Tuesday, December 29, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

ஆசிரியர்: நிலாரசிகன்
வெளியீடு: திரிசக்தி
விலை: ரூ.70

நிலாரசிகனைப் பற்றி தமிழில் பதிவெழுதும் நண்பர்களுக்கும், தமிழ் இணையப் பயனாளர்களுக்கும் அறிமுகம் தேவையில்லை. 2004ல் இருந்து தனது கற்பனைகளுக்கு கவிதை வடிவில் வலைப்பூக்களில் வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவையாவும் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்து அவருக்கான கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை.

கல்லூரி நாட்களில் வெளிவந்தது இவருடைய முதல்
கவிதைத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சிறுகதை என்று வரும்பொழுது 17 சிறுகதைகள் கொண்ட "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" தான் இவரது முதல் தொகுதி.

இதிலுள்ள கதைகள் யாவும் கடந்த இரண்டாண்டுகளில் எழுதப்பட்டு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் கண்டவை. இவரது சிறுகதைகள் யாவும் குழந்தைகளின் வெகுளித் தனமான உலகத்தையும், வெள்ளந்தியான கிராம மக்களையும், பெண்களின் அக எண்ணங்களையும் அதனால் உண்டாகும் புறச்சிக்கல்களையும் சித்தரிப்பவையாக இருக்கின்றன.

கீழுள்ள கதைகள் யாவும் அதற்கு உதாரணம்...

1. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
2.
வேட்கையின் நிறங்கள்
3.
அப்பா சொன்ன நரிக்கதை
4. வால் பாண்டி சரித்திரம்

புத்தகத்திலுள்ள மேலும் சில கதைகளைப் படிக்க அவருடைய இணையைப் பக்கங்களுக்குச் செல்லவும்: www.nilaraseeganonline.com

கதையைக் கச்சிதமாக ஆரம்பித்து கச்சிதமாக முடிக்கிறார். இடையில் வர்ணிப்பிலும், கொண்டு செல்லும் விதத்திலும் தான் சில கதைகளில் தொய்வு காணப்படுகிறது. வார்த்தைப் பிரயோகத்திலும், வர்ணிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி கதைகளைக் கொண்டு சென்றால் இன்னும் நல்ல படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் தீவிரமாக இயங்கி வரும் இளம் படைப்பாளியான இவர் தனது பக்குவமான உழைப்பின் மூலம் அவருக்கான இடத்தை படைப்பிலக்கியத்தில் எட்டிப்பிடிப்பார் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு:
1. புத்தகத்தில் இவர் எழுதிய
என்னுரையில் அவருடைய சகோதரிக்கும், கதைகளை பிரசுரித்த ஒவ்வொரு இதழின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். புத்தகத்தில் அவைகள் விடுபட்டு இருக்கின்றன. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார்.
2.
பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார். அந்த வகையில் இவர் பரவலான கவனத்தைப் பெறுவது மகிழ்ச்சியே.

Thursday, December 17, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்

ஆசிரியர்: பாரதி மணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூபாய் 100
/-

மேடை நடிகராகவும், திரைப்
படக் கலைஞராகவும் நமக்கு நன்கு அறிமுகமான பாரதி மணி, நட்சத்திரப் பிரமுகர்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி உயிர்மை, அமுதசுரபி, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது இலக்கிய நண்பர்கள் அறிந்ததே.

பல இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை மணியிடமே பரிசாக வாங்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் அவருடைய கட்டுரைகளில் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை 'நிகம்போத் காட்' பற்றியது. நான் இதுவரை வாசித்த அனுபவக் கட்டுரைகளில் என்னை மிகவும் வசீகரித்தக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

'செம்மீனும் தேசீய விருதுகளும்!' - இந்திய அரசால் வழங்கப்படும் சினிமாவிற்கான தேசிய விருது மலையாளப் படமான செம்மீனுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை. நீண்ட நாட்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குனர் TV சந்திரனின் நேர்முகத்தை குமுதம் தீராநதியில் படிக்க நேர்ந்தது. அதில் "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டில், சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத நடுவர்களால், சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..." என்று குறிப்பிட்டிருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது. (கட்டுரையின் முடிவில் அதற்க்கான தொடுப்பை படிப்பதற்குக் கொடுத்திருக்கிறேன்.)

'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற கட்டுரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான தொடர்புகளையும் அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்தும் விதத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறியிருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது.

'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' - கட்டுரையில் நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் பற்றி எழுதிய ரசமான தகவல்கள் எங்கும் படிக்கக் கிடைக்காதது.

'சுப்புடு சில நினைவுகள்' - இசைவிமர்சகராக மட்டுமே பரிச்சயமான சுப்புடுவை அரசாங்க குமாஸ்தாவாக, ஓய்வுபெற்ற பிறகு மணியின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்கடத்தில் ஆழ்த்தியது, அவரது வேலைகளில் நாணயமற்று நடந்து கொண்டது என சுப்புடுவின் வேறுபட்ட முகங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கர்னாடக சங்கீத கச்சேரிக்கு சென்னை வரும் போது சுப்புடுவுடன் ஒரே அறையை பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பகிந்துகொள்கிறார்.

'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்ற கட்டுரையில் பிரதமர் நேருவுடனான நிகழ்வுகளையும், 'அன்னை தெரஸா' - கட்டுரையில் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அன்னை தெரசாவுடன் பயணம் செய்ததையும் அவரிடமிருந்து பைபிள் புத்தகம் மற்றும் ஜெபமாலையை அன்புப் பரிசாகப் பெற்றதை இன்று வரை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதை எழுதியிருப்பார்.

()

நீல. பத்மநாபன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், வாஸந்தி, ஜெய மோகன், அம்ஷன் குமார், லால்குடி G ஜெயராமன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், டெல்லி கணேஷ், தியோடார் பாஸ்கர், சுகா போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியதும் புத்தகத்தில் இருக்கிறது.

அவருடன் நேரில் உரையாடியபோது நண்பர்கள் எல்லோரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும், தனக்கு வந்த இரங்கல் கடிதங்களை உயிருடன் இருக்கும் போதே படித்து மகிழ்வது போல இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.

அவற்றையெல்லாம் சொன்னால் டெல்லியில் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடமான திகார் ஜெயிலில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அதனால் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று கேட்கும் அவருடைய வாசகர்களில் நானும் ஒருவன்.

மணியின் தில்லி வாழ்க்கை, அதில் கிடைத்த பரந்துபட்ட அனுபவங்கள் என கட்டுரைகள் யாவும் தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் வரலாறையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களையும ஞாபகப்படுத்துவதே நூலின் சிறப்பாகப்படுகிறது.

புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கின்றது. அவற்றில் சில உயிர்மையில் படிக்கக் கிடைக்கிறது.

1. பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
2. அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
3. செம்மீனும் தேசீய விருதுகளும்!
4. காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனயர்களும்
5. ஒரு நீண்ட பயணம்
6. சிங் இஸ் கிங்

எல்லாவற்றிற்கும் மேல் பழகுவதற்கு இனிமையான நண்பர். எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர். அவருடைய கட்டுரைகள் பிடித்திருந்தால் 94440 03332- என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுவார். அவருடனான எனது நேரடி அனுபவத்தை திட்டிவாசலில் (மணியுடன் சில மணித்துளிகள்) எழுதியிருக்கிறேன்.

அவருடைய புத்தக வாசிப்பு எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திருந்தாலும், அவருடனான உரையாடல் மேலும் பல ரசமான அனுபவங்களைத் தந்தது. நீங்கள் நெருங்கினால் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, November 26, 2009

கரைந்த நிழல்கள்

ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
விலை: 60 ரூபாய்

இரவு நேரத்தில் எரியக் கூடிய நல்லெண்ணெய் விளக்குகளும், மண்ணெண்ணெய் விளக்குகளும் எங்களுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த காலமது. மாலை ஆரம்பித்தால் பெரியவர்களிடம் கதை கேட்பது, கண்ணா மூச்சு, ராஜா-ராணி ஆட்டம் விளையாடுவது என்று நாட்கள் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருக்கும். ரொம்ப சிறிய வட்டத்தில் எங்களுடைய வாழ்க்கை அழகாக, ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் 'ச்சே' இப்படி ஆயிடுச்சே என்று ஒருமுறையாவது சொல்லி சலித்திருப்போமா என்று தெரியவில்லை.

மெல்ல மின்சாரம் எங்கள் ஊருக்குள் தலை காட்டியது. பிறகு 'ரேடியோ, டேப் ரெக்காடர், டிவி' என்று பொழுது போக்கு அம்சங்கள் எங்களுடைய வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்டது. ஆரம்ப நாட்களில் வெள்ளிக் கிழமை தோறும் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' நிழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். 'மகா பாரதம், தெனாலிராமன் கதைகள், ஜுனூன், கானூன்' போன்ற மெகா தொடர்களுக்காக ஆளாய்ப் பறப்போம். ஒருசில நாட்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கரண்ட் கட்டாகிவிடும். அப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து 'ச்சே இப்படி ஆயிடுச்சேன்னு' ஆயாசப்படுவோம்.

அந்த நாட்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் டிவியில் சினிமா போடுவார்கள். அதுவும் பழைய படமாக இருக்கும். எனவே ஊரின் அருகிலுள்ள சினிமா அரங்குகளுக்கு (டென்ட் கொட்டா) புதுப்படம் வந்தால் தவறாமல் சென்று பார்ப்பது வாடிக்கை. அப்படிப் பார்த்த படங்களில் 'அதிசயப் பிறவி', 'என்றும் அன்புடன்' போன்ற படங்கள் எங்கோ ஞாபகத்தில் வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'புளி சாதம்' கட்டிக் கொண்டு போய் ஒரே நாளில் இரண்டு சினிமாக்கள் கூட பார்த்திருக்கிறோம். என்னோட சித்தப்பா மகள் (அக்கா) 'சர்மிளா' தான் எங்களுக்கு வழிகாட்டி.

இவ்வளவு மெனக்கெட்டு வெறித்தனமாக சினிமாவைப் பார்த்தாலும் அதில் என்னென்ன முன்வேலைகள் பின்வேலைகள் இருக்கிறதென்று ஒரு நாளும் யோசித்ததில்லை. கிசு கிசுவைத் தவிர்த்த சினிமா சார்ந்த ஏகப்பட்ட விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது அல்லது தெரிந்து கொள்ளாமலே விட்டு விடுகிறோம். அவுட்டோர், இண்டோர் ஷூட்டிங் நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள், படத் தயாரிப்பாளரின் மன அழுத்தம், ஸ்டுடியோ நிர்வாகம், விநியோகம், விளம்பரம், இன்னபிற சினிமா விஷயங்களும் அதற்கான தீர்வு காண போராடும் மனிதர்களின் உழைப்பும் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. இந்த முகம் தெரியாத, ஆனால் சினிமாவின் முக்கிய நபர்கள் வாழும் நாவல் தான் கரைந்த நிழல்கள்.

சினிமா என்னும் அதிசய ஊடகத்தின் மாய வலையினுள் உருக்குலைந்து போன மனிதர்களின் ஏமாற்றம், இழப்பு, வலி, இயலாமை, தோல்வி என்று நம்மால் சிறிதும் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையையும், பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல். படத் தயாரிப்பாளர் , புரொடக்ஷன் மானேஜர், டைரக்டர், காமிராமேன், நடிகைகள், துணை நடிகைகள், ஸ்டூடியோ கம்பனிக்கு கார் ஓட்டுபவர்கள் என பலரது வாழ்க்கையையும் ஆசிரியர் தனது இயல்பான நடையில் வாழச்செய்கிறார்.

இந்த நாவலைப் படிக்கும் போது, எனக்குத் தெரிந்த பலரும் நினைவில் வந்து சென்றார்கள். அவர்களில் 'கோட்டி மாமா' முக்கியமானவர். திரைக்குப் பின்னால் உள்ளவர்களின் வலியைத் தெரிந்து கொள்ளும் சந்தர்பமும் அவரின் மூலமாகத் தான் வந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா மகள் 'பார்வதி', என்னுடைய அம்மாவின் பெரியப்பா மகன் 'ருத்ர கோட்டி'யை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டாள். அந்த காலத்தில் எங்களுடைய குடும்பத்தில் சினிமா எடுக்கறேன்னு திரிஞ்ச ஆளு கோட்டி மாமா. அவருக்கு பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிச்சாங்க... "அவரை மனசார காதலிக்கிறேன்... கட்டினா அவரைத் தான் கட்டுவேன்" என்று பிடிவாதமாக இருந்து அவரையே கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.

சாதாரண டூயட் பாடினாலும் அந்த நடிகர் கையில மைக் இருக்கும். அவரை வைத்துப் படம் எடுக்கறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மற்றபடி இயக்குனர் யாரு? இசையமைப்பாளர் யாரு? -ன்னு கேக்குற பக்குவம் எல்லாம் அந்த காலத்தில் எனக்கு இல்லை. படத்தின் பெயர் மட்டும் 'மூன்றாம் மனிதர்கள்' என்று சொல்லியதாக ஞாபகம். சில நேரங்களில் அவர் கையிலுள்ள ஆல்பத்தைக் கண்பித்து இந்த பொண்ணுதான் எங்க படத்தோட நடிகைன்னு சொல்லுவாரு. பார்வதி அத்தையின் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணத்தை சீதனமா கொடுத்தாங்க. அதைக் கூட அவர் சினிமாவுலதான் போட்டாரு. இவரைப் பார்ப்பதற்காக அம்பாசடர் காரில் ஜிப்பா போட்ட ஒருத்தர் வருவாரு. அவரு கூட சேர்ந்துதான் சினிமா எடுக்கறதா பேசிக்கிட்டாங்க.

லோகேஷனுக்காக அந்த ஊருக்குப் போறேன், இந்த ஊருக்குப் போறேன்னு சந்தோஷமா சுத்திட்டு இருந்தாரு. இடையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் படம் நின்னு போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அவருடைய முகத்துல சந்தோசம் வத்தி போயிடுச்சி. கல்யாண வீட்டிற்கு வந்தாலும் எழவு வீட்டிற்கு வருவது போல் தான் வருவார். இப்பஇப்ப கல்யாண வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. ஊரில் கூட யாரிடமும் சகஜமாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த பலரும் இந்த மாதிரி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் "இந்த உம்மத்தனைக் கட்டிக்கிட்டேனே... இன்னும் எவ்வளவு நாள் நான் போராடனமோ? இத்யாதி இத்யாதி..." என்று என்னுடைய அத்தையின் வார்த்தைகள் காற்றில் பறந்து வந்து என்னுடைய செவிப் பறைகளை நனைத்த நாட்கள் ஞாபகம் வருகிறது.

விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ?

Friday, November 20, 2009

தோழர் நாவல்: தனுஷ்கோடி ராமசாமி

ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 130 ரூபாய்

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் நடைபெற்ற சென்னை சிறுகதைப் பட்டறையில் முரளிகுமாரை (அன்பே சிவம்) சந்தித்த போது இந்தப் புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்தான். அவன் மீது அன்பு செலுத்தும் ஒருவர் அவனுக்குக் கொடுத்த புத்தகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்.

அன்னாரின் மறைவிற்குப் பிறகு 'எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி டிரஸ்ட்' என்னும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது. அவரின் மகன் 'டாக்டர் அறம்' நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று சிறந்த சிறுகதை படைப்போருக்கு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ மாணவியருக்கு படைப்பிலக்கியத்தை பயிற்றுவித்தளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நாவலில் பிரதானப் பாத்திரமாக வரும் பழநிமுருகன் ஆசிரியராக நென்மேனிக்கு அருகில் வேலை செய்கிறவன். ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டவன். நேரம் கிடைக்கும் போது எந்த விதத்திலும் முன்னேறாத தனது உறவினர்கள் வாழும் கலிங்கல் மேட்டுப்பட்டிக்கு சென்று வருவது வழக்கம். ஊரின் மீதுள்ள பற்றுதலால் பழநி முருகன் என்ற தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான்.

ஒரு முறை
தனது சொந்த ஊருக்குச் செல்லும் போது பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். மாலை மங்கி இருட்டும் வேளையில் தனது ஊரைச் சுற்றிக் காட்டி பாதுகாப்பாக அவளிடைய இருப்பிடத்தில் சேர்ப்பிக்கிறான். இருவருக்கும் நட்பு மலர்ந்து தொடர்ந்து சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஷபின்னாவின் மூலம் அவளுடைய குழுவினருக்கும் அறிமுகமாகிறான் பழநி முருகன். அவர்களுடன் பிரியமுடன் பழகுகிறான். குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க இவன் பேருதவியாக இருக்கிறான். மேலும் இந்தியாவைப் பற்றியும் அவர்களுடன் கம்யூனிச சித்தாந்தத்தில் விவாதம் செய்கிறான். அவனுடைய நேர்மையான விவாதம் காயப்படுத்தும் படியாக இருந்தாலும் வெளிநாட்டு நண்பர்களைக் கவருகிறது.

எல்லோருக்கும் பழநி முருகனைப் பிடித்திருந்தாலும் ஷபீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துவிடுகிறது. பழநி முருகனுக்கும் பீனாவின் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது. சேவை செய்ய வந்தவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டிய நேரம் வருகிறது. அப்பொழுது பீனாவை இவன் எப்படி வழியனுப்புகிறான் என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

'தோழர்' நாவல் 1980-களில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் முகவுரையில் தமிழ் செல்வன் எழுதியுள்ள முன்னுறையிலிருந்து பார்க்கும் போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்புக் காண எழுத்தாளர் மாதவராஜின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. மாதவராஜ் தனது பதிவில் தனுஷ்கோடி ஐயாவைப் பற்றி எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்.

மதுமிதா அவர்களின் இந்தப் பதிவும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மறைவு பதிவும் ஐயாவைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.

Book Name: Thozhar
Author: Dhanushkodi Ramasamy
Book price: Rs. 130
Publishers: Bharathi Puthakalayam

Friday, October 30, 2009

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்னட்டை வாசகம் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்தப் புத்தகம். ஆனால் தலைப்பில் 'ஓர் உலகம்' என்று தானே இருந்திருக்க வேண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிழையாக இருக்குமோ என்று குழம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுரையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மலையடிவாரத்தின் இயற்கை சூழலில், ஒரு கிராமத்துப் பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு, ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் லாரியின் இயக்கத்தோடு நமக்கு அறிமுகமாகின்றனர்.

பட்டினத்து ஆசாமியான ஹென்றி அருகிலுள்ள சிற்றூரைத் தேடிக்கொண்டு செல்கிறான். இயற்கையின் அழகை அணு அணுவாக ரசித்தவாறே நடந்து செல்கிறான். லாரி வருவதைப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு சாலையோரமாக விலகி நிற்கிறான். ஆனால் 'க்ளீனர் பாண்டு' வண்டியை நிறுத்தச் சொல்லி ஹென்றியை ஏற்றிக்கொள்கிறான். பேச்சினூடே ஹென்றி செல்ல வேண்டிய கிராமம் தேவராஜனின் ஊர் என்பது தெரியவருகிறது. அதிலிருந்தே தேவராஜனுக்கும், ஹென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஹென்றியை அழைத்துச்சென்று தன்னுடைய கிராம வீட்டில் தங்க வைக்கிறான் தேவராஜன். பின்னர் ஹென்றியின் வளர்ப்புத் தந்தையும், தாயும் பற்றிய இறந்த காலத்தில் பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் நோக்கம் நிறைவேறியதா என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த நாவலைப் பற்றிய அவருடைய பார்வையை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் - இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ' தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி - மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்: ஜெயகாந்தனின் நேர்முகம்...

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், போஸ்ட் ஐயர், மண்ணாங்கட்டி, துரைக்கண்ணுவின் குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவி நவநீதம், டீக்கடை ஆசாமி, பைத்தியக்காரி என்று அனைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்களைக் கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் புத்தகமெங்கும் வியாபித்திருப்பது வெகுளியான கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கை. கிராமத்து வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கக் கூடிய கதை. புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

Book Details:
Oru manithan oru veedu oru ulagam,
jayaganthan published by Kalachuvadu Pathipagam.

Wednesday, October 14, 2009

கணிதத்தின் கதை

ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்

சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.

எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.

பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.

அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.

அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!

புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா

தொலைபேசி: (9144) 24332424, 24332924

நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com

குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.

Saturday, October 3, 2009

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

"செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற 'சென்னைச் சிறுகதைப் பட்டறை'யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் "எழுத்து" இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது - 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் "தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

"வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா" போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.

இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை அவருடைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: முன்னோடியின் கண்கள்

Book Details: Tamil sirukathai pirakkirathu, C.S.Chellappa, Rs:125
Book Available @ Kalachuvadu pathipagam, Old no: 130, New no: 257, Triplicane high road, Chennai - 600 005. Ph:- 91-44-2844 1672, 4215 5972

Thursday, September 24, 2009

நிழல் - சினிமா இதழ்

ஆசிரியர்: திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் பதிப்பகம்
விலை: 30/- ரூபாய்

ஒரு நாள் முத்து ஃபோன் செய்து, "மாமா... நீங்க நிழலில் சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுங்களேன். எனக்குத் தெரிந்தவர் தான் இதழின் ஆசிரியர். முயற்சி செய்யுங்களேன்." என்று அன்புடன் கூறினான்.

"அடேய், சினிமா என்ன சாதாரண விஷயமா? கம்ப சூத்திரம்டா, அதில் நிறைய தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டு இருக்கு. "கேமரா, ஒளிப்பதிவு, பாடல், இசைக் கலப்பு, பின்னணி இசை, எடிட்டிங், கலை இயக்கம், etc..." இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் முறைப்படி இல்லையென்றாலும் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு எழுதுவது தான் நல்லது.

நமக்குத் தெரிந்தது எல்லாம் கதை, இயக்கம், வசனம் மற்றும் திரைக்கதை மட்டுமே. குறைந்த புரிதலை வைத்துக் கொண்டு எழுதினால் கட்டுரை நல்லா இருக்காது. நமக்கு எதுக்குடா வீண்வேலை" என்று கூறிய பதில் அவனை எந்த அளவிற்குக் காயப்படுத்தி இருக்குமோ தெரியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு "சதத் ஹசன் மண்டோ"வின் படைப்புகளை வாங்குவதற்காக (யாரோ படிப்பதற்கு வாங்கி திருப்பித் தரவில்லை) நிழல் பதிப்பகத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது ஒரு இதழையும் கூடவே வாங்கிப் படித்ததாக ஞாபகம். சினிமாவைப் பற்றி இருந்ததால் மீண்டும் அந்த இதழைப் படிக்கும் ஆர்வம் வரவில்லை.

தற்போது நிழல் எப்படி வெளிவருகிறது என்று பார்ப்பதற்காக எழும்பூர் புத்தகக் கடைகளில் தேடினேன். எங்கும் கிடைக்காததால் உடன் வேலை செய்யும் நண்பன் கார்த்திக்கிடம் சொல்லி எனி இந்தியனிலிருந்து வாங்கி வரச் சொன்னேன்.

9-ஆம் ஆண்டு இதழ் என்று முகப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.

பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதழில் படிக்கக் கிடைத்தன. யாழ்ப்பாண குறும்பட ஆர்வலர் ராகவன் தனது குறும்பட பயிற்சி மற்றும் முதல் குறும்படமான "மூக்குப்பேணி"யைப் பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார். கன்னட சினிமாவைப் பற்றி விட்டல் ராவ் கட்டுரை எழுதியிருக்கிறார். ராஜகோபால் எழுதியுள்ள "எக்ஸ்ப்ரஷனிஸமும் ஜெர்மன் சினிமாவும்" கட்டுரை சினிமாவை நுணுக்கமாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரசாத் ஃபிலிம் லேபரட்டரி செயல் இயக்குனர் சிவராமன் "கேமரா நின்ற பிறகு என்ன நடக்கிறது..." Post Production பற்றி விளக்குகிறார்.

ஓவியர் மற்றும் கலை இயக்குனர் மருது, Y.G. மகேந்திரன் போன்றோருடைய நேர்காணல்களும், நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு தொடரில் N.S. கிருஷ்ணன், மதுரம் பற்றியும், நெறியாலும் பெண்கள் கட்டுரையில் பெண் படைப்பாளிகளைப் பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

கடைசி பக்கத்தில் DFT மாணவர் கார்த்திக்கின் புகைப்படங்கள் கண்ணைக் கவரும் படி இருக்கிறது. இந்த இதழில் முதல் எட்டுப் பக்கங்களில் ஏராளமான எழுத்துப் பிழை இருந்தது. திருநாவுக்கரசை நேரில் பார்த்து இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மற்றபடி இதழ் அருமையாக இருந்தது.

சினிமா, குறும்படம், ஆவணப்படம் மற்றும் உலகப் படங்களைப் பற்றி தமிழில் வெளிவரக் கூடிய தமிழிதழ்களில் "நிழல்" முக்கியமான இதழ். ஆசிரியர் திருநாவுக்கரசு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த இதழை நடத்திக் கொண்டு வருகிறார்.

சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் குறும்பட போட்டிகள், அது தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன. விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பல கல்லூரிகளும் இந்த இதழின் சந்தாதாரராக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சினிமாவின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்த இதழைப் படிக்கலாம்.

*****************
சினிமாவைப் பற்றி எனக்குப் பிடித்த வரிகள்:

"எல்லோரும் இரண்டு வேலை செய்கிறார்கள். ஒன்று அவர்களுடைய சொந்த வேலை மற்றொன்று சினிமாவை விமர்சனம் செய்வது." என்று யாரோ ஒரு கட்டுரையாளரின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் மூன்றாவதாக ஒரு வேலையை செய்கிறார்கள் அது கிரிக்கெட்டைப் பற்றி விமர்சனம் செய்வது.

*******************

சினிமா சமந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை "நிழல் பதிப்பகம்" தமிழில் வெளியிடுகிறார்கள். தொடர்புக்குக் கீழுள்ள முகவரியை அணுகலாம்.

Address:
Nizhal Pathipagam,
Editor: Thirunavukarasu,
12/28 Rani Anna nagar,
Chennai - 600 078

Mobile: 94444 84868
E-mail: nizhal_2001@yahoo.co.in

Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை - புதிய இதழ்

புதிய இதழ், விற்பனைக்கு அல்ல தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு தபாலில் வந்திருந்தது.வார இதழா? மாத இதழா? என்ற எந்தக் குறிப்பும் இல்லை. விமர்சனத்தையும் வரவேற்பையும் பொறுத்து விலை மற்றும் கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டுரையே வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்! என்று அசத்தலாக இருந்தது. சாய்னா நெஹ்வால் (மேட்மின்ட்டன்), இளவழகி (கேரம்), மித்தாலி ராஜ் (கிரிக்கெட்), தீபிகா & ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), ஷாமினி (டேபிள் டென்னிஸ்) போன்ற விளையாட்டில் சாதனைப் படைத்த பெண்களைப்பற்றிய கவர் ஸ்டோரி. ஜி. கோமளா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

”உதவி காத்திருக்கு” என்ற பகுதியில் ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற ஆனால் கல்வி கற்பதில் ஆர்வமிருந்தும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு அரசும் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து உதவிகள் செய்ய முன்வந்திருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலதிக விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தொலைபேசி இலக்கங்கள் : 9900906338.

"எஞ்சினியரிங் கவுன்சலிங்" - கவுன்சலிங் என்றால் என்ன? அதை கிராமப்புற மாணவர்கள் எப்படி அணுகுகிறார்கள், தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து தரப்படுகின்றது என்று பதிவர் ஆதிஷா மற்றும் யுவன்கிருஷ்ணா எழுதி இருக்கிறார்கள்.

அடுத்து "வாமணன் திரைப்படம் பற்றிய விமர்சனம்" என்பதால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன்.

"கேள்வி நேரம்" என்ற பகுதியில் இயக்குனர் சீமானுடன் சென்னை லயோலாக் கல்லூரி ஊடகக் கலை மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊடக மற்றும் மார்க்கெட்டிங் துறை மாணவர்களும் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் சலிக்காமல் பதிலளித்துள்ளார்.கவின் மலர் இதனைத் தொகுத்துள்ளார்.

அடுத்து "கடவுள் எங்கே இருக்கிறார் - மின்னஞ்சலில் வந்த சிந்தனை" என்ற பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அப்துல் கலாம் - அவருடைய கல்லூரி நாட்களில் வகுப்பு பேராசிரியருடன் நடத்திய உரையாடல். ரிஷிகுமார் மூலம் இந்த ஆன்மீக உரையாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

"எச்சரிக்கை ஆபத்து நெருங்குகிறது" என்ற பகுதியில் இந்திய இளைஞர்களின் சக்கரைக் குறைபாடு விகித அதிகரிப்பும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய துணுக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

"பைக் வாங்குவது எப்படி?" - இருசக்கர வாகனகளை வாங்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பகுதியில் இருக்கிறது.

அடுத்துள்ள கவிதைப் பகுதியில் பதிவர் மற்றும் பகுதி நேர நிரூபர் உமாஷக்தி அவர்களின் "புத்தரும் நானும்" கவிதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

பொதுவாக வார, மாத இதழ்களின் நடுப்பக்கங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களால் அலங்கரிக்கப்படும். இந்த இதழில் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தை காஷ்மீரின் ஷேக் அப்துல்லா - ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவிலிருந்து, தமிழ்நாட்டில் கலைஞர் - ஸ்டாலின் -அழகிரி - கனி மொழி வரை இந்திய அரசியல் தலைவர்களின் ஜனநாயக விரோத செயலை விளக்குமாறு படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

"பைக்கில் ஒரு பயணம்" - நீலாங்கரை அடுத்துள்ள ஆலம்பறா கோட்டை பற்றிய கட்டுரை.

"கோடம்பாக்கத்தில் சுனாமி" - தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் பாய்ச்சல் என்ற கட்டுரை கிராமத்திலிருந்து வந்து தற்போது நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பாண்டியராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மற்றும் நாடோடிகள் சசிகுமார் பற்றிய சினிமா கட்டுரை. அழகாக எழுதி இருக்கிறார்கள்.

"அச்சத்தை வென்றது எப்படி?" - கவிஞர் வைரமுத்துவின் முதல் மேடைப் பேச்சையும், அதில் அவர் பட்ட கஷ்டங்களையும் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல பேச்சாளர் ஆனதையும் குறித்த அருமையான கட்டுரை.ஒவ்வொரு இதழிலும் சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து அருணா ஸ்ரீனிவாசின் "நிறைவு" சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

"தவறு செய்தவர் ஆசிரியர் - தண்டனை அனுபவிப்பது மாணவன்!" பகுதியில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவால் எந்த சலுகைகளையும் பெற முடியாமல், அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கும் மாணவரைப் பற்றிய கட்டுரை.

எல்லாமே ஓசி - இ-கலப்பை மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரை.

புத்தக அறிமுகம் (தமிழ் மொழி) - "எங்கே எனது அல்வாத் துண்டு?" கே.ர மணி மொழிபெயர்த்த பிரசித்தி பெற்ற Who moved mycheese? புத்தகத்தைப் பற்றிய பரிந்துரை என அசத்தியுள்ளார்கள்.

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பத்திரிகைத் துறையில் செயல்பட விரும்புவோர் புதிய தலைமுறை இதழினை அணுகலாம். திரு மாலன் அவர்களின் பத்திரிகைப் பணி அழைக்கிறது என்ற பதிவில் அதற்கான அறிவிப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை வெற்றியின் உச்சியைத் தழுவ வாழ்த்துக்கள்.

-கிருஷ்ண பிரபு

Monday, August 24, 2009

அசோகமித்திரன் சிறுகதைகள்

முத்துக்கள் பத்து: அசோக மித்திரன்
விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

"நீ யார்" என்ற சு.ரா-வின் ஆவணப்படத்தை நண்பர் மற்றும் பதிவர் விஷ்ணு குமாருடன் (முதல் சுவடு) சென்ற வாரம் அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் பார்க்க நேர்ந்தது. எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி அதில் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கான காரியங்கள் செய்வதைப் பற்றிய பேச்சு அது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், முகபாவங்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். பல இடங்களில் அவருடைய பேச்சு மனம்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எவ்வளவு பெரிய மேதை. ஆனாலும் எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிறார் என்று பிரம்மிப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு: ரவி பிரகாஷ் அவர்களின் (அசோக)மித்திரனின் மித்திரன் நான்! பதிவினைப் படித்தால் அவருடைய எளிமை நமக்கு பூரணமாகத் தெரியவரும்.

அசோகமித்திரன் கேணி இலக்கிய சந்திப்புக்கு வருகிறார் என்பது தெரிந்தவுடன் அவருடைய நல்ல படைப்புகளை மீள்வாசிப்பு செய்தால் அலாதியாக இருக்குமென்றும் கேள்வி நேரத்தின்போது உரையாட வசதியாக இருக்குமென்றும் நினைத்தேன். அதன்படி கடந்த வாரத்தில் "அசோகமித்ரனின்-முத்துக்கள் பத்து" சிறுகதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கதைகள் யாவும் நிஜ முத்துக்களே.

ஃபோட்டோ: நண்பனின் திருமணத்திற்குச் செல்லும் தோழர்கள் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

சங்கமம்: அடுக்குமாடி குடியிருப்பில் மேலுள்ள வீட்டிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுவதால் கீழுள்ளவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றிய கதை.

எலி: ஓர் எலியைக் கொல்வதற்காக நடுத்தர குடும்பத் தலைவர்படும் அவஸ்தையை அருமையாகக் கையாண்டிருக்கிறார். எலிப்பொறியில் வைக்க வீட்டில் எதுவும் இல்லாததால் கடைக்குச்சென்று மசால் வடையை வாங்கி வருகிறான். இரண்டு வடை வாங்கி ஒன்றைப் பொறியில் வைத்துவிட்டு மற்றொன்றைத் தின்று விடுகிறான். மறுநாள் காலை பொறியில் எலி அகப்படிருக்கும் . ஆனால் வடை துளியும் தின்னப்படாமல் அப்படியே முழுசாக இருப்பது கண்டு அவன் மனம் கலங்கும். அதே மனக்கலக்கத்தை நமக்கும் உண்டாக்கிவிடுவார்.

பவள மாலை: பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் கணவன் தனது மனைவிக்கு பவள மாலையை வாங்குகிறான். தான் ஏமாந்துவிட்டோமோ, மனைவி கண்டுபிடித்து அசிங்கப் படுத்திவிடுவாலோ என்று நினைக்கும் கணவனின் பார்வையிலமைந்த கதை.

முனீரின் ஸ்பானர்கள்: Secunderabad -லுள்ள ஒருவன் தனது தந்தையின் இழப்பு காரணமாக சென்னைக்குக் குடிபெயர நேர்கிறது. வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்று ரயிலில் ஏற்ற தனது நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பனும் அவனுடைய முதலாளியும் உதவி செய்ய வருகிறார்கள். அனுப்பப்படும் பொருட்களுடன் முதலாளியின் இரண்டு ஸ்பானர்கள் தவறுதலாக கலந்துவிடுகின்றன. சென்னைக்குச் சென்றதும் தான் அவனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதற்கு முன்பே முதலாளியின் சந்தேகம் காரணமாக நண்பனின் வேலை பறிபோகிறது.

மீரா - தான்சேன் சந்திப்பு: பக்தை மீராவும், அக்பரின் ஆஸ்தான பாடகர் தான்சேனும் சந்தித்ததாகக் கூறப்படும் வாய்வழிச் செய்தியை மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை.

"ராஜாவுக்கு ஆபத்து, பாலா மணி குழந்தை மண்ணைத் தின்கிறது, பங்கஜ் மல்லிக், இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்" ஆகிய கதைகளும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எனது கதைகளில் 'உத்தி' என்று எதுவும் இல்லை. உத்தியில்லாத உத்தியைத்தான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லும் இவருடைய கதைகளின் எளிமையும், வாசிப்பனுபவமும் படித்து ஆனந்தப் படவேண்டிய ஒன்று. கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வாங்கக் கிடைக்கிறது.

Book Details: Muththukkal Pathu (Rs. 40), ashokamitran short stories

Thursday, August 20, 2009

கேள்விக்குறி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: 45 ரூபாய்

சூரியன், சந்திரன், கடல் என ஒவ்வொன்றாக உலகத்தைப் படைத்த இறைவன் ஆறாம் நாள் ஆணைப் படைக்கிறான். ஆண் தனியாளாக தோட்டத்தில் சுற்றி அலைகிறான். "இவனுக்கு ஒரு துணையை ஏன் படைக்கக் கூடாது?" என்று கடவுள் யோசிக்கிறார். ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து பெண்ணை படைக்கிறான். நிர்வாணிகளான ஆணும் பெண்ணும் கபடமில்லாமல் சந்தோஷமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

கடவுள் அவர்களிடம் "இந்தத் தோட்டத்திலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்து அனுபவியுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு ஆப்பிள் இருக்கிறது அதை மட்டும் எடுக்காதீர்கள்... புசிக்காதீர்கள்..." என்று கூறுகிறார். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

சாத்தான் பாம்பின் வடிவில் அவர்களுக்கு ஆசை கட்டுகிறது. "ஆப்பிளை சாப்பிட்டால் நீங்களும் கடவுள் ஆகலாம். நல்லது கெட்டது எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று உபதேசம் செய்கிறது. சாத்தானின் பேச்சுக்கு மயங்கிய பெண் ஆப்பிளை சாப்பிடுகிறாள். ஆணுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அதன் பிறகு சுகமான நிர்வாணம் அவர்களுக்குக் கூச்சத்தை அளிக்கிறது. கூச்சத்தைப் போக்க ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். மென்மையான இறைவனின் வருகையைக் கண்டு பயப்படுகிறார்கள்.

சாத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அதன் மூலம் ஆதமும், ஏவாளும் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஏமாற்றிவிட்டார்கள்.

ஏமாற்றுவது தவறு என்று சாத்தானுக்கும், ஆதாமிற்கும், ஏவாளுக்கும் ஏன் தெரியவில்லை? இப்பொழுது என் எதிரில் வந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?... நிற்க.

நல்லது கெட்டதை யோசித்து அவர்களை நான் கேள்வி கேட்கிறேன் என்றால் அவர்கள் சாப்பிட்ட ஆப்பிளின் எச்சம் என்னிலும் உள்ளதா?

நான் மட்டுமா நீங்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் எத்தனை கேள்விகளைக் கேட்டு சக மனிதர்களைக் காயப்படுத்துகிறீர்கள். கீழுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியையேனும் நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?
2. உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
3. இவ்வளவு செய்யறேன்...ஆனாலும் என்னை யாரு மதிக்கிறா?
4. என்னை எதுக்கு படிக்க வச்சீங்க?
5. நெனச்சி நெனச்சி பேசினா எப்படி?
6. என்ன ஊரு இது... மனுஷன் வாழுவானா?
7. எதுக்கெடுத்தாலும் பொய்யா?
8. வாய்விட்டு எப்படி கேக்குறது?
9. உன்னால ஒரு வேலை சாப்பாடு போட முடியுமா?
10. வீட்டுல சும்மாவே இருந்தா எப்படி?
11. நான் அழகா இருக்கேனா?
12. எனக்குன்னு யாரு இருக்கா?
13. ஏன் இப்படி இருக்கீங்க?
14. எதுக்காக இவ்வளவு அவசரம்?
15. ஒரு ஆலாலே என்ன செய்ய முடியும்?

மேலுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் உங்கள் மீதோ அல்லது நீங்கள் சக மனிதர்கள் மீதோ வீசி இருப்பீர்கள். ஆகவே ஒரு சில கேள்விகளை நாம் வாழ்கையில் சந்தித்துதான் ஆகவேண்டும். தவறுகளிலிருந்தோ அல்லது இயலாமையிலிருந்தோ சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

தவிர்க்க முடியாத அந்தக் கேள்விகளை உள்வாங்கி, தனது சொந்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி ஆனந்த விகடனில் S. Ra தொடராக எழுதியது புத்தகமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு குட்டிக் கதையையும் சொல்லி நம்மை அசர வைக்கிறார் எஸ். ராம கிருஷ்ணன். கட்டுரைக்கு ஏற்றாற்போல் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தேர்வுசெய்த ஓவியங்கள் பாராட்டும்படியாக உள்ளது. அழகான குட்டிக் கதைகளைக் கொண்ட அற்புதமான கட்டுரைகள். கண்டிப்பாக வங்கிப் படிக்கலாம்.

Details: Kelvikuri (Rs.45) - S.Ramakrishnan, Vikatan publications, chennai.

Monday, August 17, 2009

ஒற்றன் - அசோகமித்திரன்

ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்

1973 - ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

டான் இதழில் வெளிவரும் அசோகமித்ரனின் மொழி பெயர்ப்பை படித்து அமெரிக்கத் தூதரகம் மூலமாக அந்த அழைப்பு அவருக்கு வந்திருந்தது.

நாவலின் ஒவ்வொரு அத்யாயமும் வேறுவேறு நபர்களால் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. ஒரு அத்யாயமானது மற்றொரு அத்யாயத்தை சார்ந்துள்ளது என்று கூற முடியாது. இது படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் என்றே நினைக்கிறேன். இதே வடிவில் தான் அ. முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்பு'ம் அமைந்திருக்கும். ஆனால் அவர் சிறு வயது முதல் தனக்கு நேர்ந்த பல விஷயங்களை அந்த நாவலில் சொல்லி இருப்பார். ஒற்றனில் அசோகமித்திரன் எழுத்தாளர்களுடனான தனது 7 மாத கால அனுபவத்தை ஒரே கதைக்களத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார்.

தாங்க முடியாத குளிரில் அவதிப்படுவது, கே-மார்ட் பல சரக்குக் கடையில் சலுகை விலையில் செருப்பு வாங்கி காலை புண்படுத்திக் கொள்வது, புதிதாக வாங்கிய கடிகாரத்தைத் தொலைத்தது, நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருந்து லாரியில் ஏறிப் போக வேண்டிய இடத்திற்குச் சென்றது, இலக்கியம் படிக்க வந்து காதலில் விழுந்த இலாரியா, அபே குபேக்னா, பிராவோ, கஜூகோ என்ற ஜப்பானிய எழுத்தாளர் என பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவை இழையோட இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார்.

அயோவா சிடி மாநாட்டிற்கு கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறியது முதல் திரும்பி வரும் வரையுள்ள பல மனிதர்களுடனான அனுபவங்களை வித்யாசமான முறையில் நாவலாக்கியுள்ளார். படித்துக் கொண்டே இருக்கும் போது பல இடங்களில் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கதை என்றோ - கதையின் நாயகன் என்றோ குறிப்பிட்டுச்சொல்லும் படி யாரும் நாவலில் இல்லை.தனது பயணத்தில் சந்திக்க நேர்ந்த பல நாட்டு மனிதர்களையும், அவர்களுடனான தனது அனுபவங்களையும் கொண்ட நகைச்சுவைத் தொகுப்பு போல் இந்த நாவலை நமக்கு அளித்துள்ளார்.

Details: Otran / Ashoka Mitran - Rs:100

Thursday, August 13, 2009

தக்கையின் மீது நான்கு கண்கள்

மூலக்கதை: சா.கந்தசாமி
திரைக்கதை: இயக்குநர் வஸந்த்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: Rs.30.00

சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.

என்னுடைய மருமகங்களுக்கு [நிஸ்து & முத்து] சினிமா ஆசை அதிகம். அவர்களுக்கு ஒரு நல்ல கதையையும், அதனுடைய குறும்படத்தையும் கொடுப்பதற்காக வேண்டி அலசிப்பார்த்ததில் இயக்குநர் வஸந்த் - தூர்தர்ஷனுக்காக இயக்கிய சா.கந்தசாமியின் பிரசித்தி பெற்ற சிறுகதையான "தக்கையின் மீது நான்கு கண்கள்" திரைக்கதைப் புத்தகம் மற்றும் குறும்படத்தைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

அதன்படி தேடு...தேடு... என்று தேடுபொறியில் தேடி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்களிடம் இருந்த கடைசி புத்தகம் அதுதான் என்று சொன்னார்கள். ஆனால் குறும்படத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிவர் வண்ணத்துப் பூச்சியாரிடம் [சூர்யா] தொடர்புகொண்டு கேட்டதில் Thamizhstudio.com -ல் கேட்டுப்பாருங்கள் என்று கூறினார்.

Thamizhstudio.com [அருண் & குணா] - இருவரும் கணினித் துறையில் இருந்தாலும் குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக இயக்குனர் வஸந்திடம் பேசி குறும்படத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். அதன்படியே வாங்கியும் கொடுத்தார்கள். அவர்களுடைய 11 வது குறும்பட ஆர்வலர்கள் சந்திப்பில் அதை ஒளிபரப்பபும் செய்தார்கள். எஸ் ரா அவருடைய இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்த 2008 விருப்பப் பட்டியலில் [S. Ra] இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை:

இந்தக் கதை மீன் பிடிப்பவரான தாத்தாவுக்கும் [மாணிக்கம்] அவரது தாயில்லாப் பிள்ளையான பேரனுக்குமான [ராமு] உறவை சித்தரிப்பது. கழிமுகங்களிலுள்ள நீர்பரப்புகளில் மீன் பிடிப்பதில் கிழவர் மேதை. அவருக்கு வெற்றிலை இடித்துத் தருவதிலிருந்து மீன்பிடிக்க உதவி செய்வது வரையுள்ள எல்லா வேலைகளுக்கும் பேரன் உற்ற துணையாக இருக்கிறான்.

தாத்தா தனக்குப் பிடித்த ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த இடம்தான் தனக்கு அதிர்ஷ்டமான இடம் என்று நினைப்பவர். பேரனோ அவருக்கு நேர்மாறான முரணான குணம் கொண்டவன். மீன் பிடிக்கும் இடங்களை மாற்றிக் கொண்டே இருப்பான்.

இடமாற்றம் செய்யும் பழக்கம் பேரனுக்குச் சாதகமாக அமைகிறது. தாத்தாவை விட நல்ல மீன்கள் அவனுக்குக் கிடைக்கிறது. அவனுடைய பாட்டியும் பேரன் பிடிக்கும் மீனுக்குத் தனி ருசி இருக்கிறதென்று பாராட்டுகிறாள்.

அதுமட்டுமில்லாமல் குலத்திற்கு இனப்பெருக்கம் செய்ய வரும் பெரிய [புதிய] மீன் முதியவருக்குச் சவாலாக அமைகிறது. அதனை எப்படியும் பிடித்து விடுவேன் என்று சவால் விடுகிறார். மீன் பிடிப்பதில் வல்லவரான அவரால் அந்த மீனைப் பிடிக்க முடியவில்லை. இதற்கு மாறாக பேரன் அந்த மீனைப் பிடித்துவிடுகிறான். பேரன் வளர்ந்து தன்னை மிஞ்சுவதைக் கண்டு தாத்தா எரிச்சலைடைகிறார். தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவில் நுண்ணிய விரிசல் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு பேரனிடம் செல்லும் போது அவன் விலகிச்செல்கிறான்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கேணி சந்திப்பில் அவசியம் வாசிக்க வேண்டிய நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையையும் பரிந்துரை செய்துள்ளார்.

கதையில் இல்லாத ஒரு விஷயத்தைக் குறும்படத்தில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது தாயத்து Sentiment. நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தாத்தாவாக முதல் மரியாதை வீராசாமியும் [அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..!..], பேரனாக புதுமுக குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், கேமரா என அனைத்தும் அருமை. சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் வசந்த் மற்றும் குழுவினர் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

2005-ம் ஆண்டின் மிகச் சிறந்த குறும்படமாக தேர்வுசெய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ள இந்தக் குறும்படம் உலகத் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைக்கதைப் புத்தகம் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதே புத்தகத்தில் மூலக்கதையுடன் - வெங்கட் சாமிநாதன், இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களின் குறும்படத்தைப் பற்றிய குறிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

குறும்படத்தைப் பார்க்க விரும்புவோர் தமிழ்ஸ்டூடியோ.காம் நிறுவனர்களான அருண் மற்றும் குணாவைத் தொடர்புகொண்டால் கிடைப்பது உறுதி. நன்றி...

Details: Thakaiyin Meethu Nangu Kangal - Screen Play & Tamil Short film (Documentary)

Friday, August 7, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 75 ரூபாய்

பொதுவாக தாயகத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அகதியாகவோ வெளிநாடு சென்று வாழ்பவர்கள் வெளியில் சொல்ல முடியாத சோகத்தையே வாழ்க்கையாக வாழ்கின்றனர். அதுவும் அகதியாக செல்பர்களின் உளவியல் போராட்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அ.முத்துலிங்கம் இந்த உளவியல் போராட்டங்களை ஜீரணித்து ஹாஷ்ய சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும் அளிப்பதில் வல்லவர்.

அவர் சுவைபட எழுதிய முக்கியமான 20 சிறுகதைகள் அடங்கியப் புத்தகம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' காலச்சுவடின் வெளியீடாக வந்துள்ளது. இந்தச் சிறுகதைகள் யாவும் காலச்சுவடு, உயிர்மை, இந்தியாடுடே, ஆனந்த விகடன், தீராநதி போன்ற முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. தனது சொந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து புனைவுகளாக அளித்துள்ளார்.

மகாராஜாவின் ரயில் வண்டி:
பதின்ம வயதிலுள்ள விடலைப் பையன் யாழ்ப்பாண பள்ளியில் சேர்வதர்க்காக சந்தர்ப்பம் காரணமாக தெரிந்தவர் வீட்டில் தாங்கும் போது சந்திக்க நேர்ந்த பெண்ணின் நினைவுகளை அசை போடுவதாக இந்தக் கதை இருக்கிறது. அருமையான சித்தரிப்புகளுடன் கூடிய கதை. இந்தக்கதை அ. முத்துலிங்கத்தின் சிறந்த கதையாக முக்கியமான எழுத்தாளர்களால் கொண்டாடப் படுகிறது.

எஸ். ராவின் சிறந்த 100 தமிழ்ச் சிறுகதைகளில் காண்க:
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=276&page=

நாளை:
அகதி முகாம்களில் வழங்கப்படும் சூப்பில்(Soup) உள்ள இறைச்சித் துண்டிற்காகவும் அடுத்த வேலை உணவிற்காகவும் அகதி முகாம்களைத் தேடி அலையும் சகோதர சிறுவர்களின் கதை.

தொடக்கம்:
வானத்தைத் தொட்டு நிற்கும் பன்னாட்டு தொழிற் பூங்காவின் - மேகம் உரசும் மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக ஒரு பறவை அலுவலகத்திற்குள் வருகிறது. தினமும் அந்த பாதை வழியாக வந்து வெளியில் செல்கிறது. ஒரு நாள் ஜன்னலை மூடி விடுகிறார்கள். மூடிய கண்ணாடி ஜன்னலில் அடிபட்டு பறவை இறந்துவிடுகிறது.

பறவையின் சுதந்திர வழி அடைக்கப்படுவதையும், அதனால் அதன் உயிர் பரிபோவதையும் பற்றிப் பேசும் கதை.

விருந்தாளி:
ஆப்ரிக்கக் கிராமம் ஒன்றில் நெடுஞ்சாலைப் பணிக்காக தனித்து விடப்பட்ட தமிழன் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக மற்றொரு தமிழன் விருந்தாளியாக வருகிறான். அந்த ஆனந்தத்தில் விருந்தாளிக்கு கொடுக்கும் விருந்தின் மூலம் அகதிகளின் வாழ்வைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

அம்மாவின் பாவாடை:
இந்தத் தலைப்பே கதையைப் படிக்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. இரண்டு பாவாடை வைத்திருப்பதை பெருமையாக நினைக்கும் அம்மாவின் ஒரு பாவாடையை மாடு மென்றுவிடுவதால் நிகழும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழ்ப் பெண்களில் வாழ்வியலைப் பேசும் கதை.

செங்கல்:
வட்ட வடிவில் வீடு கட்டுவதற்கு அதற்கேற்ற வகையிலான வட்ட செங்கல்லைத் தேடும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட புனைவு கதை.

கடன்:
முதுமையில் வெளி நாட்டில் இருக்கும் தனது மகனுடன் வாழும் முதியவரின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி பேசும் கதை. எப்படியாவது கிரீன் கார்டு வாங்கி மகனை விட்டுப் பிரிந்து நண்பருடன் இறுதி நாளை இஷ்டம் போல் கழிக்க எண்ணிய முதியவர் நேர தாமதத்தால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும் கதை.

பட்டம்:
காவாளி ஒருவனை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அதனால் தன்னுடைய கல்லூரிப் 'பட்டத்தை' வாங்க இயலாமல் போவது, பெண்ணின் தைரியமான அணுகு முறையால் ஊரைவிட்டு ஓடும் காவாளி ரவுடிப் 'பட்டத்தை' இழப்பதையும் பற்றிய கதை. நல்ல புனைவு.

ஐவேசு:
வழிகாட்டியின் தவறுதலால் செல்ல வேண்டிய பாதையைத் தவறவிட்டு இந்துகுஷ் மலையடிவாரத்தில் விளிம்புகள் உடைந்த குவளையில் ஆட்டுப் பால் அருந்தும் நிகழ்வை பற்றி பேசும் கதை.

ஐந்தாவது கதிரை:
கணவன் மனைவிக்குள் நடைபெரும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. தனது கணவனை குற்ற உணர்ச்சியில் நிறுத்த வேண்டி தனது மார்பகங்களுக்கு பச்சைக் குத்திக் கொள்ளும் பெண்ணையும், கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுகளைப் பற்றிய கதை.

மேலும் ஆயுள், மாற்று, கருப்பு அணில், எதிரி, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், கல்லறை, கொம்புளானா, ராகு காலம், ஸ்ட்ராபெரி ஜாம் போத்தலும் அபீசியன் பூனையும் போன்ற கதைகளும் அருமை.

எழுத்தாளர் ஜெய மோகனால் இணையம் மூலம் எடுக்கப்பட்ட 'அ. முத்து லிங்கத்தின்' பேட்டி இந்த பக்கங்களில் படிக்கக் கிடைக்கிறது. கீழே அழுத்திச் செல்லவும்.

அவருடைய வாழ்வியல் அனுபவம் யாருக்கும் சுலபத்தில் கிடைக்காது. இந்த செவ்வியைப் படிப்பதன் மூலம் அவருடைய கதைகளுக்கான மூலம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியவரும்...

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

Book Details: Maharajavin rail vandi / kalachuvadu / A. Muthulingam

Thursday, July 30, 2009

கோணங்கியின் சிறுகதைகள்

முத்துக்கள் பத்து: கோணங்கி சிறுகதைகள் விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

எழுத்தாளர் ஜெயமோகனுடைய வலைத்தளத்தை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது கோணங்கியுடனான அனுபவங்களை "கோணங்கி" என்னும் கட்டுரையில் சொல்லி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நாகார்ஜுனன் வலைதளத்தில் "கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது..." என்னும் பதிவையும் படிக்க நேர்ந்தது.

ஒருபுறம் தனக்குப் பிடித்த படைப்பாளியை (ஜெ.மோ) தேடிச்சென்று கதைக்கும் குணம், மறுபுறம் அவருடைய சிறுகதையை ஆண்டு மலரில் வெளியிட அனுமதி கேட்டு இந்திய அளவில் பிரசித்திபெற்ற ஒரு பத்திரிகையின் எடிட்டர்(வாஸந்தி) அனுப்பிய கடிதத்திற்கு சீரும் குணம். முரண்பட்ட இரண்டு கரைகளுக்கு இடையில் ஓடும் சலனமில்லா ஜீவா நதியாக இவர் எனக்குத் தோன்றினார்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த 'கதாவிலாசம்' கட்டுரையில் தான் கோணங்கியைப் பற்றி முதன் முதலில் படிக்க நேர்ந்தது. ஆனால் அவருடைய படைப்புகள் என்று எதையும் வாசிக்காமலே இருந்தேன். தமிழின் 24 முன்னணி எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை 'முத்துக்கள் பத்து' என்ற தொகுதியாக 'அம்ருதா பதிப்பகம்' வெளியிட்டுள்ளார்கள். கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் அனைத்து எழுத்தாளர்களின் தொகுப்புகளையும் (ஜெயகாந்தனைத் தவிர) வாங்க நேர்ந்தது. அதில் எழுத்தாளர் கோணங்கியினுடைய தொகுப்பும் அடக்கம்.

"ஈஸ்வரி அக்காளின் பாட்டு, உலர்ந்த காற்று, மதினிமார்கள் கதை, மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம், நகல், கழுதையாவாரிகள், ஆறு, மணல் முகமூடி, உப்புக் கத்தியில் மறையும் சிறுகதை, நத்தைக்கூடெனும் கேலக்ஸி" ஆகிய பத்து சிறுகதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

முதல் ஏழு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. கடைசி மூன்று கதைகளும் மீள் வாசிப்பில் தான் சாத்தியமாகும். விளிம்பு நிலை மனிதர்களுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தானே வாழ்க்கை. அவற்றில் உறவுகளின் இழப்பு அவர்களின் பிரதானக் கொந்தளிப்பு. அதனை முழுவதுமாக உள்வாங்கி இலக்கியமாக்கியுள்ளார்.

குழந்தைகளின் விசேஷ உலகையும், வெகுளித்தனமான அன்பையும் இவருடைய எல்லாக் கதைகளிலும் பரவலாகக் காண முடிகிறது. சில இடங்களில் வட்டார மொழிச் சொற்களைப் பேசி திணற வைக்கிறார். அந்த ஓசையே சில இடங்களில் படைப்பிற்கான அழகைக் கூட்டுகிறது.

இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் தி.நகரிலுள்ள 'எனி இந்தியன்' மற்றும் 'நியூ புக் லேண்ட்' ஆகிய கடைகளில் கிடைக்கிறது.

அவுட்லுக்கின் பொன்விழா ஆண்டு மலரில் வெளியிடப்பட்ட இந்தியாவின் சிறந்த ஆளுமைகளில் கோணங்கியும் ஒருவர். இவரைப் பற்றி எஸ். சண்முகம் எழிதிய கட்டுரைகளைப் படிக்க கீழே செல்லவும்.

தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 1
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 2

Thursday, July 23, 2009

வைக்கம் முகமது பஷீர் - காலம் முழுதும் கலை

காலம் முழுதும் கலை: ஈ. எம். அஷ்ரப்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் (www.nhm.in)
தமிழில்: குறிஞ்சி வேலன்
விலை: 75-/ ரூபாய்

தமிழில் கி.ரா அளவிற்கு வேறொரு மொழியின் எழுத்தாளரை நேசிக்கிறேன் என்றால் அது 'வைக்கம் முகமது பஷீர்'தான். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக சமீபத்தில் அவருடைய 'மதிலுகள்' மற்றும் 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' ஆகிய தமிழாக்கங்களைப் படிக்க நேர்ந்தது. எத்தனை அருமையான படைப்புகள் அவருடையது.

21-ஜனவரி 1908 முதல் 5-ஜூலை 1994 வரை வாழ்ந்த அவருடைய வாழ்க்கை எந்த அளவிற்கு சுவாரஸ்யங்கள் நிரம்பியதோ அந்த அளவிற்குத் துன்பங்களும் நிறைந்தது. அந்த அனுபவங்களே அவரை தேசத்தின் மிகச்சிறந்த படைப்பாளியாக மிளிரச்செய்தது. அவருடைய படைப்புகளுக்கு காரணமான வாழ்க்கையை உற்று நோக்கும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். புத்தகத்தின் இறுதியில் அவருடைய 'மரணக் குறிப்பு' என்னும் கட்டுரை அபாரம்.

குறும்பு செய்யும் குழந்தையாக, சுதந்திர வேட்கைக் கொண்ட இளைஞராக, ஜெயில் கைதியாக, போலீசுக்கு அஞ்சி தலைமறைவாக இருக்கவேண்டி 9 வருடங்கள் தேசாந்திரியாக இந்தியாவிலுள்ள பல புகழ் பெற்ற இடங்களில் அலைந்துள்ளார், அந்த நேரங்களில் இந்துத் துறவியாக, முஸ்லீம் சூஃபியாக ஹோட்டல் சர்வராக, ஜோசியம் பார்ப்பவராக, மேஜீசியனாக, பிச்சைக்காரர்களின் தோழராக என்று தன்னுடைய நிஜ வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கியுள்ளார்.

எளிய மக்களின் வட்டார மொழியை இவருடைய படைப்புகளில் மிகுதியாகக் காண முடியும். ஒருமுறை பஷீரைப் பார்க்க வந்த அவருடைய சகோதரர் அவருடைய படைப்புகளில் பிழையை கண்டுபிடித்துச் சரிபடுத்துமாறு கேட்டிருக்கிறார்.

அதற்கு பஷீர்

"போடா உன் பொண்டாட்டிக்கு வரதச்சனையா
வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு
என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன்
எனக்கு தெரிஞ்ச எழுத்துக்களைக் கொண்டே
எழுதுவேண்டா நான். உன்னோட ஏட்டு
ஏலக்கனத்த நே வச்சுக்கடா" - என்று கூறினாராம்.

****************************************************

இவருடைய பல படைப்புகளிலிருந்து சில வரிகள்:

"வெளிச்சத்திற்கு எதற்கொரு வெளிச்சம்."

"பயணத்திற்கான நேரம் மிக மிக நெருங்கிவிட்டது. நீயும் நானும் என்ற யதார்த்தத் தன்மையிலிருந்து இறுதியில் நீ மட்டும் மிஞ்சப்போகிறாய். நீ மட்டும்...

இவ்வளவு காலமாகியும் நீ என்னை அளவற்ற வாஞ்சையோடு நேசித்தாய். என் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாய். என்னைப் பற்றி உனக்கு எப்பொழுதும் தெரியும். இன்னமும் உன் சவுகர்யம் போல் படிக்கக் கூடிய ஒரு சிறு கிரந்தம் அல்லவா நான்..."

"அவன் இறுதி யாத்திரைக்கு தயாராகிவிட்டான். எங்கே போகப் போகிறான்? இருளின் இந்த மகா சமுத்திரத்திற்கா? இல்லை வெளிச்சத்தின் புதிய உலகத்திற்கா? ஒன்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை. எந்த ஒரு பிடிப்பும் பிடிமானமும் இல்லை. ஒரே நொடியில் மாறக்கூடிய நினைவு மட்டுமே அவள். எல்லையில்லா இடத்தை நோக்கிய பயணம் தான் அந்த வாழ்க்கை..."

****************************************************

இவருடைய படைப்புகள் யாவும் தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளிலும், பிரெஞ்சு, செக், சீன மொழி, ஜப்பானிய மொழி, ஆங்கிலம் என பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 'பால்யகால சகி'யை கையெழுத்துப் பிரதியில் 500 பக்கங்களுக்கு எழுதினாராம். பத்து ஆண்டுகள் கழித்து, அச்சுக்குப் போகும் முன் அதனை 75 பக்கங்களுக்கு குறைத்து அந்த நாவலை வெளியிட்டாராம். ஒவ்வொரு கதையையும், நாவலையும் இழைத்து இழைத்து படைத்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக இருந்தும், தனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கையில் 14 நாவல்களும், 100 சிறுகதைகளும் மட்டுமே எழுதியிருக்கிறார். ஆனால் அனைத்துமே காலத்தால் வாடாத படைப்புகள்.

Book details: Kalam muzhuthum kalai, Kizhakku, Chennai

குளச்சல் மு யூசப் பஷீரின் முக்கியமான படைப்புகளை மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறார். எப்படியும் வரும் ஜனவரி இறுதியில் அவை காலச்சுவடில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் கட்டுரை.

பஷீரின் படைப்புகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

Monday, July 20, 2009

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

இரும்பு குதிரைகள்: பாலகுமாரன்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 125 /- ரூபாய்

ஒரு வருடங்களுக்கு முன்பு "மாமா நீங்க இரும்பு குதிரைகள் நாவல் படிச்சி இருக்கீங்களா?" என்று மருமகன் முத்து என்னிடம் கேட்டான்.

இல்லையேடா, நல்லா இருக்குமா என்ன? என்று அவனிடம் கேட்டேன்.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகா எழுதி இருப்பாரு மாமா... ரொம்ப நல்ல இருக்கும்... இத்யாதி இத்யாதின்னு புகழ்ந்தான். ஆனால் கதையை சொல்லவில்லை... அதிலிருந்தே இந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தேன். சென்ற மாதம் புத்தகம் வாங்குவதற்கும், நிஸ்துல்யாவைப் பார்ப்பதற்கும் T.Nagar சென்ற போது New Book Lands -ல் 'இரும்பு குதிரைகள்' வாங்கக் கிடைத்தது.

லாரியைச் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான டிரைவர், க்ளீனர், லாரி முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களைச் சுற்றி தான் கதை நகர்கிறது. லாரி தொழிலின் தொழில் நுணுக்கங்களை அருமையாக பாலகுமாரன் இந்நாவலில் பயன்படுத்தி இருப்பார். பல வருட கூர்ந்த அவதானிப்பும், ஆராய்ச்சியும் இல்லாமல் இது போன்ற நுணுக்கங்கள் சாத்யமில்லை.

இந்த நாவலில் விஸ்வநாதன் தான் முக்கியக் கதாப்பாத்திரம். விஸ்வநாதனுக்கு சினிமா டைரக்டராக வேண்டுமென்பது ஆசை. ஆனால் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்கிறான். தான் செய்யும் வேளையில் இருந்துகொண்டே சினிமாக் கனவினை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் வேலையை உதறிவிட்டு கனவுத் தொழிற்சாலைக்குச் செல்ல முடியாத சூழல் அவனுடையது. அந்த சூழல் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மனதில் உற்சாகம் தோன்றும் நேரத்தில் குதிரைகளை மையமாக வைத்து கவிதைகள் எழுதுகிறான். அந்தக் கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம். நூலுக்கு உரை எழுதிய பாலகுமாரனின் நண்பர் திரு.மாலன் இதனை சிலாகித்து எழுதி இருப்பார். எனக்கு கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொள்வது சற்றே சிரமம் என்பதால் 'குதிரைக் கவிதைகள்' கடினமாக இருந்தது.

குடும்ப சூழல் காரணமாக தனது மாணவனும், இடைத்தரகனுமான வடிவேலின் கடையில் வேலை செய்யவரும் நாராயணசாமி (நாணு) அய்யர், தனது மகள் காயத்ரிக்கு காந்திலால் டிரான்ஸ்போட்டில் வேலை வாங்கித் தருகிறார்.

அதன் மூலம் விஸ்வநாதனுக்கு நாணு ஐயரின் நட்பு ஏற்படுகிறது. விஸ்வநாதன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் என்று தெரிந்தும் அவன் மூலமாக காயத்ரி குழந்தை பெற விருப்புகிறாள்.

"லிவிங் டுகெதர்" (living together) ஒழுக்கமான முறைதானா என்று கேள்வி எழுப்பும் நம் கலாச்சாரத்தில் காயத்ரியின் இந்த ஆசை நியாயமானதுதான் என்று தகப்பன் நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விபரீத ஆசைக்கு விஸ்வநாதன் மறுத்துவிடுகிறான். காயத்ரி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள்.

விஸ்வநாதனும் தாரணியும் அவனுடைய குதிரைக் கதைகளை புத்தகமாக வெளியிட யோசிக்கிறார்கள். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'இரும்பு குதிரைகள்' என்று வைக்கிறார்கள்.

விஸ்வநாதன், தாரிணி, நாணு அய்யர், காயத்ரி, வடிவேலு, ராவுத்தர், நடேச நாயக்கர், முதலியார், , காந்திலால், கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய் என்று ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பாலகுமாரன் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். கதைக் களமானது பெரியப்பாளையம், திருப்பதி சாலை, புத்தூர் செக் போஸ்ட், கொருக்குப் பேட்டை என எனது கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நடக்கிறது. அதனாலேயே இந்நாவலை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.

இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் அவருடைய நண்பர் சுப்ரமண்ய ராஜுவிற்கு சமர்பித்திருக்கிறார். ஏனெனில் அவர்தான் இந்த நாவலில் கதாநாயகன் என்று சொல்கிறார். திரு மாலன் அவர்கள் எழுதிய முன்னுரையும் அதை நிரூபிப்பது போல் உள்ளது.

Details: Irumbu Kuthiraigal, Visa Publications, Chennai.

பின் குறிப்பு:
இந்த நாவலின் உண்மை நாயகனான சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள் கிழக்கு பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. அதை வாங்க இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

திரு. பத்ரி அவர்களின் பதிவில் இந்த புத்தகத்தைப் பற்றிய தகவலைக் காண இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

Tuesday, July 14, 2009

Sindhanathi - La sa ramamirtham

சிந்தா நதி: லா ச ராமாமிருதம்
விலை: 80-/ ரூபாய்
வெளியீடு: வானதி பதிப்பகம்

லா சா ரா (லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம்) தனது இறுதி மூச்சு வரை துடிப்புடன் செயல்பட்ட மகத்தான எழுத்தாளர். தனது படைப்புகளில் தனியொரு பாணியைப் பின்பற்றி அவருக்கென ஒரு நிரந்தரமான இடத்தைத் தமிழிலக்கியத்தில் ஏற்படுத்திக் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களிலும் சிறந்து விளங்கியவர். இவருடைய எழுத்து ஆழ்ந்த கருத்துக்களையும், அழகிய விவரிப்புகளையும் கொண்டவை. இவருடைய கதைகள் ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல முக்கிய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தனது பதின்ம வயதின் இறுதிகளில் அவர் எழுதிய “தி எலிபென்ட்’ என்ற ஆங்கிலக் கதைதான் அவருடைய முதல் கதையாக பிரசுரம் ஆகியது. அதற்குப் பிறகு அவர் தமிழில் எழுதுவதையே விரும்பி ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் மாதமொருமுறை பிரசுரமாகும் 'தீராநதி'யின் தீவிர விசிறி நான். அந்த இதழில் லா ச ரா எழுதிய சொந்தர்ய லஹரியும், கி ரா எழுதிய கட்டுரைகளின் மீதும் மோகம் கொண்டு அலைந்திருக்கிறேன். அந்த ஈடுபாடே அவருடைய படைப்புகளைத் தேடி என்னை ஓடச்செய்தது.

லா ச ராவின் சிறுகதைகளில் சில திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது:
1. அம்முலு
2. கண்ணன்
3. நெற்றிக் கண்
4. வரிகள்

இவர் எழுதி 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆறு கட்டுரைத் தொகுப்புகளில் ஒன்றுதான் 'சிந்தா நதி'.

தினமணி கதிரில் தொடராக வந்த "சிந்தாநதி" கட்டுரைகளுக்கு 1989- ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மேலும் இலக்கிய சிந்தனை விருது, கலைமாமணி விருது உட்பட பல முக்கிய விருதுகளும் பெற்றிருக்கிறார்.

சிந்தாநதி கட்டுரைகள் யாவும் அவருடைய வாழ்வானுபவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மணிக்கொடி சகாக்களுடன் ஆரம்ப காலங்களில் கலந்துரையாடியது, தனது தந்தையிடம் பொய் சொல்லியது, அம்மாவின் அன்பு, வாசகர்களுடனான பிணைப்பு, ஆரம்ப காலங்களில் வேலையில்லாமல் அலைந்தது, சினிமா கம்பெனியில் வேலை செய்தது என அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரையாக்கியுள்ளார்.

இவருடைய எழுத்து சில இடங்களில் படிப்பதற்கு எனக்குக் கடினமாக இருந்ததுண்டு. முதல் பத்தியைப் படித்துவிட்டு அடுத்த பத்திக்குப் போகும் போது முதலில் படித்தது மறந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். அய்யோ! இன்னும் வாசிப்பதில் முதிர்ச்சி அடையவில்லையே என்ற எண்ணம் தோன்றும். சிந்தா நதியிலும் சில இடங்களில் அதுபோல் உணர்ந்தேன்.

ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும்.

Monday, June 22, 2009

Ashapoorna devi - Short stories

வங்காளச் சிறுகதைகள்: ஆஷாபூர்ணா தேவி விலை: 100-/ ரூபாய்
வெளியீடு: விசா பதிப்பகம்
தமிழில்: புவனா நடராஜன்

வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி 1909-ம் ஆண்டில் கல்கத்தாவில் பிறந்தார். முறைப்படி பள்ளிக்கு சென்று கற்கவில்லை என்றாலும் தனது சொந்த முயற்சியால் மொழியினைப் பயின்று, சிறந்த புலமையை பெற்று பல அரிய படைப்புகளை வங்காள இலக்கியத்திற்கு அளித்திருக்கிறார்.

இவர் 176 நாவல்களும், 30 சிறுகதைத் தொகுப்புகளும், 47 குழந்தை இலக்கிய நூல்களும், 25 மற்ற படைப்புகளும் படைத்துள்ளார். 'Pratham Pratishruti' என்ற நாவலுக்காக 'ஞானபீட விருது' பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலை மொழிபெயர்த்த புவனா நடராஜனும் தேர்ந்த படிப்பாளி மற்றும் மொழிபெயர்ப்பாளர். அவரைப் பற்றி படிக்க ஆறாம் திணை இணையதளத்திற்கு செல்லவும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் பெண்ணின் நிலை ஆண்களை விட சிக்கலானதே. அந்த சிக்கலான வாழ்க்கையில் அவர்கள் அனுசரித்துபோக வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

அதுவும் தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, கணவன், மனைவி, பணிப் பெண்கள் என பல உறவுகள் இருக்கும் கூட்டுக் குடும்ப முறையில் பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.

அது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், உறவுகள் சிதைந்து உருவாகும் தனிக் குடித்தன வாழ்கையும் தான் இவரின் முக்கிய கருக்கள்.

ஒரு சில கோணங்களில் பார்க்கும் போது படைப்பாளியின் ஆளுமையே இதுபோன்ற சிக்கலான விஷயங்களை இலக்கியமாக்குவதில் தான் இருக்கிறது. அஷாபூர்னாதேவி அந்த வேலையைத் தொய்வில்லாமல் செய்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் வங்காளிய பெண்களின் நுட்பமான உளவியல் பிரச்சனைகளை தனது எழுத்தின் மூலம் கொண்டு வந்து இவர் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவருடைய முக்கிய கதாப்பாத்திரம் சில நேரங்களில் மாமியாராக இருக்கும், சில நேரங்களில் மருமகளாக, சில நேரங்களில் வளர்ப்புத் தாயாக, சில நேரங்களில் தோழியாக, சில நேரங்களில் சகோதரியாக, சில நேரங்களில் மகளாக இருக்கும்.

அது போல அக்கா, தங்கை பிரச்சனையைக் கருவாகக் கொண்ட 'கருப்பு சூரியன்' என்ற சிறுகதை புவனா நடராஜனின் மொழிபெயர்ப்பில் ஆறாம்திணை இணைய பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

கருப்பு சூரியன்

400 பக்கங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பது சற்றே சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் வித்யாசமான படைப்பின் ருசியினை உணரலாம்.

Thursday, June 18, 2009

Kaali nadagam - Unni.R

காளி நாடகம்: உண்ணி.ஆர்
விலை: 50 ரூபாய் தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

Asianet News -ல் பணிபுரியும் உண்ணி.ஆர் தற்கால மலையாள எழுத்தாளர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். இவருடைய சிறுகதைகளுக்கு கேரளா அளவிலான பல முக்கியமான விருதுகள் கிடைத்திருக்கின்றன.

உண்ணி எழுதி வெளிவந்த 12 சிறுகதைகளை சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அதனைக் 'காளி நாடகம்' என்ற பெயரில் உயிமைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவருடைய எழுத்தின் பலமே கதையின் மாந்தர்களுடன் நம்மைப் பயணம் செய்ய வைத்து இறுதியில் கதையின் உபபாத்திரங்களுடன் நம்மையும் ஒருவராக நிற்கவைப்பதுதான்.

'காளி நாடகம்' என்ற முதல் கதையில் வரும் மையப் பாத்திரமான கணவனைப் பிரிந்து வாழும் காளியம்மையுடன் நம்மைப் பணயம் செய்ய வைத்து இறுதியில் காளியம்மையின் தம்பி மனைவி குட்டி மாலுவுடன் நம்மையும் ஒருவராக நிற்க வைக்கிறார்.

'மூத்திர ராக்ஷசம்' கதையில் நாடு வீட்டில் மலம் கழிக்கும் தந்தையை அழைத்துக் கொண்டு மகன் நாடு ராத்திரியில் வயல் வெளிகளைத் தாண்டி ரயில் தண்டவாளத்திற்கு அருகே செல்லும் போது, எதற்காக அவன் தந்தையை அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறான் என்று யோசித்தவாறு நம்மையும் அங்கு நிற்கவைக்கிறார்.

'ஆலிஸின் அற்புத உலகம்', 'பாதுஷா என்ற கால்நடையாளன்', 'மூன்று பயணிகள்', 'விடுமுறை நாள் கொண்டாட்டம்' என அனைத்து கதைகளிலும் உண்ணியின் அற்புதமான கற்பனை வெளிப்படுகிறது.

இவருடைய படைப்புகளில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதா மாந்தர்கள் விலங்குகளுடன் பேசுவது போல் சித்தரித்திருக்கிறார். 'அது, பூச்சி உலகம், பாதுஷா என்ற கால்நடையாளன்' போன்ற கதைகள் இதற்கு உதாரணம்.

கவிஞர் சுகுமாரன் முன்னுரையில் கூறியது போல் "உண்ணியின் கதாப்பாத்திரங்கள் நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் பகடி செய்பவர்கள்.அவர்கள் இருப்பாலும் சமூக நீதியாலும் விலக்கி நிறுத்தப்பட்டவர்கள்".

இவருடைய கதை மாந்தர்களிடம் காணப்படும் வாழ்க்கையின் இருத்தலும், அன்பும், வெகுளித்தனமும் முக்கியமான குணாம்சங்கள். அந்த குணாம்சங்களே நம்மைக் கதையுடன் மேலும் ஒன்ற வைக்கிறது.

புத்தகம் உயிர்மை பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. புத்தகத்தைப் வாங்க கீழுள்ள முகவரியில் செல்லவும்.

Kaali Nadagam: uyirmmai publications