Monday, March 8, 2010

பால்யகால சகி - பஷீர்

வெளியீடு: காலச்சுவடு
ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
விலை: 60/- ரூபாய்

காலைப் பனியின் மென்மை போலவும், அதிகாலை நேரத்தின் அமைதியான உதயத்தைப் போலவும் சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் குளத்திலிட்ட கல் போல தங்கிவிடும். முதல் நட்பும், முதல் காதலும் கூட அது போன்ற இதமான விஷயங்கள் தான். துருதிஷ்டம் என்னவெனில் இவையிரண்டும் நிறைய பேருக்கு கடைசி வரை நிலைப்பதில்லை. பாசிபடிந்த கல்லினை மீன்கள் சுரண்டுவது போல இழந்த உறவுகளையே மனித மனம் உரசித் திரிகிறது. 'போப்பூர் சுல்தான்' என்றழைக்கப்படும் பஷீரின் இளம்பருவத்து தோழியின் நினைவுகள் தான் பால்யகால சகி.

பஷீரின் ஆக்கங்கள் அனைத்துமே வாசகர்களால் கொண்டாடப்படும் படைப்புகள். அவருடைய புனைவுகள் அனைத்துமே எளிமையான வாசகர்களுக்கானது. புன்னகையுடன் அவருடைய மொழிக்குப் பின்னால் நம்மை அழைத்துச் செல்லக் கூடியது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் வெவ்வேறு தலைமுறையினரால் அவளுடைய இளம்பருவத்துத் தோழி ரசிக்கப்படுகிறாள். அவள் சொல்ல வந்த விஷயத்தை யோசிக்காதவர்களே இருக்கமுடியாது.
மஜீத்,சுஹரா -
இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கிறார்கள். மஜீதின் அப்பா பணக்கார மர வியாபாரி. நல்ல முறையில் தொழில் செய்து பணம் ஈட்டுபவர். சுகராவின் அப்பாவோ ஏழ்மையில் உழலும் பாக்கு வியாபாரி. முரண்பட்ட பொருளாதாரச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏது?. அப்படியே வந்தாலும் விளையாட்டும் கேளிக்கைகளும் சண்டைகளும் அவர்களை ஒன்று சேர்க்கிறது அல்லவா? உலகம் அறியாத வெகுளிப் பெண்ணான சுராவை சீண்டி விளையாடும் சந்தர்ப்பம் மஜீத்திற்கு அமைகிறது.

அவர்களுடைய வீட்டிற்கருகில் ஒரு மாமரம் இருக்கிறது.
பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிரும் பொழுது சுராவை முந்திக்கொண்டு மஜீது எடுத்துக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
மஜீதின் மீதான ஆரம்ப வெறுப்பிற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நகங்களை ஆயுதமாகக் கொண்டு அவனுடன் சண்டைக்குப் பாய்கிறாள். அவர்களுடைய சண்டை புன்னகையுடன் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல்கள். பழம் தனக்குக் கிடைக்காத ஏமாற்றத்தால் சுரா கண் கலங்குகிறாள். அவளைத் தேற்றுவதற்காக மஜீது மரத்திலிருந்து பறித்த கனிகளை சுராவிற்குக் கொடுத்துவிடுகிறான். அதிலிருந்து மஜீதின் இளம்பருவத்து தோழியாகிறாள் சுஹரா. அவன் அரசனாக வாழும் கற்பனை உலகின் தங்க மாளிகையில் அவளே ராஜகுமாரியாகிறாள்.

அதன் பிறகு அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல் நம்மை பல்யத்திற்கே அழைத்துச் செல்கிறது. இஸ்லாமிய மார்கத்தில் ஆண்களுக்கு சுன்னத் கல்யாணமும் (circumcise), பெண்களுக்கு காது குத்து விழாவும் (Ear piercing function) முக்கியமானது. அதைப்பற்றி நாவலில் வரும் சுவாரஸ்யமான உரையாடல்...

உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் சுன்னத்து செய்கிறார்கள். செய்யாதவர்களே கிடையாது? இருந்தாலும்... இந்த சுன்னத்தை எப்படிச் செய்வார்கள்? மஜீத் சுராவிடம் கேட்டான்.

அவளுக்கும் எதுவும் தெரியவில்லை. "என்ன இருந்தாலும் வெட்டி ஒண்ணும் எடுக்க மாட்டாங்கோ" என்று ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது.

கோலாகலமாக நடந்த சுன்னத் கல்யாணத்தில் இவன் மட்டும் வலியுடன் படுத்திருக்கிறான். அவன் படுத்திருந்த அறையின் ஜன்னலின் பின்புறத்தில் நின்று கொண்டு சுரா கேட்கிறாள்.

நீ பயந்தியா மஜிதே?

"நானா?..." நான் பயப்பட ஒண்ணுமே இல்லே...

அப்போது சுரா தனக்கு காது குத்தவிருக்கும் விஷயத்தைச் சொன்னாள்.

இது போன்ற வெகுளித்தனமான உரையாடல்களால் நாவல் இதமாக நகர்கிறது.

ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பதால் அவர்களுடைய அன்பு நாளுக்கு நாள் வளர்கிறது. மஜீத் ஆரம்ப வகுப்பில் தேர்ச்சி அடைய சுரா பெரிதும் உதவுகிறாள். அவளின் அப்பா இறந்துவிடவும் மஜீத் மட்டும் மேற்படிப்பிற்காக நகரத்திற்குச் செல்கிறான். எந்த வகையிலும் உதவ முடியாத நிலையில் வார்த்தைகளால் மட்டுமே மஜீதால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடிகிறது. ஒரு கட்டத்தில் அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நகரம் சென்று, பரதேசியாக சுற்றித் திரிந்து பல வருடங்கள் கழித்து சுராவை மணக்கும் ஆசையுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்புகிறான். வீட்டின் நிலைமை நினைத்ததற்கு மாறாக தலைகீழாக இருக்கிறது. அப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கித் தவிக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருந்த வீடு கூட அடமானத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். சகோதரிகள் வளர்ந்து திருமண வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சுராவுக்கு நகரத்திலுள்ள கசாப்புக் கடைக்காரனுடன் இரண்டாம் தாரமாக திருமணம் முடிந்து, அவனுடைய சித்திரவதையால் பல் உடைபட்டு, கன்னங்கள் ஒட்டி, மெலிந்து போய் ஊர் திரும்புகிறாள்.

பால்ய நண்பர்களான இருவரும் நீண்ட நாட்கள் கழித்து நேருக்கு நேர் சந்தித்து
க் கொள்கிறார்கள். வார்த்தைகளால் பூரணமான அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.

தங்கைகளின் திருமணத்திற்காகவும், இழந்த சொத்துக்களை மீட்பதற்காகவும் பணம் சேர்க்க
நகரத்திற்குச் செல்ல ஆயத்தமாகிறான் மஜீத். அனைவரிடமும் விடைபெற்று சுகராவிடம் செல்கிறான். அவள் ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இருந்துவிடுகிறாள்.

செல்லுமிடத்தில் சேல்ஸ்மேனாக வேலை கிடைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். எதிர்பாராத விதமாக accident-ல் ஒரு காலை இழந்து ஊனமாகிறான். அங்கஹீனத்துடன் சொந்த ஊருக்குச் செல்லத் தயங்குகிறான். ஆகவே ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவி வீட்டிற்குப் பணம் அனுப்புகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல், கற்பனையில் சுராவிடம் பேசிக்கொண்டு நாட்களைக் கடத்துகிறான். எதிர்பாராத தருணத்தில், நெஞ்சு வலியால் சுகரா இறந்துவிட்டாள் என்ற செய்தி அவனுடைய அம்மாவிடமிருந்து வருகிறது.

கிராமத்தைவிட்டுக் கிளம்பும் போது "அவள் சொல்லவந்தது என்ன?" என்ற வினாவுடன் நாவல் முடிகிறது. இயல்பாகவே ஓர் ஆணுக்கு பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் ஏற்படும் அன்பு அற்புதனானது. வாழ்க்கையில் இணையாவிட்டாலும் அந்த அன்பு ஈடு இணையற்றது. உலகம் தெரியாத குழந்தை மனதில் ஏற்படும் அன்பு, காதலாக மாறி கைதவறிப் போகும் ஒருவனின் ரணமான நினைவுகள் தான் பல்யகாலசகி.
0
0 00 00 00 00

பஷீரைப் பற்றி காலச்சுவடில் வெளியான கவிஞர் சுகுமாரன் மற்றும் ஜெய மோகனின் கட்டுரைகள்:

பஷீர்: பூமியின் உரிமையாளர் - கவிஞர் சுகுமாரன்
பஷீர் : மொழியின் புன்னகை - ஜெய மோகன்


Monday, March 1, 2010

வெட்டுப்புலி

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் :
தமிழ்மகன்
விலை : 220/- ரூபாய்

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 'வெட்டுப்புலி' நாவல் வெளியீட்டு விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன். அப்பொழுதே "நம்ம ஊரைச் சுற்றி நடக்கும் கதைதான்... வாசித்துப் பாருங்கள்" என்று தமிழ்மகன் என்னிடம் சொல்லி இருந்தார். புத்தக அட்டையைப் பார்த்த பொழுது என்னுடைய சிறுவயது விளையாட்டுகள் ஞாபகம் வந்தது.

கிராமங்களில் பனமட்டைகள், உடைந்த வளையல்கள், உபயோகமில்லாத சைக்கிள் டயர், கில்லி, கோலி, பம்பரம், சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகளின் முன் அட்டைகள் என பல விஷயங்களை சேகரித்து விளையாட்டுப் பொருளாக்குவோம். அப்படி விளையாடுவதற்காக தீப்பெட்டியின் விதவிதமான அட்டைகளை சிறுவயதில் சேகரித்த அனுபவம் உண்டு. கற்களை வைத்து உருட்டி விளையாடும் விளையாட்டிற்கு (சிசர்ஸ்) தீப்பெட்டிகளின் அட்டைகளும், சிகரெட் அட்டைகளும் தான் ஆதாரம். அதில் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்கு எத்தனிக்கும் ஒருவனின் படமும் இருக்கும். ஒருமுறையேனும் அந்த அட்டைப் பட வடிவமைப்பிற்கான காரணங்களை யோசித்ததில்லை. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தமிழ்மகன் அதற்கான தேடலைத் தன் புனைவின் மூலம் அணுகியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து விடுமுறையைக் கழிக்க தமிழ்ச்செலவன் சென்னைக்கு வருகிறான். Cheeta Match Box-ன் முன் அட்டையிலுள்ள சிறுத்தைப் புலியை வெட்டும் நபர் அவனுடைய தாத்தா சின்னா ரெட்டி தான் என்று பாட்டியின் கதை மூலம் தெரிந்து கொண்டதை உறுதிப்படுத்த நண்பர்களுடன் சொந்த ஊரான ஜகநாத புறத்திற்குப் பயணமாகிறான். அங்கிருந்து புழல், காரனோடை, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், பூந்தமல்லி, பொன்னேரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்று சின்னா ரெட்டியின் தகவலைச் சேகரிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள் என்றால் இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்து போனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு முரண்பட்ட தகவல்களுக்கு இடையில் உண்மையைத் தேடி அலைகிறார்கள்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, சின்னா ரெட்டியைத் தேடிச்சென்ற பயணம் ஆங்கிலேயர் ஆட்சி, ஜமிந்தார் ஆட்சி முறை, காங்கிரஸின் நிலைப்பாடு, நீதிக்கட்சி, சுதந்திர இந்தியா, திராவிடக் கழகங்களின் தோற்றம் (திக - திமுக - அதிமுக), சினிமா என்ற மாய ஊடகத்தின் வளர்ச்சி என்ற பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்கள் வரை நாவல் விரிவதால் ஈ வெ ரா, எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இளையராஜா, ரஜினி, கனிமொழி, அழகிரி வரை பல பிரபலங்கள் பாமரர்களின் சாதாரண உரையாடல்களில் வந்து செல்கிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்த பயணம் முப்பதுகளுக்குத் தாவி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமீப காலங்களுக்கு நகர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நாவல் பயணிப்பதால், அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கமும், மனோபாவங்களும் நுண்மையாக சித்தரிக்க வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால சமுதாய மாற்றத்தை நாவலில் கொண்டுவரும் பொழுது ஏகப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டியதிருக்கும். அதனைத் தமிழ்மகன் சிறப்பாக செய்திருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதற்கு அவர் திரட்டிய தகவல்கள் மெச்சப்பட வேண்டிய ஒன்று. ஏராளமான வரலாற்று மற்றும் பிரபலங்களின் தகவல்களை நாவலில் சொல்லியிருந்தாலும் எதுவுமே நாவலின் வேகத்தைக் குறைக்கவில்லை.

சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பொழுது ஏராளமான கிராமங்கள் மூழ்கியிருக்கிறது. வீட்டை இழந்த கிராம மக்களே அதற்கான கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். நாவலில் இதனைப் படிக்கும்பொழுது அதிர்ச்சியாக இருந்தது.

நாம் வாழும் வாழ்க்கை யதார்த்தமானது என்று நினைத்தாலும், அரசியல் மற்றும் சினிமாவின் தாக்கம் மூர்கமாக நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இவையிரண்டும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அந்த வகையில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சமுதாய மற்றும் மனித மாற்றத்தை பதிவு செய்துள்ள முக்கியமான படைப்பாக வெட்டுப் புலியை எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் எழுதியவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழும் அல்லது வாழ்ந்து மடிந்த யாரையும் தனது படைப்புகளில் முழுமையாகக் கொண்டு எழுதியதில்லை. தமிழ்மகன் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகள் சென்னைப் புறநகர் சார்ந்து வருமெனில் அது தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.

ஜனவரி மாத புத்தகம் பேசுது இதழில் ஜ.சிவகுமார் எழுதிய வெட்டுப்புலி விமர்சனம்

பதிவர் ஆதவன் எழுதிய வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு