Tuesday, July 14, 2009

Sindhanathi - La sa ramamirtham

சிந்தா நதி: லா ச ராமாமிருதம்
விலை: 80-/ ரூபாய்
வெளியீடு: வானதி பதிப்பகம்

லா சா ரா (லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம்) தனது இறுதி மூச்சு வரை துடிப்புடன் செயல்பட்ட மகத்தான எழுத்தாளர். தனது படைப்புகளில் தனியொரு பாணியைப் பின்பற்றி அவருக்கென ஒரு நிரந்தரமான இடத்தைத் தமிழிலக்கியத்தில் ஏற்படுத்திக் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களிலும் சிறந்து விளங்கியவர். இவருடைய எழுத்து ஆழ்ந்த கருத்துக்களையும், அழகிய விவரிப்புகளையும் கொண்டவை. இவருடைய கதைகள் ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல முக்கிய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தனது பதின்ம வயதின் இறுதிகளில் அவர் எழுதிய “தி எலிபென்ட்’ என்ற ஆங்கிலக் கதைதான் அவருடைய முதல் கதையாக பிரசுரம் ஆகியது. அதற்குப் பிறகு அவர் தமிழில் எழுதுவதையே விரும்பி ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் மாதமொருமுறை பிரசுரமாகும் 'தீராநதி'யின் தீவிர விசிறி நான். அந்த இதழில் லா ச ரா எழுதிய சொந்தர்ய லஹரியும், கி ரா எழுதிய கட்டுரைகளின் மீதும் மோகம் கொண்டு அலைந்திருக்கிறேன். அந்த ஈடுபாடே அவருடைய படைப்புகளைத் தேடி என்னை ஓடச்செய்தது.

லா ச ராவின் சிறுகதைகளில் சில திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது:
1. அம்முலு
2. கண்ணன்
3. நெற்றிக் கண்
4. வரிகள்

இவர் எழுதி 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆறு கட்டுரைத் தொகுப்புகளில் ஒன்றுதான் 'சிந்தா நதி'.

தினமணி கதிரில் தொடராக வந்த "சிந்தாநதி" கட்டுரைகளுக்கு 1989- ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மேலும் இலக்கிய சிந்தனை விருது, கலைமாமணி விருது உட்பட பல முக்கிய விருதுகளும் பெற்றிருக்கிறார்.

சிந்தாநதி கட்டுரைகள் யாவும் அவருடைய வாழ்வானுபவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மணிக்கொடி சகாக்களுடன் ஆரம்ப காலங்களில் கலந்துரையாடியது, தனது தந்தையிடம் பொய் சொல்லியது, அம்மாவின் அன்பு, வாசகர்களுடனான பிணைப்பு, ஆரம்ப காலங்களில் வேலையில்லாமல் அலைந்தது, சினிமா கம்பெனியில் வேலை செய்தது என அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரையாக்கியுள்ளார்.

இவருடைய எழுத்து சில இடங்களில் படிப்பதற்கு எனக்குக் கடினமாக இருந்ததுண்டு. முதல் பத்தியைப் படித்துவிட்டு அடுத்த பத்திக்குப் போகும் போது முதலில் படித்தது மறந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். அய்யோ! இன்னும் வாசிப்பதில் முதிர்ச்சி அடையவில்லையே என்ற எண்ணம் தோன்றும். சிந்தா நதியிலும் சில இடங்களில் அதுபோல் உணர்ந்தேன்.

ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும்.

14 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி திரு. க்ருஷ்ணா

ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும். //

இவ்வளவு தீவிர வாசகரா.

வாசிப்பு, விமர்சனம், மறுபடியும் மீள் வாசிப்பு என ஆழ்ந்த வாசகராய் நீங்கள் இருப்பது ஆச்சரியத்தையும், பெருமையையும் ஒரு சேரத் தருகிறது.

உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.

Unknown said...

பகிர்விற்கு நன்றி சாரதா...

சில படைப்புகளை விரும்பி மீண்டும் படிப்பதுண்டு. உதாரணமாக கி. ராவின் படைப்புகள். எவ்வளவு படித்தாலும் திகட்டாத எழுத்து இவருடையது. அதே போல் பஷீரின் கதைகள். லா சா ரா வின் படைப்புகளும் அப்படியே. கடவுளே இவர்கள் நமக்கு படிக்கக் கிடைத்தது நம்முடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன்.

காமராஜ் said...

இப்பொழுது தான் வந்தேன்
நல்ல வாசகர்கள் நல்ல எழுத்துக்களை
அடைகாப்பவர்கள் அவர்களுக்குள்
நிறைய்ய எழுத்து கிடைக்கும்.
நம்பிக்கையுடன். காமராஜ்

Unknown said...

வந்து வாசித்தமைக்கும், பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்ததற்கும் நன்றி நண்பரே...

Unknown said...

ஆனந்தவிகடனில் உங்கள் வலைப்பூ பற்றிய குறிப்பினைப் படித்து உடனடியாக வந்தேன் நண்பா..மிகவும் மகிழ்வாக இருக்கிறது. எனது அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள் !

அமுதா said...

விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் சுட்டி வந்துள்ளது. வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி எம்.ரிஷான் ஷெரீப்...

நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கதையை அனுப்பி கருத்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தீர்கள். சிறிது வேளையாக இருந்ததால் பாதிக்கு மேல் தொடர முடியவில்லை. முழுவதும் படித்துவிட்டு உங்களுக்கு மின்னஞ்சல் இடுகிறேன்.

வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி ரிஷான்...

Unknown said...

நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது 'வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!!!' என்ற பதிவில் என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கும், தற்பொழுது வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றி அமுதா...

Search Engine said...

Good blog

inbaraj said...

விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் ப்லோக் பற்றீ வந்துள்ளது. வாழ்த்துக்கள்

Unknown said...

Search Engine said...
/--Good blog--/

Thank you hemnath

inbaraj said...

/--விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் ப்லோக் பற்றீ வந்துள்ளது. வாழ்த்துக்கள்--/

நன்றி இன்பா

வாசுகி said...

நான் இதுவரை இவரது எழுத்துக்கள் வாசித்ததில்லை.
வாசிக்க கடினமாக இருக்கும் என நினைத்து தான்.

//கடவுளே இவர்கள் நமக்கு படிக்கக் கிடைத்தது நம்முடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன்.//
நானும் சில எழுத்தாளர்களை வாசிக்கும் போது இப்படி நினைப்பேன்.

நன்றி

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

Unknown said...

@ வாசுகி...

பின்னூட்டத்திற்கு நன்றி...

@ Anonymous

நீங்கள் குறிப்பிட்ட பதிவினை முழுவதும் படித்தேன். என்னுடைய கவத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.