Monday, June 22, 2009

Ashapoorna devi - Short stories

வங்காளச் சிறுகதைகள்: ஆஷாபூர்ணா தேவி விலை: 100-/ ரூபாய்
வெளியீடு: விசா பதிப்பகம்
தமிழில்: புவனா நடராஜன்

வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி 1909-ம் ஆண்டில் கல்கத்தாவில் பிறந்தார். முறைப்படி பள்ளிக்கு சென்று கற்கவில்லை என்றாலும் தனது சொந்த முயற்சியால் மொழியினைப் பயின்று, சிறந்த புலமையை பெற்று பல அரிய படைப்புகளை வங்காள இலக்கியத்திற்கு அளித்திருக்கிறார்.

இவர் 176 நாவல்களும், 30 சிறுகதைத் தொகுப்புகளும், 47 குழந்தை இலக்கிய நூல்களும், 25 மற்ற படைப்புகளும் படைத்துள்ளார். 'Pratham Pratishruti' என்ற நாவலுக்காக 'ஞானபீட விருது' பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலை மொழிபெயர்த்த புவனா நடராஜனும் தேர்ந்த படிப்பாளி மற்றும் மொழிபெயர்ப்பாளர். அவரைப் பற்றி படிக்க ஆறாம் திணை இணையதளத்திற்கு செல்லவும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் பெண்ணின் நிலை ஆண்களை விட சிக்கலானதே. அந்த சிக்கலான வாழ்க்கையில் அவர்கள் அனுசரித்துபோக வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

அதுவும் தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, கணவன், மனைவி, பணிப் பெண்கள் என பல உறவுகள் இருக்கும் கூட்டுக் குடும்ப முறையில் பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.

அது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், உறவுகள் சிதைந்து உருவாகும் தனிக் குடித்தன வாழ்கையும் தான் இவரின் முக்கிய கருக்கள்.

ஒரு சில கோணங்களில் பார்க்கும் போது படைப்பாளியின் ஆளுமையே இதுபோன்ற சிக்கலான விஷயங்களை இலக்கியமாக்குவதில் தான் இருக்கிறது. அஷாபூர்னாதேவி அந்த வேலையைத் தொய்வில்லாமல் செய்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் வங்காளிய பெண்களின் நுட்பமான உளவியல் பிரச்சனைகளை தனது எழுத்தின் மூலம் கொண்டு வந்து இவர் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவருடைய முக்கிய கதாப்பாத்திரம் சில நேரங்களில் மாமியாராக இருக்கும், சில நேரங்களில் மருமகளாக, சில நேரங்களில் வளர்ப்புத் தாயாக, சில நேரங்களில் தோழியாக, சில நேரங்களில் சகோதரியாக, சில நேரங்களில் மகளாக இருக்கும்.

அது போல அக்கா, தங்கை பிரச்சனையைக் கருவாகக் கொண்ட 'கருப்பு சூரியன்' என்ற சிறுகதை புவனா நடராஜனின் மொழிபெயர்ப்பில் ஆறாம்திணை இணைய பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

கருப்பு சூரியன்

400 பக்கங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பது சற்றே சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் வித்யாசமான படைப்பின் ருசியினை உணரலாம்.

Thursday, June 18, 2009

Kaali nadagam - Unni.R

காளி நாடகம்: உண்ணி.ஆர்
விலை: 50 ரூபாய் தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

Asianet News -ல் பணிபுரியும் உண்ணி.ஆர் தற்கால மலையாள எழுத்தாளர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். இவருடைய சிறுகதைகளுக்கு கேரளா அளவிலான பல முக்கியமான விருதுகள் கிடைத்திருக்கின்றன.

உண்ணி எழுதி வெளிவந்த 12 சிறுகதைகளை சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அதனைக் 'காளி நாடகம்' என்ற பெயரில் உயிமைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவருடைய எழுத்தின் பலமே கதையின் மாந்தர்களுடன் நம்மைப் பயணம் செய்ய வைத்து இறுதியில் கதையின் உபபாத்திரங்களுடன் நம்மையும் ஒருவராக நிற்கவைப்பதுதான்.

'காளி நாடகம்' என்ற முதல் கதையில் வரும் மையப் பாத்திரமான கணவனைப் பிரிந்து வாழும் காளியம்மையுடன் நம்மைப் பணயம் செய்ய வைத்து இறுதியில் காளியம்மையின் தம்பி மனைவி குட்டி மாலுவுடன் நம்மையும் ஒருவராக நிற்க வைக்கிறார்.

'மூத்திர ராக்ஷசம்' கதையில் நாடு வீட்டில் மலம் கழிக்கும் தந்தையை அழைத்துக் கொண்டு மகன் நாடு ராத்திரியில் வயல் வெளிகளைத் தாண்டி ரயில் தண்டவாளத்திற்கு அருகே செல்லும் போது, எதற்காக அவன் தந்தையை அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறான் என்று யோசித்தவாறு நம்மையும் அங்கு நிற்கவைக்கிறார்.

'ஆலிஸின் அற்புத உலகம்', 'பாதுஷா என்ற கால்நடையாளன்', 'மூன்று பயணிகள்', 'விடுமுறை நாள் கொண்டாட்டம்' என அனைத்து கதைகளிலும் உண்ணியின் அற்புதமான கற்பனை வெளிப்படுகிறது.

இவருடைய படைப்புகளில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதா மாந்தர்கள் விலங்குகளுடன் பேசுவது போல் சித்தரித்திருக்கிறார். 'அது, பூச்சி உலகம், பாதுஷா என்ற கால்நடையாளன்' போன்ற கதைகள் இதற்கு உதாரணம்.

கவிஞர் சுகுமாரன் முன்னுரையில் கூறியது போல் "உண்ணியின் கதாப்பாத்திரங்கள் நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் பகடி செய்பவர்கள்.அவர்கள் இருப்பாலும் சமூக நீதியாலும் விலக்கி நிறுத்தப்பட்டவர்கள்".

இவருடைய கதை மாந்தர்களிடம் காணப்படும் வாழ்க்கையின் இருத்தலும், அன்பும், வெகுளித்தனமும் முக்கியமான குணாம்சங்கள். அந்த குணாம்சங்களே நம்மைக் கதையுடன் மேலும் ஒன்ற வைக்கிறது.

புத்தகம் உயிர்மை பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. புத்தகத்தைப் வாங்க கீழுள்ள முகவரியில் செல்லவும்.

Kaali Nadagam: uyirmmai publications

Sunday, June 14, 2009

Adoor Gopalakrishnan

ஆடூர் கோபாலகிருஷ்ணன் - அக்பர் கக்கட்டில் விலை: 90
தமிழில்:
குளச்சல் மு யூசப்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

ஹாலிவுட்டில் ஒரு சினிமா வெளிவந்தால் அதைப் பற்றி நிறையவே பேசுகிறோம். கதையிலிருந்து தொழில் நுட்பம் வரை ஒன்று விடாமல் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம். பல பதிவர்கள் பெருமையாகப் பதிவிடுகிறார்கள்.

'ஸ்லம் டாக் மில்லியனர்' - போன்ற வர்த்தக ரீதியான திரைப் படங்கள் கூட அதிகமாக பேசப்படும் போது நம்முடைய திரை சித்திர மேதைகளின் படங்கள் ஏன் பேசப் படுவதில்லை! ஆஸ்காரில் வெற்றி பெரும் திரைப்படங்களை உடனே பார்த்து மகிழ்ச்சியுறும் நாம் இந்தியக் கலைப் படங்களை ஏன் ரசிப்பதில்லை.

மற்றவர்களின் கலைப் படைப்பை ரசிப்பது தவறில்லை. ஆனால் நம்முடைய கலைவடிவத்தையும் ரசிக்க வேண்டும் தானே. அப்படி ரசிக்கப் பட வேண்டிய திரைசித்திர மேதைகளில் ஒருவர் தான் 'ஆடூர் கோபால கிருஷ்ணன்'. உலக அளவில் இந்திய சினிமாவிற்கு உரமிட்ட முக்கியமானவர்களில் ஒருவர்.

அவரைப் பற்றி அக்பர் கக்கட்டில் மலையாளத்தில் எழுதிய "வரூ, ஆடூரிலேக்கு போகாம்" என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம். இந்த நூலினை குளச்சல் மு யூசப் நல்ல முறையில் மொழி பெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து குறிப்பிடத்தக்க பல நல்ல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் 'உலகப் புகழ் பெற்ற மூக்கு, மீசான் கற்கள்' போன்ற மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கன.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 4 முறையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது 2 முறையும் பெற்ற ஆடூராரின் திரை சித்திர படைப்புகள் 'கான், வெனீஸ், பெர்லின்' போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.

திரைப்படத் துறையில் வாழ்நாள் பங்களிப்பு அளித்ததற்காக 2004 -ஆம் ஆண்டு தேசத்தின் மிக உயரிய சாதனை விருதான 'தாத்தா சாகேப் பால்கே' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'பத்மஸ்ரீ, பத்ம விபூஷன்' போன்ற தேசத்தின் உயர்ந்த விருதுகளும் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவருடைய படங்களின் மூலம் தேசிய விருதுகளையும் புகழையும் அடைந்தவர்கள் ஏராளம்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையிலிருக்கும் ஆடூரார் இதுவரை 10 முழுநீளத் திரைப் படங்களையும், 23 குறும்படம் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய 6 திரைக்கதை நூல்களும், 3 சினிமா பற்றிய மலையாள நூல்களும், 3 ஆங்கில நூல்களும் இது வரை வெளிவந்திருக்கின்றன.

இவருடைய முழுநீளப் படங்களின் பட்டியல் பின்வருமாறு:

1. சுயம்வரம் (1972)
2. கொடியேற்றம் (1977)
3. எலிபத்தாயம் (1981) 'Watch in youtube': 1
4. முகாமுகம் (1984) - நேர்முகம்
5. அனந்தரம் (1987) - அதன் பிறகு
6. மதிலுகள் (1989)
7. விதேயன் (1993) - அண்டி வாழ்பவன்: 1 2 3 4 5 6 7 8 9 10
8. கதா புருஷன் (1995) - கதாநாயகன்
9. நிழல் குத்து (2002)
10. நாலு பெண்ணுங்கள் (2004) 'Watch in youtube': 1 2 3 4 5 6 7 8 9

இந்த நூலானது ஆடூரின் படைப்புலகம், அந்தத் துறையில் சாதித்தது மற்றும் அவருடைய கலையுலக நண்பர்கள், அவருடைய சமூகப் பார்வை என பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. இது ஒரு நேர்முக வடிவில் இருப்பதால் அவருடைய ஆரம்ப கால சிக்கல்கள் பலவற்றையும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஒரு முறை மதிலுகள் படம் எடுப்பதற்காக வைக்கம் முகமது பஷீரைக் காணச்சென்ற போது, திடீரென பஷீர் உள்ளே சென்று சிறிது பணம் எடுத்துக்கொண்டு வந்து அடூரிடம் கொடுத்தாராம். அதில் அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் என சிறிது பணமும் கொடுத்து அசீர்வதித்தாராம். மேலும் படம் நன்றாக வரும் கோபால் அதன் மூலம் நீங்கள் நிறைய பணமும், புகழும் அடைவீர்கள் என்று சொன்னாராம்.

அதுபோலவே மதிலுகள் நன்றாக ஓடி நிறைய லாபத்தைக் கொடுத்ததாம். அனைத்தும் பஷீரின் ஆசிர்வாதம் என்று அடூர் சொல்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் அடூரின் இளமைக் கால வாழ்க்கை முதல் தற்போதைய வளர்ச்சி வரை நிறைய விஷயங்களை சுவாரச்யங்களுடன் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆடூரின் இணையத் தளம்: http://www.adoorgopalakrishnan.in

ஆடூரைப் பற்றி தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பினை காலச்சுவடு பதிப்பகம் நமக்கு அளித்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

Friday, June 12, 2009

Mullum Malarum - Uma chandran

முள்ளும் மலரும்: உமா சந்திரன்
விலை: 180 ருபாய்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

1960 -களின் பிற்பகுதியில் கல்கி வார இதழின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நாவல் போட்டியில் நடுவர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற் பரிசினை பெற்றுச் சென்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதனை எழுதிய 'உமா சந்திரன்' பரவலான வாசக ஈர்ப்புத் தன்மை கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர். இந்நாவலின் முதற் பதிப்பு 1967 -ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு அம்ருதா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடைய சீரிய பணி பாராட்டுக்குரியது.

இளமையிலேயே தாய் -தந்தையரை இழந்த காளி `வின்ச் ஆப்பரேட்டராக' வேலை செய்கிறான். அவனுடைய ஒரே தங்கையின் மேல் உயிரையே வைத்துக்கொண்டு இருக்கிறான். இயல்பிலேயே முரடனான காளிக்கு வாழ்கையின் பிடிப்பே தங்கை வள்ளி தான். சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்ததால் அஞ்சலை அத்தையிடம் வளர்கிறார்கள்.

வேறு ஊரிலிருந்து பிழைப்பு தேடி வரும் மங்காவும், அவளுடைய அம்மா வெள்ளாத்தாலும் வள்ளியின் குடுப்பத்திற்கு அறிமுகமாகிறார்கள். மங்காவின் அம்மாவிற்கு காளியே ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறான். நாளடைவில் வாயாடியான மங்காவின் மீது காளிக்கு காதல் பிறக்கிறது.

இந்நிலையில் புதிதாக வேலைக்கு வரும் என்ஜினீயர் குமரன் மீது காளிக்கு அகாரணமான வெறுப்பு உண்டாகிறது. காளியின் வேளையில் குறையைக் கண்டுபிடித்து அதிகாரி என்ற முறையில் அவனுக்கு கடிதம் அனுப்பியது காளியின் கோவத்தை மேலும் அதிகப்படுத்தியது. என்ஜீனியர் குமரன் பண்போடு நடக்க முற்பட்டாலும் காளிக்கு அவரின் மேல் வெறுப்புதான் உண்டாகிறது.

வேலை இல்லாத நாட்களில் காளிக்கு மீன் பிடிப்பதும், விடிய விடிய நடக்கும் காட்டுவாசிகளின் நாடகங்களைப் பார்ப்பதும் தான் பொழுது போக்கு. அந்நாடகத்தைப் பார்க்கச் சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மங்காவை துறத்திக் கொண்டு வந்த சிறுத்தைப் புலி காளியின் தோள்பட்டையைத் தாக்குகிறது. சரியான மருத்துவம் பார்க்காததால் அவனுடைய ஒரு கையை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். அதற்குத் தேவையான உதவிகளை என்ஜீனியர் குமரன் தான் செய்கிறார்.

என்ஜீனியருக்கு காளியின் தங்கை வள்ளியின் மீது காதல் உண்டாகிறது. வள்ளியிடமே அவன் சொல்லிவிடுகிறான். நாளடைவில் இதனைக் கேள்விப்பட்டு கோவம் கொள்கிறான் காளி. அதுமட்டுமில்லாமல் பெட்டிக்கடை முனியாண்டியை வள்ளிக்கு மணமுடிக்க சம்மந்தம் பேசுகிறான். காளியை எதிர்த்துப் பேச முடியாத வள்ளி அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். வள்ளியின் நிலையைப் புரிந்து கொண்டு அந்த சூழ்நிலையில் குமரன் விலகிச் செல்கிறான்

இந்த மன வருத்தத்தைத் தாங்க முடியாமல் அரசு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் சேர முடிவு செய்கின்றான் குமரன். அதன்படியே வட இந்தியாவிற்கு எல்லைப் பாதுகாப்பிற்குச் சென்றுவிடுகிறான். ராணுவத்தில் பயிற்சிப் பெற்று பின் கேப்டனாக பதவி உயர்வு பெறுகின்றான். போரில் அவனுக்கு காயம் ஏற்படுகிறது. அப்பொழுது அவனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பொழுது மருத்துவர் அகிலாவின் நட்பு கிடைக்கிறது. அகிலா ஒரு தலையாக குமரனைக் காதலிக்கிறாள். ஆனால் வள்ளியைத் தவிர வேறு ஒரு பெண்ணை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று மறுத்துவிடுகிறான்.

மேலும் தன்னுடன் ராணுவப் பணியாற்ற உடன்வந்த உயிர் நண்பனான வீரமணி எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைகின்றான். நண்பனின் மரணம் அவனை மேலும் துயரடையச் செய்கிறது. இதற்குள் போர் முடியவும் மீண்டும் சென்னைக்கு நிரந்தரமாகத் திரும்புகிறான்.

வீரமணியின் தங்கை 'கனகா'வின் கணவன் கம்பெனியில் குமரனுக்கு வேலை கிடைக்கிறது. அதற்கு முன் வள்ளியின் ஊருக்கு சென்று வர பயணமாகிறான்.

அங்கு உச்சிக்கடவு மற்றும் வேலன்கடவு போன்ற இடங்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும் போது வள்ளியையும், மங்கவையும் எதிபாராத விதமாக காண்கிறான். மங்காவின் மூலமாக வள்ளி இன்னும் மணமாகாமல் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். அவளுக்காக தானும் கத்துக்கொண்டிருப்பதைத் தெரியப்படுத்துகிறான்.

காளியின் சம்மதம் இல்லாமல் இருவரும் கோவிலில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சரியாக காளியும் வந்து சேர்கிறான். வஞ்சத்துடன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்கிறான். நேரம் பார்த்து அவர்களைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து வள்ளியும் குமரனும் 'வின்ச் மெஷினில்' கீழிறங்கும் போது இயந்திரத்தில் கோளாறு செய்கிறான்.

வள்ளியைக் காப்பாற்ற தறிகெட்டு ஓடும் இயந்திரத்தில் மங்கா பாய்கிறாள். மங்காவைக் காப்பாற்ற காளியும் இயந்திரத்தில் பாய்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் கனகாவும், அவளுடைய கணவன் சபேசும் இயந்திரத்தை நிறுத்துகிறார்கள். இறுதியில் மங்காவும், காளியும் இறந்து விடுகிறார்கள்.

உமா சந்திரனின் இந்நாவல் 'இயக்குனர் மகேந்திரன்' அவர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்பட சூத்திரத்திற்கு ஏற்றவாறு மகேந்திரன் கதையை மாற்றி இருப்பார். அந்த மாற்றமே படம் வெற்றியடைய வழிவகுத்தது என்றே கூற வேண்டும்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் ரஜினி மற்றும் ஷோபாவையும், இயக்குனராக மகேந்திரனையும், ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திராவையும் நட்சத்திரங்களாக ஒளிரச் செய்த படம். இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்திற்குப் பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலும், பின்னணி இசையிலும் பிண்ணி எடுத்திருப்பார்.

ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் தான் உயிர் என்பார்கள். அதன்படி பாலுமகேந்திராவும், இசைஞானியும் படத்திற்கு ஆன்மா போல் செயல் பட்டிருப்பார்கள். எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படம். இந்நாவலைப் படித்து முடித்தவுடன் மீண்டும் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தோன்றியதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Tuesday, June 9, 2009

Veetin moolaiyil oru samayalarai - Ambai

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை: அம்பை
விலை: 60 ரூபாய்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

அம்பை என்கிற புனைப் பெயரைக் கொண்ட சி.எஸ்.லக்ஷ்மி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பங்காற்றி வருகிறார். SPARROW (Sound & Picture Archives for Research on women) என்ற சமூக அமைப்பின் செயல் இயக்குனராக (CEO) இருக்கிறார். 'இயல் விருது' போன்ற முக்கியமான பரிசுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' கதைத் தொகுப்பைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது.

அரசியலில் ஈடுபடும் பெண்களின் தர்மசங்கடம், படிக்கும் வயதில் உறவில் ஈடுபட்டு கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் வலி மற்றும் அவளே குழந்தை பெற்று சந்தோஷப்படும் தருணம், கணவனை இழந்த பிராமணப் பெண்களின் தலை முடியை மழித்தல், முன்காலத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்களின் தகவல் என பெண்களின் பல சங்கடங்களை கதைக் கருவாக முன்வைக்கிறார்.

மேற்கூறிய சங்கடங்கள் இருந்தாலும் பெண்களின் ஆன்மாவில் உறைந்திருக்கும் விருந்தோம்பலை நேர்த்தியான முறையில் அழகு சேர கதையில் இயல்வாக சேர்த்துள்ளார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் யாவும் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஞாபக அடுக்குகளை சிறிது அலசி யோசித்துப் பார்க்கையில் என் பாட்டி, அம்மா போன்றவர்களின் வாழ்வு பெரும்பாலும் சமையலறையிலேயே கழிந்துள்ளது. அவர்களுடைய வாழ்வின் நோக்கமே விருந்தோம்பல் என்ற ஒன்றாக மட்டுமே இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஓரளவிற்கு நடுத்தர மற்றும் பகுத்தறிவு கொண்ட சமூகத்திற்கே இதுதான் நிலை என்னும் போது விளிம்பு நிலை பெண்களின் வாழ்வியல் சரடு யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.

தற்போதுள்ள பெண்களின் வாழ்வியல் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது என்பதை ஆமோதித்தே ஆகவேண்டும். எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பது பெருமைக்குரிய விஷயமாக பெண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். பிறக்கப்போகும் தலைமுறையின் வாழ்வியல் ஆதாரம் அவர்கள் தான் என்பதை சிறிதேனும் அறிவார்களா என்று தெரியவில்லை.

அம்பையின் சில கற்பனைக் கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. அந்தக் கதைகளும் எதோ ஒரு விதத்தில் பெண்ணியம் சார்ந்தே இருக்கிறது.

அம்பையின் சமையலறையையும் பெண்ணியத்தையும் மையமாகக் கொண்டுள்ள இக்கதைகள் நமக்கு முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்வியல் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. கதைகளில் வரும் ஒரு சில விவரிப்புகள் சுலபத்தில் புரிந்துகொள்ள இயலாததாகவே இருக்கிறது. இதுதான் முக்கியமான கதாப்பாத்திரம் என்று எந்த ஒரு நபரை நோக்கியும் கதையைக் கொண்டு செல்லாமல் காட்சிகளை நேக்கி நகர்ந்தவாறே இருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பால் மட்டுமே இவருடைய படைப்பின் மீதான கற்பனையையும் கருவையும் நம்மால் தொட இயலும்.

அம்பையின் 'காட்டில் ஒரு மான்' சிறு கதையைப் படிக்க திண்ணை தளத்திற்குச் செல்லவும். (Kaattil oru maan)

Saturday, June 6, 2009

Yesuvin Thozhargal - Indra parthasarathy

ஏசுவின் தோழர்கள்: இந்திரா பார்த்தசாரதி விலை: 90 ரூபாய்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்திரா பார்த்தசாரதி போலந்தில் கல்லூரிப் பேராசிரியராக ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது போலந்து அரசியல் நிலவரங்களை ஆழ்ந்து கவனித்து எழுதப்பட்ட புனைவு நாவல் தான் 'ஏசுவின் தோழரகள்'. இது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் நான் இந்திரா பார்த்தசாரதியை வாசித்ததில்லை. அவருடைய எழுத்து பெரும்பாலும் அரசியலை மையமாகக் கொண்டது என கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவே அவருடைய படைப்புகளிலிருந்து என்னை விலகி இருக்கச் செய்தது. ஆனால் அது ஒரு முட்டாள்தனம் என்பதை இந்நாவலை படித்து முடித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன்.

போலந்தின் இந்தியத் தூதரகத்துடன் தொடர்புள்ள மேல்மட்ட நபர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. கதை ப்ரொபசர் கதாப் பாத்திரத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் தூதரக அதிகாரியான நரேனையும், போலந்து பெண்ணை மணந்து கொண்டு வார்சாவில் குடியேறிய (திருமலை நரசிம்மாச்சாரி தாதாச்சாரி) டி.என்.டி-யின் மகள் ஆஷாவையும் சுற்றியே நாவல் பயணமாகிறது.

டி.என்.டி ஆச்சார்யமான பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் புரச்சிகரமாக வெளிநாட்டு பெண்ணை மணந்து கொள்கிறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆஷா என்று பெயரிடுகிறார்கள். வெளி நாட்டுப் பெண்ணை மணந்ததால் அவனுடைய குடும்பத்துடனான உறவு அறுந்துவிடுகிறது. துருதிஷ்ட வசமாக அவனுடைய மனைவியை ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் இந்தியாவில் கற்பழிக்கிறார்கள். அதனால் அவளுக்கு மனச்சிதைவு உண்டாகிறது. எனவே இந்தியாவிலிருந்து போலந்து செல்கிறார்கள். சிறிது நாட்களில் அவனுடைய மனைவி இறந்து விடுகிறாள்.

ஆஷாவின் அம்மா டி.என்.டி-யிடம் தனது மகளை போலந்து கலாச்சாரத்தில் வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறாள். ஆஷாவிற்கும் இந்தியாவின் மீது இனம் புரியாத வெறுப்பு. இந்தியாவிற்கு போகவே கூடாது என்று தீர்மானமாக இருக்கிறாள். இந்தியாவை எதிர்த்து சந்தர்பம் கிடைக்கும் போது தூதரக நண்பர்களுடன் காரசாரமாக விவாதம் செய்கிறாள்.

சந்தர்பத்தால் பல வருடங்களுக்குப் பிறகு ஆஷா தனது வேர்களைத் தேடி இந்தியாவிற்குப் பயணமாகிறாள். போகுமிடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு இந்தியத் தோழி கிடைக்கிறாள். தோழியின் மூலம் அவளுடைய உறவினர்களைக் கண்டு திரும்புகிறாள்.

இந்தியப் பயணம் அவளுடைய எண்ணங்களை மாற்றுகிறது. அவளுடைய இந்திய உறவுகளைப் பற்றி டி.என்.டி-யிடம் விவாதம் செய்ய துடிக்கிறாள். போலந்து திரும்பிய நேரம் ஆஷாவின் அப்பா மரணம் அடைகிறார். இது அவளை மிகவும் பாதிக்கிறது.

இறுதியில் நரேன், ஆஷா, ப்ரொபசர், தூதர், தூர்ஸ்க்கி என அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவரவர் பயணம் செய்வது போல் நாவல் முடிகிறது.

துணைக் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நேர்த்தியான முறையில் அமைந்திருந்தாலும் தூர்ஸ்கி கதாப்பாத்திரம் தான் சிறிது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தூர்ஸ்கி இரட்டைக் கதாப்பாத்திரமா அல்லது ஒரே கதாப்பாத்திராமா என்பது குழப்பமாகவே இருக்கிறது.

மற்றபடி இது ஒரு விறுவிறுப்பான நாவல். சோர்வுதட்டாத முறையில் நாவலை கொண்டு சென்றுள்ளார். இந்நாவல் 'Comrades of Jesus' என்று ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.