Saturday, January 31, 2009

Thaneer Vitto Valarthom - part 1, 2, 3, Thuklaq

என்னுடைய சித்தப்பா வாரம் தவறாமல் துக்ளக் வார இதழை வாங்கி படிக்கும் பழக்கம் உடையவர். அது முழுக்க முழுக்க அரசியல் பத்திரிக்கை என்று நினைத்து நீண்ட காலம் ஒதுக்கி இருக்கிறேன்.

ஒரு நாள் Writer S. Guru Murthy அவர்களின் இந்திய பட்ஜெட் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அது முதல் அவரது எழுத்துக்களை தவறாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் துக்ளக்கில் எழுதி வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளையும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பெயரில் 3 பாகங்களாக Alliance Book Company (Mylapore) வெளியிட்டுள்ளார்கள். மூன்று பாகங்களும் சேர்த்து இதன் விலை ரூபாய் 525.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்: எஸ். குரு மூர்த்தி (Rs. 525)
பதிப்பகம்: அல்லயன்ஸ் புக் கம்பெனி

கடந்த 5 வருடங்களாக துக்ளக்கில் வரும் S. Guru Murthy அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். இவர் தீவிர இந்துத்துவவாதி, BJP ஆதரவாளி, RSS மற்றும் VHP -ல் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியாவிற்கு சேவை செய்து வருபவர். தேர்ந்த படிப்பாளி மற்றும் பொருளாதார மேதை.

இவர் அடிப்படையில் charted accountant. இவர் indian budget, world market, small scale industry மற்றும் இதர விஷயங்களைப் பற்றி எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைப் படித்துவிட்டு அசந்திருக்கிறேன்.

சிக்கலான பொருளாதார விஷயங்களைக் கூட எந்த டாம்பீகமும் இல்லாமல் எளிய முறையில் புரியும்படி எழுதி விளக்கி விடுவார்.

நம்மவர்கள் மேற்க்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் போது இவர் மட்டும் Indian culture, Family structure and its specialty, Indian politics என எழுதுபவர்.

சில கட்டுரைகளைப் படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், படித்து முடித்தவுடன் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்து கொண்ட நிம்மதியை உணரலாம்.

இவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.gurumurthy.net

Monday, January 26, 2009

Alagilaa Vilayaattu by Pa Ragavan

சிறு வயதில் பொட்டிக் கடையில் திருடி, நண்பர்களுடன் மாட்டிக்கொண்டு ஊராரிடம் அவமானப்பட்டதில் இருந்து திருட்டு பழக்கத்திற்கே Good Bye சொல்லி இருந்தேன். அது 2004 -ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.

பொன்னேரி Branch library -ல் இலக்கிய பீடம் மாத இதழ் வாசித்துக் கொண்டு இருந்தேன். பா. ராகவன் எனக்கு அப்பொழுது பரிச்சயம் இல்லாத எழுத்தாளர். அவர் எழுதி முதற்பரிசு பெற்ற அலகிலா விளையாட்டின் நான்காவது அத்தியாயம் படித்துக்கொண்டு இருந்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே Librarian -னிடம் கேட்டு அதற்கு முந்தைய 3 பிரதிகளையும் வாங்கி இதழிலிருந்து 4 அத்தியாயங்களையும் கிழித்து எடுத்துக் கொண்டேன்.

மாதத்தின் முதல் வாரத்தில் இலக்கிய பீடம் Ponneri library -க்கு வரும். வந்த உடனே முதல் ஆளாக சென்று எனக்கு தேவையான பக்கங்களைக் கிழித்து எடுத்துக் கொள்வேன். தொடர்ந்து ஒரு வருடங்களுக்கும் மேல் வந்த அத்தியாயங்கள் அனைத்தையும் கிழித்து எடுத்து, Binding செய்து இன்றுவரை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். இது எதுவுமே Librarian -க்கு இன்று வரை தெரியாது.

புத்தகமாக கிடைத்தால் Library-க்கு வாங்கி கொடுத்து விடலாம் என்றால் Egmore Permanent Book Exhibition -யும் சேர்த்து எங்குமே கிடைக்கவில்லை.

தமிழோவியம்.டாட்.காம் மூலம் மின்னூல் பெற இங்கு சுட்டவும்.

அலகிலா விளையாட்டு - பா. ராகவன்

எல்லாவற்றையும் துறந்து என்பதை விட, எல்லாவற்றையும் வெறுத்து இமய மலைக்கு சென்ற ஒரு மனிதனின் கடந்த காலத்தை அவனே அசை போடுவதாக கதை செல்லும்.

குடும்ப வருமையால் வேதபாட சாலையில் படித்த ஒருவன், படித்து முடித்து நீண்ட நாள் கழித்து Post Master வேலைக்கு அதே ஊருக்கு செல்கிறான். முதல் வேலையாக தான் படித்த பாட சாலைக்கு சென்று குருவை பார்க்கிறான்.

வேதத்தில் குரு சொல்லிக்கொடுத்த அனைத்தும் உண்மைதான். அப்படியெனில் வேதத்தையே மூச்சாகவும், அதுவே தன்னைக் காப்பாற்றும் என்று சொல்லிய குருவின் வார்த்தை மட்டும் ஏன் பலிக்கவில்லை...அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சங்கடங்கள்... என வேத தத்துவங்கள் மீது பல கேள்விகளை எழுப்புகிறான்.

இடையில் குருவின் கடைசி மகள் மீது காதல் கொள்கிறான். தன் தந்தையின் கஷ்டங்களைப் பார்த்த அவள் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என அவனை நிராகரித்து விடுகிறாள். அவன் விரக்தியுடனும் வேதனையுடனும் Job Transfer -ல் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றுவிடுகிறான்.

நீண்ட நாள் கழித்து அவளுடைய கல்யாணப் பத்திரிகை இவனுக்கு வருகிறது. தலையில் இடி இறங்கியதாக உணர்ந்த இவன் Post Master வேலையை உதறி விட்டு வேத ஆசிரியராக சென்றுவிடுகிறான். சில வருடங்களில் அதுவும் பிடிக்காமல் வட நாட்டிற்கு சென்று விடுகிறான்.

தன்னுடைய வாழ்க்கையின் கடைசி காலத்தில், தனது குருவின் மகளை, தன் காதலியை விதவைக் கோலத்தில் பார்க்கிறான்.

ஏதோ ஞாபகத்தில் கால் தவறி கீழே விழவும் மரணப் படுக்கையில் படுக்கிறான். மயங்கிய நிலையிலும் அவனுடைய உளவியல் சார்ந்த கேள்விகள் ஓயவில்லை.

இந்தக் கதையை படிக்கும் போது கதாப்பாத்திரமே அருகில் இருந்து நமக்கு கதை சொல்வதுபோல் உணர முடியும். குருவின் கஷ்டங்களைப் பார்க்கும் மாணவனின் உளவியலை அழகாக பா. ராகவன் இந்த கதையில் சொல்லி இருப்பார்.

எழுத்தாளர் பா. ராகவனின் படைப்புகளைக் காண இங்கு செல்லவும்:
www.writerpara.net

Saturday, January 24, 2009

Gopalla Gramam, Gopallapurathu Makkal by ki ra


கி ராஜநாராயணன் அவர்கள் கிராமியக் கதைகளுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். தாத்தா சொன்ன கதைகள், கிராமியக் கதைக் களஞ்சியம், குழந்தைக் கதைகள், கரிசல் கதைகள் என பண்முகமாக வட்டார இலக்கியத்திற்கு தனது பங்கினை ஆற்றியுள்ளார்.

கிராமிய எழுத்தில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு இவர் எழுதிய பல தொடர்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அவற்றில் கோபல்ல கிராமத்து மக்கள் என்ற இவருடைய படைப்பிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. மேலும் நம் முன்னோர்களுடைய வழக்கு மொழி அழிந்து வருவதால், தனது கடின உழைப்பின் மூலம் ஆராய்ச்சி செய்து வட்டார மொழிக்கான ஒரு அகராதியே தயாரித்துள்ளார். நான் நேரில் சென்று பார்க்க ஆசைப்படும் நபர்களில் இவரும் ஒருவர்.

கோபல்ல கிராமம் (Rs: 80)
கோபல்ல கிராமத்து மக்கள் (Rs:120) - கி ராஜநாராயணன்
வெளியீடு:
அன்னம்

ஒவ்வொரு கிராமத்திலும் கோவில் மாடு சுற்றிக்கொண்டு இருக்கும். கோபல்ல கிராமம் மட்டும் விதிவிலக்கா என்ன?. அப்படி கோபல்ல கிராமத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் கோவில் மாட்டை மையமாக வைத்தே கோபல்ல கிராமம் நாவலானது கிராமத்தின் எழிலோடு நடைபோடுகிறது.

சிறு வயதில் தவறு செய்தால் கோவில் மாடு என்று திட்டுவார்கள். ஆனால் அந்த ஜீவனுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி நாவலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்.

கோபல்ல கிராமத்து மக்கள் கதையானது கரிகால் மக்களுடைய கலாச்சாரம் மற்றும் அவர்கள் பேசும் மொழியோடு கலந்து செல்கிறது. நாவலின் ஒரு இடத்தில் உடன் கட்டை ஏறுதல் பற்றியும், அதன் முறைகளையும் அழகாக சொல்லி இருப்பார். இயற்கையோடு பிணைந்து வாழும் கிராமத்தின் உணர்வு பூர்வமான வாழ்க்கையை தனது தேர்ந்த எழுத்தின் மூலம் தொய்வில்லாமல் கொண்டுசென்றுள்ளார்.

Thursday, January 22, 2009

Siluvai raj sarithiram, Kaalachumai and landanil irunthu siluvai raj

ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டபாணி அண்ணா summer leave -ற்கு Delhi -ல் இருந்து Ponneri வந்திருந்தார்கள். கூடவே Delhi book fair -ல் இருந்து சிலுவைராஜ் சரித்திரம் மற்றும் காலச்சுமை என்ற இரு நாவல்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். கூடவே கி.ரா-வின் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்.

இரண்டு நாவல்களையுமே முனைவர் ராஜ் கௌதமன் எழுதி இருந்தார். அதற்கு முன் இவருடைய புத்தகங்களை நான் படித்ததில்லை. கீழுள்ள மூன்று நாவல்களுமே அவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதைத் தவிர தலித் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என தனது பன்முகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs: 260)

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில், Indian Army - ல் வேலைபார்க்கும் ஒருவருக்கு மூத்த மகனாக, கிறித்துவ தலித் சமுதாயத்தில் சிலுவை ராஜ் பிறக்கிறான். இங்கிருந்து தான் நாவல் ஆரம்பமாகிறது.

40 வருடங்களுக்கு முன்பு வரையிருந்த கிராம ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையினூடே நாவலானது பயணிக்கிறது.

சிலுவை ராஜின் வழியாக கிராம ஆரம்பப் பள்ளி வாழ்க்கையையும், school hostel and college hostel வாழ்க்கையையும் ராஜ் கௌதமன் படம் பிடித்துக் காட்டுகிறார்.

நாவலின் ஆரம்பத்திலும் சரி, கல்லூரி முடித்து வேலை இல்லாமல் இருக்கும்போதும் சரி வாழ்க்கையை அதன் இயல்போடு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். UG -ல் BSC Chemistry படித்துவிட்டு, சந்தர்ப்பம் காரணமாக MA Tamil படிக்க வேண்டிய சூழ்நிலை சிலுவை ராஜிற்கு ஏற்படுகிறது.

வேதியலும், தமிழும் படித்திருந்தாலும் சிலுவை ராஜ் தமிழ் சார்ந்த துறையில் செல்லவே விரும்பியதால், விளம்பரத்தை
ப் பார்த்து Govt college lecturer post -க்கு விண்ணப்பம் செய்கிறான். விண்ணப்பித்த வேலையானது இந்து தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு ஆகையால் இவன் நிராகரிக்கம்படுகிறான்.

கிறித்துவனாக இருப்பதால் தானே வேலை கிடைக்கவில்லை எனவே இந்துவாக மதம் மாறிவிடலாமென்று ஆதீனத்திடம் சென்று தனது
பெயரை மாற்றிக்கொண்டு இந்துவின் பெயரில் சாண்றிதழ் வாங்கிக்கொள்வதோடு இந்த நாவல் முடிகிறது.

தன் பெயரை மாற்றிக்கொண்டு , வேலையிலும் சேர்ந்து சிலுவை ராஜ் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அடுத்த நாவலில் காலச்சுமையாக விரிகிறது.

காலச்சுமை - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs. 160)

இந்த நாவலானது சிலுவை ராஜ் சரித்திரத்தின் தொடர்ச்சி. இந்துவாக மாறி Govt college lecturer வேலையில் பல கனவுகளுடன் சேர்ந்து, அங்கு தான் சந்திக்கும் அனுபவங்களினூடே நாவல் செல்கிறது.

என்னதான் தன் பெயரை மாற்றிக்கொண்டாலும் இடையிடையே சிலுவை ராஜின் நினைவுகளும் வந்து செல்லும் இடங்களில் நகைச்சுவை வெளிப்படுகிறது. மேலும் ஒரு லட்சியத்தோடு ஆரம்பத்தில் வேலைக்குச் சேர்ந்தவன், பிறகு எப்படி தன் பாதையை வகுத்துக்கொள்கிறான் என்பதாக கதை பயணிக்கிறது.

கிராமங்கள் நகரங்களாக மாறிவரும் இன்றைய சூழலில் இந்நாவல் நம்மை அழகானதொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

கரடு முரடான அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பகிர்வுகளையும், நிகழ்வுகளையும் தனது தேர்ந்த எழுத்தின் மூலம் அழகு சேர உணரவைக்கிறார்.

லண்டனிலிருந்து சிலுவைராஜ் - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs:90)

நான் வேலை செய்யும் இடம் Egmore -ரில் இருப்பதால் மதியம் lunch முடித்து Chennai Kannimara Library -க்கு பக்கத்திலுள்ள Permanent Book Exhibition
-க்கு வாரத்தில் இரண்டு முறை செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் போது லண்டனிலிருந்து சிலுவை ராஜ் புத்தகம் வாங்கினேன்.

சிலுவை ராஜ் நமக்கு கிராமத்து பையனாக,
college lecturer -ஆக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு ஐரோப்பிய பயணியாக இந்த புத்தகத்தின் மூலம் தனது மகளின் லண்டன் வீட்டிற்கு பயணம் செய்கிறான்.

தனது மானைவியுடனான இந்த பயணத்தில் அவன் பார்க்கும் சிறப்புமிக்க இடங்களையும், பயணத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களையும், உடன் பயணம் செய்யும் நண்பர்களின் அணுகுமுறையையும் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறான். இங்கிருந்து அயல்நாடு சென்று வேலைபார்ப்பவர்களின் பெற்றோராக சந்திக்கும் சிரமங்களை நகைச்சுவை இழையோட பகிர்ந்துகொள்கிறான்.


Lecturer & Writer Raj gowthaman தனது வாழ்பனுபவங்களை இந்த நாவல்களின் மூலம் பகிர்ந்து கொண்டாலும், படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வரையில் கொண்டு செல்கிறார்.

Thursday, January 15, 2009

Mahabharat in tamil, Paruvam, Uba Pandavam

மகாபாரதம் - ராஜாஜி
வெளியீடு:
வானதி

ராஜாஜியால் எழுதப்பட்ட இந்நூல், வானதி பதிப்பகத்தார் வெளியிட்டில் மகாபாரதம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. என்னுடைய கல்லூரி நாட்களில் எனக்கு இந்த புத்தகம் படிக்கக்கிடைத்தது.
சிறுவயதில் தூர்தர்ஷன் டிவியில் பாரதக் கதைகளை ஆர்வமுடன் பார்த்த நாட்கள் உண்டு. அதுவும் சண்டைக் காட்சிகளை மட்டுமே பார்த்துவிட்டு மற்ற கட்சிகளை ஒதுக்கிவிடுவேன்.

மகாபாரதம் முழுவதிலும் உள்ள முக்கியமான கதாப்பாத்திரங்கள் அனைத்தையும் எளிய முறையில், கோர்வையுடன் எழுதியது அவருக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வாரம்.
சாந்தனு மஹாராஜா காதல் வேகத்தில் கங்கைக்கு செய்து கொடுத்த சத்தியம், பிதாமகனே சாந்தனுவுக்கு சத்தியவதியை மணம்முடிக்க மீனவ மன்னனிடம் சென்றது என ஒவ்வொரு அத்தியாயமும் தேர்ந்த சிற்பியின் வெளிப்பாடு. பீஷ்மர் அவருடைய தம்பிகளான விசித்திர வீரியரியன், அவனுடைய புத்திரர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் வேலைக்காரிக்கு பிறக்கும் மகன் விதுரன், குந்தி, காந்தாரி, கௌரவர்கள், பாண்டவர்கள் என ஒவ்வொரு நபர்களுக்கும் தனிக் கதைகள். குழந்தை பருவத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் வளரும் பொறாமை மற்றும் பகையின் கதை. ஆச்சாரியர்களான கிருபர், துரோணர் கதைகள். துரோணர் மகன் அசுவத்தாமன், துருபதன் அவனுடைய மகன் திருஷ்டத்யும்னன், மகள் திரௌபதி. பீஷ்மனை வதம் செய்ய பிறவி எடுத்த சிகண்டி என இது ஒரு புறம் இருக்க, கீதையை உபதேசம் செய்த மாயக்கண்ணன் என கதையில் வரும் விசேஷமான அத்தனை கதா பாத்திரங்களையும் கண்முன் நிருத்துவார். இடியாப்ப சிக்கலான பாரதக்கதைகளை, அவருடைய தேர்ந்த எழுத்தின் மூலம் வாசகர்களுக்கு எளிமையாக புரியும்படி செய்துள்ளார்.

வானதி
பதிப்பகத்தார் வெளியீட்டில் வரும் இந்த புத்தகம், இன்றைக்கும் சரி சந்தைக்கு வந்த ஒரே வாரத்தில் தீர்ந்துவிடும்.

குறிப்பு: ஒரு முறை ராஜாஜியிடம் இதுநாள் வரை உங்களுக்கு மனநிறைவை தந்த செயல் எது என்று கேட்கப்பட்டதாம். அதற்கு பாரதம் மற்றும் ராமாயண காவியங்களை தொடராக எழுதியது என்று கூறினாராம்.


மகாபாரதம் - ராஜாஜி
பருவம் - பைரப்பா(கன்னட மொழிபெயர்ப்பு)

வெளியீடு:
சாகித்ய அகாடமி புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.

நான் என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பொன்னேரி கிளை நூலகத்திற்குச் சென்று வருவது வழக்கம். பச்சையப்பன் கல்லூரியில் Msc maths படித்துக் கொண்டிருந்ததால் பொன்னேரியிலிருந்து கல்லூரிக்கு சென்று வர மூன்று மணி நேரம் ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே ரயில் பயணத்தின்போது படிக்க எனக்கு பிடித்த புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்துக்கொள்வேன். அப்படி நான் புத்தகங்களை தேடிக்கொண்டு இருந்தபொழுது பருவம் என்ற மொழி பெயர்ப்பு நாவல் காணக்கிடைத்தது. இந்த படைப்பிற்கு கன்னட எழுத்தாளர் பைரப்பவிற்கு சாகித்திய விருது கிடைத்திருக்கிறது.

பருவம் என்ற தலைப்பை பார்த்தவுடன் இது காதல், குடும்ப சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமோ என்று நினைத்தேன். இருந்தாலும் சாகித்ய அகடமி பரிசு பெற்ற புத்தகம் என்பதால் விரும்பி எடுத்துக்கொண்டேன். அருமையான மொழிநடை, தேர்ந்த மொழிபெயர்ப்பு. ராஜாஜியிடமிருந்து மாறுபட்ட நடை. நான் படித்த புத்தகங்களில் முழு மனநிறைவைக் கொடுத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.


உப பாண்டவம் - எஸ். ராம கிருஷ்ணன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்

சமீப எழுத்தாளர்களில் எஸ். ராம கிருஷ்ணன் புத்தகங்களை விரும்பி படிக்கிறேன். இவருடைய துணை எழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் அனைத்தும் ஆனந்த விகடனில் பெரிய வெற்றியை பெற்ற தொடர்கள். இவர் எழுதிய நாவலான உப பாண்டவம் பாரதக் கதைகளை வேருதளத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்காமல் சோர்ந்துபோயிருந்த சமயம் ஒரு யோசனை தோன்றியது. எஸ். ரா அவர்களுக்கே phone செய்து நேரடியாக விசாரித்தாலென்ன? அவரிடமே நேரடியாக புத்தகத்தை வாங்கினாலென்ன?...

உடனே அவருடைய phone number கண்டுபிடித்து தொடர்புகொண்டேன். அவருடைய மனைவிதான் என்னுடன் பேசினார். எஸ்.ரா- வைப்பற்றி விசாரித்துவிட்டு புத்தகத்தைப்பற்றியும், உங்களிடம் விலைக்கு கிடைக்குமா என்பதைப் பற்றியும் விசாரித்தேன்.

தி நகரிலுள்ள ஒரு புத்தக நிலையத்தின் பெயரைச்சொல்லி அங்கு கிடைக்குமென்றார். தேடிக்கண்டுபிடித்து அந்த கடைக்கு சென்றால் அங்கும் இல்லை என்று சொன்னார்கள். நீண்ட நாள் கழித்து Any Indian (www.anyindian.com) புத்தக கடைக்கு சென்றிருந்தேன். அங்கு தற்செயலாக உப பாண்டவம் நாவலை பார்க்க நேர்ந்தது. உடனே விலைக்கு வாங்கிவிட்டேன்.

பாரதக்கதை நடந்ததாக இன்று வரை நம்பப்படும் பல இடங்களுக்கும் நேரில் சென்று, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை என அவர்களின் வழியாக கதைகளைக் கொண்டு செல்கிறார்.

புத்தக முன்னுரையில் இவர் கூறியது போல் "மகா பாரதம்" ஒரு வார்த்தையாக இவருக்கு அறிமுகமாகி இருந்தாலும், சரியான எழுத்தின் மூலம் முழுமையான படைப்பாக நமக்கு தந்திருக்கிறார். இந்தப் புத்தகம் இப்போது பல இடங்களிலும் கிடைக்கிறது.

இவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.sramakrishnan.com