Wednesday, April 9, 2014

IBM - யானைக்கும் அடிசரக்கும்

“பசியோடு இருங்கள். முட்டாளாக இருங்கள்” – என்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரசித்தி பெற்ற வார்த்தைகள். ஏப்ரல் 01-ஐ முட்டாள்களின் தினமாக உலகெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ “Apple Company” -யை 1976, ஏப்ரல் 01 ஆம் தேதி தமது நண்பர்களுடன் தொடங்கி இருகிறார். இதனை யோசித்துச் செய்திருப்பாரா என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. இயல்பாக சில விஷயங்கள் இப்படி நடந்துவிடுவதுண்டு. Steve Jobs பற்றி உலகறியும். ஆப்பிள் ப்ராடக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தவம் கிடக்கிறார்கள்.
போலவே 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-ம் தேதி, ஐபிஎம் வரலாற்றின் பொன் ஏடுகளில் வைரக்கோலால் செதுக்கி வைக்கதிருக்க வேண்டிய தினம். அன்று தான் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக, அதிகாரப் பூர்வமாகத் தலைவராக பணியை ஏற்கிறார் லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர். யாரிந்த லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர் (அல்லது) ஜஸ்ட்னர் (அல்லது) ஜெஸ்ட்னெர்?

அமெரிக்காவில் பால் டிரெக் வண்டி ஓட்டும் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, உலகின் தலைசிறந்த பிசினஸ் நிர்வாகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் என்று அடுக்கிக் கொண்டே சென்றாலும், “விழுந்த கம்பெனியை எழுந்து நிற்கச் செய்தவர்” என்று அறிமுகம் செய்வதுதான் சரியாக இருக்கும். அதற்கு IBM Company –ன் வரலாற்றைக் கொஞ்சம் போல அசை போட்டாலே ஜெர்ஸ்ட்னெர் என்பவர் யாரென்பது கைப்புண் கன்னாடிபோலத் தெரிந்துவிடும்.

ஐபிஎம் – அமெரிக்காவின் கௌரவங்களுள் ஒன்று. அமெரிக்காவின் நீண்ட கால அடையாளங்களுள் ஒன்று என்பதாகவும் சொல்லலாம். கத்தரிக்கோல், சீஸ் வெட்டும் கருவி முதல் தட்டச்சுக் கருவி, செயற்கைக்கோள் பாகங்கள் வரை IBM கால் பாதிக்காத துறைகளே இல்லை. அந்த அளவிற்கு இயந்திரங்கள் சார்ந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்திய கம்பெனி. ஆகவே இவர்கள் கம்ப்யூட்டர்கள், லேப்டாப், மென் பொருட்கள் ஆகிய துறைகளிலும் இறங்கியதில் வியப்பில்லை. மைக்ரோ சாஃப்ட், இன்டெல் போன்ற அடையாளமற்ற கம்பெனிகள் இவர்களுக்குப் போட்டியாக வளர்வார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான். புதிதாகத் துவங்கி அசுரகதியில் வளர்ந்த மென்பொருள் நிறுவனகள் IBM-ன் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டன.

அதன் விளைவு 1987-ல் 43 டாலராக இருந்த பங்குச் சந்தை பத்திர மதிப்பு, 1993-ல் 13 டாலர் என்ற நிலைக்கும் கீழிறங்கி பாதாளத்தில் விழுந்து தத்தளிக்கிறது. போட்டி நிறுவனங்களின் சந்தைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அதன் பத்திர மதிப்பு பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போதிய சேமிப்புகள் கைவசம் இல்லை. உலகெல்லாம் கிளைகள் கொண்டு பறந்து விரிந்த பன்னாட்டு நிறுவனம். எனினும் பல பில்லியன் டாலர்கள் வியாபார நஷ்டம். 1985 -லிருந்து பார்த்தால் ஏறக்குறைய 1, 75, 000 நபர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். உலகின் பல நாட்டு ஊழியர்கள் இதில் அடக்கம்.

இந்நிலையில் தான் 1993 ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, தனது தலைமை நிர்வாகி ஜான் ரக்கர்ஸ் பணி ஓய்வு பெறப்போவதாக IBM அறிவிக்கிறது. ஐபிஎம்-ன் அடுத்த தலைமை நிர்வாகியைக் கண்டெடுக்க “ஜான் ஆக்கர்ஸ், ஜிம் பர்க்” போன்றவர்களைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்படுகிறது. உலகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகளில் சிறந்த ஒருவரை IBM நிறுவனம் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஆரம்பத்திலிருந்தே ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தலைமை நிர்வாகி ஜிம் பர்க்கின் சாய்ஸ் LOUIS V. GERSTNER, Jr மட்டுமே. 

ஜெர்ஸ்ட்னெர் அதற்கு முன்பு பதவி வகித்த “மெக்கின்சே, ஆர். ஜெ. ஆர் நபிஸ்கோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனிகள் அல்ல. ஒன்று சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புடையது. அல்லது வங்கிச் செயல்பாடுகள் சார்ந்த நிறுவனங்கள். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் வியாபார நோக்கு கொண்டது ஐபிஎம்.

தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் லூயி வி ஜெர்ஸ்ட்னர், தன்னுடைய பங்கிற்கு சுமார் 30, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறார். எல்லா திசையிலிருந்தும் IBM பிரச்சனைகளைச் சந்திக்கிறது. “ஐ.பி.எம் நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு?” என்றிருந்த நிலைமை மாறி, “பாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஐபிஎம் – இனி எழ முடியுமா?” என்ற இக்கட்டான சூழ்நிலை. பிரச்சனைகளை அதன் நெளிவு சுளிவுடன் சந்திக்கிறார் ஜெர்ஸ்ட்னர். ஏறக்குறைய 9 ஆண்டுகாலம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பழைய வளமான நிலைக்கு நிறுவனத்தை மீட்டெடுக்கிறார். கம்பெனி ஸ்திரத் தன்மையை அடைந்து, தொலைநோக்குடன் வீறுநடை போடும் சமயம் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுகிறார்.

ஜெர்ஸ்ட்னெர் IBMல் தனக்குக் கிடைத்த அனுபவங்களை “Who Says Elephants Can’t Dance?” என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதன் சாரத்தை சுயமுனேற்ற தன்மையில் ராணிமைந்தன் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்.

ஒரு பிரபலமான நிறுவனம் தன்னுடைய அஜாக்கிரதையால் மண்ணைக் கவ்வுவதும், தடம் தெரியாமல் போவதும் நடப்பதுண்டு. இதற்கு சின்னதும் பெரியதுமாக நிறைய கம்பெனிகளைச் சொல்லலாம். சில கம்பெனிகள் மீண்டு எழுவதும் உண்டு. இதற்கு “ஆப்பிள், ஐபிஎம்” போன்ற நிறுவனங்களை உதாரணம் காட்டலாம். இந்தப் புத்தகம் ஐபிஎம் கம்பெனிக்கு ஆக்சிஜன் கொடுத்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி சுருக்கமாகப் பேசுகிறது. கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகம்.

முயற்சி செய்து பாருங்கள். விழுந்த கம்பெனியையே தூக்கி நிறுத்துகிறார்கள். ஒரு புத்தகத்தைப் படிப்பதா கடினம்...!

கலைஞன் பதிப்பகம்,
தமிழில்: ராணிமைந்தன்
விலை 55 ரூபாய்