Wednesday, September 3, 2014

பத்து புத்தகங்கள்

1. தொல்காப்பியம் (தெளிவுரையுடனும் விளக்க உரையுடனும்)
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
3. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள்முருகன்
4. பஷீரின் படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள்)
5. பெருமாள்முருகனின் நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்)
6. அங்கே இப்போ என்ன நேரம்? – அ. முத்துலிங்கம்
7. மகாபாரத நவீனப் படைப்புகள் (இரண்டாம் இடம், பருவம், சாம்பன்)
8. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா
9. ராஜ் கௌதமனின் புனைவுகள் (தன்வரலாற்று நாவல்கள்)
10. சிறுகதைகள் – திலீப்குமார், ச. தமிழ்ச்செல்வன்
11. வெட்டுப்புலி – தமிழ்மகன்

முன்னால் முதல்வர் கருணாநிதி தொல்காப்பியத்தைப் பற்றி “தொல்காப்பியப் பூங்கா” என்றொரு புத்தகம் எழுதினாராம். முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் அந்தப் புத்தகத்தைப் பற்றி சிங்கப்பூரில் வாழும் தமிழ் ஆர்வலர் ஒருவர், கருணாநிதி எழுதியிருந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிக பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டாராம். புத்தகத்தின் தலைப்பு: “தொல்காப்பியப் பூங்காவில் களையெடுப்பு”. அப்படின்னா கலைஞர் எழுதியிருந்த புத்தகத்தில் எவ்வளவு பிழைகள் இருந்திருக்கும் பாருங்கள்.(பல ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் படித்தது)

தொல்காப்பியம் லேசுப்பட்ட விஷயம் அல்ல என்பதற்கு மேற்சொன்ன விஷயங்கள் உதாரணம். தொல்காப்பியத்தைப் புரட்டுவது சங்க இலக்கியத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும். அது சரி... “சங்க இலக்கியங்களை எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா?”. நல்ல கேள்விதான்.

“கெட்ட வார்த்தை பேசுவோம்” படித்தால், “ஆஹா... இவ்வளோ மேட்டர் இந்த சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று புருவத்தை உயர்த்துவீர்கள்.

தமிழர்கள் அனைவரும், தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் புரட்ட வேண்டிய தெளிவுரைகளைக் கொண்ட தொல்காப்பியப் பதிப்புகள் நிறையவே சந்தைகளில் கிடைக்கின்றன. எழுத்தாளர் சுஜாதா கூட தொல்காப்பியம் சார்ந்து, அவரே எழுதி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறன். கருணாநிதி அவர்களும், சுஜாதா அவர்களும் விரும்பிப் படித்த, எழுதிய புத்தகத்தை நாம் படிக்காமல் விடலாமா?

சங்க இலக்கியத்தைத் தொகுத்ததில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். பெருமாள்முருகனின் “பதிப்புகள் மறுபதிப்புகள்” புத்தகத்தில் இந்த சங்ககாலக் குளறுபடிகள் முதல் தற்காலப் பதிப்புகளில் காணக் கிடைக்கும் குளறுபடிகள் வரை சிலவற்றைச் சுட்டிக்காட்டிக் கடுமையான விமசனங்களை முன் வைத்திருக்கிறார். போகட்டும்... அகராதி எப்போதுமே நம்மிடம் இருப்பது நல்லது. நம் வீடுகளில் தமிழ் அகராதி இருந்தால் தானே – வீட்டிலுள்ளக் குழந்தைகள் தமிழ் மொழியையும் ஆங்கிலம் போலவே ஆர்வத்துடன் அணுகுவார்கள். (தமிழ் தமிழ்னு உருகுற முக்கால் வாசிப் பயலுங்க வீட்டுல அகராதி இருக்குதான்னு கேளுங்க... உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்... அப்படிச் சிலர் என்னைப் பார்த்துச் சிரித்ததுண்டு...)

அடுத்தது, இந்திய எழுத்தாளர்களில் பேப்பூர் சுல்தான் என்று செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் முடிசூடா மன்னன் வைக்கம் முகமது பஷீர். கேணியில் நாடக நடிகர் ரோஹிணி கலந்துகொண்டபோது – அவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “அப்பாவின் மீசை” திரைப்படம் சமந்தமாக ஒருவிஷயத்தைக் கூறினார்:

“என்னோட படத்துல டீன் ஏஜ் பசங்க நடிகிறதால ஸ்கிரிப்ட் பத்தியும், ஸ்க்ரீன் ப்ளே பத்தியும் பசங்களுக்கு ஒரு புரிதல் வரணும்னு - ஒரு வொர்க் ஷாப் கண்டக்ட் பண்ணோம். கதைகளை வாசிச்சிப் புரிஞ்சிக்கிறதும் வொர்க் ஷாப்பின் ஒரு பகுதியாக இருந்தது. அதுக்கு பஷீரின் கதைகளை தான் நாங்க பசங்களுக்குக் கொடுத்து வாசிக்க வச்சோம்.”

சினிமாவுல சூப்பர் ஸ்டாருங்கன்னா, புத்தக வாசிப்புல பேப்பூர் சுல்தான் பஷீர் தான் தன்னிகரில்லாத ஐக்கான். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய படைப்பாளி. எல்லா மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. (தமிழில் குளச்சல் மு யூசுப்பின் மொழிபெயர்ப்பு உகந்தது.)

இதுவரைக்கும் பெருமாள்முருகன் 7 நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது மூன்று நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்) ஆங்கிலத்தில் மொழியாகப் பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருகின்றன. பெருமாள்முருகனைப் பற்றிப் பெருமையுடன் நினைவுகூரவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனினும் அதைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும்? காலம்.... காலம் பெருமாள்முருகனைப் பற்றி நிச்சயம் பேசும்.

ஈழத்து மண் கொடுத்த அற்புதங்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர். சுஜாதாவின் பெருமைகளைப் பாடிக்கொண்டு என்னிடம் வந்து “எதாச்சும் நல்ல புத்தகம்... சுஜாதா எழுதற மாதிரி இருந்தா சொல்லுங்களேன்?” என்பார்கள். முத்துலிங்கத்தின் “அங்கே இப்போ என்ன நேரம்?” கட்டுரைத் தொகுதியைத் தான் பரிந்துரைப்பேன். படித்துவிட்டு “அட்டகாசம் பண்ணி இருக்காருங்க அண்ணா...!” என்பார்கள். அதே அ.முத்துலிங்கத்தின் “வியத்தலும் இலமே” புத்தகத்தைப் பரிந்துரைப்பேன். அதிலுள்ள மேற்கத்திய ஆளுமைகளின் உரையாடலைப் படித்துவிட்டு, “ஹாசம்...! இது கட்டுரையும் இல்ல... உரையாடலும் இல்ல... மனுஷன் பின்னி இருக்குறாரு...!” என்பார்கள்.

“பாருங்க... இத எதுக்கு எங்கிட்டே சொல்றிங்க... முத்துலிங்கத்துடன் இணையத்தில் தொடர்புகொள்ள முடியும்... அவர் கிட்ட நீங்களே மின்னஞ்சலில் சொல்லிடுங்க” என்பேன்.

மகாபாரதம் சார்ந்த பரீச்சார்த்த முயற்சிகள் நிறையவே நடந்திருக்கின்றன. “எஸ்ரா, மகாஸ்வேதா தேவி, எம்.டி வாசுதேவன் நாயர், பைரப்பா” என பலரைப் பட்டியலிடலாம். சமீப காலங்களில் ஜெயமோகன் கூட சூளுரைத்துவிட்டு – ஒரு தவம் போல “வெண்முரசு” என்ற இணைய பாரதத்தை முயற்சித்து வருகிறார். சுமார் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ஏறக்குறைய 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஜெமோவின் வாசகர்களுக்கு நல்ல தீனிதான். முதல் தொகுதி அச்சுப் புத்தகமாகவும் வந்துவிட்டது. மற்ற தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு வந்துசேரும் என்பதில் சந்தேகமில்லை. (மொத்தத் தொகுதியும் அச்சுக்கு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானிருக்கிறேன். விஷ்ணுபுரம் மாதிரி பேஜாரா இல்லாமல் இருந்தால் சரிதான்.) விகடனில் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் சில பாரதக் கதை சமந்தப்பட்ட புத்தகங்களும் கிடைக்கின்றன. அவையெல்லாம் கூட சுவாரஸ்யமான புத்தகங்கள்.

அதென்னமோ தெரியவில்லை...! புனத்தில் குஞ்சப்துல்லாவின் “மீஸான் கற்கள்” என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் நாவல்களில் ஒன்று. இந்நாவலின் முதல் நூறு பக்கங்களில் தான் எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து சேர்கிறார்கள். நாவல் முடியும் தருவாயில் இது ஒட்டுமொத்த சமூகத்தின் கதையாக இருக்கிறது. பாத்திரமாக நாவலில் இடம்பெறும் எல்லோரது கதையாகவும் இருக்கிறது. அதுவே இந்நாவலின் பலம். இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளில் இந்நாவலும் நிச்சயம் ஒன்றாக இருக்கும். மலையாள மொழியில் இதுவரைக்கும் 35-க்கும் மேற்பட்ட முறைகள் மறுவெளியீடு கண்ட புதினம் இது. புனத்தில் குஞ்சப்துல்லாவின் ஒரு தீவிர ரசிகர் – இந்நாவல் ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சாகி வெளிவரும்போதும் – புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கித் தன்னுடைய சேகரிப்பில் வைத்துக் கொள்கிறாராம். அந்த வகையில் ஒரே புத்தகத்தின் 35 பிரதிகள் ஒரு வாசகரின் சேகரிப்பில் இருக்கிறது. குஞ்சப்துல்லா கூட இதனைச் செய்திருக்க மாட்டார். ஒரு படைப்பாளிக்கு இதனினும் பெரிய மரியாதை என்ன வேண்டும்? எனினும், “மீஸான் கற்கள்” – மத்திய சாகித்ய அகாடமி மற்றும் மாநில (கேரள) சாகித்ய அகாடமி ஆகிய இரண்டு விருதுகளையும் ஒருங்கே பெற்றுள்ள நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேராசிரியரான ராஜ் கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை” ஆகிய நாவல்களை இளங்கலை கல்லூரி படித்த சமயத்தில் உருகி உருகிப் படித்ததுண்டு. இவரது “லண்டனிலிருந்து சிலுவைராஜ்” ஹாஸ்யத் தன்மையில் எழுதப்பட்ட அருமையான பயண நூல். அயோத்திதாசர் பற்றிய ஆய்வு நூல், தலித்திய விமர்சனக் கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர். இவரது தன்வரலாற்று நாவல்கள் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. கேணிக்கு இவர் வந்திருந்தபோது பேச்சுவாக்கில் ஒரு கேள்வியைக் கேட்டேன்:

“உங்கள ரொம்ப ரிசர்வ்டு டைப்னு எல்லோரும் சொல்றாங்களே...! நீங்க வாசகர்களை அடிக்கடி சந்திக்கலாமே...!”

“ஏங்க... இப்போ உங்கக்கிட்ட ரிசர்வுடாவா பேசிட்டு இருக்குறேன்... அப்படி உங்களுக்குத் தோணுதா என்ன?” என்றார்.

“இல்லியே... நல்லாதானே பேசுறீங்க? அப்ப ஏன் அப்படி சொல்றாங்க...?” என்று கேட்டேன்.

“மொதல்ல தமிழ்ல வாசிக்கிறங்க கொறைவு... அதுலயும் என்னோட புத்தகங்கள வாசிக்கிரங்க ரொம்பக் கொறைவு... நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல... அதனால நான் பேச மாட்டேன்னு நெனைகிறாங்க... ஆளுங்க கெடச்சா நல்லா பேசுறதுதான்...” என்றார்.

ராஜ்கௌதமனின் “நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல...” என்ற வார்த்தைகள் நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று. தலித் சமூகத்தில் மெத்தப் படித்தவன் எதிர்கொள்ளும் சமூக நெருக்குதல்களை இவரது தன்வரலாற்றுப் புதினங்கள் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) முன்வைக்கின்றன. இப்புத்தகன்களைப் படிப்பதற்குக் கொஞ்சம் பொறுமை வேண்டும். பொறுமையுடன் வாசித்தால் நல்லதொரு வாசிப்பனுபவம் நமக்குக் கிடைக்கும். எழுத்தாளர் பாமா அவர்களின் மூத்த சகோதரர் தான் “ராஜ் கெளதமன்” என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. தமிழினி பதிப்பகம் தான் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்பொழுது அவுட் ஆப் பிரிண்ட். ஒருவேளை நூலகங்களில் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.

சிறுகதை என்று வரும்பொழுது கு.ப.ரா துவங்கி அசோகமித்திரன் வரையிலும் நிறைய எழுத்தாளர்களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்களில் பலரும் பல நூறுக் கதைகள் எழுதியவர்கள். ஆனால், மிகக் குறைந்த கதைகள் எழுதிய திலீப் குமார் மற்றும் ச. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தான் என்னுடைய மனதிற்கு உகந்த படைப்பாளிகள். (சக மனிதர்களாக இவர்கள் இருவரையும் உன்னதமான மனிதப் பிறவிகள் என்றும் கூடச் சொல்லுவேன். இதில், ச. தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகக்காரர் முருகபூபதி ஆகியோரின் சகோதரர்.) இருவருமே அவசியம் வாசிக்க வேண்டியவர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு ரூல்சுன்னு போட்டாக்கா... அதனை முதலில் மீறுவது நானாகத் தான் இருக்கும். ஆகவேதான் தமிழ்மகனின் “வெட்டுப்புலி” நாவலை 11 படைப்பாக வரிசைப் படுத்தியிருக்கிறேன். சுவாரஸ்யமான விறுவிறுப்பான நாவல் இது. தமிழ்மகனுக்கான அடையாளத்தையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்த நாவல். இந்நாவல் குறிப்பிடத்தக்க சில விருதுகளைப் பெற்றுள்ளது.

எந்த யோசனையும் இன்றி லிஸ்ட் போட்டதில் இந்தப் புத்தகங்கள் தான் நினைவிற்கு வந்தன. மேலதிகமாக ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு – மேற்படி அந்த எழுத்தாளரை சந்திக்க யோசித்ததே இல்லை. சந்திக்கக் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் மெனக்கெட்டதில்லை. ஒருவர் மட்டும் இதில் விதிவிலக்கு... அந்த ஆஜானுபாகுவானவர் வேறு யாரும் அல்ல - பா. ராகவன்.

அரசு கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த பொழுது இலக்கியபீடம் இதழில் “அலகிலா விளையாட்டு” நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்த காலங்கள். இந்நாவலுடன் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பு. இந்த நாவலுக்காகவே இலக்கிய பீடம் இதழுக்ககக் காத்திருந்த நாட்கள் அவை. “இத எழுதன ஆள ஒரு நாள் நேருல பாத்துடனும்” என்று நினைத்துக்கொண்டேன். அதன்படி கிழக்கு அலுவலகத்தில் பாரா-வைப் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

“இதுவரைக்கும் நான் யாரையும் பாக்கனும்னு ஆசப் பட்டது இல்ல... ஆனா... உங்கள ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சிட்டு இருந்தேன்...! நீங்க பல்லு போனக் கெழவனா இருப்பீங்கன்னு நெனைச்சேன். ஆனா இப்படி இருப்பீங்கன்னு எதிர்பாக்கல...” என்றேன்.

“அது சரி...” என்று சிரித்தார்.

பாராவுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, “இங்கப் பாருடா கிபி... தூரத்துல இருந்து பார்த்தா மணக்கும்... கிட்டக்க வந்துப் பார்த்தா எல்லாம் நாத்தம் தான். கிட்டவந்து மோந்துப் பாரு வேர்வ நாத்தம் அடிக்கும்... சரி போகட்டும்... நீ திஜாவோட ‘அம்மா வந்தாள்’ படிச்சிட்டியா? என்னோட நாவல விட நல்ல நாவல் அது... படிச்சிப் பாரு...” என்றார்.

அவரைப்பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினேன். “அம்மா வந்தாள்” – படித்ததுண்டு. எனினும், பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது “அலகிலா விளையாட்டு” ஏதோ ஒருவிதத்தில் என்னுடன் பின்னிப் பிணைத்த படைப்பு. மதி நிலையத்தில் தற்போது வாங்கக் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

குறிப்பு 1 : இணையத்தில் நண்பர்கள் ஏதோ புத்தகம் சார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொடர் விளையாட்டுப் போல. மனதிற்கு நெருங்கியவர்கள் கை நீட்டி விஷத்தை அருந்தச் சொல்லிக் கேட்டால் கூட – நந்தா பட சூர்யா போலக் கேள்விகளற்று அருந்தக் கூடியவர்கள் நாம். விளையாடத் தானே அழைக்கிறார்கள். ஆகவே, சில புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். என்னுடைய விருப்பப் பட்டியல் மிக நீண்டது. அவரவர் வாசிப்புத் தளம் பொறுத்து, புத்தகத் தேர்வு மாறுபடும். உங்கள் விருப்பம் உங்கள் கையில். உங்களுடைய மனதிற்குப் பிடித்த புத்தகங்களை வாசித்து மகிழுங்கள்.

குறிப்பு 2 : இப்புத்தகங்கள் யாவும் “மாணிக்கவாசகர், மீனாட்சி, க்ரியா, காலச்சுவடு, தமிழினி, சாகித்ய அகாடமி, பாரதி புத்தகாலயம், உயிர்மை, மதி நிலையம்” போன்ற பதிப்பகங்களில் கிடைக்கும்.