Thursday, December 11, 2014

புக் லிஸ்ட் 2014 – ஒரு கண்ணோட்டம்


வாசிக்க விருப்பப்பட்டு ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் – தூசு படிய அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பது - ஒருவிதக் குற்ற உணர்வை தவறாமல் ஏற்படுத்தும். வேறுவழியும் இல்லை, ஆகச் சோம்பேறியாக இருப்பவர்கள் இதனைக் கடந்து தான் ஆக வேண்டும். எனினும், இந்த ஆண்டு வேண்டிய மட்டும் சில புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தது மகிழ்ச்சியான விஷயம். நாவல்களும் தன்வரலாற்றுப் புத்தகங்களுமே இவ்வருடம் எனது தேர்வாக இருந்தது. ஒருசில கட்டுரைத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்லதொரு மழைநாளில், இரவு நேரப் பயணத்தில் எதிர்பாராத விதமாக சிறியதொரு விபத்து ஏற்பட்டது. விபத்து என்னவோ மிகச் சிறியது. கண்களுக்குக் கீழுள்ள பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்குப் பூரண ஓய்வில் இருக்கும்படி பரிசோதித்த மருத்துவர் கேட்டுக் கொண்டார். 

இரண்டு மாதங்கள் ஓய்வில் இருப்பதென்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. மருத்துவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன்:

“டாக்டர்... நான் காலையும் மாலையும் ரெண்டு மணிநேரம் வாக்கிங் போகலாமா?”

“ஓ... தாராளமா போங்க...”

“டாக்டர்... ஒரு சின்ன கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன். நான் புக்ஸ் படிக்கலாமா?”

“கொஞ்சம் போல படிக்கிறதுல பிரச்சனை ஒன்னும் இல்ல... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க...” என்றார்.

புத்தகங்களை முகத்திற்கு நேரே வைத்துக் கொண்டு படிக்காமல், தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு - ஒரு விநோதக் கோணத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். கழுத்து வலி வந்ததுதான் மிச்சம். கருவிழியை மேல்நோக்கி வைத்துப் படித்ததால் கண்ணிலும் வலி ஏற்பட்டது. இப்பொழுது ஓரளவிற்குப் பரவாயில்லை. முகத்திற்கு நேரே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதற்குத் தயாராகிவிட்டேன்.

இரண்டு மாத ஓய்வு கற்பித்துச் சென்ற அனுபவ பாடம் அளப்பரியது. நண்பனும், அரசுப் பள்ளி ஆசிரியனுமான சரவணனுடன் காலையும் மாலையும் நடை சென்றது மட்டுமே மனதிற்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைந்த நேரங்கள். கண் பரிசோதனை மேற்கொண்ட இடத்தில் ஒரு சின்ன அனுபவம். என்னருகில் சினிமாக் கதாநாயகன் போல, மூக்கும் முழியுமாக ஒரு வடஇந்திய நண்பர் உட்கார்ந்திருந்தார். நண்பருக்கு முன்னால் மருத்துவரைப் பார்க்க எனக்கு தான் அனுமதி இருந்தது. இருக்கையின் நுனியில் பொறுமையில்லாமல் அவர் உட்கார்ந்திருந்தார். வெளிப்படுத்த முடியாத தவிப்பில் வேறு இருந்தார். அவரிடம் கேட்டேன்:

“Actually what’s your problem?”

நண்பருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கேட்ட கேள்வியின் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. பிரச்சனை இதுதான். நண்பர் நகைகளைச் செய்யக்கூடிய பொற்கொல்லர். மகாராஷ்டிரம் சொந்த மாநிலம். விபத்தொன்றில் அவரது முன் நெற்றியில் அடிபடவும், கண்களுக்குச் செல்லும் முக்கிய நரம்பொன்று பாதிப்படைந்து பார்வைக்குத் தெரியும் காட்சிகள் யாவும் இரண்டிரண்டாகத் தெரிகின்றன. இயல்பான பார்வை தனக்குத் திரும்புமா என்பது தான் அவரது கவலை.

“You don’t worry friend. I also met with an accident and have some vision probs. We have an advanced technology to cure any type of vision problem. நீங்க என்ன நம்பனும்” என்று அவரிடம் கூறியதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை, வெற்று வார்த்தைகளாகின. “சரி... நீங்க இவ்வளோ பதட்டத்தோட இருக்கீங்கன்னா... எனக்கு முன்னால நீங்க டாக்டர பாருங்க” என்று முன்னிருக்கையில் நண்பரை அமர வைத்தேன். ஆரம்பத்தில் சங்கடப் பட்டு முன்னே செல்ல மறுத்தவர், வாய்ப்பின் முக்கியத்துவம் கருதி மிகவும் மகிழ்ந்தார். அமர வைத்த சில நிமிடங்களில் நண்பரை உள்ளே அழைத்தார்கள். இருபது நிமிடங்களுக்கு மேலாக நானும் நண்பருக்காகக் காத்திருந்தேன். வெளியில் வந்தவர் புன்னகை சிந்தி, கை குளுக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் கடந்து சென்றார். மருத்துவர் ஒன்றும் எல்லாம் வல்ல கடவுள் இல்லையே! நண்பருடைய பிரச்னையை முழுதாகத் தீர்த்துவைப்பாரா என்றும் சொல்லுவதற்கில்லையே!. பிரச்னையை சமாளிக்க சிறப்புக் கண்ணாடியை மருத்துவர் வழங்கலாம். எனினும் கண்ணாடியைக் கழட்டினால் நண்பருக்கு உலகமே டபுள் டபுளாகத் தெரியும். ஒரு பொற்கொல்லருக்குப் பார்வை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லையே. தற்காலிகப் பார்வையை பொற்கொல்லருக்கு மருத்துவர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதருமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகி நெருக்குதல்களை சமாளித்துத் தான் முன்னேற வேண்டியுள்ளது.

பார்முலா 1 கார் பந்தைய வீரர் ஷூமாக்கரை உலகமே ஈர்ப்புடன் கவனித்து வந்தது. கார் ஓட்டியவர் பனிச் சருக்கில் ஈடுபட வேண்டிய அவசியம் தான் என்ன? பனிச்சருக்கில் ஈடுபட்ட ஷூமாக்கருக்கு விபத்து நேர்ந்து பல நாட்கள் கோமாவில் இருந்தார். பதினாருபேர் அடங்கிய மருத்துவக்குழு அவரை இராத்திரிப் பகலாகக் கண்காணித்து கோமாவில் இருந்து மீட்டனர். இன்றைய தேதியில் கழுத்துக்குக் கீழுள்ள அவரது உடல்பாகங்கள் செயல்படாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதர் இனி ஆமை வேகத்தில் இயங்க வேண்டிய சூழல். ஒருவருடைய உதவியில்லாமல் ஷூமாக்கர் இனி எங்கும் செல்ல இயலாது என்கிறார்கள். ஷூமாக்கரின் இந்தச் செயலிழந்த நிலையையும் உலகமே கவனிக்கிறது. இங்கு பொற்கொல்லனை கவனிப்பார் உளரோ!? பொற்கொல்லனைப் போன்றவர்களை கவனிப்பாரும் உளரோ!?

வெற்றியாளர்கள் போலவே சராசரி மனிதர்களின் வாழ்க்கையும் சாதனைகள் நிரம்பியவை. அதற்கு உதாரணமாகத் தான் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் யாவும் நம்மைப் புருவம் உயர்த்த வைக்கின்றன. திருடன், பாலியல் தொழிலாளி, கன்னியாஸ்திரி, போலீஸ் கான்ஸ்டபிள், பெண் காவலர் தொடங்கி – பல்லான படத்தில் நடித்த ஷகிலா வரையும், ஷகிலாவிற்கு டூப் போட்ட துணை நடிகை வரையும் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் சக்கைபோடு போடுகின்றன. சராசரி மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் யாவும் புத்தகமாக அச்சாகின்றன. அதில் சில புத்தகங்கள் ஜனரஞ்சக இதழ்களில் தொடராக வெளிவந்த பதிவுகள். உலகின் உன்னதமான உச்சப் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய நிஜக் கதைகள் தாம் இவை.

நம்மூரில் இன்னும் கூட ஆரூர் தாஸ், இளையராஜா, பாகவதர் கொலைவழக்கு போன்றவற்றையே கட்டிக்கொண்டு அழுகிறோம். (பார்க்க தினத்தந்தி) இதெல்லாம் கூட தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றியாளர்களின் சாகசப் பிரகடனங்களை விட, பிரபலங்களின் வாழ்வியல் வீழ்ச்சியை விட, சக எளிய மனிதர்களின் வாழ்வியல் நெருக்குதல்களைத் தாங்கிச் செல்லும் சராசரி அனுபவங்கள் நம்மைச் சில்லிட வைக்கின்றன. அந்த வகையில் கீழ்கண்ட புத்தகங்கள் யாவும், அதனதன் தன்மையில் தனித்துவம் வாய்ந்தவை. “நாவல், கவிதை, சிறுகதை” சார்ந்து நிறைய வாசகக் கூட்டங்கள் ஏற்பாடாகிறது. தன்வரலாறு படிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அது போன்றவர்கள் கூடிக் குலாவும் வாசகக் கூட்டங்கள் நடப்பதில்லை என்பது வருத்தமே. நான் படித்த சுவாரஸ்யமான தன்வரலாறுகளில் சில:

1. அப்பாவின் துப்பாக்கி – ஹெனர் சலீம் (காலச்சுவடு)
2. பீமாயணம் – ஆனந்த் & குழுவினர் (காலச்சுவடு)
3. பச்சைவிரல் – வில்சன் ஐசக் (காலச்சுவடு)
4. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன் (காலச்சுவடு)
5. தேவதாசியும் மகானும் – வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (காலச்சுவடு)
6. நளினி ஜமீலா – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
7. தந்தையின் நினைவுக்குறிப்புகள் – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
8. போரும் அமைதியும் – பத்திநாதன் (காலச்சுவடு)
9. நிழல் வீரர்கள் – ராம் (மதுரை ப்ரஸ், (காலச்சுவடு))
10. தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – லீலாகிருஷ்ணன் (தமிழினி)
11. எனது நினைவுகள் – போபடி R ஹீரானந்தாணி (சாகித்ய அகாடமி)
12. நினைவலைகள் – பால் தாமஸ் (நெய்தல் வெளியீடு)
13. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி – மக்கள் கண்காணிப்பகம்
14. ஸ்டீவ் ஜாப்ஸ் – அப்பு (மதி நிலையம்)
15. நட்சத்திரக் கணித மேதைகள் – பை கணித மன்றம்
16. சிதம்பர ரகசியம் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (வம்சி)
17. ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு)

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகள் & ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளை வாசிக்க வேண்டிய சூழல் அமைந்தது. பனுவல் புத்தக அங்காடி ஏற்பாடு செய்திருந்த “சமூக நீதி” நிகழ்வுக்காக வேண்டியும் சில கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது. வேறுசில பணிகள் இருந்ததால் பனுவலின் “சமூகநீதி” நிகழ்வில் முழுதாகப் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே. கம்ப்யூட்டர் சார்ந்த புத்தகங்கள் பரிதிக்காக வாங்கியவை. ஆகவே அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு பரிதிக்கு அனுப்பினேன். அந்த வகையில் சில புத்தகங்கள்:

1. வியத்தலும் இலமே – அ. முத்துலிங்கம் (காலச்சுவடு)
2. தமிழ்ச் சிறுகதைகள் பிறக்கிறது – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
3. பதிப்புகள் மறுபதிபுகள் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
4. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
5. சாதியும் நானும் - பெருமாள் முருகன் (காலச்சுவடு)
6. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவம் (காலச்சுவடு)
7. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு)
8. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான் (காலச்சுவடு)
9. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் (காலச்சுவடு)
10. சகாயம் செய்த சகாயம் – மலைகள் பதிப்பகம்
11. வாளோர் ஆடும் அமலை – தடாகம்
12. தமிழகத்தின் இரவாடிகள் – தடாகம்
13. நறுமணப் பொருட்கள் – கு. சிவராமன் (பூவுலகின் நண்பர்கள்)
14. ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி (கறுப்புப் பிரதிகள்)
15. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – விகடன் பிரசுரம்
16. கூகுள் தேடு – கிழக்கு பதிப்பகம்
17. ஃபேஸ் புக் – கிழக்கு பதிப்பகம்
18. கூகுள் – கிழக்கு பதிப்பகம்
19. ஒப்பன் சோர்ஸ் – கிழக்கு பதிப்பகம்
20. விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு – கலைஞன் பதிப்பகம்
21. ட்விட்டார் – கிழக்கு பதிப்பகம்

நாவல்கள் வாசிப்பதைப் பெரிதும் விரும்புவேன். சில நாவல்களை மறுபடியும் மறுபடியும் கூட வாசிப்பேன். முன்பெல்லாம், “உலக இலக்கிய வரிசை, குழந்தைகள் இலக்கிய வரிசை” என்று சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். தற்கால தமிழ்ப் பதிப்பக சூழலில், இந்த “கிளாசிக் வரிசை” என்ற வார்த்தை படுகிற பாடு இருகிறதே...! அதைச் சொல்லி மாளவில்லை. நண்பர் காலச்சுவடு கண்ணனிடம் ஒருமுறை எரிச்சலுடன் கேட்டேன்:

“ஏங்கே... புத்தகத்தை வெளியிடுறீங்க சரி? அதென்னங்க கிளாசிக் சிறுகதை, கிளாசிக் நாவல், கிளாசிக் உலக வரிசை, கிளாசிக் கவிதைன்னு ஒரு டேக் வேண்டிக் கெடக்குது?”

“நீங்க என்ன சும்மா போகிற போக்குல விளையாட்டா சொல்லிட்டிங்க! படைப்பிலகியத்தில் ஆளுமை செலுத்தும் பத்து பேருக்கு அழைப்பு விடுத்து, அவர்களை ஓரிடத்தில் ஒருவார காலம் தங்க வைத்து, நல்ல சில புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்லி, அதில் கிளாசிக்கான நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து காலச்சுவடு பதிப்பகம் ‘கிளாசிக் வரிசை’யைக் கொண்டு வருகிறது. எல்லா புத்தகங்களுக்கும் காலச்சுவடு அப்படி ‘கிளாசிக் டேக்’ கொடுக்கறது இல்லியே...! நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து விவாதிக்கிறாங்க. அறிமுக வாசகர்களின் புத்தகத் தெரிவுக்காக இந்த மெனக்கெடல் தேவைப்படுது.” என்று பதில் கூறினார்.

“ஓஹோ... சிறுகதையாகட்டும், நவலாகட்டும், கவிதையாகட்டும், மொழிபெயர்ப்பாகட்டும் - இந்த கிளாசிக் என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளோ மெனக்கெடல்கள் இருக்கிறதா?” என்று நினைத்துக் கொண்டேன். ஆகவே, தமிழின் கிளாசிக் நாவல்களாகக் கருதப்படும் சில நாவல்களை இந்த வருடத்தில் ஒரு ஓட்டு ஓட்டினேன். அந்த வகையில் கிளாசிக் லேபிள் ஓட்டப்பட்ட மற்றும் ஓட்டப்படாத நாவல்களில் ஒருசில கீழே...

1. மாதொருபாகன் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
2. பூக்குழி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
3. சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் (காலச்சுவடு)
4. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் (காலச்சுவடு)
5. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் (காலச்சுவடு)
6. கோபல்ல கிராமம் – கி.ரா (காலச்சுவடு)
7. பனி – ஓரான் பாமுக் (காலச்சுவடு)
8. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
9. ரத்த உறவு – யூமா வாசுகி (தமிழினி)
10. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
11. நிழல் முற்றம் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
12. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (அருள் புத்தக நிலையம்)
13. ஆளண்ட பட்சி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
14. வெல்லிங்டன் – கவிஞர் சுகுமாரன் (காலச்சுவடு)
15. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
16. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
17. வாடிவாசல் – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
18. மானசரோவர் – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
19. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
20. உம்மத் – ஸர்மிளா சையத் (காலச்சுவடு)
21. மஸ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
22. நிழலின் தனிமை – தேவிபாரதி (காலச்சுவடு)
23. 18-வது அச்சக்கோடு – அசோகமித்திரன் (காலச்சுவடு)
24. அவஸ்தை – யு. ஆர். ஆனந்த மூர்த்தி (காலச்சுவடு)
25. சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா (காலச்சுவடு)
26. கீதாரி – சு. தமிழ்ச்செல்வி (NCBH)
27. மீன்குகைவாசிகள் – கீரனூர் ஜகீர்ராஜா (ஆழி பதிப்பகம்)
28. தனிமையின் நூறுஆண்டுகள் – காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ்
29. அஜ்னபி – மீரான் மைதீன் (காலச்சுவடு)
30. ஆத்துக்குப் போகணும் – காவேரி (காலச்சுவடு)
31. தேவதாஸ் – சரத் சந்திர சட்டோபாத்யாயா (காலச்சுவடு)
32. குற்றவிசாரணை – லெ – கிளேஸியோ (காலச்சுவடு)
33. பாதையில் பதிந்த அடிகள் – ராஜம் கிருஷ்ணன் (காலச்சுவடு)
34. குதிரை வேட்டை – பெர் பெதர்சன் (காலச்சுவடு)
35. செம்பருத்தி – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
36. ஓதி எறியப்பட்ட முட்டை – மீரான் மைதீன் (காலச்சுவடு)
37. என் பெயர் ராமசேஷன் – ஆதவன் (உயிர்மை)
38. காகிதமலர்கள் – ஆதவன் (உயிர்மை)
39. மஞ்சள் வெயில் – யூமா வாசுகி
40. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (கவிதா பதிப்பகம்)
41. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து (திருமகள் நிலையம்)
42. கனக துர்கா – பாஸ்கர் சக்தி (வம்சி பதிப்பகம்)
43. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமன்ட் கார்வார்
44. நினைவுதிர் காலம் – யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)
45. பயணக் கதை – யுவன் சந்திரசேகர்
46. பெரியார் ரசிகன் – குகன் (உதயக்கண்ணன் பதிப்பகம்)

நாடகம்:

1. சீதை ஜோசியம் – சாகித்ய அகாடமி
“இந்தப் புத்தகங்களை எல்லாம், இந்த ஒரு வருட காலத்தில் நுனிப் புல் மேய்ந்திருக்கிறேன்” என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவற்றிலுள்ள பல புத்தகங்கள் வாசகப் பிரியர்கள் அவசியம் படித்து மகிழவேண்டிய புத்தகங்கள் கூட.

கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தபோது பஷீரின் புத்தகமொன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஜி. குப்புசாமி ஓரான் பாமுக்கின் இஸ்தான்புலை மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளும் மறுவெளியீடு காண இருக்கின்றன. நான்கு வருடங்களாக - ஒரு தமிழ் கிளாசிக் எழுத்தாளரின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலொன்று மறுவெளியீட்டில் அச்சாகாதா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஜனவரி புத்தக சந்தைக்கு அந்த நாவலும் மறுவெளியீடு காண இருக்கிறது. போதாக் குறைக்கு பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைத்திருந்தார்.

“பிரபு... எங்கிட்டு இருக்கீங்க?” என்றார் முருகன்.

“ஆங்... எங்க மாமியார் ஊட்டுல கறி சோறு திங்கறேன்... அதுவா முக்கியம்... எதுக்கு என்ன டிஸ்டர்ப் பண்றீங்க... நான் ரொம்ப பிசி... இன்னா விஷயங்க ஜீனியஸ்... மேட்டருக்கு வாங்க...!” என்றேன்.

“கறி சோறு நல்லா இருக்குதா...?” என்று கேட்டுவிட்டு “நான் இங்குட்டு ரெண்டு நாவல் எழுதி இருக்கேன்... ரெண்டும் ஒரே நாவல்...” என்றார்.

ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கிள்ளிய இடம் வலித்தது. அப்படியெனில், நான் பிரக்ஞையுடன் தான் இருக்கிறேன். எதிர் முனையில் பேசியவர் மூளைச் சூட்டில் இருக்கிறாரோ? பரிசோதித்து விட வேண்டியதுதான். முருகனிடம் கேட்டேன்:

“உங்களுக்கு மூள கீள கலங்கிடலையே...! நீங்க நெலமையில தான் இருக்கீங்களா ஜீனியஸ்...!” என்றேன்.

“ஏன்யா... கறி சோறு நல்லா இருக்குதான்னு கேட்டது ஒரு குத்தமாயா?” என்றார்.

“விளையாடாதீங்க ஜீனியஸ்... ரெண்டு நாவல் எழுதுறீங்க சரி...! அதெப்படி ரெண்டு நாவல்களும் ஒரே நாவலாக இருக்க முடியும்? It’s impossible.” என்றேன்.

“அங்கிட்டு தான் இருக்குது ட்விஸ்ட் & சஸ்பென்ஸ்... ரெண்டு வேறவேற முன்னட்டை, ரெண்டு வேறவேற தலைப்பு... ரெண்டு வேறவேற பின்னட்டை, ரெண்டு பின்னட்டையிலும் கெத்து காமிக்கிற மாதிரி என்னோட அச்சு அசலான புகைப்படம். ஆனா, ஒரே நாவல்... அதத் தெரிஞ்சிக்க ஜனவரி மாசம் வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்...” என்றார் பெருமாள்முருகன்.

மிசஸ் பெருமாள்முருகனுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்தேன். “ஏம்மா டீச்சரம்மா... உங்க வீட்டுக்காரரு ரெண்டு நாவல் எழுதி இருக்கராராமா... ரெண்டு நாவலும் ஒரே நாவலாமா! ஊர் உலகம் நம்புமா? எனக்கு ஃபோன் போட்ட மாதிரி காலச்சுவடு கண்ணனுக்கு ஃபோன் போட்டுடப் போறாரு! கத வேற மாதிரி போயிடும்... உங்க ஊட்டுக்காரற கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க... ஒண்ணு சொல்றேன் பொறுமையா கேக்குறீங்களா?” என்றேன்.

“ஹூம்... சொல்லுங்க...” என்றார் குயுக்தியுடன் மிசஸ் பெருமாள்முருகன்.

“முடிஞ்சா நெல்லிக்கா சைஸ்ல ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்த எடுத்து, முருகனோட உச்சந் தலையில வச்சி, ஓங்கி ஒரு அடி அடிச்சி, போர்டில் டஸ்டர வச்சி பூமாதிரி எழுதுனத அழிப்பீங்களே... அந்த மாதிரி எலுமிச்சைய தேய்ச்சி உட்டு தலைக்கு ஊத்துங்கோ...” என்றேன்.

“அடக் கூறு கெட்ட கிறுக்குப் பயலே...! அவர் சொல்றது நூத்துக்கு நூறு நெஜம் தான். நீதான் கொழம்பி இருக்குற... உன் தலையில திருஷ்டி பூசணிக்காயை உடைக்க” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“அதெப்படிங்க அக்கா... ரெண்டு நாவல் எழுதி இருக்காராம்... ஆனா ஒரே நாவல்’னும் சொல்றாரு. நம்ப முடியலையே...” என்றேன்.

“நீ ரொம்ப யோசிக்கிற பிரபு. சிம்பிள் லாஜிக்ல யோசிச்சிப் பாரு. நீ ஈசியா கண்டு புடிச்சிடலாம்.” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“க்கும்... அந்த அளவுக்கு லாஜிக்கலா யோசிக்கிற மூளை இருந்தா கம்ப்யூட்டர் கம்பெனியில என்ஜினியரா இல்ல இருந்திருப்பேன். நீங்களே சொல்லிடுங்களேன் அக்கா...” என்றேன்.

“வாய்ப்பே இல்ல... ஜனவரி மாசம் ரெண்டு புக்கையும் வெளியிடுவாங்க... அது வரைக்கும் நீ வெயிட் பண்ணு” என்றார்கள்.

யாருகிட்ட வேலையக் காமிக்கிறாங்க இவங்க ரெண்டு பேரும். கண்டு புடிச்சோமுள்ள... ‘மாதொருபாகன்’ படித்த வாசகர்களுக்குக் “காளி என்ன ஆனான்?” என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காளி தற்கொலை செய்துகொண்டு இறந்தானா? உயிருடன் இருக்கிறானா?

“காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும், “காளி உயிருடன் இருந்தால் என்ன ஆகும்?” என்பது இன்னொரு நாவலாகவும் இரண்டு பகுதிகளாக விரிகிறது. ஆக, மாதொருபாகனின் முதல் பாகத்தை ஒட்டிய இரண்டு முடிவுகளை நோக்கி - இரண்டு வெவ்வேறு நாவல்கள் விரிகின்றன. ஜனவரியை ஒட்டி இந்த இரண்டு நாவல்களும் வெளியாக இருக்கின்றன. (இந்த மாத இந்தியா டுடேவில் (தமிழ்) நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்கவும்.) இதுபோன்ற படைப்பிலக்கிய முயற்சிகள் “மாதொருபாகன்” நாவலுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஒரு முயற்சி உலக இலக்கியங்களில் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். நாம் மேலதிகமாக உரையாடலாம். அது சினிமாவாகக் கூட இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள் நாம் பேசி உரையாடலாம்.

இப்போதைக்கு எனக்குக் கொஞ்சம் போல வேலை இருக்கிறது. இந்த (டிசம்பர்) மாதத்தின் இறுதிக்குள் படிக்கவேண்டிய புத்தகங்கள் சில பாக்கி இருக்கின்றன. அவற்றினை நான் படித்து முடிக்க வேண்டும். அவற்றில் சில:

1. புலியின் நிழலில் – நாம்தேவ் நிம்கடே
2. ஆடு ஜீவிதம் – பென்யாமின்
3. பன்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
4. ஒரு சூத்திரனின் கதை – ஏ. என். சட்டநாதன்
5. விடியலை நோக்கி – பேபி ஹால்தார்
6. லதிஃபே ஹனிம் – இபெக் சாலிஷ்லர்
7. நடந்தாய் வாழி காவேரி – சிட்டி – தி. ஜானகிராமன்
8. என் இளமைக் காலம் – தஸ்லீமா நஸ் ரீன்

Wednesday, September 3, 2014

பத்து புத்தகங்கள்

1. தொல்காப்பியம் (தெளிவுரையுடனும் விளக்க உரையுடனும்)
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
3. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள்முருகன்
4. பஷீரின் படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள்)
5. பெருமாள்முருகனின் நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்)
6. அங்கே இப்போ என்ன நேரம்? – அ. முத்துலிங்கம்
7. மகாபாரத நவீனப் படைப்புகள் (இரண்டாம் இடம், பருவம், சாம்பன்)
8. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா
9. ராஜ் கௌதமனின் புனைவுகள் (தன்வரலாற்று நாவல்கள்)
10. சிறுகதைகள் – திலீப்குமார், ச. தமிழ்ச்செல்வன்
11. வெட்டுப்புலி – தமிழ்மகன்

முன்னால் முதல்வர் கருணாநிதி தொல்காப்பியத்தைப் பற்றி “தொல்காப்பியப் பூங்கா” என்றொரு புத்தகம் எழுதினாராம். முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் அந்தப் புத்தகத்தைப் பற்றி சிங்கப்பூரில் வாழும் தமிழ் ஆர்வலர் ஒருவர், கருணாநிதி எழுதியிருந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிக பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டாராம். புத்தகத்தின் தலைப்பு: “தொல்காப்பியப் பூங்காவில் களையெடுப்பு”. அப்படின்னா கலைஞர் எழுதியிருந்த புத்தகத்தில் எவ்வளவு பிழைகள் இருந்திருக்கும் பாருங்கள்.(பல ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் படித்தது)

தொல்காப்பியம் லேசுப்பட்ட விஷயம் அல்ல என்பதற்கு மேற்சொன்ன விஷயங்கள் உதாரணம். தொல்காப்பியத்தைப் புரட்டுவது சங்க இலக்கியத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும். அது சரி... “சங்க இலக்கியங்களை எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா?”. நல்ல கேள்விதான்.

“கெட்ட வார்த்தை பேசுவோம்” படித்தால், “ஆஹா... இவ்வளோ மேட்டர் இந்த சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று புருவத்தை உயர்த்துவீர்கள்.

தமிழர்கள் அனைவரும், தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் புரட்ட வேண்டிய தெளிவுரைகளைக் கொண்ட தொல்காப்பியப் பதிப்புகள் நிறையவே சந்தைகளில் கிடைக்கின்றன. எழுத்தாளர் சுஜாதா கூட தொல்காப்பியம் சார்ந்து, அவரே எழுதி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறன். கருணாநிதி அவர்களும், சுஜாதா அவர்களும் விரும்பிப் படித்த, எழுதிய புத்தகத்தை நாம் படிக்காமல் விடலாமா?

சங்க இலக்கியத்தைத் தொகுத்ததில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். பெருமாள்முருகனின் “பதிப்புகள் மறுபதிப்புகள்” புத்தகத்தில் இந்த சங்ககாலக் குளறுபடிகள் முதல் தற்காலப் பதிப்புகளில் காணக் கிடைக்கும் குளறுபடிகள் வரை சிலவற்றைச் சுட்டிக்காட்டிக் கடுமையான விமசனங்களை முன் வைத்திருக்கிறார். போகட்டும்... அகராதி எப்போதுமே நம்மிடம் இருப்பது நல்லது. நம் வீடுகளில் தமிழ் அகராதி இருந்தால் தானே – வீட்டிலுள்ளக் குழந்தைகள் தமிழ் மொழியையும் ஆங்கிலம் போலவே ஆர்வத்துடன் அணுகுவார்கள். (தமிழ் தமிழ்னு உருகுற முக்கால் வாசிப் பயலுங்க வீட்டுல அகராதி இருக்குதான்னு கேளுங்க... உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்... அப்படிச் சிலர் என்னைப் பார்த்துச் சிரித்ததுண்டு...)

அடுத்தது, இந்திய எழுத்தாளர்களில் பேப்பூர் சுல்தான் என்று செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் முடிசூடா மன்னன் வைக்கம் முகமது பஷீர். கேணியில் நாடக நடிகர் ரோஹிணி கலந்துகொண்டபோது – அவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “அப்பாவின் மீசை” திரைப்படம் சமந்தமாக ஒருவிஷயத்தைக் கூறினார்:

“என்னோட படத்துல டீன் ஏஜ் பசங்க நடிகிறதால ஸ்கிரிப்ட் பத்தியும், ஸ்க்ரீன் ப்ளே பத்தியும் பசங்களுக்கு ஒரு புரிதல் வரணும்னு - ஒரு வொர்க் ஷாப் கண்டக்ட் பண்ணோம். கதைகளை வாசிச்சிப் புரிஞ்சிக்கிறதும் வொர்க் ஷாப்பின் ஒரு பகுதியாக இருந்தது. அதுக்கு பஷீரின் கதைகளை தான் நாங்க பசங்களுக்குக் கொடுத்து வாசிக்க வச்சோம்.”

சினிமாவுல சூப்பர் ஸ்டாருங்கன்னா, புத்தக வாசிப்புல பேப்பூர் சுல்தான் பஷீர் தான் தன்னிகரில்லாத ஐக்கான். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய படைப்பாளி. எல்லா மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. (தமிழில் குளச்சல் மு யூசுப்பின் மொழிபெயர்ப்பு உகந்தது.)

இதுவரைக்கும் பெருமாள்முருகன் 7 நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது மூன்று நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்) ஆங்கிலத்தில் மொழியாகப் பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருகின்றன. பெருமாள்முருகனைப் பற்றிப் பெருமையுடன் நினைவுகூரவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனினும் அதைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும்? காலம்.... காலம் பெருமாள்முருகனைப் பற்றி நிச்சயம் பேசும்.

ஈழத்து மண் கொடுத்த அற்புதங்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர். சுஜாதாவின் பெருமைகளைப் பாடிக்கொண்டு என்னிடம் வந்து “எதாச்சும் நல்ல புத்தகம்... சுஜாதா எழுதற மாதிரி இருந்தா சொல்லுங்களேன்?” என்பார்கள். முத்துலிங்கத்தின் “அங்கே இப்போ என்ன நேரம்?” கட்டுரைத் தொகுதியைத் தான் பரிந்துரைப்பேன். படித்துவிட்டு “அட்டகாசம் பண்ணி இருக்காருங்க அண்ணா...!” என்பார்கள். அதே அ.முத்துலிங்கத்தின் “வியத்தலும் இலமே” புத்தகத்தைப் பரிந்துரைப்பேன். அதிலுள்ள மேற்கத்திய ஆளுமைகளின் உரையாடலைப் படித்துவிட்டு, “ஹாசம்...! இது கட்டுரையும் இல்ல... உரையாடலும் இல்ல... மனுஷன் பின்னி இருக்குறாரு...!” என்பார்கள்.

“பாருங்க... இத எதுக்கு எங்கிட்டே சொல்றிங்க... முத்துலிங்கத்துடன் இணையத்தில் தொடர்புகொள்ள முடியும்... அவர் கிட்ட நீங்களே மின்னஞ்சலில் சொல்லிடுங்க” என்பேன்.

மகாபாரதம் சார்ந்த பரீச்சார்த்த முயற்சிகள் நிறையவே நடந்திருக்கின்றன. “எஸ்ரா, மகாஸ்வேதா தேவி, எம்.டி வாசுதேவன் நாயர், பைரப்பா” என பலரைப் பட்டியலிடலாம். சமீப காலங்களில் ஜெயமோகன் கூட சூளுரைத்துவிட்டு – ஒரு தவம் போல “வெண்முரசு” என்ற இணைய பாரதத்தை முயற்சித்து வருகிறார். சுமார் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ஏறக்குறைய 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஜெமோவின் வாசகர்களுக்கு நல்ல தீனிதான். முதல் தொகுதி அச்சுப் புத்தகமாகவும் வந்துவிட்டது. மற்ற தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு வந்துசேரும் என்பதில் சந்தேகமில்லை. (மொத்தத் தொகுதியும் அச்சுக்கு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானிருக்கிறேன். விஷ்ணுபுரம் மாதிரி பேஜாரா இல்லாமல் இருந்தால் சரிதான்.) விகடனில் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் சில பாரதக் கதை சமந்தப்பட்ட புத்தகங்களும் கிடைக்கின்றன. அவையெல்லாம் கூட சுவாரஸ்யமான புத்தகங்கள்.

அதென்னமோ தெரியவில்லை...! புனத்தில் குஞ்சப்துல்லாவின் “மீஸான் கற்கள்” என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் நாவல்களில் ஒன்று. இந்நாவலின் முதல் நூறு பக்கங்களில் தான் எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து சேர்கிறார்கள். நாவல் முடியும் தருவாயில் இது ஒட்டுமொத்த சமூகத்தின் கதையாக இருக்கிறது. பாத்திரமாக நாவலில் இடம்பெறும் எல்லோரது கதையாகவும் இருக்கிறது. அதுவே இந்நாவலின் பலம். இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளில் இந்நாவலும் நிச்சயம் ஒன்றாக இருக்கும். மலையாள மொழியில் இதுவரைக்கும் 35-க்கும் மேற்பட்ட முறைகள் மறுவெளியீடு கண்ட புதினம் இது. புனத்தில் குஞ்சப்துல்லாவின் ஒரு தீவிர ரசிகர் – இந்நாவல் ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சாகி வெளிவரும்போதும் – புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கித் தன்னுடைய சேகரிப்பில் வைத்துக் கொள்கிறாராம். அந்த வகையில் ஒரே புத்தகத்தின் 35 பிரதிகள் ஒரு வாசகரின் சேகரிப்பில் இருக்கிறது. குஞ்சப்துல்லா கூட இதனைச் செய்திருக்க மாட்டார். ஒரு படைப்பாளிக்கு இதனினும் பெரிய மரியாதை என்ன வேண்டும்? எனினும், “மீஸான் கற்கள்” – மத்திய சாகித்ய அகாடமி மற்றும் மாநில (கேரள) சாகித்ய அகாடமி ஆகிய இரண்டு விருதுகளையும் ஒருங்கே பெற்றுள்ள நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேராசிரியரான ராஜ் கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை” ஆகிய நாவல்களை இளங்கலை கல்லூரி படித்த சமயத்தில் உருகி உருகிப் படித்ததுண்டு. இவரது “லண்டனிலிருந்து சிலுவைராஜ்” ஹாஸ்யத் தன்மையில் எழுதப்பட்ட அருமையான பயண நூல். அயோத்திதாசர் பற்றிய ஆய்வு நூல், தலித்திய விமர்சனக் கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர். இவரது தன்வரலாற்று நாவல்கள் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. கேணிக்கு இவர் வந்திருந்தபோது பேச்சுவாக்கில் ஒரு கேள்வியைக் கேட்டேன்:

“உங்கள ரொம்ப ரிசர்வ்டு டைப்னு எல்லோரும் சொல்றாங்களே...! நீங்க வாசகர்களை அடிக்கடி சந்திக்கலாமே...!”

“ஏங்க... இப்போ உங்கக்கிட்ட ரிசர்வுடாவா பேசிட்டு இருக்குறேன்... அப்படி உங்களுக்குத் தோணுதா என்ன?” என்றார்.

“இல்லியே... நல்லாதானே பேசுறீங்க? அப்ப ஏன் அப்படி சொல்றாங்க...?” என்று கேட்டேன்.

“மொதல்ல தமிழ்ல வாசிக்கிறங்க கொறைவு... அதுலயும் என்னோட புத்தகங்கள வாசிக்கிரங்க ரொம்பக் கொறைவு... நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல... அதனால நான் பேச மாட்டேன்னு நெனைகிறாங்க... ஆளுங்க கெடச்சா நல்லா பேசுறதுதான்...” என்றார்.

ராஜ்கௌதமனின் “நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல...” என்ற வார்த்தைகள் நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று. தலித் சமூகத்தில் மெத்தப் படித்தவன் எதிர்கொள்ளும் சமூக நெருக்குதல்களை இவரது தன்வரலாற்றுப் புதினங்கள் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) முன்வைக்கின்றன. இப்புத்தகன்களைப் படிப்பதற்குக் கொஞ்சம் பொறுமை வேண்டும். பொறுமையுடன் வாசித்தால் நல்லதொரு வாசிப்பனுபவம் நமக்குக் கிடைக்கும். எழுத்தாளர் பாமா அவர்களின் மூத்த சகோதரர் தான் “ராஜ் கெளதமன்” என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. தமிழினி பதிப்பகம் தான் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்பொழுது அவுட் ஆப் பிரிண்ட். ஒருவேளை நூலகங்களில் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.

சிறுகதை என்று வரும்பொழுது கு.ப.ரா துவங்கி அசோகமித்திரன் வரையிலும் நிறைய எழுத்தாளர்களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்களில் பலரும் பல நூறுக் கதைகள் எழுதியவர்கள். ஆனால், மிகக் குறைந்த கதைகள் எழுதிய திலீப் குமார் மற்றும் ச. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தான் என்னுடைய மனதிற்கு உகந்த படைப்பாளிகள். (சக மனிதர்களாக இவர்கள் இருவரையும் உன்னதமான மனிதப் பிறவிகள் என்றும் கூடச் சொல்லுவேன். இதில், ச. தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகக்காரர் முருகபூபதி ஆகியோரின் சகோதரர்.) இருவருமே அவசியம் வாசிக்க வேண்டியவர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு ரூல்சுன்னு போட்டாக்கா... அதனை முதலில் மீறுவது நானாகத் தான் இருக்கும். ஆகவேதான் தமிழ்மகனின் “வெட்டுப்புலி” நாவலை 11 படைப்பாக வரிசைப் படுத்தியிருக்கிறேன். சுவாரஸ்யமான விறுவிறுப்பான நாவல் இது. தமிழ்மகனுக்கான அடையாளத்தையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்த நாவல். இந்நாவல் குறிப்பிடத்தக்க சில விருதுகளைப் பெற்றுள்ளது.

எந்த யோசனையும் இன்றி லிஸ்ட் போட்டதில் இந்தப் புத்தகங்கள் தான் நினைவிற்கு வந்தன. மேலதிகமாக ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு – மேற்படி அந்த எழுத்தாளரை சந்திக்க யோசித்ததே இல்லை. சந்திக்கக் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் மெனக்கெட்டதில்லை. ஒருவர் மட்டும் இதில் விதிவிலக்கு... அந்த ஆஜானுபாகுவானவர் வேறு யாரும் அல்ல - பா. ராகவன்.

அரசு கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த பொழுது இலக்கியபீடம் இதழில் “அலகிலா விளையாட்டு” நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்த காலங்கள். இந்நாவலுடன் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பு. இந்த நாவலுக்காகவே இலக்கிய பீடம் இதழுக்ககக் காத்திருந்த நாட்கள் அவை. “இத எழுதன ஆள ஒரு நாள் நேருல பாத்துடனும்” என்று நினைத்துக்கொண்டேன். அதன்படி கிழக்கு அலுவலகத்தில் பாரா-வைப் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

“இதுவரைக்கும் நான் யாரையும் பாக்கனும்னு ஆசப் பட்டது இல்ல... ஆனா... உங்கள ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சிட்டு இருந்தேன்...! நீங்க பல்லு போனக் கெழவனா இருப்பீங்கன்னு நெனைச்சேன். ஆனா இப்படி இருப்பீங்கன்னு எதிர்பாக்கல...” என்றேன்.

“அது சரி...” என்று சிரித்தார்.

பாராவுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, “இங்கப் பாருடா கிபி... தூரத்துல இருந்து பார்த்தா மணக்கும்... கிட்டக்க வந்துப் பார்த்தா எல்லாம் நாத்தம் தான். கிட்டவந்து மோந்துப் பாரு வேர்வ நாத்தம் அடிக்கும்... சரி போகட்டும்... நீ திஜாவோட ‘அம்மா வந்தாள்’ படிச்சிட்டியா? என்னோட நாவல விட நல்ல நாவல் அது... படிச்சிப் பாரு...” என்றார்.

அவரைப்பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினேன். “அம்மா வந்தாள்” – படித்ததுண்டு. எனினும், பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது “அலகிலா விளையாட்டு” ஏதோ ஒருவிதத்தில் என்னுடன் பின்னிப் பிணைத்த படைப்பு. மதி நிலையத்தில் தற்போது வாங்கக் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

குறிப்பு 1 : இணையத்தில் நண்பர்கள் ஏதோ புத்தகம் சார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொடர் விளையாட்டுப் போல. மனதிற்கு நெருங்கியவர்கள் கை நீட்டி விஷத்தை அருந்தச் சொல்லிக் கேட்டால் கூட – நந்தா பட சூர்யா போலக் கேள்விகளற்று அருந்தக் கூடியவர்கள் நாம். விளையாடத் தானே அழைக்கிறார்கள். ஆகவே, சில புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். என்னுடைய விருப்பப் பட்டியல் மிக நீண்டது. அவரவர் வாசிப்புத் தளம் பொறுத்து, புத்தகத் தேர்வு மாறுபடும். உங்கள் விருப்பம் உங்கள் கையில். உங்களுடைய மனதிற்குப் பிடித்த புத்தகங்களை வாசித்து மகிழுங்கள்.

குறிப்பு 2 : இப்புத்தகங்கள் யாவும் “மாணிக்கவாசகர், மீனாட்சி, க்ரியா, காலச்சுவடு, தமிழினி, சாகித்ய அகாடமி, பாரதி புத்தகாலயம், உயிர்மை, மதி நிலையம்” போன்ற பதிப்பகங்களில் கிடைக்கும்.

Sunday, June 22, 2014

சினிமா சிறுகதைகள்

1. ஸ்டுடியோ கதை – கு. ப. ரா
2. நடிகை மகள் – பிரமிள்
3. டூப் – விட்டால் ராவ்
4. பாக்ஸ் ஆபீஸ் – பாலு சத்யா
5. கதாநாயகி குளித்த கதை – பிரபஞ்சன்
6. குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன்
7. நடிகன் – ஜி. நாகராஜன்
8. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் – பாஸ்கர் சக்தி
9. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் – சந்திரா
10. கதை – செழியன்
11. நீலப்படமும் சுசித்திராவும் – சுப்ரபாரதி மணியன்
12. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி – நா. பார்த்தசாரதி
13. ஊமைக்காயம் – நா. பார்த்தசாரதி
14. உள்ளூர் ஹீரோ – வல்லிக்கண்ணன்

அசோகமித்ரனின் புலிக்கலைஞன் எல்லோராலும் சிலாகிக்கப்படும் படைப்பு. ஆகவே அந்தச் சிறுகதையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. பொது நூலகதிலும், என்னுடைய புத்தக சேகரிப்பிலுமுள்ள சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளை ஒரு யூகத்தின் அடிப்படையில் மேலோட்டமாக நோட்டம்விட்டு, அவற்றிலிருந்து இந்தக் கதைகளைக் கண்டெடுக்க நேர்ந்தது. இன்னும்கூட மெனக்கெட்டால், கைநிறைய சினிமாச் சிறுகதைகள் கிடைக்குமென்றே தோண்றுகிறது.

நா. பார்த்தசாரதியின் கதைகளுடன் ஒப்பிடுகையில் பிரமிளின் கதை தரமானது. பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கதைகள் உதவி இயக்குனர்களின் வாழ்வியலைச் சித்தரித்தாலும் – விட்டல்ராவின் “டூப்” ஸ்டான்ட் நடிகன் ஒருவனைப் பற்றிய கதை. துணை நடிகையின் ஒருநாள் நெருக்குதல் வாழ்வைச் சித்தரிப்பது பாலுசத்யாவின் “பாக்ஸ் ஆபீஸ்”. ஆபாச நடிகை, தனது மகளை பள்ளியொன்றில் சேர்க்கச் செல்லும் தருணத்தை அடிப்படையாகக் கொண்டது பிரமிளின் “நடிகையின் மகள்”. குணச்சித்திர நடிகன் இறந்த பிறகு, அந்த நடிகனிடம் உதவியாளராக இருந்த ஒருவனின் சிக்கல்கலைச் சித்தரிக்கிறது வண்ணநிலவனின் சிறுகதை. கு.ப.ரா, பிரபஞ்சன் போன்றோரது கதைகள் சினிமா ஷூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்நுட்பம் சார்ந்து திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மிகச் சிறியது. சந்திரா பெண் இயக்குனராக அமீரிடம் வேலை செய்தவர். ஆகவே, பெண் உதவி இயக்குனரின் சிக்கலை, ஷூட்டிங் சார்ந்து அவரது சிறுகதையில் பதிவு செய்திருப்பார். முன்னால் முதல்வரும், திமுக பெருந்தலைவருமான, மூதறிஞர் கருணாநிதியின் சிறுகதைகளில் ஒன்று சினிமா பற்றியது. முற்போக்கு திரைப்படத்தையும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தின் ரீலை வெட்டி எரிவதையும் பற்றிய நகைச்சுவைக் கதை. சிறுகதையின் தலைப்பு “புரட்சிக் படம்”

நவீன படைப்பிலக்கியத்தில் சினிமா சார்ந்த பதிவுகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாமே என்று தோன்றியது. அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” பலராலும் கொண்டாடப்படக் கூடிய படைப்பு. “மானசரோவர், தண்ணீர், புலிக்கலைஞன்” போன்ற அவரது பிற படைப்புகளிலும் சினிமா உலகம் பதிவாகியிருக்கிறது.

மானசரோவர் – முழுக்க முழுக்க ஒரு உச்ச நடிகனையும், அவனுடைய திரையுலக வீழ்ச்சியையும் ஒட்டியதொரு வாழ்க்கைச் சித்திரம். சுஜாதாவின் “கனவுத் தொழிற்சாலை”, ஜெயமோகனின் “கன்னியாகுமரி”, ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”, தமிழ்மகனின் “ஏவிஎம் ஸ்டுடியோ – ஏழாவது தளம்” போன்ற படைப்புகளும் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த வாழ்வைத் தான் முன்வைக்கின்றன. அரந்தை நாராயணன் கூட இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறாராம். பத்திரிகையாளர் ஞாநி, அந்தக் குறுநாவல்களை தொலைக்காட்சிக்காகத் தொடராக எடுத்திருப்பதாக கேணி வாசகர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் சினிமா எடுக்க ஆசைப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை பதிவாகியிருக்கும். சமீபத்தில் வெளியீடு கண்ட வெல்லிங்டன் நாவலின் பிற்பகுதியில் சினிமா கம்பெனியில் ஆர்ட் டைரக்ஷன் (கலை இயக்கம்) துறையில் வேலை செய்யும் ஒருவன் - சினிமா தயாரிப்புக் கம்பெனியை இழுத்து மூடப்படுவதால் – வேறு வேலைக்குச் சென்று பிழைக்கும் ஒரு சிறுபகுதி பதிவாகியிருக்கும். குடைந்துகொண்டே சென்றால் இன்னும் கூட சில நாவல்களை இதுபோலக் கண்டடையலாம். மேல்தட்டு மக்களின் காஸ்மோபோலிடன் வாழ்வைச் சித்தரிக்கும் “என் பெயர் ராமசேஷன்” நாவலிலும் ஒரு நடிகையைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் போல பதிவாகியிருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். “ரணம் சுகம்” என்ற மியூசிக்கல் நாவலை இலக்கிய அளவீடுகளில் கறாராக ஒப்பிட்டுப் பேச இயலாது. இந்நாவலில் சினிமா ஒலிச்சேர்ப்பு தொழில்நுட்பக் கலைஞன் ஒருவனது வாழ்க்கை டயரிக் குறிப்பு போலப் பதிவாகியிருக்கும்.

நாவலில் சினிமா சார்ந்த பதிவுகள் எனில் இத்தனை படைப்பாக்க முயற்சிகளைப் பற்றி நம்மால் பேச முடிகிறது. சிறுகதையில் சினிமா சார்ந்த பதிவுகள் என்று வரும்பொழுது அசோகமித்ரனின் “புலிக் கலைஞன்” மட்டுமே சிலாகித்துப் பேசப்படுகிறது. நடிகர், இயக்குனர் ரோகினி – “அசோகமித்ரனின் சினிமா சார்ந்த படைப்புகளில் - நடிகைகள் பற்றிய சித்தரிப்புகளைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். “சினிமா துறையில் நல்ல நடிகைகளே இல்லையா?” என்ற நுட்பமான கேள்வியை ரோஹிணி முன் வைத்தார். எல்லாத் துறைகளிலும் “நல்ல X கெட்ட” என்ற பாகுபாடு இருக்கும்பொழுது, “சினிமா நடிகைகளில் – பல சிக்கல்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் நடிகைகள் இல்லையா?” என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

ரோஹினியின் இந்த வருத்தத்தை நம்முடைய மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆடல் பாடல் போன்ற விஷயங்களில் தாசிகள் தான் துவக்கத்தில் ஈடுபட்டார்கள். குடும்பத்துப் பெண்கள் நடனம், இசை போன்ற துறைகளிலிருந்து சற்று விலகியே இருந்தனர். கோவில் திருவிழாக்களே ஆதிகாலத்தில் கொண்டாட்டங்களின் களமாக இருந்தது. அங்கெல்லாம் தாசிகள் தான் பங்கெடுத்தனர். நடனத்தில் வரும் காம அசைவுகளைச் “சிருங்காரம்” என்று தானே குறிப்பிடுகிறார்கள். இந்த மரபின் கண்கொண்டு நவயுக டிஜிட்டல் சினிமா நடிகைகளைப் பார்ப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. அதனால்தான் நடிகரையோ! நடிகையையோ! – ஊருக்கு நேந்து விட்டவர்களைப் போல நாம் பார்க்கிறோம். தாசிகள் பட்ட அவலம் சொல்லி மாளாதது. தாசிகள் முறையை ஒழிக்க, முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலக்ஷ்மி ரெட்டி கடுமையாகப் போராடியாது இன்றுவரையிலும் – நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பாடகிகளையும், நடனக் கலைஞர்களையும் – தேவதாசிகளைப் போலப் பார்க்கும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துவிட்டோம். ஆனால், நடிகைகளைச் சமூகம் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் மிகக் கேவலமான ஒன்று. ஜனரஞ்சக இதழ்களும், புலனாய்வு வாரப் பத்திரிகைகளும் “நடிகையின் கதை”, “சினிமாக் கூத்து” போன்ற தலைப்புகளில் நிறையவே எழுதுகிறார்கள். கிசுகிசு பாணியில், ஆழ்மான இச்சைகளைச் சுரண்டி விடும் போலியான எழுத்துகள் இவையாவும்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு புத்தக வெளியீட்டில் பேசும்பொழுது “நடிகை” என்ற சிறுகதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒருவனது இரண்டு மனைவியர்களின் குணநலன்களைப் பற்றிய கதை. அதில், இரண்டாவது மனைவி திரைப்பட நடிகை. மறுபடியும் படத்தில் வரும் ரோஹினியின் அடாவடித் தனமான குணாம்சங்களை முதல் மனைவிக்கும், ரேவதியின் பெருந்தன்மையான குணாம்சங்களை நடிகையின் பாத்திரத்திற்கும் பொருத்தியது போன்ற கதை.

நடிகையை ஒருவன் அணைத்துக்கொண்டு வாழ்கிறான். அவனுடைய முதல் மனைவிக்கு இது தெரிந்து சண்டை போடுகிறாள். “சம்பாறிக்கறது எல்லாத்தையும் கொண்டுட்டு போயி அந்த நடிகை கிட்ட கொட்டுறையே? உங்கிட்ட வாழ்ந்து நான் என்னத்த கண்டேன். ஒரு சொத்து உண்டா? சொகம் உண்டா?” என்று கட்டிய கணவனை டார்ச்சர் செய்கிறாள். அவன் அப்படியொன்றும் பிரம்மாதமாக சம்பாதித்து விடவில்லை என்பது முதல் மனைவிக்கு நன்றாகவே தெரியும். நடிகையின் வீட்டிற்கு நேரில் சென்று சண்டையிடுகிறாள். “என் புருஷன மயக்கிட்டையே! நீ நல்லா இருப்பியா? நாசமாப் போக” என்பது போல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறாள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு அழுகிறாள் அந்த நடிகை.

“இதுவும் கூட ஆக்டிங்” என்பதாகத் தான் நாம் நினைப்போம். ஏனெனில் அவள் நடிகையாயிற்றே. இப்படியே சண்டையிட்டு, முடிந்தமட்டும் பணத்தைப் பிடுங்குகிறாள் முதல் மனைவி. தனது கணவனால் தம்பிடிக்கு லாபல் இல்லை. நடிகையால் தான் எல்லாம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்தே இதையெல்லாம் செய்கிறாள் முதல் மனைவி.

சிறுகதையின் தலைப்பு “நடிகை”. வாசகர்கள் தான் அனுமானிக்க வேண்டும் இரண்டு பேரில் யார் “நடிகை” என்று? தனது கணவனை முன்னிறுத்தி, இன்னொருத்தியை ஏமாற்றுபவள் நடிகையா? அல்லது திரையில் தோன்றி ஆக்டிங் கொடுப்பவள் நடிகையா?

திரைத்துறையைச் சார்ந்த, அல்லது நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய உளபூர்வமான நிகழ்வுகளை அணுகும் சில நல்ல கதைகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு, மேலுள்ள பட்டியலிலிருந்தே சில உதாரணக் கதைகளை நம்மால் காட்ட இயலும்.

‘ஸ்டுடியோ கதை’ - கு. ப. ரா: கதையின் மையப்பாத்திரமான ஸீதா - எம்.ஏ பாஸ் செய்தவள். படித்தவர்களும் பண்பானவர்களும் திரைத்துரைக்கு வந்தால் தான், அதிலுள்ள புரையோடிப்போயுள்ள பெண் அடக்குமுறைகள் ஒழியும் என்பதில் நம்பிக்கை கொண்டவள். அப்படி நடந்தால் பிற நடிகைகளுக்கும் மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாள். டைரக்டர் கிருஷ்ணன் – பெயருக்கு ஏற்றார்போல லீலை செய்பவன். போலவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தை உஷா தியேட்டர்ஸ் தயாரிக்க, கிருஷ்ணன் இயக்குகிறான். படத்திற்கான புதுமுக நடிகையைத் தேடும் பொழுது ஸீதா அகப்படுகிறாள். ஆதிகாலத்தில் ரவிக்கை ஏது? ஆகவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தில் ஜாக்கட் இல்லாமல் மேலாக்கில் புடவையைச் சுற்றி ஒட்டியாணம் போட்ட மேக்கப் அவளுக்கு.

“பொடவைய மாராக்குல ரொம்ப டைட்டா சுத்திட்டு இருக்க நீ! அதக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கோ!” என்று அங்கேஇங்கே கையை வைக்க முயல்கிறான் டைரக்டர்.

“எதுன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க. நான் கரெக்ட் பண்ணிக்கிறேன். டச் பண்ணாதிங்க. மேலும், இது பார்வதி கதாப்பாத்திரம். அதுக்கு இந்த மாதிரி இருக்கறது தான் சரியாக இருக்கும்.” என்பதுபோல சீறுகிறாள் நடிகை ஸீதா.

“எனக்கு நீ டைரக்ஷன் சொல்லிக் கொடுக்குறியா?” என்று சொல்லி, ஒட்டியானத்தை லூஸ் செய்து மாராக்கைத் தளரவிடச் சொல்கிறான் டைரக்டர். ஓரளவிற்கு மேல் பொருக்க முடியாமல், ஒட்டியானத்தை முழுவதுமாகக் கழட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் நடிகை. டைரக்டர் அவளிடம் சென்று பேச முயல்கிறான். அப்பொழுது ஒட்டியானத்தை டைரக்டரின் முகத்தில் வீசி எறிகிறாள் புதுமுக நடிகை. டைரக்டர் கிருஷ்ணனின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறாள் அவள். ஸ்டுடியோவின் வாசலை நோக்கி அவள் செல்கையில்:

“ஸ்டுடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று டைரக்டரின் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி இயக்குனர் கேள்வி எழுப்புவதாகக் கதை முடியும்.

‘டூப்’ - விட்டல்ராவ் – கிருஷ்ணராஜ் என்ற உச்ச நடிகனுடைய சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறான் காசி. ஓர் அபாயகரமான காட்சியில் நடித்தபோது காசிக்கு விபத்து நேர்கிறது. மயங்கிய நிலையில் அவனை ஆஸ்பிட்டலில் சேர்ப்பிக்கிறார்கள். அவனது இடதுகால் நீக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதையும் உச்ச நடிகன் கிருஷ்ணராஜே ஏற்கிறான்.

கிருஷ்ணராஜ் தெலுங்கு நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டவன். நீண்டகாலம் கழித்துதான் இந்த விஷயமே காசிக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணராஜூக்கு வேறொரு குடும்பமும் இருக்கிறது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காசி, கிருஷ்ணராஜின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான். டூப் போடவேண்டிய அவசியமில்லாத, வெளியூர் ஷூட்டிங்கிற்கு கிருஷ்ணராஜ் செல்லும்பொழுதும் நடிகையின் வீட்டிலேயே காசி இருக்கிறான். நடிகைக்கும் காசிக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த விஷயம் கிருஷ்ணராஜூக்குத் தெரிந்து சந்தேகப்படுகிறான். அதன் பிறகுதான் டூப் போடும் காசிக்கு ஷூட்டிங்கின் போது விபத்து நேர்கிறது.

திவ்யாவின் தனிமைக்குக் காசி வடிகாலாக இருப்பதும், ஷூட்டிங்கில் காசிக்கு விபத்து நேர்வதையும் இழையாகக் கொண்ட ஐந்து பக்கச் சிறுகதை. கொஞ்சம் அசந்திருந்தாலும் கிளுகிளுபுக் கதையாக மாறியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. ஆனால், விட்டல்ராவ் மனித மனங்களின் முரண்களை அருமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தி இருப்பார்.

பாக்ஸ் ஆபீஸ் - பாலு சத்யா: நல்லதொரு மழைநாளில் துணை நடிகை மீனா ஷூட்டிங்கில் பங்கேற்கப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து போரூருக்குச் செல்லப் பேருந்தைப் பிடித்து, ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்குக் கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேருகிறாள். (கிண்டியில் இறங்கி போரூருக்குச் சென்றிருக்கலாமே! எதற்காகக் கோடம்பாக்கம் செல்லவேண்டும் என்ற சந்தேகம் சிறுகதையை வாசித்தபோது எழுந்தது. எனினும் நல்ல சிறுகதை.)

“வாம்மா மகாராணி... ஆச்சர்யமா இருக்குதே! ஹீரோயின் வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட போல இருக்குதே?” என்று தாமதமாக வந்த அவளை நோக்கி ஏளனக் கேள்விகள் பறக்கிறது. சிலர் அவளை உரசப் பார்கிறார்கள். தெரிந்த பெண்மணி உடல்நலம் விசாரிக்கிறாள். அன்றைய தினம் ஒரு பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து அழக் கூடியவர்களில் இந்தத் துணை நடிகையும் ஒருத்தி. ஹீரோயின் கதறியழ வேண்டிய சூட்டுக்குப் பல டேக்குகள் வாங்குகிறாள். மறுபடியும், மறுபடியும் காட்சியைப் படமாக்குகிறார்கள். இடையில் மீனாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடிச் சென்று தொலைபேசியில் அழைத்தவர்களிடம் பேசுகிறாள். நைட் ஷிப்டிற்குச் சென்றிருந்த அவளுடைய புருஷன் ஐயப்பனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கிறது.

“உன் புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சி. ரொம்ப சீரியஸ். உடனே வா...” என்கிறார்கள்.

“இங்க பாதியில விட்டுட்டு வர முடியாது. சாயந்திரம் வந்திறேன்” என்று தொலைபேசியைத் துண்டிக்கிறாள் என்பதாகக் கதை முடியும். துணை நடிகையின் சிக்கல் மிகுந்த பணிச்சூழலை, தன்மையான முறையில் முன்வைக்கும் கதை. ரசிக்கும் படியாக பாலுசத்யா எழுதியிருப்பார்.

நடிகை மகள் – பிரமிள்: “ஏ” படங்களில் நடிக்கக் கூடிய புகழ்பெற்ற நடிகை, தனது மகளை நான்காம் வகுப்பில் சேர்க்க ஒரு பள்ளிக்கு அழைத்து வருகிறாள். போஸ்டர்களில் மட்டுமே இதுவரை அந்த நடிகையைப் பார்த்த ஆசிரியையின் மனவோட்டத்தைப் பிரமிள் இக்கதையில் சொல்லியிருப்பார். பிரமிளின் மொத்தத் தொகுப்பில் ஜனரஞ்சகக் கதையாகத் தன் “நடிகையின் மகள்” சிறுகதையை வைத்திருக்கிறார்கள். ஆபாச நடிகையை மோசமாகவெல்லாம் இக்கதையில் சித்தரிக்கவில்லை. எல்லோரைப் போலவும் ஆபாச நடிகையும் சமூகத்தில் ஓர் உறுப்பினர்தான். அவளது மகளை – குழந்தையின் விருப்பப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் உரிமை அந்த நடிகைக்கு இருக்கிறது. நடிகையோ, ஆபாச நடிகையோ – திரைத்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக்கு இக்கதையும் ஓர் உதாரணம்.

ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் அவரவர் வாசகத் தளத்தில், அவரவர் தன்மையில் இக்கதைகளை அணுகி, அது சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்” போலவே நம்மிடம் நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அக்கதைகளைப் பற்றிப் பேசவும் நாம் முன் வர வேண்டும். உதிரிக் கதைகளாக இருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் பற்றிய சந்தேகமும் உடனே எழுகிறது.

“சினிமா சார்ந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தால் என்ன?” என்ற யோசனையும் அடிமனதில் எழுகிறது. (வேறு யாரேனும் செய்வதற்கு முன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.) அடிப்படையில் நானொரு சோம்பேறி. அதனையும் மீறி இந்த யோசனை சாத்தியமானால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று!.

“சினிமா நடிகைகளைப் பற்றி, நல்ல விதமாகச் சித்தரித்த ஒன்றிரண்டு படைப்புகளை இன்றைய கேணி சந்திப்பில் யாரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வேன்...” என்று ரோஹிணி ஆதங்கத்துடன் பேச்சினை நிறைவு செய்தபோது, “அரந்தை நாராயணன்” எழுதிய குறுநாவல்களை உடனே ஞாநி பகிர்ந்துகொண்டார்.

குங்குமம் தோழி இதழுக்காக நண்பரும், எழுத்தாளருமான பாலுசத்யா – நடிகை ரோஹினியின் பேச்சைப் பதிவு செய்ய - எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்து நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார். பாலுசத்யாவின் எல்லா சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு அதிலுள்ள ஒருசில கதைகளைப் பற்றி பாலுவுடன் நிறையவே பேசியதுண்டு. எனினும், எனினும் அன்றைய தினம் பாலுவின் “பாக்ஸ் ஆபீஸ்” எனக்கு ஞாபகம் வராமல் போனதேன்?

“ரசிகர்களின் (பார்வையாளர்களின்) மறதி கலைஞர்களின் சாபம்” என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நம்மால் சபிக்கப்பட்ட ஏராளமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு. எளிய மனிதர்களால் இலக்கிய சங்கம விழாவையா எடுக்க முடியும்.! மீள் வாசிப்பின் மூலம், கடலின் மடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் முத்துக்களை எடுப்பதுபோல – மீள் வாசிப்பில் கவனமற்றுக் கிடக்கும் இதுபோன்ற கதைகளுக்கு கவனம் கொடுப்போமே. முயற்சி செய்யுங்கள்...! உங்களால் நிச்சயம் முடியும்.

குறிப்பு: நண்பர்களுக்குத் தெரிந்து, வேறு ஏதேனும் சினிமா சார்ந்த சிறுகதை ஆக்கங்கள் இருப்பின் கமென்ட் செய்யுங்கள். அவற்றையும் பதிவின் பட்டியலில் இணைத்து விடுகிறேன். நாவல்களாக இருப்பினும் தெரியப்படுத்துங்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதிய “சிவா – சினிமா – விசு – ஃபோட்டோ”, புரட்சிக் கலைஞர் மூதறிஞர் கருணாநிதியின் “புரட்சிப் படம்” போன்ற க்ளிஷியே கதைகளாக இருப்பினும் தெரியப்படுத்தலாம். அவற்றையெல்லாம் வாசித்துவிட்டுத் தனியாக ஒரு பதிவினைக் கூட எழுதலாம்.

நன்றி.

Friday, June 20, 2014

நான் வயதுக்கு வந்தபோது

“அரச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே...” – எனச் சின்னத்தம்பி பிரபு போல முகத்தில் சந்தானம் பூசிக்கொண்டு, வெகுளித்தனமாகக் கல்லூரிகளில் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு திரிந்தபோது போது அம்பையைப் பொதுநூலகத்தில் வாசித்தது. கல்லூரி வயதிற்கே உரிய ஆர்வத்தில் சிறுகதையின் சில பகுதிகளை ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்ததுண்டு. நாள்பட நாள்படத் தான் ஒருசில விஷயங்களின் உண்மைத் தன்மை புரிகிறது. காலயந்திரம் நம்மை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து வேறொரு தளத்தில் நிருத்தி இருப்பதையும் உணர முடிகிறது.


எழுத்தாளர் அம்பையுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கையில் அவரது மூன்று கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதையைத் தான் பெரும்பாலும் வாசகர்கள் குறிப்பிட்டுப் பேசுவார்கள். சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்ததாலோ என்னவோ அக்கதை பரவலாகப் பேசப்படுகிறது. அந்தக் கதையும் கூட முக்கியமானக் கதைதான். எனினும், என்னுடைய நினைவின் அடுக்குகளில் “வெளிப்பாடு, புனர், சில மரணங்கள்” ஆகிய மூன்று கதைகள் தான் மேகத்தின் பின் ஒளிரும் மின்னலென மின்னி மறைகிறது. நேற்றைய தினம், பெருமாள் முருகனும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மின்னஞ்சல் செய்திருந்தார். அந்தப் பட்டியலிலிருந்த முதல் பெயர் அம்பை தான்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அம்பையின் 11 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். (காலச்சுவடு அம்பையின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.)

“வெளிப்பாடு” – தாமிரவருணி கரையோரத்திலுள்ள ஊருக்குப் பெண்களைப் பற்றி ரிப்போர்ட் எடுப்பதற்காக ஒருத்தி வருகிறாள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் இரண்டு பெண்களுடனான உரையாடலால் நகரும் கதை. அம்பையின் சிறுகதைகளில் மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் குளிப்பதும், உடைமாற்றிக் கொள்வதும் குளத்திலும், ஆற்றிலும் குளிப்பவர்களுக்கு இயல்பான ஒன்று. புதிதாக வருபவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையே!. ஆற்றில் குளிக்குமாறு உடன் அழைத்து வந்தவன் சொல்கிறான்.

“ஐயோ! எனக்கு அங்கெல்லாம் குளிக்க வராது.”

“அய்ய! ஒண்ணுமில்லிங்க எத்தன பேரு குளிக்கிறாங்க பாருங்க.”

மார்பில் பாதித்துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும் ஈரத் தொடைகளும். ஈர முடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்ட பின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் போடவும். (பக்கம்: 2)

“தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது.” - அவளொரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதா புடவையின் முந்தானையை வாயில் கவ்வியபடி உள்ளாடை மாற்றும் சிறு காட்சியை எப்பொழுதாவது தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், எனக்கு அம்பையின் இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ரிப்போர்ட் எடுக்க வந்தவள் பொதுவில் குளிக்க முடியாது என்று சொல்லவும், ஒரு வீட்டின் சமையலறை மூலையில் ரிப்போர்ட் எடுக்க வந்தவள் குளிக்க நேர்கிறது. குளித்து முடித்து உடைமாற்றிக்கொள்ள சங்கடப்படுகிறாள். இனி அந்தப் பெண்ணின் குரலில் அம்பை:

“உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.”

தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு... சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா.” சிரித்தள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

இதுபோன்ற சின்னச் சின்ன நுட்பங்கள் அம்பையின் இச்சிறுகதையில் வெளிப்பட்டிருக்கும். கிராமத்துப் பெண்களின் மீதான ஆணாதிக்க வெளிப்பாடு, கிராமத்துப் பெண்களுடைய உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு, நகரத்து நாகரீகப் பெண்ணின் கூச்ச வெளிப்பாடு, கிராமக் கலாச்சார விருந்தோம்பலின் நெகிழவைக்கும் வெளிப்பாடு என பலநிலைகளில் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஓரிடத்தில “தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள்” என்ற ஒற்றை வரியில் அம்பை கடந்து சென்றிருப்பார்.

தாமிரபரணி கிராமத்துப் பெண்கள் பொதுவன நீர்நிலையில் குளிப்பவர்கள். அவர்கள், மாதவிடாய் சமயத்தில் இயல்பு வாழ்க்கையின் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவற்றையே இந்த ஒற்றை வரியில் கடந்து செல்கிறார் அம்பை. மாதவிடாய் சார்ந்த பதிவுகளை சமீபத்தில் மூன்று நாவல்களிலும், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையிலும் படிக்க நேர்ந்தது. அவற்றைக் கிளறி விட்டன அம்பையின் வரிகள்.


முதலில் “மாதொருபாகன்” பற்றிப் பேச வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளான ‘காளி – பொன்னா’ ஆகியோரின் மன உளைச்சலையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் ‘அஜால்குஜால்’ திருவிழாவைப் பற்றியும் ஒருசேர முன்வைக்கும் பதிவு இந்நாவல். கூவாகம் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சார்ந்தது எனில், ‘மாதொருபாகன்’ இரவுநேரத் திருவிழா – திருமணமாகிப் பல ஆண்டுகள் தாய்மை அடையாத பெண்ணையும், மலைமேல் வீற்றிருக்கும் சாமியாக வேஷம் போட்டு, முகமெல்லாம் சந்தானம் பூசி மறைத்துக்கொண்டு, பரிச்சயமில்லாதப் பெண்களுடன் உடலுறவு கொள்ள வரும் ஆண்களையும் பற்றியது. சின்னத்தம்பி படத்தில் வரும் பிரபு கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டு ஆடுவதற்கும், ஊரிலுள்ள ஆண்களெல்லாம் இந்தத் திருவிவைச் சாக்கிட்டு முகம்முழுக்க சந்தம் பூசிக்கொண்டு விடியவிடிய காமக் களியாட்டம் ஆடுவதற்கும் நிறைய விதயாசங்கள் இருக்கிறது. இத்திருவிழாவின் சிறப்பே அதுதான். பதினான்கு நாள் திருவிழாவின் ஒருநாள் இரவு மட்டுமே இந்தச் சலுகை. இந்தக் கலாச்சாரச் சடங்கையும், குழந்தையில்லா தம்பதிகளின் மன உளைச்சலையும் ஒருசேர முன்வைக்கும் பதிவாகவும் கொள்ளலாம்.


“இந்த மாசமாவது தூரம் தள்ளிப் போகாதா? ஒரு புழு பூச்சி என் வயித்துல தங்காதா?” என்று பொன்னா இந்நாவலின் சில இடங்களில் ஏங்குவாள். பொன்னாவின் புலம்பலைக் கேட்கையில் பாவமாகத் தான் இருக்கும். ‘பாவாத்தா’ கண்ணைத் திறந்தாள் தானே!

’மாதொருபாகனின் முன்னட்டை வடிவமைப்பைப் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும். டிசைனர் சந்தோஷ் – இந்தப் பாவியை என்ன செய்யலாம்? பளாரென கன்னத்தில் அறையலாமா?. அந்த அளவிற்கு மகிழ்வை உண்டாக்கக் கூடியவர். ஒரு தேர்ந்த வாசகன் டிசைனராக வரும்பொழுது, புத்தக முன்னட்டையை எவ்வளவு சிறப்பாக அர்த்தத்துடன் வடிவமைக்க முடியும் என்பதற்கு – சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஜே.பி. சாணக்யாவின் ‘முதல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ போன்ற புத்தகங்களின் முன்னட்டைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ரத்தச் சிவப்பை ஆக்ரமித்த முன்னட்டையில் அர்த்தனாரியின் முண்டத்தை மாதொருபாகன் முகப்பட்டையில் வைத்திருப்பார் சந்தோஷ். அர்த்தனாரியின் முழு உருவத்தையும் வைத்திருக்கலாமே! எதற்குக் கழுத்தறுத்து வைக்கவேண்டும்? சடங்கு என்ற பெயரில் கடவுளின் கழுத்தை இம்மக்கள் அறுக்கிறார்கள் என்பதாலா?. “வறடன் – வறடி’, ‘மலடன் – மலடி’ என சக மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கக் குழந்தையில்லாத் தம்பதிகளைக் கூறு போடுகிறார்களே அதனாலா?. புத்தக முன்னட்டையில் ஓடுவது யாருடைய ரத்தம்? கற்பம் தங்காத பெண்களின் மாதவிடாய் ரத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பொன்னாவும் அவர்களில் ஒருத்தி தானே!.

ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ – ஒரு சிறுமியின் வாழ்வை அவளது பயணத்தினூடே முன்வைப்பது. இந்நாவலின் கதை பின்வருமாறு முடிகிறது:

ரயில்வண்டி என் கண்களில் பட்டது. ஒரு பயங்கரமான வேதனை அலை என் உடலை உடைத்துக்கொண்டு வெளியேறியது. என்னுடைய கை தொடைகளுக்கு நடுவில் அந்த வலியைத் தேடத் தொடங்கியது. பிசுபிசுப்பான வெதுவெதுப்பான ரத்தம் தோய்ந்த ஒன்று பொங்கி வந்தது. என்னுடைய தொடைகளுக்கு நடுவிலிருந்து பெருகிய அது புழுதி படிந்த என் முழங்கால்களில் மாதுளைச் சாறு போலப் படியத் தொடங்கியது. புதர்களுக்குப் பின்னாலிருந்து யாரோ குசுகுசுத்தபடி சிரிப்பது போலிருந்தது. திடுக்கிட்டுப்போய் நான் என்னுடைய சிவந்த பிசுபிசுப்பான கைகளைப் புல்லில் துடைக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புற்களுக்கும் புதர்களுக்கும் நடுவில்தான் கின்னியின் ரத்தமும் சிந்தியிருக்கும் என்று எண்ணம் வந்தது. உடனே நான் சுரங்கத்திலிருந்து விலகி மேலே ஏறத் தொடங்கினேன். புற்களாலும் கற்களாலும் மூடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் தடுமாறி விழுந்து ஓடத் தொடங்கினேன்.

பிறகு எனக்கு அந்தப் பாறை கண்ணில் பட்டது. நான் நின்றேன். சட்டென்று நான் பாரமற்று இருப்பதுபோலவும் அனைத்திலிருந்தும் விடுபட்டவளாய்த் தூய்மையானவாளாய் உணர்ந்தேன். இதுவரையிலான எனது உலகம் எப்போதைக்குமாக மறைந்துபோய்விட்டது. அதன்மீது முளைத்தெழுந்திருக்கும் வசந்தத்தின் புற்களாலும் சகதியில் அழுக்குடன் உருகிக் கிடக்கும் பனியிலும் என்னுடைய ரத்தத்தை நான் கழுவிக்கொண்டேன். புல்லின் மீது நான் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது நான் நானாகி இருந்தேன். கடவுளை அடைந்து நான் அவனையும் கடந்துபோயிருந்தேன்.

(சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா – பக்கம்: 268, காலச்சுவடு பதிப்பகம்)

கடந்த ஆண்டு வெளிவந்த ஸர்மிளா செய்யித்தின் “உம்மத்” நாவலிலும் ஒரு சிறு பகுதி வருகிறது. “பெண்குறியில் இருந்து திடீரென வெளிப்பட்ட இரத்தப் பெருக்கு கால்களுக்கிடையே வடியத் தொடங்கியது. இரண்டு தினங்களாக நிம்மதியிழந்து போயிருந்தாள். ஏதோ தீர்க்கவொண்ணாத நோயின் அறிகுறி என்கிற ஊர்ஜிதத்தில் நொய்ந்துபோனாள்”. (பக்கம்: 48)

யுவ புரஸ்கார் விருதுபெற்ற மலர்வதியின் ‘தூப்புக்காரி’ நாவலிலும் தூமைத்துணி அலசும் சில பகுதிகள் வரும். நாவலின் மொழிநடை சிறப்பாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அவகாசம் எடுத்து, கடினப்பட்டாவது ஒரு மேய்ச்சல் பார்வையில் படித்து முடிக்க வேண்டும்.

சென்னையை விட்டு வெளியில் வசிக்கும் எழுத்தாள நண்பரொருவர் “இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்” புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகம். நண்பருக்குக் கொரியர் செய்வதற்கு முன்பு ஓர் ஓட்டு ஓட்டிவிடலாம் என்று புரட்டத் துவங்கினேன். ஏராளமான எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. போலவே, பக்கம்: 85-ல் ஒரு கவிதையும் காணக்கிடைத்தது.

நான் வயதுக்கு வந்தபோது – கே. கீதா

உடம்பு முழுவதும் ஓரிடத்தில்
உருண்டை கட்டியபோது
ஒரு அந்தரங்கமலை நிசப்தமாய்
வெடித்துச் சிதறும் போது
வலியை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள
முயற்சிகள் மேற்கொண்டபடி...
திடீரென ஓர் அதிர்வு பீறிட்டது
என்னுள் நானே
திடமெனும் நான் திரவமாகி
மீண்டும் இறுகி
துண்டுகளானேன்
மாதத்திற்கொருமுறை வேறு வழியற்று
என்னை நான் வலியாய்
மாற்றிக்கொள்ள வேண்டி வந்து...
செத்து...
மேலே மிதக்காத காயத்திற்கு
‘பிளாஸ்டர்’ போடவியலாது
பக்க எலும்புகளை நொறுக்கி மாவாக்கவியலாது
முடங்கிக் கிடந்து மூழ்கிப்போக
முடிவெடுத்துள்ளேன்
முப்பத்தியாறு மணிநேரச் சோர்வை
அப்படியே அழுத்திக் கொண்டு
தவிர்க்கவியலாத் தீண்டாமையாய்
இருக்கவியலாது
நாகரிகத்துள் நான்கடி முன் நடந்து
தளர்ந்துபோனேன்... நீர்த்துப் போனேன்
ஓட்டமும் நடையுமாய்
பாதிவேலைகளை முடிக்கவியலாது
முதுகெலும்பை சம்மட்டியாலாவது
நீட்டித்துக் கொள்ள
இரும்புச் சங்கிலிகளாலாவது இம்சையை
கட்டிப் போடவேண்டுமென்றிருகிறது
மீண்டும் மீண்டும்
முப்பது நாட்களுக்கொருமுறை
மறுபிறவி எடுத்தபடி...
குடலை முறுக்கிப் பிழியும்
வலிமிகும் பொழுது
இப்பொழுது
- (நீலமேகாலு) ‘நீலமேகங்கள்’ 1993

துரியோதனிடமும், சகுனியிடமும் விளையாட்டில் தோற்று பஞ்சபாண்டவர்கள் சூதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். விராடநாட்டு அரசனுக்குப் பணியாளாக வேலைக்குச் சேர்கிறான் யுதிர்ஷ்டன். விராட தேசத்துப் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாக திரௌபதி இருக்கிறாள். விராட அரசனும், யுதிர்ஷ்டிரனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏனென்று தெரியாமல் கையில் கிடைத்தப் பொருளை எடுத்து யுதிர்ஷ்டிரனின் முகத்தில் மீது வீசி எறிகிறான் அரசன். அது தர்மனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. பணிப்பெண்ணாக அரண்மனையில் வேலை செய்யும் திரௌபதி, அருகிலிருக்கும் கோப்பையை எடுத்துக்கொண்டு தர்மனிடம் ஓடுகிறாள். துளித்துளியாகச் சிந்தும் ரத்தத்தை அந்தக் கோப்பையில் ஏந்துகிறாள்.

விராட அரசன் கேட்கிறான்: “என்ன செய்கிறாய் பெண்ணே...!”

“இவரது ரத்தம் சிந்தும் பூமி புல்பூண்டு முளைக்காமல் நாசமாய்ப் போகும்...!” என்கிறாள் தர்மனைப் பார்த்து. விராடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மறைந்து வாழும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க தர்மன் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறான்.

மாதவிலக்காகி ஒற்றையாடையில் கிடக்கிறாள் திரௌபதி. சூதில் அவளை வைத்து விளையாடி பாண்டவப் புத்திரன் இழந்தான் என்பது அதுவரையில் திரௌபதிக்குத் தெரியாது. தலைமுழுகி கூந்தலில் விரல்நுழைத்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறாள் அவள். வேறொரு கை கூந்தலைப் பற்றவும் யாரென்று கருங்கூந்தலை விளக்கிப் பார்க்கிறாள். துச்சாதனன் இதழில் புன்னகை தழுவ நின்றுகொண்டிருக்கிறான்...!

“நீசனே...! விலக்கான பெண்ணைத் தொடுவது பாவமில்லையா? என்னுடைய கணவர்களுக்குத் தெரிந்தாள் உன் சிரசு உடம்பில் இருக்காது...!” என்கிறாள்.

“ஆங்.. கிழிச்சானுங்க... அந்த அடிமை நாய்கள் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். நீயும் அடிமையானாய். மகாராணி என்ற நினைப்பில் பேசாதே” என்றவாறு கூந்தலைப் பற்றித் தரதரவென சபைக்கு நடுவில் ஒற்றையாடையுடன் இழுத்துக்கொண்டு செல்கிறான் துச்சாதனன். திரௌபதியின் தூமை உதிரம் வழியெல்லாம் சிந்தியிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஒற்றையாடையில் அவள் சிந்திய ரத்தமே இதிகாசத்தில், இலக்கியத்தில், படைப்பில் பதிவான முதல் மாதவிடாய்ப் பதிவாக இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் மேலுள்ள பதிவுகளைப் பார்கிறேன். இதில் நிர்மல் வர்மாவும், பெருமாள் முருகனும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பிரச்னையை ஆண்கள் பேசக்கூடாதா என்ன?

இந்த காலத்துச் சிறுமிகள், சிறுவயதிலேயே பெரிய மனுஷி ஆகிவிடுகிறார்கள். சிக்கலான விஷயம் தான். எனக்குத் தெரிந்த “ஆறாவது, ஏழாவது” படிக்கும் இரண்டு சிறுமிகள் சென்ற மாதத்தில் பூப்படைந்ததாகக் கூறினார்கள். பாவம் என்று நினைத்துக் கொண்டேன். உறவினர்களோ, “தனக்குத் தந்தன... தனக்குத் தந்தன... தனக்குத் தந்தனன...!” என்று ரெக்கார்ட் போட்டு விழாவையே சிறப்பாக முன்னெடுகிறார்கள். யாருக்கு...? பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு...! ஆறுமாதங்களுக்கு முன்பு பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். காதணி விழாவுக்குக் கவர்னர் ராசைய்யா சிறப்பு விருந்தினராக வருகைத் தருவதாகத் தட்டி வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மஞ்சள் நீராடு விழாவும் அப்படித் தானே!

கடந்த புத்தகக் கண்காட்சியில் ‘திரு’ – அவனுடைய ஒன்பதாவது படிக்கும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். காலச்சுவடு அரங்கிற்கு வந்தவன், “அண்ணா... இவளுக்கு ஏதாச்சும் புக்ஸ் எடுத்துக்கொடுங்க? உங்களைக் காமிக்கத் தான் அவளக் கூட்டிட்டு வந்தேன்...!” என்றான். சிறுவர்களுக்காகக் காலச்சுவடு வெளியிட்டிருந்த சில புத்தகங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். மறுபடியும் அரங்கிற்குள் சென்றவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது “வற்றும் ஏரியில் மீன்கள்” என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.

“இந்த வயசுல அம்பையைப் படிப்பாளான்னு தெரியலையேடா...!” என்றேன் திருவைப் பார்த்து.

“இல்ல... நான் எடுத்துக்குறேன்...” என்று கிளம்பிச் சென்றாள் அந்தச் சிறுமி.

இந்த காலத்துல தான் சின்ன வயசுலயே பெரிய மனுஷி ஆயிட்றாளுங்களே...! நாமென்ன சொல்ல...! இவர்கள் எல்லோரும் அம்பையை அவசியம் படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் “வெளிப்பாடு” சிறுகதையை நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்.

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - க்ரியா பதிப்பகம்
2. அம்பையின் முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்
3. வற்றும் ஏரியின மீன்கள் - காலச்சுவடு பதிப்பகம்
4. தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள் - சாகித்ய அகாதெமி
5. தூப்புக்காரி - அனல் வெளியீடு
6. மாதொருபாகன் - காலச்சுவடு பதிப்பகம்
7. உம்மத் - காலச்சுவடு பதிப்பகம்

Wednesday, June 18, 2014

அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ

“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? 

அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன?

மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம்.

இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!”

வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?”

“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள்.

“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள்.

“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள்.

“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள்.

“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள்.

அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார்.

“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள்.

கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா?

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும்.

புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’.

“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன்.

“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார்.

“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார்.

உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள்.

ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான்.

சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள்.

ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள்.

ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள்.

“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது.

ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான்.

கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை.

(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135)

சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன.

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன்.

Thursday, May 22, 2014

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக்


“நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஓர் உடல். என் கடைசி மூச்சை வெகு நேரத்திற்கு முன்பே நான் விட்டிருந்தாலும் என் இதயம் துடிப்பதை நிருத்திவிட்டிருந்தாலும் எனக்கு நிகழ்ந்திருப்பது என்னவென்று அந்தக் கொலைகார இழிஞனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.” – இப்படித் தான் ஆரம்பிக்கிறது ‘என் பெயர் சிவப்பு’. (தமிழில்: ஜி குப்புசாமி, பக்கம்: 9) 

“இந்த நாவல நீ அவசியம் வாசிக்கனும்டா” என்று நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகனுக்குப் பரிந்துரை செய்திருந்தேன். முதல் அத்தியாயத்தின் (மேலுள்ள) ஆரம்ப வர்ணனைகளைப் படித்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனே என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். நான்கூட “என்னவோ? ஏதோ?” என்றுதான் எடுத்துப் பேசினேன்.

“மாமா... நீங்க காக்க-காக்க – சூர்யா நடிச்ச – கெளதம் வாசுதேவ் மேனனுடைய படத்தைப் பார்த்திருக்குறீங்களா?” என்றான்.

“எதுக்குக் கேக்குற?” என்றேன்.

“இல்ல... என் பெயர் சிகப்பு படிச்சிட்டு இருக்குறேன்... அதான் கேக்குறேன்...” என்றான்.

“மொழங்காலுக்கும் மூக்கு நுனிக்கும் எதுக்குடா முடிச்சுப் போடுற?” என்றேன்.

“இல்ல மாமா... அதுல சூர்யாவ பிஸ்டல்ல சூட் பண்ணி ஆத்தோரத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. ஒரு பொனம் பேசுறா மாதிரிதான் அந்தப் படம் ஆரம்பிக்கும். கெளதம் வாசுதேவ்மேனன் – என் பெயர் செகப்பு நாவல்ல இருந்து அந்த மொதல் காட்சிய மட்டும் சுட்டு இருப்பாரா?” என்றான். உண்மையிலேயே எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. படத்தின் முதல் சீனைக் கண்டுகளித்து, நாவலின் ஆரம்ப அத்தியாயத்தையும் வாசித்த நண்பர்கள் தான் இதற்கான பதிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (மற்றபடி படத்தின் கதைக்கும், இந்த நாவலுக்கும் துளிக் கூட சமந்தமில்லை.)

இந்நாவல் ஒருவனது கொலைக்கான பின்னணியைத் துப்பறியும் கதைதானென்றாலும், அரசு, அரசியல் என்ற இணைத் தண்டவாளங்களின் மீது பயணிக்கும் ஓட்டமான் சாம்ராஜ்ஜிய அரசவை நுண்ணோவியர்களின் வாழ்வானது தடம்புரளும் ஒரு நுட்பமான புள்ளியை - மரபான தொன்மக் கலாச்சாரத்தின் போக்கில், மேற்கத்திய நவீன பரீச்சார்த்த முயற்சிகள் உட்புகும்போது பழைமைவாதிகளுக்கு உண்டாகும் மனச்சஞ்சலங்களை – யதார்த்த மனிதர்களுடன் சாயலுடன் நாவலை நகர்த்திச் செல்கிறார் ஓரான் பாமுக்.

துருக்கிய மொழியில் “Benim Adim Kirmizhi” 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல் - 2001-ஆம் ஆண்டு Erdag M. Goknar என்பவரால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாமுக்கின் இதர படைப்புகள் முன்னமே ஆங்கிலத்தில் வெளி வந்திருந்தாலும், “My Name Is Red” தான் 2006-ல் அவருக்கான நோபல் பரிசு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் “மை நேம் இஸ் ரெட்” பாமுக்கின் மற்ற படைபுகளிலிருந்து ஒருபடி கீழே வைத்துத்தான் கறாரான இலக்கியவாதிகள் பார்க்கப்படுகிறது என்கிறார்கள். (இதிலிருந்தே இது சாமானிய வாசகர்களின் பிரதி என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே.!)

இஸ்தான்புல்லைத் தலைநகரமாகக் கொண்ட ஓட்டமான் சாம்ராஜ்ஜியத்தை, சுல்தான் மூன்றாவது மூர்த் 1574 முதல் 1595 ஆண்டு வரை ஆண்டுவருகிறார். நுண்ணோவியங்களிலும் ஓவியச்சுவடிகளிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஓட்டமான் அரசர் இவரே என்கிறார்கள். “கைவண்ண மலர், திருவிழா மலர், வெற்றி மலர்” ஆகிய ஓவியச் சுவடிகள் என பல முயற்சிகளும் இஸ்தான்புல்லில் இவரது ஆசையின் பேரில் தான் உருவாகின. இந்நாவல் இவரது ஆட்சிக் காலத்தில் தான் நிகழ்கிறது.

என் பெயர் சிவப்பு - ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டைச் சிறப்பிக்கும் பொருட்டு நுண்ணோவிய மலர் ஒன்றை வெளியிடும் பொறுப்பை குருநாதர் ஒஸ்மானிடம் - மூன்றாவது மூர்த் ஒப்படைகிறார். வெனிஸ் மன்னருக்கு அந்த ஓலைச்சுவடியை இரகசியமாகப் பரிசளித்து நட்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் மூர்த் |||. ஆகவே, வெனிஸ் ஓவிய பாணியும் நுண்ணோவிய மலரில் வெளிப்படுமாறு கேட்டுக்கொள்கிறார். சுல்தானின் விருப்பப்படி ஒஸ்மானும் - எனிஷ்டே எஃபெண்டியிடம் பொறுப்பினை ஒப்படைத்து, “வசீகரன் எஃபெண்டி, வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ்” ஆகிய ரகசிய உறுப்பினர்களைக் கொண்டு சுவடி வேலையைத் துரிதப்படுதுகிறார். ஓவிய வேலைகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, மெருகோவியனான வசீகரன் எஃபெண்டியை – இதே குழுவில் வேலை செய்யும் மூன்று பேர்களில் ஒருவன் கொலை செய்து, பாழுங்கிணற்றில் பிரேதத்தை வீசி எறிகிறான். இந்தப் பாழுங்கிணற்றிலிருந்து தான் பிரேதம் பேசத் துவங்க நாவல் ஆரம்பிக்கிறது. கொலை நடக்கும் அதே நாளில் எனிஷ்டே எஃபெண்டியின் மருமகன் (கருப்பு எஃபெண்டி) – பனிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். ஆகவே, கொலைப் பழி அவன் மீது சந்தேகத்துடன் திரும்புகிறது.

எனிஷ்டே எஃபெண்டியின் ஒரே மகளான ஹெகுரேவை – இளம் வயதில் கருப்பு காதலித்து, அவளை அடைய முடியாத விரக்தியில் தூரதேசம் செல்கிறான். ஹெகுரேவை குதிரை வீரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் அவளது தந்தை. போருக்குச் சென்ற ஹெகுரேவின் கணவன் – வீடு வந்து சேராததால், இரண்டு பிள்ளைகளுடன் (ஷெவ்கெத், ஓரான்) தந்தையின் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். ஹெகுரேவின் கணவன் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பச் செய்து, ஹெகுரேவை அடையத் துடிக்கிறான் அவளுடைய கொழுந்தன் ஹசன். அதற்காக எஸ்தர் என்ற சலவைத் தொழிலாளியைத் தூதனுப்புகிறான். கருப்பும் – கணவனை இழந்து நிற்கும் ஹெகுரேவிடம் தனது காதலைப் புதுப்பித்து, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புவதை எஸ்தர் மூலம் சொல்லி அனுப்புகிறான்.

கொலைக்கான பின்னணி ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ‘ஹெகுரே – கருப்பு – எஸ்தர் – ஹசன்’ என முக்கோண காதல் இடையோடுகிறது. ஹிஜிரா ஆயிரமாவது நுண்ணோவிய மலர் வெளியிடவேண்டிய தேதி நெருங்குவதால் சுவடியை முடிக்க வேண்டிய நெருக்குதல் குருநாதர் ஒஸ்மான், எனிஷ்டே எஃபெண்டி மற்றும் பிற நுண்ணோவியர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தான் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஹெகுரே தனது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தனிமரம் ஆகிறாள். எனவே, சிறுவயதில் காதலித்த கருப்பு எஃபெண்டியை மணந்துகொள்ள உள்ளுக்குள் விரும்புகிறாள் ஹெகுரே. நுண்ணோவியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் கருப்பின் தலையில் விழுகிறது. (கருப்பு வந்து சேர்ந்த அன்றுதான் கொலை நடந்துள்ளது.)

“கொலை – காதல் – துப்புத் துலக்குதல்” என்ற அளவோடு படைப்பானது இருக்குமாயின் சாதாரண ஜனரஞ்சக நாவலாகத் தான் இருந்திருக்கும். “துருக்கிய பின்புலத்து நுண்ணோவியர்களின் பின்புலம், அது சார்ந்த முன் தயாரிப்புகள், ஓவிய கலாச்சார மரபுகளுடன் – இஸ்லாமிய மதம் கொண்டுள்ள தாக்கம் – பழைமைவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமான முரண்பாடு” என ஏராளமானவற்றை அள்ளித் தெளித்து படைப்பை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார் பாமுக். அதுவே வாசக மனநிலையின் மேலான தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

பிரேதம் (வசீகரன் எஃபெண்டி), கருப்பு, கொலைகாரன், ஹெகுரே, குருநாதர் ஒஸ்மான், மாமா (எனிஷ்டே எஃபெண்டி), எஸ்தர், சிவப்பு, நாய், நாணயம், மரணம், குதிரை, ஓரான் (ஷேகுரேவின் இளைய மகன்), வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ், ஓவியங்களிலுள்ள உருவங்கள் என உயிருள்ள மனிதர்களும், உயிரற்ற பொருட்களும் கதாப்பாத்திரங்களாக தத்தமது நிலையைச் சொல்லிக்கொண்டு செல்லச் செல்ல நாவல் முழுப் பரிமாணம் கொள்கிறது. நவீனத்தை நோக்கி நகரும் மனிதர்களின் வேட்கையையும், அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் மனிதர்களின் ஞாய வாதங்களையும் ஒருசேர இதில் முன்வைக்கிறார். மதத்தைக் கட்டுடைக்கும் “மேற்கத்திய நவீன கலாச்சாரம், ஹெகுரேவின் மறுமணம்” என பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஹதீஸ் (இறைவன் தனக்குச் சொல்லியதை நபிகள் நாயகம் உலகிற்குச் சொன்னது) மனித மேன்மைக்கான விஷயங்களைத் தான் சொல்கிறது. தண்ணீர் குடிப்பது முதல் சிறுநீர் கழிப்பது வரை பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. உருவ வழிபாடு கூடாது என்பதால், அதன் பொருட்டு ஓவியங்களும் இஸ்லாமிய மரபில் தடை செய்யப்பட்டது.

குர் ஆன் ஓவியர்களை விலக்கி வைத்திருந்ததினால் அவர்களை யாரும் மதித்ததில்லை. (பக்கம்: 526)

இறைவனின் படைப்புக்கு மாறான மேம்படுத்தப்பட்ட ஓவியமாகச் சுவடியை உருவாக்கினால் இறைவனின் தீர்ப்பு நாளில் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதுதான் பிரதிமையில் நவீனத்தை உட்புகுத்தும் நுண்ணோவியர்கள் மீது பழைமைவாத ஓவியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஹதீஸை மீறி வாழக் கூடாது என்பதல்ல, அப்படி வாழ்ந்தால் கேடு மனிதர்களுக்குத் தான் என்கிறார் நபி. பெண்களின் மறுமணம் கூடாது என்று இறைதூதர் அருளிய ஹதீஸில் சொல்லப்படவில்லை. பெண்கள் தனியாக இருந்தால் அது கேடுகளுக்கு வழிவகுக்கும், ஆகவே ஓர் ஆண் – ஊனமுற்ற பெண்ணையும், ஆதரவற்ற பெண்ணையும், போரில் கணவனை இழந்த பெண்ணையும் தான் இரண்டாவதாக அல்லது அதற்கு மேலும் திருமணம் செய்யலாம் என்கிறார் நபி.

ஹதீஸிலிருந்து வழுவாமல் இருந்து, ஓவிய மரபைக் காக்கும் பொருட்டுத்தான் மெருகாளன் வசீகரன் எஃபிண்டி கொல்லப்படுகிறான். கொலைகாரனே அதனைப் பதிவும் செய்கிறான். மரபை மீறுவது குருநாதர் ஒஸ்மானுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. ஓவியத்தின் பொருட்டு மரபைக் காக்க நினைக்கும் குருவும் சிஷ்யனும், ஆழ்மன காம எண்ணத்தில் மரபை மீறி யோசிக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சியின் விவரணையில் அவனது வன்புணர்ச்சி செய்ய நினைக்கும் ஓரினக் காம வேட்கை விருப்பங்கள் வெளிப்படுகிறது. குருநாதர் ஓஸ்மானும் ஓவியப் பட்டறையின் பதின்பருவத்து மாணவர்களைப் பார்த்து காம வேட்கை கொள்ளும் விவரணைகளும் ஆழ்மன எண்ணங்களாகப் பதிவாகி இருக்கிறது.

கொலைகாரன்: குருநாதர் ஒஸ்மானுக்கு செல்லம் ஒருவன் இருந்தான். எப்போதுமே அவன் கூடச்செல்வானென்றால் ஓவியக்கூடத்தில் வதந்திகளும் ரசக்குறைவான நகைச்சுவை வம்புகளும் பரவுமென்பதால் வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒருவனென்று குருநாதர் குறிப்பிட்டு வைத்துவிட்டார். (பக்கம்: 159)

குருநாதர் ஒஸ்மான்: காலை நேரங்களில் என் வீட்டு வாசலில் அவன் வந்து நிற்கும்போது, வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தவுடன் என் உள்ளத்தில் எழுகின்ற கிளர்சியைப் போல இவனைப் பார்த்தல் உண்டாவதில்லை என்பதை சொல்லவேண்டி இருக்கிறது. (பக்கம்: 420)

வண்ணத்துப்பூச்சி: நான் பலாத்காரம் செய்யப்போகும் ஓர் அழகிய சிறுவனின் பிருஷ்டத்தை உள்ளங்கையால் ஏந்துவதைப் போல, நான் வரைந்ததையும் பற்ற வேண்டும் போல இருந்தது. (பக்கம்: 442)

குருநாதர் ஒஸ்மான்: அந்தக் காதலன் சின்னஞ்சிறு பாதங்களும் சருகு போன்று மெல்லிய சருமமும் பெண்ணைப் போன்ற சாயலும் கொண்டிருந்த ஒரு பலவீனமான இளைஞன். அவனது மெல்லிய முழங்கையைப் பார்கையில் அதனை முத்தமிட்டுவிட்டு உடனே செத்துப்போய் விடலாமா என்று தோன்றவைக்கிறது. (பக்கம்: 504)

கொலைகாரன்: சிறார்களோடு பாலுறவு கொள்கிற, கஞ்சா புகைக்கிற, நாடோடியாய் அலைகிற, எல்லாவித நெறிபிறழ்ந்த நடத்தைகளிலும் ஈடுபடுகின்ற ஒரு துறவியர் மரபின் கடைசிச் சீடன் நான் என்பதை வசீகரன் தெரிந்துகொண்டால், என் மீது அவனுக்கு பயம் வரும். (பக்கம்: 626)


நுண்ணோவியம் சார்ந்து மரபிலிருந்து வழுவாமல் நிற்க நினைக்கும் ‘கொலைகாரனும், மதகுருவும்’, காம இச்சை சார்ந்த எண்ணங்களில் மனச் சிதறல் கொள்கிறார்கள். ஒருபால் வேட்கை மட்டுமல்ல கருப்பின் இயற்கைக்கு முரணான காம வேட்கைக்கு முதலில் தயங்கும் ஹெகுரே – படுத்த படுக்கையாக ஊனப்பட்டிருக்கும் கருப்பின் வேட்கையைத் தீர்ந்து வைக்கிறாள்.

ஹெகுரே: பாரசீகக் கவிஞர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக எந்த காரணத்திற்காக இந்த ஆணின் சாதனத்தை ஓர் எழுதுகோலுக்கும் பெண்களான எங்கள் வாய்களை மைக்கூடுகளுக்கும் ஒப்பிட்டு வந்திருக்கின்றனர் என்பதை முற்றிலுமாகப் புரிந்துகொண்டேனா என்று சொல்ல முடியவில்லை. (பக்கம்: 648)

ஹெகுரே: மரண வாடை அடித்துக் கொண்டிருந்த அந்த அறையில் இருந்த என்னை அப்போது பரவசப்படுத்திக் கொண்டிருந்தது என் வாயிலிருந்த அந்தப் பொருள் அல்ல. (பக்கம்: 648)


உயிர்ப் பெருக்கத்தைத் தவிர்த்த இதர முறையிலான உடலுரவுகள் ஏற்புடையது அல்ல என்கிறார் இறைதூதர். நபிகளின் வாழ்வியல் மேன்மைக்கான கட்டளைகளாகட்டும், இதர அறிவார்த்த ஒழுக்க விதிமுறைகளாகட்டும் - மனித உணர்வுகளுக்கு முன் இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதையே காலக் கண்ணாடி, மனிதர்களின் வாழ்வு மூலம் பிரதிபலிக்கிறது. புற ஒழுக்கங்களை மரபின் அளவீட்டில் நூல்பிடித்துப் பின்பற்ற நினைக்கும் சமூகம், தனிமனித ஒழுக்கத்தில் கட்டற்று அலைகிறது. அதைத்தான் பாமுக் இந்நாவலில் வரலாற்றின் துணைகொண்டு ஆராய முற்படுகிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தமிழுக்கு பாமுக்கைக் கொண்டு வந்ததில் ஜி. குப்பிசாமியின் கடினப் பிரயாசை இருக்கிறது. “மூலத்தை விட ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்திருக்கிறது” என்று ஒரு மேடைப் பேச்சில் பகிர்ந்துகொண்டாராம் ஓரான் பாமுக். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துவிட்டு “ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழாக்கத்தில் இந்நாவல் இன்னும் செறிவாக வந்திருக்கிறது” என்கிறார் தீவிர வாசகரும், மூத்த எழுத்தாளருமான அ. முத்துலிங்கம். மேலும், “ஓரான் பாமுக் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்துப் பார்க்க வாய்ப்பில்லை. அப்படி வாசிக்க நேர்ந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைக் காட்டிலும், தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது” என்று சொல்லியிருப்பார் என்கிறார் முத்துலிங்கம்.

ஜி குப்புசாமியுடனான உரையாடலில் இதுசார்ந்த பேச்சு வந்தபோது, “அதெல்லாம் வாய்ப்பே இல்லிங்க. மூலத்துல இருக்கறதுல 80% விஷயங்கல மொழியாக்கத்துல கொண்டுவந்தாலே பெரிய விஷயம் தான். இதெல்லாம் பாமுக் மற்றும் முத்துலிங்கத்தின் பெருந்தன்மை” என்று பகிர்ந்துகொண்டார்.

“இத அ.முத்துலிங்கம் மட்டும் சொன்னா பரவாயில்லையே. சுகுமாரன், நாகரத்தினம் கிருஷ்ணா, ஜெயமோகன், எஸ்ரா”ன்னு எல்லாருமே சொல்றாங்களே என்றால், “பாருங்க மொழி பெயர்ப்பாளன் கண்ணாடி மாதிரி. அதில் விழும் பிம்பம் தான் மூல நாவல்னு முத்துலிங்கம் சொல்றாரு. ஆனா... என்னைப் பொருத்தவரை ‘என் பெயர் சிவப்பு’ என்ற பிம்பம் நல்லா வந்திருக்குதுன்னா..! அந்த பிம்பம் விழும் கண்ணாடி குப்புசாமி என்கிற மொழிபெயர்ப்பாளனாகிய நானில்ல. உண்மையில் கண்ணாடியானது தமிழ் மொழி. அது மொழியின் சிறப்பு” என்கிறார் ஜி குப்புசாமி.

இப்படிச் சொல்வது மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் பெருந்தன்மை. காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முறையான அனுமதி பெற்று - ஏறக்குறைய 18 மாதங்கள் தினந்தோறும் உழைத்து இந்நாவலை மொழியாக்கம் செய்ததாகத் தனது நேர்முகத்தில் குப்புசாமி பதிவு செய்திருக்கிறார். இந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னை முன்னிருத்திக் கொள்ளாத கவர்ச்சியும் மெச்சத் தகுந்த விஷயங்கள்.

இலக்கிய ரசனையின் முக்கிய அம்சமே மொழி தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் மொழியானது கண்ணாடியாக இருக்கலாம். அ. முத்துலிங்கம் தவறாகச் சொல்லிவிட்டார். மொழி பெயர்ப்பாளர்கள் கண்ணாடியல்ல. அதன் பின்னால் பூசப்பட்டுள்ள மெல்லிய ரசக் கலவை. கண்ணாடி எத்தனை கனமானதாக இருந்தாலும், மெல்லிய ரசக்கலவை பூசப்படவில்லையேல், தெளிவான பிம்பத்தைக் காண்பது இயலாத காரியம். ரசம் உதிர்ந்த கண்ணாடிகளும் இருக்கத் தானே செய்கிறது. எனினும் அது கண்ணாடிகளின் பிரச்சனை இல்லையே!. ஜி குப்புசாமி போன்ற ரசக்கலவைகள் - தாம் சார்ந்த மொழிக்கு வலு சேர்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியே.

குறிப்பு: பாமுக்கின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என் பெயர் சிவப்பு’. சென்ற ஆண்டு பாமுக்கின் கடைசி அரசியல் நாவலான ‘பனி’ வெளிவந்தது. ஓரான் பாமுக்கின் மொத்தப் படைப்புகளையும் அடுத்தடுத்து மொழியாக்கம் செய்யும் பணியில் ஜி. குப்புசாமி வேலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகமே வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

என் பெயர் சிவப்பு
மூலம்: ஓரான் பாமுக் (துருக்கி)
தமிழில்: ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.
விலை: 350

புத்தகம் சார்ந்த பிற பதிவுகள்:

கண்ணாடியைப் பார்ப்போம் - அ. முத்துலிங்கம்
மரணத்தின் நிறம் சிவப்பு – கவிஞர் சுகுமாரன்
ஒரு நுண்ணோவியத்தின் கதை – நாகரத்தினம் கிருஷ்ணா
ஜெயமோகன் வாசகர் கடிதம்
என் பெயர் சிவப்பு: க. சீ சிவக்குமார்
நாவலின் சில பகுதிகள்: அபுதீன்
என் பெயர் சிவப்பு: ஆதவா

Wednesday, April 9, 2014

IBM - யானைக்கும் அடிசரக்கும்

“பசியோடு இருங்கள். முட்டாளாக இருங்கள்” – என்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரசித்தி பெற்ற வார்த்தைகள். ஏப்ரல் 01-ஐ முட்டாள்களின் தினமாக உலகெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ “Apple Company” -யை 1976, ஏப்ரல் 01 ஆம் தேதி தமது நண்பர்களுடன் தொடங்கி இருகிறார். இதனை யோசித்துச் செய்திருப்பாரா என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. இயல்பாக சில விஷயங்கள் இப்படி நடந்துவிடுவதுண்டு. Steve Jobs பற்றி உலகறியும். ஆப்பிள் ப்ராடக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தவம் கிடக்கிறார்கள்.
போலவே 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-ம் தேதி, ஐபிஎம் வரலாற்றின் பொன் ஏடுகளில் வைரக்கோலால் செதுக்கி வைக்கதிருக்க வேண்டிய தினம். அன்று தான் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக, அதிகாரப் பூர்வமாகத் தலைவராக பணியை ஏற்கிறார் லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர். யாரிந்த லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர் (அல்லது) ஜஸ்ட்னர் (அல்லது) ஜெஸ்ட்னெர்?

அமெரிக்காவில் பால் டிரெக் வண்டி ஓட்டும் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, உலகின் தலைசிறந்த பிசினஸ் நிர்வாகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் என்று அடுக்கிக் கொண்டே சென்றாலும், “விழுந்த கம்பெனியை எழுந்து நிற்கச் செய்தவர்” என்று அறிமுகம் செய்வதுதான் சரியாக இருக்கும். அதற்கு IBM Company –ன் வரலாற்றைக் கொஞ்சம் போல அசை போட்டாலே ஜெர்ஸ்ட்னெர் என்பவர் யாரென்பது கைப்புண் கன்னாடிபோலத் தெரிந்துவிடும்.

ஐபிஎம் – அமெரிக்காவின் கௌரவங்களுள் ஒன்று. அமெரிக்காவின் நீண்ட கால அடையாளங்களுள் ஒன்று என்பதாகவும் சொல்லலாம். கத்தரிக்கோல், சீஸ் வெட்டும் கருவி முதல் தட்டச்சுக் கருவி, செயற்கைக்கோள் பாகங்கள் வரை IBM கால் பாதிக்காத துறைகளே இல்லை. அந்த அளவிற்கு இயந்திரங்கள் சார்ந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்திய கம்பெனி. ஆகவே இவர்கள் கம்ப்யூட்டர்கள், லேப்டாப், மென் பொருட்கள் ஆகிய துறைகளிலும் இறங்கியதில் வியப்பில்லை. மைக்ரோ சாஃப்ட், இன்டெல் போன்ற அடையாளமற்ற கம்பெனிகள் இவர்களுக்குப் போட்டியாக வளர்வார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான். புதிதாகத் துவங்கி அசுரகதியில் வளர்ந்த மென்பொருள் நிறுவனகள் IBM-ன் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டன.

அதன் விளைவு 1987-ல் 43 டாலராக இருந்த பங்குச் சந்தை பத்திர மதிப்பு, 1993-ல் 13 டாலர் என்ற நிலைக்கும் கீழிறங்கி பாதாளத்தில் விழுந்து தத்தளிக்கிறது. போட்டி நிறுவனங்களின் சந்தைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அதன் பத்திர மதிப்பு பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போதிய சேமிப்புகள் கைவசம் இல்லை. உலகெல்லாம் கிளைகள் கொண்டு பறந்து விரிந்த பன்னாட்டு நிறுவனம். எனினும் பல பில்லியன் டாலர்கள் வியாபார நஷ்டம். 1985 -லிருந்து பார்த்தால் ஏறக்குறைய 1, 75, 000 நபர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். உலகின் பல நாட்டு ஊழியர்கள் இதில் அடக்கம்.

இந்நிலையில் தான் 1993 ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, தனது தலைமை நிர்வாகி ஜான் ரக்கர்ஸ் பணி ஓய்வு பெறப்போவதாக IBM அறிவிக்கிறது. ஐபிஎம்-ன் அடுத்த தலைமை நிர்வாகியைக் கண்டெடுக்க “ஜான் ஆக்கர்ஸ், ஜிம் பர்க்” போன்றவர்களைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்படுகிறது. உலகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகளில் சிறந்த ஒருவரை IBM நிறுவனம் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஆரம்பத்திலிருந்தே ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தலைமை நிர்வாகி ஜிம் பர்க்கின் சாய்ஸ் LOUIS V. GERSTNER, Jr மட்டுமே. 

ஜெர்ஸ்ட்னெர் அதற்கு முன்பு பதவி வகித்த “மெக்கின்சே, ஆர். ஜெ. ஆர் நபிஸ்கோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனிகள் அல்ல. ஒன்று சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புடையது. அல்லது வங்கிச் செயல்பாடுகள் சார்ந்த நிறுவனங்கள். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் வியாபார நோக்கு கொண்டது ஐபிஎம்.

தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் லூயி வி ஜெர்ஸ்ட்னர், தன்னுடைய பங்கிற்கு சுமார் 30, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறார். எல்லா திசையிலிருந்தும் IBM பிரச்சனைகளைச் சந்திக்கிறது. “ஐ.பி.எம் நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு?” என்றிருந்த நிலைமை மாறி, “பாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஐபிஎம் – இனி எழ முடியுமா?” என்ற இக்கட்டான சூழ்நிலை. பிரச்சனைகளை அதன் நெளிவு சுளிவுடன் சந்திக்கிறார் ஜெர்ஸ்ட்னர். ஏறக்குறைய 9 ஆண்டுகாலம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பழைய வளமான நிலைக்கு நிறுவனத்தை மீட்டெடுக்கிறார். கம்பெனி ஸ்திரத் தன்மையை அடைந்து, தொலைநோக்குடன் வீறுநடை போடும் சமயம் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுகிறார்.

ஜெர்ஸ்ட்னெர் IBMல் தனக்குக் கிடைத்த அனுபவங்களை “Who Says Elephants Can’t Dance?” என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதன் சாரத்தை சுயமுனேற்ற தன்மையில் ராணிமைந்தன் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்.

ஒரு பிரபலமான நிறுவனம் தன்னுடைய அஜாக்கிரதையால் மண்ணைக் கவ்வுவதும், தடம் தெரியாமல் போவதும் நடப்பதுண்டு. இதற்கு சின்னதும் பெரியதுமாக நிறைய கம்பெனிகளைச் சொல்லலாம். சில கம்பெனிகள் மீண்டு எழுவதும் உண்டு. இதற்கு “ஆப்பிள், ஐபிஎம்” போன்ற நிறுவனங்களை உதாரணம் காட்டலாம். இந்தப் புத்தகம் ஐபிஎம் கம்பெனிக்கு ஆக்சிஜன் கொடுத்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி சுருக்கமாகப் பேசுகிறது. கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகம்.

முயற்சி செய்து பாருங்கள். விழுந்த கம்பெனியையே தூக்கி நிறுத்துகிறார்கள். ஒரு புத்தகத்தைப் படிப்பதா கடினம்...!

கலைஞன் பதிப்பகம்,
தமிழில்: ராணிமைந்தன்
விலை 55 ரூபாய்

Friday, March 21, 2014

நீறுபூத்த நெருப்பு - சாதியும் நானும்

ஒருமுறை என்னுடைய பெரிய அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரவர் நட்பு வட்டத்தைப் பற்றிய பேச்சு வந்தது. “இங்க பாரு ஹேமா... எனக்கு தலித் பிரெண்ட்ஸ் தான் அதிகம்” என்றேன். “உன்ன எல்லாம் சுட்டுக் கொல்லனும்டா...” என்றவாறு ஹேமா கோவத்தை வெளிப்படுத்தினாள்.

“ஏன் அப்படி சொல்ற ஹேமா? எதுக்குக் கோவப்படுற...?” என்றேன்.

“எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம்னு சொல்லு... ஃப்ரண்ட்ஸ் பத்தி பேசும் பொழுது அதென்ன தலித் பிரண்ட்ஸ்...” என்றாள்.

அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. சாதியை பல இடங்களில் விமர்சித்தாலும், நீர்பூத்த நெருப்பாக சாதியானது உள்ளுக்குள் இருந்திருக்கிறது. இந்த மனோபாவத்திற்கு நான் வளர்ந்த சூழலும் ஒரு காரணம் என்பதுதான் உண்மை.

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்ச பாண்டவர்களுக்காக அகதீஸ்வர முனிவர் யாகம் நடத்தியதாக வாய்மொழிக் கதையில் கூறப்படும் பஞ்ஜேஷ்டி தான் எனது பூர்வீகம். பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து இந்த ஊர் தான் எங்களது பூர்வீகம். பஞ்ஜெட்டி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஆனந்தவள்ளியும், அகதீஸ்வரனும் தம்பதியார்களாகக் காட்சியளிக்கும் சிவ தளம் அமைந்த ஊர். இப்போதும் கூட மொத்தத்தில் இரண்டு தெருக்கள் தான் உள்ளது. தலித்துகள் வசிக்கும் காலனி கொஞ்சம் பெரியது. அப்பொழுதெல்லாம் ஒரு தெருவில் மேல்சாதியினரும், மற்றொரு தெருவில் நாயுடுகளும், ரெட்டியார்களும், நாயக்கர்களும் வசிப்பார்கள். தலித்துகள் வசிக்கும் காலனி ஊரிலிருந்து சற்றே விலகி அமைந்திருக்கும். கோவிலின் பக்கத்தில் ஒரேயொரு ஐயர் வீடு. 

சிறுவனாக இருந்தபோது மேல்சாதியினர் வசித்தத் தெருவில் 20 வீடுகள் இருந்தால் அதிகம். பெரும்பாலும் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் (நாட்டு ஓடு & சீமை ஓடு) தான் இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் கூட இருக்கும். இரண்டு வீடுகள் மட்டுமே “மெத்தை வீடு” என்றழைக்கப்பட்ட மாடியுடன் கூடிய வீடுகள். ஒருவீடு அப்பாவின் முன்னோர்களுடையது. இன்னொன்று அம்மாவின் முன்னோர்களுடையது. இரண்டுமே எட்டுக்கட்டு வீடுகள். நான் வளர்ந்துகொண்டே வர, இரண்டு வீடுகளும் சிதிலமடைந்து தரைமட்டமாகின. பின்னர் குடிசை வீட்டில் வாழத் துவங்கினோம். எனினும் வீட்டு வேலைகளைச் செய்ய பக்கத்துத் தெருவிலிருந்து பெண்கள் வருவார்கள். தோட்ட வேலைகளைச் செய்ய காலனியிலிருந்து தலித் ஆண்கள் வருவார்கள். பெரும்பாலும் இவர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள். தண்ணீரும், நீர்மோரும் வீட்டார் புழங்கும் டம்பளர்களில் கொடுத்தாலும், சாப்பாட்டினைப் பின்புறத் திண்ணையில் உட்கார வைத்து இலையில் தான் பெரும்பாலும் பரிமாறுவார்கள்.

“நான் வாழ வந்த போது பற பசங்க ஊருக்குள்ள வந்தா துண்ட எடுத்து மடியில கட்டிப்பாங்க. அப்பல்லாம் ஏது செருப்பு?. பின்னாடி செருப்பு வந்தது. ஊருக்குள்ள வரும்போது செருப்பைக் கையில எடுத்துக்குனு நடந்தது கூட நேத்து நடந்த மாதிரி தான் இருக்குது. இப்ப என்னடான்னா பறப் பசங்க கால்ல போட்டுட்டு இருக்குற செருப்ப எடுத்து மொகத்துக்கு நேரா காமிப்பாங்க போல. நம்மளையே கேள்வி கேக்குறாங்க. எல்லாம் கலி காலம்...” என்று காலஞ்சென்ற சின்னப் பாட்டி ஞானாம்பாள் எப்பொழுதாவது சொல்லுவதுண்டு.

ஒருமுறை பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கழுவுவதற்காகத் தொட்டிக்குச் சென்றேன். சூரப்பேட்டா கிழவி குடிசையின் பின் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் சில்வர் கிண்ணத்திலேயே கிழவிக்குச் சாதம் கொடுத்திருந்தாள் அம்மா. எதோ பொறியலைக் கிண்ணத்தில் வைக்க வந்த சமயம் “ஏம்மா கொழம்பு வெக்கிற கிண்ணதுளையே அதுக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்கற. வேற எதாச்சும் எலயில போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...” என்றேன்.

“இந்தக் கதைக்கெல்லாம் நீ வராத... எட்டி இடுப்பு மேலயே ஒதைப்பேன். ஒருத்தருக்கு எதிர்ல எப்படி பேசுறதுன்னு தெரிய வேணாம்... புத்தி கெட்ட நாய...” என்று அம்மா கோபமாகத் திட்டியது பசுமை மாறாமல் நினைவில் இருக்கிறது. அம்மாவிற்குச் சாதிப் பெருமை இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இன்று வரையிலும் சாப்பாடு பரிமாறுவதில் மட்டும் யாருக்குமே குறை வைக்கமாட்டாள். வீட்டிற்குள் தான் விட மாட்டார்களே ஒழிய, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில்தான், அதே கிண்ணத்தில் தான் அவர்களுக்கும் உணவளிப்பாள். கிராம வீட்டில் வசித்தபோது, சில நாட்களில் மீன் விற்பனை செய்ய வரும் பெண்களும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுண்டு. பொன்னேரிக்குக் குடி பெயர்ந்ததிலிருந்து வீட்டிற்கு யார் வந்தாலும், “உள்ள வாங்க... உட்காருங்க... எதாச்சும் சாப்பிடுங்க...” என்கிறாள். அன்றைய தினம், “மோலியார திட்டாதம்மா பாவம்...” என்று சூரப்பேட்டா கிழவி தான் அம்மாவைச் சமாதானப் படுத்தினாள்.

சாதிய நுட்பத்துடனும், தீண்டாமை நோக்குடனும் பிரித்தறிந்து சிறுவயதில் நடந்துகொண்டதில்லை என்றாலும், வழக்கத்தில் சாதியின் பெயரே “முதலியார்” என்பதால், “நம்ம மொதலாளிங்க, அவங்க வேலை செய்யிறவங்க” என்ற லாஜிக் தான் அப்படிப் பேசியதற்குக் காரணம். எனினும், சாதியத்தின் வீரியம் ஒரு கிரகணத்தின் நிழல் போல பள்ளிச் சிறுவனின் மனதில், அவனது வாழ்வியல் சூழல் நஞ்சினைப் போல ஏற்றியதாகத் தான் மேற்கூறிய சம்பவத்தை நினைவுகூர்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்க்கை மகாமகா தரித்திரத்தில் கழிந்தது. எனினும் சாதியாது பழமொழி வடிவில் தான் முதன் முதலில் எனக்கு அறிமுகமானது.

கிரிகெட் விளையாட நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சிறுவயதில் செல்வதுண்டு. அவரது குடும்பத்தார் ரெட்டியார் (MBC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் கூட, சமையல் பணியாளராக பால்வாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ - விடிந்ததும் நண்பரது வீட்டு வாசலில் தான் சிறுவர் பட்டாளம் நிற்கும். எப்பொழுதாவது நண்பரின் தாயார் சாப்பிடுவதற்குச் சத்துணவு மாவு கொடுப்பார்கள். சில நேரங்களில் நீரில் கரைத்து தோசையாகவும் வார்த்துக் கொடுப்பார்கள். பிடிக்காத திண்பண்டமாக இருந்து சாப்பிடுவதற்கு மறுத்தால் “மோலியார் ஜம்பம் வெளக்கெண்ணெய்குக் கேடு...” என்று நக்கலடிப்பார்கள். இதெல்லாம் பன்னிரண்டு, பதிமூன்று வயதில் நடந்த கதை. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி முழுவதும் - பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே இருந்த அரசுப் பள்ளியில் படித்ததால் சாதியானது சான்றிதழ் வடிவில் அறிமுகமாகி இருக்கவில்லை. அரசுப் பள்ளியில் இதர சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெருவாரியாக படித்த காலமது.

“தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் சாதியைச் சேர்ந்த பிள்ளைகள்” என எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் கலந்திருப்பார்கள். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், உடன் படித்த நண்பர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் எங்களது முன்னோர்கள் விற்றுத் தீர்த்த நிலத்தில் வேலை செய்தவர்களாகத் தான் இருப்பார்கள். போலவே என்னுடைய பெற்றோர்களும், அவர்களது பெற்றோர்களும் கூட உடன் படித்த நண்பர்களாகத் தான் இருப்பார்கள். சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நண்பர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தான் சிறுவயதில் படித்த பள்ளி இருந்தது. உடன் படித்த நண்பர்கள் ஒருநாளும் வீட்டிற்கு வந்ததில்லை. நானும் அழைத்ததில்லை. பள்ளிவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையிலும் தலித் மாணவர்கள் ஒருவரும் எங்கள் தெரு வழியாகக் கடந்து சென்றதில்லை.

உயர்நிலை வகுப்பிற்காக சோழவரம் சென்றபோதும் இதே நிலைதான். எனினும் வெளியூர் என்பதால் தலித்துகள், இதர சாதியினர் என்ற பேதமின்றி எல்லோருடனும் சமமாகப் பழக முடிந்தது. மதிய உணவைக் கூட பரிமாறிக் கொண்டதுண்டு. ஓரளவிற்கு பெற்றோர்களின் மறைமுகமான திரைமறைவு பொம்மலாட்ட சாதியக் கட்டுமானதிலிருந்தும், அதன் இருக்கதிலிருந்தும் வெளியில் வரமுடிந்தது. பின்னர் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி படித்தபோதும் நண்பர்களுக்குள் ஒரு பேதமும் இருக்காது. காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பயின்றபோது என்னுடைய அரைத் தோழனாக இருந்த பாக்கியராஜ் கிருத்துவ தலித். மற்றொருவர் வன்னார். இன்னொருவர் நத்தம் முதலியார். குடும்பத்தின் கட்டுப்பாடுகள் இன்றி மகிழ்வுடன் சுற்றித் திறந்த காலமது. போலவே, பள்ளி முதல் கல்லூரி வரையிலும் அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் பயின்றதால் பெரும்பாலும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் பலரும் ஒடுக்கப்பட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடும்பத்துப் பெரியவர்களுடன் ஏதேனும் விதண்டாவாதம் செய்ய நேர்ந்தால் “பாட சுத்தன பறையா... உனக்கு பற சகவாசம் தானே அதிகம்...” என்று குறிப்பிட்டுத் திட்டுவார்கள். “ஜாதி கெட்ட நாய மூட்றா வாய...!” என்ற வசைச் சொற்களையும் சில நேரங்களில் கேட்டதுண்டு.

அக்கா ஜெயாவிற்கு அனைன்யா பிறந்திருந்த சமயமது. வீட்டு வாசலில் “அக்கா... அக்கா...” என்று யாரோ குரலெழுப்பி அழைக்கும் சப்தம். அம்மா ஏதோ வேலையாக இருந்ததால் வெளியில் சென்று பார்த்தேன். சிறுவயதில் உடன் படித்த செந்தில் நின்று கொண்டிருந்தான். எனது கிராமத்து காலனியைச் சேர்ந்த தலித் நண்பன்.

“எங்கடா இவ்வளவு தொலைவு... வா வா... உள்ள வந்து உட்காரு...” என்றேன்.

“உங்க அம்மா இல்லையா கிருஷ்ணா...?” என்று வினவினான். அதற்குள் அம்மாவே வாசலில் வந்து நின்றுகொண்டார்கள். “காசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேங்கா...” என்றான். அம்மாவும் உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்துக்கொடுக்க, செந்தில் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான். அனைன்யா பாப்பாவிற்குத் தொட்டில் செய்து கொடுத்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக பிறகு அம்மா கூறினாள்.

“உள்ள வாடா... காஃபி சாப்பிட்றா...” என்று கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பும் வரை அசௌகரியமாகவே உணர்ந்தான். அடடா, வந்தவனை சங்கடப் படுத்திவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.

சிறுவயதில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் சிரமமான விஷயமாக எனக்கிருந்தது. மிகவும் கூச்சப்படுவேன். இப்பொழுதெல்லாம் வாயைத் திறந்தாள் மூடுவதில்லை. நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது சில புதிய நண்பர்கள் நாசூக்காக என்னிடம் கேட்பதுண்டு: “நீங்க பிராமின் தானே...!”

“ஏங்க... நாய்பீ கணக்கா கன்னங்கறேல்னு இருக்கேன்... என்னப் போயி பிராமினான்னு கேக்குறீங்களே...!” என்பேன். “இலிங்க... நீங்க ஆந்திரா பார்டர்ல இருக்கிங்களா... தெலுங்கு பிராமின்ஸ் நெறைய பேரு கருப்பா தான் இருப்பாங்க...!” என்பார்கள். “அதென்னமோங்க... எனக்குத் தெரியல... ஆனா, நான் தர லோக்கல்...” என்பேன்.

“என்னமோங்க பிரபு... உங்க பேச்சு, நடை, பாவனை”-ன்னு எல்லாம் பிராமின்ஸ் மாதிரி தான் இருக்குது என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுடன் வட இந்திய, நேபாளச் சுற்றுளா சென்றிருந்தேன். சுற்றுலாவின் முடிவில் பல வயோதிக நண்பர்களும் “நீங்க ப்ராமினா?” என்று தான் வினவினார்கள். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் சமயங்களில் என்னுடைய பதில் எப்பொழுதுமே “அதெல்லாம் இல்லைங்க... நான் தர லோக்கல்...” என்பதாகத் தான் இருக்கும்.

“சாதி இல்லை, சாதி இல்லை” என்கிறோம். எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை. சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பஞ்செட்டி கிராமம் இருக்கிறது. சென்னையுடன் போதிய தொடர்புகளும், இளம் தலைமுறை மக்களுக்கான தெளிவும் உள்ள முன்னேறிய கிராமம். எனினும் ஜாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. மேல்சாதியினருக்கும், தலித்துகளுக்குமான தொடர்பும் கூட நுட்பமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகத் தான் இருக்கிறது. தனக்குக் கீழ் நிலையிலுள்ள சாதியை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் தான் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.

சமீபத்தில் ஒருநாள் மடிக் கணினியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த ஒருவருடன் பேசியவாறு அம்மா பாத்திரங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். “ச்சே... காலனியில இருக்கறவங்க வீடு கூட கொஞ்சம் சுத்தமா இருக்கும் போல... இந்த வீடு ஏன் இப்பிடி காலனியார் வீடு மாதிரி கப்படிக்குதுன்னு தெரியல...” என்பதை உரையாடிக் கொண்டிருந்தவரிடம் மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டிருந்தாள்.

“அம்மா... நீ பேசுறது சரியில்ல... அதென்ன காலனி ஆளுங்கன்னு கம்பேர் பண்றது? தம்பிங்க யாராச்சும் வீட்டுக்கு வரும்போது இப்பிடி பேசுன உன் வாய ஒடச்சி கையில கொடுத்துடுவேன்...” என்றேன்.

“இப்ப இன்னா பேசிட்டேன்... உனக்கு அனுபவம் அதிகமா? எனக்கு அனுபவம் அதிகமா? உனக்கு இன்னா தெரியும் மொதல்ல... அதுவரைக்கும் வாய மூடு...” என்றார்கள் கோவத்துடன்.

“அப்படி பேசாதன்னா... பேசாத... அவ்வளோதான்...” என்றேன் நானும் உக்கிரத்துடன்.

“சரிடாப்பா... நான் எதுவும் பேசல நீயும் பேசாத...!” என்று வாதத்தை முடித்து வைத்தார்கள். அம்மா ஒன்றும் மோசமில்லை. தான் மேல்சாதியில் பிறந்தவள் என்று பெருமைபட்டுக் கொண்டாலும், சில நேரங்களில் இதுபோல ஒப்பிட்டுப் பேசினாலும் – சக மனிதர்களை வேண்டுமென்றே சங்கடப்படுத்தக் கூடியவள் அல்ல. ஒருவகையில் என்னுடைய தாயாரும் குடும்பத்து ஆண்களின் ஒடுக்குமுறைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவள் தான். ஆகவே அம்மாவும் ஒடுக்கப்பட்டவள் தான். எனினும் சாதிப் பெருமிதம் அவளது மனதில் ஆழப் பதிந்துள்ளது. என்னுடைய அம்மா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள். அவளது காலம் முடிந்துவிட்டது. அம்மாவை உருட்டி மிரட்டி என்ன ஆகப்போகிறது?

நீறுபூத்த நெருப்பாக நம் போன்ற படித்த, முற்போக்கான சமூகத்திடமே சாதியத்தின் கனல் கனன்று கொண்டிருக்கும்போது, சென்ற தலைமுறையின் பிற்போக்கானவர்களை குற்றம் சொல்லி என்ன ஆகிவிடப் போகிறது?