Wednesday, June 18, 2014

அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ

“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? 

அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன?

மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம்.

இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!”

வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?”

“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள்.

“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள்.

“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள்.

“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள்.

“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள்.

அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார்.

“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள்.

கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா?

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும்.

புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’.

“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன்.

“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார்.

“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார்.

உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள்.

ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான்.

சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள்.

ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள்.

ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள்.

“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது.

ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான்.

கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை.

(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135)

சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன.

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன்.

No comments: