Friday, March 21, 2014

நீறுபூத்த நெருப்பு - சாதியும் நானும்

ஒருமுறை என்னுடைய பெரிய அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரவர் நட்பு வட்டத்தைப் பற்றிய பேச்சு வந்தது. “இங்க பாரு ஹேமா... எனக்கு தலித் பிரெண்ட்ஸ் தான் அதிகம்” என்றேன். “உன்ன எல்லாம் சுட்டுக் கொல்லனும்டா...” என்றவாறு ஹேமா கோவத்தை வெளிப்படுத்தினாள்.

“ஏன் அப்படி சொல்ற ஹேமா? எதுக்குக் கோவப்படுற...?” என்றேன்.

“எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம்னு சொல்லு... ஃப்ரண்ட்ஸ் பத்தி பேசும் பொழுது அதென்ன தலித் பிரண்ட்ஸ்...” என்றாள்.

அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. சாதியை பல இடங்களில் விமர்சித்தாலும், நீர்பூத்த நெருப்பாக சாதியானது உள்ளுக்குள் இருந்திருக்கிறது. இந்த மனோபாவத்திற்கு நான் வளர்ந்த சூழலும் ஒரு காரணம் என்பதுதான் உண்மை.

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்ச பாண்டவர்களுக்காக அகதீஸ்வர முனிவர் யாகம் நடத்தியதாக வாய்மொழிக் கதையில் கூறப்படும் பஞ்ஜேஷ்டி தான் எனது பூர்வீகம். பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து இந்த ஊர் தான் எங்களது பூர்வீகம். பஞ்ஜெட்டி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஆனந்தவள்ளியும், அகதீஸ்வரனும் தம்பதியார்களாகக் காட்சியளிக்கும் சிவ தளம் அமைந்த ஊர். இப்போதும் கூட மொத்தத்தில் இரண்டு தெருக்கள் தான் உள்ளது. தலித்துகள் வசிக்கும் காலனி கொஞ்சம் பெரியது. அப்பொழுதெல்லாம் ஒரு தெருவில் மேல்சாதியினரும், மற்றொரு தெருவில் நாயுடுகளும், ரெட்டியார்களும், நாயக்கர்களும் வசிப்பார்கள். தலித்துகள் வசிக்கும் காலனி ஊரிலிருந்து சற்றே விலகி அமைந்திருக்கும். கோவிலின் பக்கத்தில் ஒரேயொரு ஐயர் வீடு. 

சிறுவனாக இருந்தபோது மேல்சாதியினர் வசித்தத் தெருவில் 20 வீடுகள் இருந்தால் அதிகம். பெரும்பாலும் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் (நாட்டு ஓடு & சீமை ஓடு) தான் இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் கூட இருக்கும். இரண்டு வீடுகள் மட்டுமே “மெத்தை வீடு” என்றழைக்கப்பட்ட மாடியுடன் கூடிய வீடுகள். ஒருவீடு அப்பாவின் முன்னோர்களுடையது. இன்னொன்று அம்மாவின் முன்னோர்களுடையது. இரண்டுமே எட்டுக்கட்டு வீடுகள். நான் வளர்ந்துகொண்டே வர, இரண்டு வீடுகளும் சிதிலமடைந்து தரைமட்டமாகின. பின்னர் குடிசை வீட்டில் வாழத் துவங்கினோம். எனினும் வீட்டு வேலைகளைச் செய்ய பக்கத்துத் தெருவிலிருந்து பெண்கள் வருவார்கள். தோட்ட வேலைகளைச் செய்ய காலனியிலிருந்து தலித் ஆண்கள் வருவார்கள். பெரும்பாலும் இவர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள். தண்ணீரும், நீர்மோரும் வீட்டார் புழங்கும் டம்பளர்களில் கொடுத்தாலும், சாப்பாட்டினைப் பின்புறத் திண்ணையில் உட்கார வைத்து இலையில் தான் பெரும்பாலும் பரிமாறுவார்கள்.

“நான் வாழ வந்த போது பற பசங்க ஊருக்குள்ள வந்தா துண்ட எடுத்து மடியில கட்டிப்பாங்க. அப்பல்லாம் ஏது செருப்பு?. பின்னாடி செருப்பு வந்தது. ஊருக்குள்ள வரும்போது செருப்பைக் கையில எடுத்துக்குனு நடந்தது கூட நேத்து நடந்த மாதிரி தான் இருக்குது. இப்ப என்னடான்னா பறப் பசங்க கால்ல போட்டுட்டு இருக்குற செருப்ப எடுத்து மொகத்துக்கு நேரா காமிப்பாங்க போல. நம்மளையே கேள்வி கேக்குறாங்க. எல்லாம் கலி காலம்...” என்று காலஞ்சென்ற சின்னப் பாட்டி ஞானாம்பாள் எப்பொழுதாவது சொல்லுவதுண்டு.

ஒருமுறை பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கழுவுவதற்காகத் தொட்டிக்குச் சென்றேன். சூரப்பேட்டா கிழவி குடிசையின் பின் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் சில்வர் கிண்ணத்திலேயே கிழவிக்குச் சாதம் கொடுத்திருந்தாள் அம்மா. எதோ பொறியலைக் கிண்ணத்தில் வைக்க வந்த சமயம் “ஏம்மா கொழம்பு வெக்கிற கிண்ணதுளையே அதுக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்கற. வேற எதாச்சும் எலயில போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...” என்றேன்.

“இந்தக் கதைக்கெல்லாம் நீ வராத... எட்டி இடுப்பு மேலயே ஒதைப்பேன். ஒருத்தருக்கு எதிர்ல எப்படி பேசுறதுன்னு தெரிய வேணாம்... புத்தி கெட்ட நாய...” என்று அம்மா கோபமாகத் திட்டியது பசுமை மாறாமல் நினைவில் இருக்கிறது. அம்மாவிற்குச் சாதிப் பெருமை இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இன்று வரையிலும் சாப்பாடு பரிமாறுவதில் மட்டும் யாருக்குமே குறை வைக்கமாட்டாள். வீட்டிற்குள் தான் விட மாட்டார்களே ஒழிய, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில்தான், அதே கிண்ணத்தில் தான் அவர்களுக்கும் உணவளிப்பாள். கிராம வீட்டில் வசித்தபோது, சில நாட்களில் மீன் விற்பனை செய்ய வரும் பெண்களும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுண்டு. பொன்னேரிக்குக் குடி பெயர்ந்ததிலிருந்து வீட்டிற்கு யார் வந்தாலும், “உள்ள வாங்க... உட்காருங்க... எதாச்சும் சாப்பிடுங்க...” என்கிறாள். அன்றைய தினம், “மோலியார திட்டாதம்மா பாவம்...” என்று சூரப்பேட்டா கிழவி தான் அம்மாவைச் சமாதானப் படுத்தினாள்.

சாதிய நுட்பத்துடனும், தீண்டாமை நோக்குடனும் பிரித்தறிந்து சிறுவயதில் நடந்துகொண்டதில்லை என்றாலும், வழக்கத்தில் சாதியின் பெயரே “முதலியார்” என்பதால், “நம்ம மொதலாளிங்க, அவங்க வேலை செய்யிறவங்க” என்ற லாஜிக் தான் அப்படிப் பேசியதற்குக் காரணம். எனினும், சாதியத்தின் வீரியம் ஒரு கிரகணத்தின் நிழல் போல பள்ளிச் சிறுவனின் மனதில், அவனது வாழ்வியல் சூழல் நஞ்சினைப் போல ஏற்றியதாகத் தான் மேற்கூறிய சம்பவத்தை நினைவுகூர்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்க்கை மகாமகா தரித்திரத்தில் கழிந்தது. எனினும் சாதியாது பழமொழி வடிவில் தான் முதன் முதலில் எனக்கு அறிமுகமானது.

கிரிகெட் விளையாட நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சிறுவயதில் செல்வதுண்டு. அவரது குடும்பத்தார் ரெட்டியார் (MBC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் கூட, சமையல் பணியாளராக பால்வாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ - விடிந்ததும் நண்பரது வீட்டு வாசலில் தான் சிறுவர் பட்டாளம் நிற்கும். எப்பொழுதாவது நண்பரின் தாயார் சாப்பிடுவதற்குச் சத்துணவு மாவு கொடுப்பார்கள். சில நேரங்களில் நீரில் கரைத்து தோசையாகவும் வார்த்துக் கொடுப்பார்கள். பிடிக்காத திண்பண்டமாக இருந்து சாப்பிடுவதற்கு மறுத்தால் “மோலியார் ஜம்பம் வெளக்கெண்ணெய்குக் கேடு...” என்று நக்கலடிப்பார்கள். இதெல்லாம் பன்னிரண்டு, பதிமூன்று வயதில் நடந்த கதை. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி முழுவதும் - பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே இருந்த அரசுப் பள்ளியில் படித்ததால் சாதியானது சான்றிதழ் வடிவில் அறிமுகமாகி இருக்கவில்லை. அரசுப் பள்ளியில் இதர சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெருவாரியாக படித்த காலமது.

“தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் சாதியைச் சேர்ந்த பிள்ளைகள்” என எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் கலந்திருப்பார்கள். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், உடன் படித்த நண்பர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் எங்களது முன்னோர்கள் விற்றுத் தீர்த்த நிலத்தில் வேலை செய்தவர்களாகத் தான் இருப்பார்கள். போலவே என்னுடைய பெற்றோர்களும், அவர்களது பெற்றோர்களும் கூட உடன் படித்த நண்பர்களாகத் தான் இருப்பார்கள். சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நண்பர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தான் சிறுவயதில் படித்த பள்ளி இருந்தது. உடன் படித்த நண்பர்கள் ஒருநாளும் வீட்டிற்கு வந்ததில்லை. நானும் அழைத்ததில்லை. பள்ளிவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையிலும் தலித் மாணவர்கள் ஒருவரும் எங்கள் தெரு வழியாகக் கடந்து சென்றதில்லை.

உயர்நிலை வகுப்பிற்காக சோழவரம் சென்றபோதும் இதே நிலைதான். எனினும் வெளியூர் என்பதால் தலித்துகள், இதர சாதியினர் என்ற பேதமின்றி எல்லோருடனும் சமமாகப் பழக முடிந்தது. மதிய உணவைக் கூட பரிமாறிக் கொண்டதுண்டு. ஓரளவிற்கு பெற்றோர்களின் மறைமுகமான திரைமறைவு பொம்மலாட்ட சாதியக் கட்டுமானதிலிருந்தும், அதன் இருக்கதிலிருந்தும் வெளியில் வரமுடிந்தது. பின்னர் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி படித்தபோதும் நண்பர்களுக்குள் ஒரு பேதமும் இருக்காது. காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பயின்றபோது என்னுடைய அரைத் தோழனாக இருந்த பாக்கியராஜ் கிருத்துவ தலித். மற்றொருவர் வன்னார். இன்னொருவர் நத்தம் முதலியார். குடும்பத்தின் கட்டுப்பாடுகள் இன்றி மகிழ்வுடன் சுற்றித் திறந்த காலமது. போலவே, பள்ளி முதல் கல்லூரி வரையிலும் அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் பயின்றதால் பெரும்பாலும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் பலரும் ஒடுக்கப்பட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடும்பத்துப் பெரியவர்களுடன் ஏதேனும் விதண்டாவாதம் செய்ய நேர்ந்தால் “பாட சுத்தன பறையா... உனக்கு பற சகவாசம் தானே அதிகம்...” என்று குறிப்பிட்டுத் திட்டுவார்கள். “ஜாதி கெட்ட நாய மூட்றா வாய...!” என்ற வசைச் சொற்களையும் சில நேரங்களில் கேட்டதுண்டு.

அக்கா ஜெயாவிற்கு அனைன்யா பிறந்திருந்த சமயமது. வீட்டு வாசலில் “அக்கா... அக்கா...” என்று யாரோ குரலெழுப்பி அழைக்கும் சப்தம். அம்மா ஏதோ வேலையாக இருந்ததால் வெளியில் சென்று பார்த்தேன். சிறுவயதில் உடன் படித்த செந்தில் நின்று கொண்டிருந்தான். எனது கிராமத்து காலனியைச் சேர்ந்த தலித் நண்பன்.

“எங்கடா இவ்வளவு தொலைவு... வா வா... உள்ள வந்து உட்காரு...” என்றேன்.

“உங்க அம்மா இல்லையா கிருஷ்ணா...?” என்று வினவினான். அதற்குள் அம்மாவே வாசலில் வந்து நின்றுகொண்டார்கள். “காசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேங்கா...” என்றான். அம்மாவும் உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்துக்கொடுக்க, செந்தில் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான். அனைன்யா பாப்பாவிற்குத் தொட்டில் செய்து கொடுத்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக பிறகு அம்மா கூறினாள்.

“உள்ள வாடா... காஃபி சாப்பிட்றா...” என்று கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பும் வரை அசௌகரியமாகவே உணர்ந்தான். அடடா, வந்தவனை சங்கடப் படுத்திவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.

சிறுவயதில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் சிரமமான விஷயமாக எனக்கிருந்தது. மிகவும் கூச்சப்படுவேன். இப்பொழுதெல்லாம் வாயைத் திறந்தாள் மூடுவதில்லை. நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது சில புதிய நண்பர்கள் நாசூக்காக என்னிடம் கேட்பதுண்டு: “நீங்க பிராமின் தானே...!”

“ஏங்க... நாய்பீ கணக்கா கன்னங்கறேல்னு இருக்கேன்... என்னப் போயி பிராமினான்னு கேக்குறீங்களே...!” என்பேன். “இலிங்க... நீங்க ஆந்திரா பார்டர்ல இருக்கிங்களா... தெலுங்கு பிராமின்ஸ் நெறைய பேரு கருப்பா தான் இருப்பாங்க...!” என்பார்கள். “அதென்னமோங்க... எனக்குத் தெரியல... ஆனா, நான் தர லோக்கல்...” என்பேன்.

“என்னமோங்க பிரபு... உங்க பேச்சு, நடை, பாவனை”-ன்னு எல்லாம் பிராமின்ஸ் மாதிரி தான் இருக்குது என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுடன் வட இந்திய, நேபாளச் சுற்றுளா சென்றிருந்தேன். சுற்றுலாவின் முடிவில் பல வயோதிக நண்பர்களும் “நீங்க ப்ராமினா?” என்று தான் வினவினார்கள். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் சமயங்களில் என்னுடைய பதில் எப்பொழுதுமே “அதெல்லாம் இல்லைங்க... நான் தர லோக்கல்...” என்பதாகத் தான் இருக்கும்.

“சாதி இல்லை, சாதி இல்லை” என்கிறோம். எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை. சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பஞ்செட்டி கிராமம் இருக்கிறது. சென்னையுடன் போதிய தொடர்புகளும், இளம் தலைமுறை மக்களுக்கான தெளிவும் உள்ள முன்னேறிய கிராமம். எனினும் ஜாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. மேல்சாதியினருக்கும், தலித்துகளுக்குமான தொடர்பும் கூட நுட்பமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகத் தான் இருக்கிறது. தனக்குக் கீழ் நிலையிலுள்ள சாதியை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் தான் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.

சமீபத்தில் ஒருநாள் மடிக் கணினியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த ஒருவருடன் பேசியவாறு அம்மா பாத்திரங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். “ச்சே... காலனியில இருக்கறவங்க வீடு கூட கொஞ்சம் சுத்தமா இருக்கும் போல... இந்த வீடு ஏன் இப்பிடி காலனியார் வீடு மாதிரி கப்படிக்குதுன்னு தெரியல...” என்பதை உரையாடிக் கொண்டிருந்தவரிடம் மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டிருந்தாள்.

“அம்மா... நீ பேசுறது சரியில்ல... அதென்ன காலனி ஆளுங்கன்னு கம்பேர் பண்றது? தம்பிங்க யாராச்சும் வீட்டுக்கு வரும்போது இப்பிடி பேசுன உன் வாய ஒடச்சி கையில கொடுத்துடுவேன்...” என்றேன்.

“இப்ப இன்னா பேசிட்டேன்... உனக்கு அனுபவம் அதிகமா? எனக்கு அனுபவம் அதிகமா? உனக்கு இன்னா தெரியும் மொதல்ல... அதுவரைக்கும் வாய மூடு...” என்றார்கள் கோவத்துடன்.

“அப்படி பேசாதன்னா... பேசாத... அவ்வளோதான்...” என்றேன் நானும் உக்கிரத்துடன்.

“சரிடாப்பா... நான் எதுவும் பேசல நீயும் பேசாத...!” என்று வாதத்தை முடித்து வைத்தார்கள். அம்மா ஒன்றும் மோசமில்லை. தான் மேல்சாதியில் பிறந்தவள் என்று பெருமைபட்டுக் கொண்டாலும், சில நேரங்களில் இதுபோல ஒப்பிட்டுப் பேசினாலும் – சக மனிதர்களை வேண்டுமென்றே சங்கடப்படுத்தக் கூடியவள் அல்ல. ஒருவகையில் என்னுடைய தாயாரும் குடும்பத்து ஆண்களின் ஒடுக்குமுறைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவள் தான். ஆகவே அம்மாவும் ஒடுக்கப்பட்டவள் தான். எனினும் சாதிப் பெருமிதம் அவளது மனதில் ஆழப் பதிந்துள்ளது. என்னுடைய அம்மா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள். அவளது காலம் முடிந்துவிட்டது. அம்மாவை உருட்டி மிரட்டி என்ன ஆகப்போகிறது?

நீறுபூத்த நெருப்பாக நம் போன்ற படித்த, முற்போக்கான சமூகத்திடமே சாதியத்தின் கனல் கனன்று கொண்டிருக்கும்போது, சென்ற தலைமுறையின் பிற்போக்கானவர்களை குற்றம் சொல்லி என்ன ஆகிவிடப் போகிறது?