Friday, June 20, 2014

நான் வயதுக்கு வந்தபோது

“அரச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே...” – எனச் சின்னத்தம்பி பிரபு போல முகத்தில் சந்தானம் பூசிக்கொண்டு, வெகுளித்தனமாகக் கல்லூரிகளில் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு திரிந்தபோது போது அம்பையைப் பொதுநூலகத்தில் வாசித்தது. கல்லூரி வயதிற்கே உரிய ஆர்வத்தில் சிறுகதையின் சில பகுதிகளை ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்ததுண்டு. நாள்பட நாள்படத் தான் ஒருசில விஷயங்களின் உண்மைத் தன்மை புரிகிறது. காலயந்திரம் நம்மை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து வேறொரு தளத்தில் நிருத்தி இருப்பதையும் உணர முடிகிறது.


எழுத்தாளர் அம்பையுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கையில் அவரது மூன்று கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதையைத் தான் பெரும்பாலும் வாசகர்கள் குறிப்பிட்டுப் பேசுவார்கள். சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்ததாலோ என்னவோ அக்கதை பரவலாகப் பேசப்படுகிறது. அந்தக் கதையும் கூட முக்கியமானக் கதைதான். எனினும், என்னுடைய நினைவின் அடுக்குகளில் “வெளிப்பாடு, புனர், சில மரணங்கள்” ஆகிய மூன்று கதைகள் தான் மேகத்தின் பின் ஒளிரும் மின்னலென மின்னி மறைகிறது. நேற்றைய தினம், பெருமாள் முருகனும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மின்னஞ்சல் செய்திருந்தார். அந்தப் பட்டியலிலிருந்த முதல் பெயர் அம்பை தான்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அம்பையின் 11 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். (காலச்சுவடு அம்பையின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.)

“வெளிப்பாடு” – தாமிரவருணி கரையோரத்திலுள்ள ஊருக்குப் பெண்களைப் பற்றி ரிப்போர்ட் எடுப்பதற்காக ஒருத்தி வருகிறாள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் இரண்டு பெண்களுடனான உரையாடலால் நகரும் கதை. அம்பையின் சிறுகதைகளில் மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் குளிப்பதும், உடைமாற்றிக் கொள்வதும் குளத்திலும், ஆற்றிலும் குளிப்பவர்களுக்கு இயல்பான ஒன்று. புதிதாக வருபவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையே!. ஆற்றில் குளிக்குமாறு உடன் அழைத்து வந்தவன் சொல்கிறான்.

“ஐயோ! எனக்கு அங்கெல்லாம் குளிக்க வராது.”

“அய்ய! ஒண்ணுமில்லிங்க எத்தன பேரு குளிக்கிறாங்க பாருங்க.”

மார்பில் பாதித்துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும் ஈரத் தொடைகளும். ஈர முடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்ட பின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் போடவும். (பக்கம்: 2)

“தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது.” - அவளொரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதா புடவையின் முந்தானையை வாயில் கவ்வியபடி உள்ளாடை மாற்றும் சிறு காட்சியை எப்பொழுதாவது தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், எனக்கு அம்பையின் இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ரிப்போர்ட் எடுக்க வந்தவள் பொதுவில் குளிக்க முடியாது என்று சொல்லவும், ஒரு வீட்டின் சமையலறை மூலையில் ரிப்போர்ட் எடுக்க வந்தவள் குளிக்க நேர்கிறது. குளித்து முடித்து உடைமாற்றிக்கொள்ள சங்கடப்படுகிறாள். இனி அந்தப் பெண்ணின் குரலில் அம்பை:

“உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.”

தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு... சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா.” சிரித்தள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

இதுபோன்ற சின்னச் சின்ன நுட்பங்கள் அம்பையின் இச்சிறுகதையில் வெளிப்பட்டிருக்கும். கிராமத்துப் பெண்களின் மீதான ஆணாதிக்க வெளிப்பாடு, கிராமத்துப் பெண்களுடைய உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு, நகரத்து நாகரீகப் பெண்ணின் கூச்ச வெளிப்பாடு, கிராமக் கலாச்சார விருந்தோம்பலின் நெகிழவைக்கும் வெளிப்பாடு என பலநிலைகளில் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஓரிடத்தில “தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள்” என்ற ஒற்றை வரியில் அம்பை கடந்து சென்றிருப்பார்.

தாமிரபரணி கிராமத்துப் பெண்கள் பொதுவன நீர்நிலையில் குளிப்பவர்கள். அவர்கள், மாதவிடாய் சமயத்தில் இயல்பு வாழ்க்கையின் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவற்றையே இந்த ஒற்றை வரியில் கடந்து செல்கிறார் அம்பை. மாதவிடாய் சார்ந்த பதிவுகளை சமீபத்தில் மூன்று நாவல்களிலும், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையிலும் படிக்க நேர்ந்தது. அவற்றைக் கிளறி விட்டன அம்பையின் வரிகள்.


முதலில் “மாதொருபாகன்” பற்றிப் பேச வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளான ‘காளி – பொன்னா’ ஆகியோரின் மன உளைச்சலையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் ‘அஜால்குஜால்’ திருவிழாவைப் பற்றியும் ஒருசேர முன்வைக்கும் பதிவு இந்நாவல். கூவாகம் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சார்ந்தது எனில், ‘மாதொருபாகன்’ இரவுநேரத் திருவிழா – திருமணமாகிப் பல ஆண்டுகள் தாய்மை அடையாத பெண்ணையும், மலைமேல் வீற்றிருக்கும் சாமியாக வேஷம் போட்டு, முகமெல்லாம் சந்தானம் பூசி மறைத்துக்கொண்டு, பரிச்சயமில்லாதப் பெண்களுடன் உடலுறவு கொள்ள வரும் ஆண்களையும் பற்றியது. சின்னத்தம்பி படத்தில் வரும் பிரபு கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டு ஆடுவதற்கும், ஊரிலுள்ள ஆண்களெல்லாம் இந்தத் திருவிவைச் சாக்கிட்டு முகம்முழுக்க சந்தம் பூசிக்கொண்டு விடியவிடிய காமக் களியாட்டம் ஆடுவதற்கும் நிறைய விதயாசங்கள் இருக்கிறது. இத்திருவிழாவின் சிறப்பே அதுதான். பதினான்கு நாள் திருவிழாவின் ஒருநாள் இரவு மட்டுமே இந்தச் சலுகை. இந்தக் கலாச்சாரச் சடங்கையும், குழந்தையில்லா தம்பதிகளின் மன உளைச்சலையும் ஒருசேர முன்வைக்கும் பதிவாகவும் கொள்ளலாம்.


“இந்த மாசமாவது தூரம் தள்ளிப் போகாதா? ஒரு புழு பூச்சி என் வயித்துல தங்காதா?” என்று பொன்னா இந்நாவலின் சில இடங்களில் ஏங்குவாள். பொன்னாவின் புலம்பலைக் கேட்கையில் பாவமாகத் தான் இருக்கும். ‘பாவாத்தா’ கண்ணைத் திறந்தாள் தானே!

’மாதொருபாகனின் முன்னட்டை வடிவமைப்பைப் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும். டிசைனர் சந்தோஷ் – இந்தப் பாவியை என்ன செய்யலாம்? பளாரென கன்னத்தில் அறையலாமா?. அந்த அளவிற்கு மகிழ்வை உண்டாக்கக் கூடியவர். ஒரு தேர்ந்த வாசகன் டிசைனராக வரும்பொழுது, புத்தக முன்னட்டையை எவ்வளவு சிறப்பாக அர்த்தத்துடன் வடிவமைக்க முடியும் என்பதற்கு – சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஜே.பி. சாணக்யாவின் ‘முதல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ போன்ற புத்தகங்களின் முன்னட்டைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ரத்தச் சிவப்பை ஆக்ரமித்த முன்னட்டையில் அர்த்தனாரியின் முண்டத்தை மாதொருபாகன் முகப்பட்டையில் வைத்திருப்பார் சந்தோஷ். அர்த்தனாரியின் முழு உருவத்தையும் வைத்திருக்கலாமே! எதற்குக் கழுத்தறுத்து வைக்கவேண்டும்? சடங்கு என்ற பெயரில் கடவுளின் கழுத்தை இம்மக்கள் அறுக்கிறார்கள் என்பதாலா?. “வறடன் – வறடி’, ‘மலடன் – மலடி’ என சக மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கக் குழந்தையில்லாத் தம்பதிகளைக் கூறு போடுகிறார்களே அதனாலா?. புத்தக முன்னட்டையில் ஓடுவது யாருடைய ரத்தம்? கற்பம் தங்காத பெண்களின் மாதவிடாய் ரத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பொன்னாவும் அவர்களில் ஒருத்தி தானே!.

ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ – ஒரு சிறுமியின் வாழ்வை அவளது பயணத்தினூடே முன்வைப்பது. இந்நாவலின் கதை பின்வருமாறு முடிகிறது:

ரயில்வண்டி என் கண்களில் பட்டது. ஒரு பயங்கரமான வேதனை அலை என் உடலை உடைத்துக்கொண்டு வெளியேறியது. என்னுடைய கை தொடைகளுக்கு நடுவில் அந்த வலியைத் தேடத் தொடங்கியது. பிசுபிசுப்பான வெதுவெதுப்பான ரத்தம் தோய்ந்த ஒன்று பொங்கி வந்தது. என்னுடைய தொடைகளுக்கு நடுவிலிருந்து பெருகிய அது புழுதி படிந்த என் முழங்கால்களில் மாதுளைச் சாறு போலப் படியத் தொடங்கியது. புதர்களுக்குப் பின்னாலிருந்து யாரோ குசுகுசுத்தபடி சிரிப்பது போலிருந்தது. திடுக்கிட்டுப்போய் நான் என்னுடைய சிவந்த பிசுபிசுப்பான கைகளைப் புல்லில் துடைக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புற்களுக்கும் புதர்களுக்கும் நடுவில்தான் கின்னியின் ரத்தமும் சிந்தியிருக்கும் என்று எண்ணம் வந்தது. உடனே நான் சுரங்கத்திலிருந்து விலகி மேலே ஏறத் தொடங்கினேன். புற்களாலும் கற்களாலும் மூடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் தடுமாறி விழுந்து ஓடத் தொடங்கினேன்.

பிறகு எனக்கு அந்தப் பாறை கண்ணில் பட்டது. நான் நின்றேன். சட்டென்று நான் பாரமற்று இருப்பதுபோலவும் அனைத்திலிருந்தும் விடுபட்டவளாய்த் தூய்மையானவாளாய் உணர்ந்தேன். இதுவரையிலான எனது உலகம் எப்போதைக்குமாக மறைந்துபோய்விட்டது. அதன்மீது முளைத்தெழுந்திருக்கும் வசந்தத்தின் புற்களாலும் சகதியில் அழுக்குடன் உருகிக் கிடக்கும் பனியிலும் என்னுடைய ரத்தத்தை நான் கழுவிக்கொண்டேன். புல்லின் மீது நான் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது நான் நானாகி இருந்தேன். கடவுளை அடைந்து நான் அவனையும் கடந்துபோயிருந்தேன்.

(சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா – பக்கம்: 268, காலச்சுவடு பதிப்பகம்)

கடந்த ஆண்டு வெளிவந்த ஸர்மிளா செய்யித்தின் “உம்மத்” நாவலிலும் ஒரு சிறு பகுதி வருகிறது. “பெண்குறியில் இருந்து திடீரென வெளிப்பட்ட இரத்தப் பெருக்கு கால்களுக்கிடையே வடியத் தொடங்கியது. இரண்டு தினங்களாக நிம்மதியிழந்து போயிருந்தாள். ஏதோ தீர்க்கவொண்ணாத நோயின் அறிகுறி என்கிற ஊர்ஜிதத்தில் நொய்ந்துபோனாள்”. (பக்கம்: 48)

யுவ புரஸ்கார் விருதுபெற்ற மலர்வதியின் ‘தூப்புக்காரி’ நாவலிலும் தூமைத்துணி அலசும் சில பகுதிகள் வரும். நாவலின் மொழிநடை சிறப்பாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அவகாசம் எடுத்து, கடினப்பட்டாவது ஒரு மேய்ச்சல் பார்வையில் படித்து முடிக்க வேண்டும்.

சென்னையை விட்டு வெளியில் வசிக்கும் எழுத்தாள நண்பரொருவர் “இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்” புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகம். நண்பருக்குக் கொரியர் செய்வதற்கு முன்பு ஓர் ஓட்டு ஓட்டிவிடலாம் என்று புரட்டத் துவங்கினேன். ஏராளமான எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. போலவே, பக்கம்: 85-ல் ஒரு கவிதையும் காணக்கிடைத்தது.

நான் வயதுக்கு வந்தபோது – கே. கீதா

உடம்பு முழுவதும் ஓரிடத்தில்
உருண்டை கட்டியபோது
ஒரு அந்தரங்கமலை நிசப்தமாய்
வெடித்துச் சிதறும் போது
வலியை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள
முயற்சிகள் மேற்கொண்டபடி...
திடீரென ஓர் அதிர்வு பீறிட்டது
என்னுள் நானே
திடமெனும் நான் திரவமாகி
மீண்டும் இறுகி
துண்டுகளானேன்
மாதத்திற்கொருமுறை வேறு வழியற்று
என்னை நான் வலியாய்
மாற்றிக்கொள்ள வேண்டி வந்து...
செத்து...
மேலே மிதக்காத காயத்திற்கு
‘பிளாஸ்டர்’ போடவியலாது
பக்க எலும்புகளை நொறுக்கி மாவாக்கவியலாது
முடங்கிக் கிடந்து மூழ்கிப்போக
முடிவெடுத்துள்ளேன்
முப்பத்தியாறு மணிநேரச் சோர்வை
அப்படியே அழுத்திக் கொண்டு
தவிர்க்கவியலாத் தீண்டாமையாய்
இருக்கவியலாது
நாகரிகத்துள் நான்கடி முன் நடந்து
தளர்ந்துபோனேன்... நீர்த்துப் போனேன்
ஓட்டமும் நடையுமாய்
பாதிவேலைகளை முடிக்கவியலாது
முதுகெலும்பை சம்மட்டியாலாவது
நீட்டித்துக் கொள்ள
இரும்புச் சங்கிலிகளாலாவது இம்சையை
கட்டிப் போடவேண்டுமென்றிருகிறது
மீண்டும் மீண்டும்
முப்பது நாட்களுக்கொருமுறை
மறுபிறவி எடுத்தபடி...
குடலை முறுக்கிப் பிழியும்
வலிமிகும் பொழுது
இப்பொழுது
- (நீலமேகாலு) ‘நீலமேகங்கள்’ 1993

துரியோதனிடமும், சகுனியிடமும் விளையாட்டில் தோற்று பஞ்சபாண்டவர்கள் சூதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். விராடநாட்டு அரசனுக்குப் பணியாளாக வேலைக்குச் சேர்கிறான் யுதிர்ஷ்டன். விராட தேசத்துப் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாக திரௌபதி இருக்கிறாள். விராட அரசனும், யுதிர்ஷ்டிரனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏனென்று தெரியாமல் கையில் கிடைத்தப் பொருளை எடுத்து யுதிர்ஷ்டிரனின் முகத்தில் மீது வீசி எறிகிறான் அரசன். அது தர்மனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. பணிப்பெண்ணாக அரண்மனையில் வேலை செய்யும் திரௌபதி, அருகிலிருக்கும் கோப்பையை எடுத்துக்கொண்டு தர்மனிடம் ஓடுகிறாள். துளித்துளியாகச் சிந்தும் ரத்தத்தை அந்தக் கோப்பையில் ஏந்துகிறாள்.

விராட அரசன் கேட்கிறான்: “என்ன செய்கிறாய் பெண்ணே...!”

“இவரது ரத்தம் சிந்தும் பூமி புல்பூண்டு முளைக்காமல் நாசமாய்ப் போகும்...!” என்கிறாள் தர்மனைப் பார்த்து. விராடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மறைந்து வாழும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க தர்மன் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறான்.

மாதவிலக்காகி ஒற்றையாடையில் கிடக்கிறாள் திரௌபதி. சூதில் அவளை வைத்து விளையாடி பாண்டவப் புத்திரன் இழந்தான் என்பது அதுவரையில் திரௌபதிக்குத் தெரியாது. தலைமுழுகி கூந்தலில் விரல்நுழைத்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறாள் அவள். வேறொரு கை கூந்தலைப் பற்றவும் யாரென்று கருங்கூந்தலை விளக்கிப் பார்க்கிறாள். துச்சாதனன் இதழில் புன்னகை தழுவ நின்றுகொண்டிருக்கிறான்...!

“நீசனே...! விலக்கான பெண்ணைத் தொடுவது பாவமில்லையா? என்னுடைய கணவர்களுக்குத் தெரிந்தாள் உன் சிரசு உடம்பில் இருக்காது...!” என்கிறாள்.

“ஆங்.. கிழிச்சானுங்க... அந்த அடிமை நாய்கள் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். நீயும் அடிமையானாய். மகாராணி என்ற நினைப்பில் பேசாதே” என்றவாறு கூந்தலைப் பற்றித் தரதரவென சபைக்கு நடுவில் ஒற்றையாடையுடன் இழுத்துக்கொண்டு செல்கிறான் துச்சாதனன். திரௌபதியின் தூமை உதிரம் வழியெல்லாம் சிந்தியிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஒற்றையாடையில் அவள் சிந்திய ரத்தமே இதிகாசத்தில், இலக்கியத்தில், படைப்பில் பதிவான முதல் மாதவிடாய்ப் பதிவாக இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் மேலுள்ள பதிவுகளைப் பார்கிறேன். இதில் நிர்மல் வர்மாவும், பெருமாள் முருகனும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பிரச்னையை ஆண்கள் பேசக்கூடாதா என்ன?

இந்த காலத்துச் சிறுமிகள், சிறுவயதிலேயே பெரிய மனுஷி ஆகிவிடுகிறார்கள். சிக்கலான விஷயம் தான். எனக்குத் தெரிந்த “ஆறாவது, ஏழாவது” படிக்கும் இரண்டு சிறுமிகள் சென்ற மாதத்தில் பூப்படைந்ததாகக் கூறினார்கள். பாவம் என்று நினைத்துக் கொண்டேன். உறவினர்களோ, “தனக்குத் தந்தன... தனக்குத் தந்தன... தனக்குத் தந்தனன...!” என்று ரெக்கார்ட் போட்டு விழாவையே சிறப்பாக முன்னெடுகிறார்கள். யாருக்கு...? பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு...! ஆறுமாதங்களுக்கு முன்பு பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். காதணி விழாவுக்குக் கவர்னர் ராசைய்யா சிறப்பு விருந்தினராக வருகைத் தருவதாகத் தட்டி வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மஞ்சள் நீராடு விழாவும் அப்படித் தானே!

கடந்த புத்தகக் கண்காட்சியில் ‘திரு’ – அவனுடைய ஒன்பதாவது படிக்கும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். காலச்சுவடு அரங்கிற்கு வந்தவன், “அண்ணா... இவளுக்கு ஏதாச்சும் புக்ஸ் எடுத்துக்கொடுங்க? உங்களைக் காமிக்கத் தான் அவளக் கூட்டிட்டு வந்தேன்...!” என்றான். சிறுவர்களுக்காகக் காலச்சுவடு வெளியிட்டிருந்த சில புத்தகங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். மறுபடியும் அரங்கிற்குள் சென்றவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது “வற்றும் ஏரியில் மீன்கள்” என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.

“இந்த வயசுல அம்பையைப் படிப்பாளான்னு தெரியலையேடா...!” என்றேன் திருவைப் பார்த்து.

“இல்ல... நான் எடுத்துக்குறேன்...” என்று கிளம்பிச் சென்றாள் அந்தச் சிறுமி.

இந்த காலத்துல தான் சின்ன வயசுலயே பெரிய மனுஷி ஆயிட்றாளுங்களே...! நாமென்ன சொல்ல...! இவர்கள் எல்லோரும் அம்பையை அவசியம் படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் “வெளிப்பாடு” சிறுகதையை நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்.

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - க்ரியா பதிப்பகம்
2. அம்பையின் முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்
3. வற்றும் ஏரியின மீன்கள் - காலச்சுவடு பதிப்பகம்
4. தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள் - சாகித்ய அகாதெமி
5. தூப்புக்காரி - அனல் வெளியீடு
6. மாதொருபாகன் - காலச்சுவடு பதிப்பகம்
7. உம்மத் - காலச்சுவடு பதிப்பகம்

No comments: