Monday, September 24, 2012

இனி நான் உறங்கட்டும்

பாரதப்போரின் நாசத்தால், உயிரிழந்த பங்காளிகளுக்கு பிண்டம் வைக்க யுதிஷ்டிரன் தலைமையில் விதவைகள் உட்பட எல்லோரும் கங்கை நதிக்குச் செல்கின்றனர். ஓடும் நதியில் ஈரத்துடன் நின்றிருக்கும் தர்மனிடம் குந்தி நெருங்கிச் சென்று பின்வருமாறு சொல்கிறாள்: “மகனே, முதலில் கர்ணனை நினைத்துக்கொள். அவனே எனக்கு மூத்த மகன்.”. நதியினும் வேகமாக, காற்றினும் வேகமாகப் பயணம் செய்யும் மனம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கிறது. பாண்டவர்கள் எல்லோரும் உறைகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, யுதிஷ்டிரன் மன அழுத்தம் கொண்டு – நாட்டைத் துறந்து கானகம் செல்ல முடிவெடுக்கிறான். பீஷ்மர், துரோணர், துருபதன், திரௌபதியின் ஐந்து குமாரர்கள், அபிமன்யு போன்றோர் அடுத்தடுத்து பாரதப் போரில் மடிந்த போது வனம் செல்லத் துணியாதவன். ‘கர்ணன் தனக்கு மூத்தவன்’ என்று தெரிந்ததும் ‘வனம் செல்லத் துனிகிறாரே!’ என்ற திரௌபதியின் மனவோட்டத்தின் பின்னல்களால் ஆன நாவல். அதனுடைய ஓர்அத்தியாயம் உங்களுக்காக...

பதினொன்றாம் அத்தியாயம் – பகுதி 1




தனது துயரக்கதைகள் அத்தனையையும் கண்ணீர் மல்க உரைத்த திரௌபதியின் ஆற்றாமையைக் கேட்ட கிருஷ்ணனின், அழகிய முகத்தில் – புன்னகையின் வெண்மலறொன்று பூத்தது... ஆனால், அந்த புன்னகையின் வெண்மை படர்ந்த முகத்தில் – புருவங்கள் துடித்து மேலேறி நெற்றியில் சுளிவுகள் கோடிட்டு, கடினமான உள்ளுணர்வுகளின் சுருள்களை நிமிர்த்தன. விசித்ரமேயான மனோலயத்தின் இனிமை – ஒரே நேரத்தில் அவளை மகிழச் செய்வதாகவும் – வேதனை கொள்ள வைப்பதாகவும் தோன்றியது. ஆதரவற்ற பரிதாப நிலையில் – அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், திரௌபதி. அத்தனை வேதனைகளையும் கொட்டித் தீர்த்து விட்ட மனதுடன் – வலுவிழந்த உடலாலும் துவண்டுபோன நரம்புகளுமாகிய அந்த நிலையில் – அவளது கண்கள், புலப்படாத ஏதோ ஒரு பற்றுக்கோட்டைத் தேடி அலைவதுபோல் இருந்தன. அவளது கண்களில் தெளிந்த ஏதோவொரு மாபெரும் வியப்பின் நுட்ப நிலையை கண்டறிந்தவன் போல – மீண்டும் ஒரு புன்முறுவலுடன் கிருஷ்ணன் பேசலானான்: 

“திரௌபதி, இப்பரந்த பிரபஞ்சத்தின், அகண்டாகரமான தன்மையும் அதன் சாய்ந்தாட்ட இயக்கத்தின் தத்துவமும் புலப்படாத ஒன்று. அந்த புலப்படா தன்மையிடம் நீ பிகு கொண்டிருக்கிறாய் என்பது ஸ்பஷ்டமான உண்மை. இன்று உன்னை அலைக்கழிக்கும் பாராமுக பீதி – யுதிஷ்டிர பீமார்ச்சுனர்களிடமுள்ள பாராமுகமும் – என நீ தவறாக அர்த்தம் செய்கிறாய். பெற்ற தாயைக் காட்டிலும் உன்னிடம் அன்பு கொண்ட குந்தியிடம் கூட பாராமுகம் இருப்பதாக நீ தவறாக அர்த்தம் கொள்கிறாய். கர்ணனைப் பற்றிய துயர நினைவுகள் முன்னாள் நீ அன்னியையாக ஒதுக்கப்படுவதாக – வியாகூலப் படுகிறாய். அவர்களது இதயப்பாதையில் – உனது எண்ணவோட்டங்கள் ஒத்துவராத நிலையில் – வாழ்க்கையில் அனைத்திலும் நீ தனியாக்கப் படுவதாகவும், அனைவரிடமிருந்தும் நீ விலக்கி வைக்கப்படுவதாகவும் எண்ணி வியாகூலம் கொள்கிறாய்... ஆனால் மானிட வாழ்க்கையில் – மானிட ஜீவியின் இதய இயக்கங்களில், முற்றிலும் சூன்யமான, முற்றிலும் சகிக்க வொண்ணாத – ஒரு தனிப்பகுதி உண்டென்பதை நீ உணர்ந்திட வேண்டும். ஒரு நபர், சில நேரங்களில் அவனிடமிருந்தே தனியாக்கப்படுகிறான்! தன்னிடமே அந்நபருக்கு வேற்றுமை மனோபாவம் தோன்றுகிறது. அந்த நிலை, முற்றிலும் சகிக்க வொண்ணாத சூன்யமே ஆகும்! நபர் ஒருபோதும் சுயதரிசனம் காணமுடியாத அந்த அவஸ்தை – தான் அன்பு கொண்டவர் பாலுள்ள பாராமுகம் என அவன் தப்புக் கணக்குப் போடுகிறான். அன்பு கொண்ட சோதரியே – உன்பால் எனக்குத் தோன்றும் அனுதாபத்தின் பயன் இன்மையை நினைத்து என்னிடமே நான் பரிதாப்பப்படுகிறேன். கடலோரத்தின் சிப்பிச் சிதறல்கள் சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்கின்றன. நித்தியமாகிய – எதிர்ப்புணர்வில் அவை தவிக்கின்றன! அந்த எதிர்ப்பிற்கும், அந்த பரிதாப உணர்விற்கும் காரியகாரண பந்தம் என்ன இருக்கிறது? என்ன பலன் இருக்கிறது? அந்த அளவு அர்த்தமற்றது – செயல்திறன் அற்ற நபர்களாகும் சிப்பிச் சிதறல்கள் - சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்வது!” 

உரத்த குரலில் – ஆத்மவிசாரணை செய்வதுபோல – நினைவுகள் தாமாகவே குரல் எழுப்புவதுபோல கிருஷ்ணன் தொடர்ந்து பேசலானான்: 

“கர்ம பாசத்தால் சிக்கிக்கொண்ட மானிடன், கர்மத்தின் வேதனையிலும், போதையிலும் மயங்கிப்போய் வாழ்கிறான். அதற்கே உரிய சலனங்களும் தன்மைகளும், சுய இச்சையால் செய்யும் கர்மாக்கள் எனவும் பிரம்மித்துப்போய் மானிடன் ஆவேசத்தோடு வாழ்கிறான். ஆனால், பரமாத்ம தத்துவமறிந்த மேன்மக்களுக்கு ஒரு நிமிஷமல்ல, எல்லா நிமிஷங்களிலும் இந்த கர்மபாச பிணைப்பு துக்கமேயாகும்! மூடமனங்கள் – அதனை, சுகமென்றும் சாபல்யமெனவும் தப்பர்த்தம் கொள்கின்றன. தனித்தன்மைகள் கொண்ட மகாத்மாக்கள் கூட – பிரம்மம் கலந்த மன ஈடுபாட்டால் சில நேரங்களில் அதில் சுகம் கண்டு மகிழ்ச்சி கொள்ளவும் – துக்கம் கண்டு அழுதரற்றவும் செய்கின்றனர்!” 

கடினமான தத்துவ உரைகளின் அந்த புகைமண்டலத்தைப் பார்த்து சலனமற்று அமர்ந்திருந்த திரௌபதியை நோக்கி, மீண்டும் புன்முறுவல் செய்தான் கிருஷ்ணன். அப்பொழுதுதான் பிரக்ஞை உலகிற்கு மீண்டு வந்தவள் போல – கிருஷ்ணன் அமர்வதற்கென பீடம் ஒன்றினை நகர்த்தியிட்டு உபசரணை செய்தால் திரௌபதி. பீடத்திலமர்ந்தவன் – மீண்டும் புன்முறுவல் மாறாமலே தொடர்ந்தான்:

“திரௌபதி! ஆயுளை முடித்துக் கொண்ட கர்ணனுக்கும் உயிரோடிருக்கும் யுதிஷ்டிரனுக்கும் மட்டுமின்றி – நாம் அத்தனை பேருக்குமே கர்மபந்தத்தின் சலனமிக்க கண்ணிகள் அற்றுப்போய் விட்டது என்பதை நீ அறியவில்லை. இனி, நம்மிடம் மிஞ்சி நிற்பது அனுஷ்டானங்கள் மட்டுமே! கர்மாக்கள் ஒதுக்கி, பலனளவில் வாழ்வு நிச்சலம் கண்டாயிற்று! ஆனால் வாழ்க்கை அனுஷ்டானங்களாகிய மற்றொரு பகுதியிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மாதிரி நபர்களுக்கு மார்க்கம் இல்லவே இல்லை! கர்ம வாழ்க்கையின் பொலிவு மிக்க பார்வையால் – அனுஷ்டானங்கள் நிறைந்த – வாழ்வுப் போராட்டத்தைக் காண நீ வீணாக முயற்ச்சி கொள்கிறாய். அன்பு கொண்டவர் மத்தியிலிருந்து உன்னை தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக நீ – தப்பாக எண்ணிக் கொள்கிறாய். உண்மையில் – நீ ஒதுக்கப்பட்டவளாக இருப்பது – உனக்குள்ளாக மட்டுமே என்பதை நீ அறியவில்லை. 

அடிவானத்தில் கருநிற மேகப் படலங்களின் முதுகில் குதித்தேறி வரும் காலைச் சூரியன் – நீலிமை படர்ந்த உயர் வானத்தில் தலைதூக்கி – துடிப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். இரவில் பெய்த மழையில் கழுவி சுத்தம் கொண்ட பட்சிளைகளின் மேல் அவனது சிரிப்பு பிரதிபலிப்பு கொண்டது. அவை, வெள்ளி போல பளபளத்தன. பரிபூர்ண எழில் தேடிக்கொண்டுவிட்ட சூரிய பிம்பத்தை நோக்கி – திடமான தனது வலக்கரத்தை தூக்கியவாறு கிருஷ்ணன் சொல்வான்: 

 “அதோபார் திரௌபதி – வானத்தின் துல்யமான நீலப்பரப்பில் வெள்ளியின் பளபளப்போடு சூரியபிம்பம் சோபிதம்கொள்கிறது. வாழ்க்கையாகும் பசும் தளிர்க் கூட்டத்தில், பச்சை நிறம் போர்த்திய வசந்தத்தில், மந்தகாசத்தின் திளக்கத்தால் அவன் பன்மடங்கு எழில் சேர்க்கிறான். சுகம் மிக்க, வாழ்வோடு இயைந்த அவனது இளம் கதகதப்பில் – இயற்கை சுகித்து – புல்லரிப்புக் கொள்கிறது. இந்நிலை, அந்த தேஜசின் வளரும் சுழற்சியின் ஒரு வீழ்ச்சி மட்டுமே... பிந்துக்களில் ஒரு பிந்து! முகம் கருத்த புலர் வேளையில், அடிவானின் முகத்தை துடிக்க வைத்து, நீரடியிலிருந்து சுவர்ண ஜாஜ்வல்யத்துடன் அவன் உயர்ந்து வந்தான். இனி...? இனியும் சில வினாடிகளுக்குப் பின்னர்...? அந்நேரம் அவன் வானத்தின் உச்சியை நோக்கி குதித்துப் பாய்வான். இயல்பே ஆகிய சொந்த சூட்டில் சுயமாக சுட்டுக் கொண்டு, கோபங்கொண்டு வானமத்தியில் ஏறிவந்து ஜ்வாலிப்பான்! வெளிச்சத்தின் காட்சிகளைக் காட்டும், வெளிச்சத்தின் அதிகோரமான எல்லைக்கோட்டில் – எதிர்கொண்டு உற்றுப் பார்ப்பவரது பார்வையை இகழச்செய்தவாறு – உக்ரமாக அவன் சுட்டுப் பொசுக்குகிறான்! விடியலில் ஆலோலம் பாடி குளிர்வித்த – பசுமையைச் சுட்டெரித்திட அதுபோதில், அவன் துடிப்பு கொள்கிறான். சமுத்திரங்களை வற்றி வறட்சியிலாழ்த்திட முடியாததில் அவன் கோபத்துடன் படபடப்பு கொள்கிறான்... அன்புக்குரிய திரௌபதியே – ஆயுட்காலத்தின் வளர்ச்சியின் நிலைக்கலங்களில் ஒன்றேயான மத்தியானப்பொழுது, அவன் பின்னும் வருத்திக் கொள்கிறான்... கடைசியில் – எரிந்து அடங்கும் சிதாமண்டலம்போல – சாம்பலும் கனல் கட்டைகளுமாக குவிந்த மேற்கு வானச்சரிவில் – பரிதாபம் கொண்ட கம்பீரத்துடன், ரத்தம் ஒழுக அவன் மாண்டு மடிகிறான்... அதுவும் விருத்தியின் ஒருவித வீழ்ச்சிதான்! பல்வேறு வித வீழ்ச்சிப் படலங்களில் – ஒன்று!” 

சிறியதொரு ஓய்விற்குப் பிறகு கிருஷ்ணன் தொடர்ந்தான்: :”கிருஷ்னையே! இயற்கையின் இயல்பு நசீகரங்களை எல்லாமே, நீ – கொடும் மத்தியான உக்ரமாக காணுகிறாய். மாறி மாறியும் மாற்றங்களை வெறும் மாற்றம் மட்டுமே என நீ தப்புக் கணக்கு போடுகிறாய்... அந்திப் பொழுதுகளை பார்த்து பெருமூச்சு உதிர்க்கும் யுதிஷ்டிரனிடம் – மத்தியானப் பொழுதின் உக்ரகற்பனை யிலேயே நின்றவாறு நீ தனிப்பட்டவளாகி விடுகிறாய்! உனது இந்த மனநிலை – அர்த்தமற்றதென நீ அறிந்திடல் வேண்டும்!” கர்ணனை இழக்கப்பட்ட துக்கத்தால் பற்றற்ற நிலையில் கடத்தும் யுதிஷ்டிரானது மன அவசங்களின் தன்மையை கிருஷ்ணன் அவளுக்குச் சொன்னான். யுதிஷ்டிரனின் அண்ணன் பதவிக்கு முற்றிலும் உகந்தவனே கர்ணன். அவனைக் கொன்றது பற்றியுள்ள தாபம் – தர்மாத்ஜனுக்கே இயல்பான கொடும் தாப நிலை என்பதை விளக்கி கிருஷ்ணன் விவரித்தான்: 

“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி – சாத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே என்பதை நீ அறிய வேண்டும். அன்பிற்குரியவளே, உன்னிடம் நானொரு உண்மையைச் சொல்வேன் – ஒரு தத்துவத்தைச் சொல்வேன் - விதியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தியிருக்கும் அபாக்யவாங்களின் வினாசம் விதியால் வரையறுக்கப்பட்டதுதான். நாசத்தின் தாறுமாறான சட்டவரம்பை மீறிட கடவுளுக்கு கூட உரிமையில்லை. காரண காரிய பந்த வரையறையுள் நாசத்தின் ஆக்கினைக்கு உட்பட்டு நின்றுதான் விதி தன் கைங்கர்யங்களை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனது அபூர்வ சிருஷ்டிகளின் நாசத்திற்காக, விதி, அதிகடினமான வரையறைகளை உருவாக்குகிறது. குந்தியின் மூத்த புத்திரனாகிய கர்ணனது நசிவிற்கு ஆக்கம் குறித்திட்ட நாள்தான், உன் நினைவில் என்றுமே மாயாத அதே அந்த நாள்! தர்மியாகிய சூரியபுத்திரனது மாற்றமுடியாத விநாசத்திற்கு – துகிலுரியும் அந்த நாளில் – அவனது சிரிப்பு முத்திரை குத்தியது. 

தனது சிந்தனைகளின் தொடர்ச்சியே போல அவன், தனக்குள் முணுமுணுத்தான்: 

“க்ஷத்திரிய வம்சத்தின் சமூக நாசத்திற்கு முதல்கோடு குறித்திட்ட சபிக்கப்பட்ட துர்தினம்!” 

வாய்மூடிய சிந்தைகளின் மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது போல கிருஷ்ணன் தொடர்ந்தான்: 

“தக்க நேரத்தில் ரகசியத்தை வெளிப்படுத்திடாமல் – க்ஷத்திரிய குலத்தை ஒட்டுமொத்தமாக விநாசத்தின் பாதை நோக்கி ஏன் இழுத்து விட்டாய் என்று நீ கேட்கின்றாய். விதியின் வன்மை மிக்க ஆக்கினைகளை மீறிட உன்னால் முடியாது. யாருக்குமே அது சாத்தியமன்று. இதோ, என்னால் கூட அது முடியாத ஒன்று. ஆனால் கர்ணனிடம் – அவனது நிஜத்தன்மையை ஒருமுறை வெளிப்படுத்தினேன்.” 

வியப்பு மேலிட்ட திரௌபதியிடம் – தான் கர்ணனை சந்தித்ததைப் பற்றி கிருஷ்ணன் விவரிக்கலானான். 

மூலம் : பி. கே. பலகிருஷ்ணன் 
 தமிழாக்கம்: ஆ மாதவன் 
 பதிப்பு: சாகித்ய அகாடமி 
விலை: 100 ரூபாய் 
 பக்கம்: 105 - 109