Tuesday, November 9, 2010

சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
தமிழில்: குளச்சல் மு யூசுப்
விலை: 80 /- ரூபாய்

'சப்தங்கள்' - பஷீரின் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். இரண்டுமே 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தவை. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை இணக்கமான மொழியில் பேசுபவை. வெளிவந்த காலத்தில் வாசகர்களின் தீவிர கவனத்தைப் பெற்றவை. முதல் கதை இறுக்கத்தை அதன் போக்கிலும், இரண்டாம் கதை தவிர்க்க முடியாத வாழ்வியல் நிர்பந்தங்களின் ஊடே வெளிப்படும் இயல்பான ஹாஷ்யத்தின் வழியாகவும் வெளிப்படுத்துகிது.

'சப்தங்கள்' கதையில் குடிகாரர்கள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், காமத்தில் உழல்பவர்கள், விபச்சாரிகள், இருபால் விருப்பமுடையவர்கள் என்று கழிசடையில் வாழ்பவர்கள். இவர்களுடைய வாழ்விலும் அன்பு, இறக்கம், தோழமை எல்லாவற்றிற்கும் மேல் நெருக்கடி இருக்கிறது என்பதை மெல்லிய இழையாகச் சொல்லிச் சொல்லும் குறுநாவல்.

'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' கதையில் வருபவர்கள் அதற்கு சற்றும் குறையில்லாத ஏமாற்றுக்காரங்கள். சீட்டு விளையாட்டில் ஏமாற்றிப் பிழைக்கும் ஒத்தைக் கண்ணன் பார்க்கர், பிக்பாக்கட் முஸ்தபா, பொங்குருசு தோமா, முஸ்தபாவைக் காதலிக்கும் பார்க்கரின் மகளான ஸைனபா (
இவளும் மார்க்கெட்டில் கிடைப்பதை திருடுபவள்) - "ஆங்... தோ... வை ராஜா வை... ஒன்னு வச்சா ரெண்டு. ரெண்டு வச்சா நாலு" என்ற ஏமாற்று விளையாட்டை மையப்படுத்தி நகரும் கதை என்பதால் 'ஒத்தைக் கண்ணன் பார்க்கர்' கதாப்பாத்திரம் பிதாமகனில் வரும் சூர்யாவை ஞாபகப்படுத்தியது. இந்த விளையாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாத பார்க்கரை, ஸைனபாவின் காதலுடன் முஸ்தபா முறியடிக்கிறான்.

இரண்டு கதைகளுமே வாழ்வின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய
ப் போராடும் எளிய மனிதர்களின் கதை.
--------------------------------------------------------------------------------------------------------------
பின்னட்டையிலுள்ள வாசகம்:

வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற இரண்டு குறு நாவல்கள் - 'சப்தங்கள்', 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' - இந்தத் தொகுப்பில் உள்ளன.

ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க'ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினைச் சேர்க்கையாளர்கள். 'மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மக'ளில் அதே போன்ற மனிதர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.

சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

கவிஞர் சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------------

பஷீரின் இதர மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடில் கிடைக்கிறது.

1.
மதில்கள் - கவிஞர் சுகுமாரன்
2.
உலகப் புகழ் பெற்ற மூக்கு - குளச்சல் மு யூசுப்
3.
பால்யகால சகி - குளச்சல் மு யூசுப்