரியம். ரசம் உதிர்ந்த கண்ணாடிகளும் இருக்கத் தானே செய்கிறது. எனினும் அது கண்ணாடிகளின் பிரச்சனை இல்லையே!. ஜி குப்புசாமி போன்ற ரசக்கலவைகள் - தாம் சார்ந்த மொழிக்கு வலு சேர்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியே.

குறிப்பு: பாமுக்கின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என் பெயர் சிவப்பு’. சென்ற ஆண்டு பாமுக்கின் கடைசி அரசியல் நாவலான ‘பனி’ வெளிவந்தது. ஓரான் பாமுக்கின் மொத்தப் படைப்புகளையும் அடுத்தடுத்து மொழியாக்கம் செய்யும் பணியில் ஜி. குப்புசாமி வேலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகமே வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

என் பெயர் சிவப்பு
மூலம்: ஓரான் பாமுக் (துருக்கி)
தமிழில்: ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.
விலை: 350

புத்தகம் சார்ந்த பிற பதிவுகள்:

கண்ணாடியைப் பார்ப்போம் - அ. முத்துலிங்கம்
மரணத்தின் நிறம் சிவப்பு – கவிஞர் சுகுமாரன்
ஒரு நுண்ணோவியத்தின் கதை – நாகரத்தினம் கிருஷ்ணா
ஜெயமோகன் வாசகர் கடிதம்
என் பெயர் சிவப்பு: க. சீ சிவக்குமார்
நாவலின் சில பகுதிகள்: அபுதீன்
என் பெயர் சிவப்பு: ஆதவா