Monday, March 30, 2009

The Adventures of Oliver Twist - Charles Dickens

ஆலிவர் ட்விஸ்ட்: மித்ரா (Rs:26)
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

19 -ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் (Oliver Twist) ஆங்கில இலக்கியத்தில் ஒரு முக்கியமானப் படைப்பு. The Pickwick Papers, The Life and Adventures of Nicholas Nickleby, The Old Curiosity Shop, Barnaby Rudge போன்ற இதர சில புகழ் பெற்ற படைப்புக்களையும் இவர் இயற்றியுள்ளார். பெரும்பாலும் இவரது படைப்புக்கள் சமூகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது.

எனது பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பாடப் புத்தகத்தில் அரைகுறையாக ஆலிவர் ட்விஸ்டைப் படித்த ஞாபகம். கடந்த சில நாட்களுக்கு முன், மித்ரா என்ற பெயரில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மொழி பெயர்ப்பில் படிக்க நேர்ந்தது. மறுவாசிப்பின் மூலம் விட்டதை பிடித்தத் திருப்தி எனக்கு.

லண்டனிலிருந்து 130 மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் ஆலிவரை பெற்றெடுக்கிறாள் திருமணமாகாதப் பெண். அவள் சிசுவை ஈன்றவுடன் மருத்துவச்சியிடம் ஏதோ சொல்லிவிட்டு ஜன்னிகண்டு இறக்கிறாள். தனது மூதாதையர் யார் என்று தெரியாமல் அனாதையாக வளர்கிறான் ஆலிவர் ட்விஸ்ட். சரியான சாப்பாடும், உடைகளும் இல்லாமல் கஷ்டப்படுகிறான். பிறகு வயதின் காரணமாக அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள்.

ஒருநாள் அவனுடைய சகாக்களில் ஒருவன் ஜீவிக்கத் தரும் காஞ்சி தனக்கு போதவில்லை, எனவே நம்மில் ஒருவர் அதிகமாக காஞ்சி தரும்படி நிர்வாகியைக் கேட்போம் என சொல்லுகிறான். யார் சென்று கேட்பது என்ற வினா வந்தவுடன் ஆலிவரை தேர்வு செய்கிறார்கள். ஆலிவரும் சென்று கேட்க அவனையும், உடன் நின்ற சிலரையும் தனிச் சிறையில் அடைக்கிறார்கள். அவனுடைய அந்த போக்கை செய்யக் கூடாத குற்றமாகக் கருதி அவனை விற்றுவிட முடிவு செய்கிறார்கள். அதன் படி அவனை விற்பது குறித்த அறிவிப்பு செய்கிறார்கள்.

அறிவிப்பைப் பார்த்து சவப்பெட்டி செய்யும் ஒருவன் ஆலிவரை அழைத்துச் செல்கிறான். அங்கு அவனுடைய மனைவியும், அவளுக்கு உதவி செய்பவளும் கொடுமைப் படுத்த வீட்டை விட்டு வெளியேறுகிறான். லண்டனுக்கு சென்றால் சுகமாக வாழலாமென்று பல மைல்கள் பயணம் செய்கிறான்.

எதிர்பாராத விதமாக பிக் பாக்கட் ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டு அவர்களுடன் இருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். திருட்டுக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு திண்டாடும் அவனுக்கு அங்கு சில நல்ல உறவுகள் கிடைக்கிறது. அதன் மூலம் அவன் தனது தாய் தந்தையரைப் பற்றி தெரிந்து கொள்கிறான். கடைசியில் அவன் தந்தையின் நண்பனே அவனை தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொள்கிறான்.

ஆலிவர் ட்விஸ்ட், சார்லஸ் டிக்கன்ஸின் சாகா வரம் பெற்ற படைப்புகளில் ஒன்று. இந்தப் புத்தகம் தி.நகர், சாரங்கபாணி தெருவிலுள்ள(வள்ளுவர் கோட்டம் அருகில்) திருமகள் புத்தக நிலையத்தில்(தாகம்) கிடைக்கிறது.

பி.கு: உறவுகளால் ஏமாற்றப்பட்டு ராஜம் கிருஷ்ணன் சென்னையை அடுத்துள்ள முதியோர் இல்லத்தில் பராமரிப்பின்றி தவிக்கிறார் என்று சமீபத்தில் கேள்விப்பட்டது துயரமாக இருக்கிறது.

Sunday, March 29, 2009

Pinjugal - Ki. Raja narayanan

பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன் (Rs.35)
வெளியீடு: அன்னம்

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Pinjugal - Ki. Ra

குழந்தைகள் உலகம் விவரிக்க முடியாத அற்புதங்கள் நிறைந்தது. கற்பனைகளும், கனவுகளும் கொண்டு துள்ளித் திரியும் கிராமத்து சிறுவர்களின் விளையாட்டு வாழ்க்கை அதனினும் கூர்ந்து கவனிக்க வேண்டியது. குளத்தங்கரை மரங்களில் ஏறி சேகரிக்கும் காகத்தின் முட்டையிலிருந்து, வயல் வெளிகளில் ஓடித் திரிந்து விளையாடுவது வரை அனைத்தும் அபூர்வங்கள் நிறைந்தது.

கிராவின் பிஞ்சுகள் அதுபோன்ற குழந்தைகளின் உலகத்தை ஒப்புநோக்கி எழுதப்பட்ட சிறந்த குழந்தை நாவல்களில் ஒன்று. இது கையெழுத்துப் படியிலேயே இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியம்மை கண்டு வெங்கடேசும், அவனுடைய தாயும் படுத்திருக்கிறார்கள். அவனுடைய அம்மா நோயின் தீவிர தாக்கத்தால் இறந்துவிடுகிறாள். பெரியம்மைக்கு அந்த காலத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாததை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். அம்மை கண்ட வீட்டில் தாளிக்கும் ஓசையிலிருந்து, சங்கொலி வரை எதுவுமே கேட்கக்கூடாது என்பதால் ஆரவாரமின்றி அடக்கம் செய்து விடுகிறார்கள். தனியறையில் இருக்கும் வெங்கடேசிடம் சொல்லாமலே அனைத்தையும் செய்துவிடுகிறார்கள்.

குணமாகி விஷயம் தெரிந்து வெங்கடேசு பதைக்கிறான். நோயினால் படுத்ததாலும், தாயின் இழப்பினாலும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடுகிறான். அந்த வருடம் முழுவதும் ஊரிலுள்ள எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறான். ஊரில் அலையும் காலங்களில் அவனுடைய முக்கிய வேலையே பலவிதமான பறவைகளின் முட்டைகளை சேகரிப்பது. திருவேதி நாயக்கரின் ஸ்நேகம் மூலம் பல பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறான். நமக்குப் பெயர் தெரியாத பல பறவைகளின் பெயர்கள் இந்த நாவலை வாசிப்பதின் மூலம் தெரியவருகிறது. ஆசிரியரின் பறவைகளைப் பற்றிய கூர்ந்த அவதானிப்பு இங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவனுடைய நண்பன் அசோக் ஊரிலிருந்து கோடை விடுமுறைக்கு வருகிறான். வெங்கடேசின் சக தோழனான செந்திவேலுடன், அசோக்கும் சேர்ந்து கொள்கிறான். மூவரும் எல்லையிலா மகிழ்ச்சியுடன் ஊர் சுற்றுகிறார்கள். இப்படியே ஆனந்தமாக செல்கிறது கோடைவிடுமுறை.

ஒருநாள் அசோக்கின் அண்ணன் மோகன்தாஸ் "நீ என்னை விட நெறைய விஷயங்களை தெரிஞ்சி வச்சிறுக்கையே, மேலே படிக்க வேண்டியதுதானே" என்று கேட்டு வைக்க, இவனுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை ஊற்றெடுக்கிறது. அவனும் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி வெளியூரில் படிக்க சம்மதம் வாங்குகிறான்.

கோடை விடுமுறை முடிந்து அசோக் ஊருக்கு செல்லும் ரயிலில் வெங்கடேசும் சேர்ந்து கொள்கிறான். இது வரை ஓடும் ரயிலை வெளியிலிருந்து பார்த்த இவனுக்கு, ஓடும் ரயிலிலிருந்து வெளியை பார்ப்பதற்கும், வெளியிளுள்ளவர்களுக்கு கையசைப்பதும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

இறுதியில் தன்னைப் போலவே படிப்பதற்கு செல்லும் பலரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அசோக்கின் பக்கத்தில் சென்று அமர்கிறான். ரயில் ஜிகு ஜிகுவென்று போவதாக என கதை முடிகிறது.

நாவலை படித்து முடித்த பிறகு கூட பறவைகளின் சப்தமும், இதுவரை கேட்டிராத வட்டார சொற்களின் ஓசையும், ரயில் நகரும் ஜிகு ஜிகு ஓசையும் கேடுக்கொண்டே இருக்கிறது. கி.ராவின் படைப்புக்களில் முத்தாய்ப்பான குழந்தைகள் நாவல் இது.

Friday, March 27, 2009

Nilamellam Raththam - Pa Raghavan

நிலமெல்லாம் ரத்தம்: பா. ராகவன் (Rs. 350)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Nilamellam Raththam - Pa. Raghavan

இன்றுள்ள இனப்பிரச்சனைகளில் உலகமே கூர்ந்து கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை. பா. ராகவன் ஆழ்ந்து அலசி பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்து புத்தகத்தைக் கொண்டுசென்றுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு இடம் இல்லாமல், இதுதான் எங்கள் நாடு என சொல்லிக்கொள்ள ஒரு மண் இல்லாமல் உலகமெல்லாம் அகதிகளாக வாழ்ந்த பழமையான இனம் யூத இனம்.

இவர்கள் பழங்கால ரோம அரசர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதால் அமெரிக்கா, பிரட்டன், அயர்லாந்து, ஜெர்மன் என ஐரோப்ப தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தனர். ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட துயரம் உலகம் அறிந்ததே. இருந்தாலும் அவர்களுடைய பலம் ஒற்றுமையும், கூர்ந்த அறிவாளித்தனமும் தான்.

இப்படி பரவியிருந்த யூதர்கள் அனைவரும் சமீப நூற்றாண்டுகளில் ஒன்று சேர்ந்து "ஜியோனிசம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி யூதர்களுக்கென சில கொள்கைகளை வகுத்தனர். அதன்படி தங்களுடைய பூர்வீகமான பாலஸ்தீன மண்ணில் அமைப்பின் சார்பாக ஏழை பாலஸ்தீன விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலங்களை அதிக விலைக்கு வாங்கி போட்டுள்ளனர். அதற்கான பணத்தை உலக யூதர்கள் ஜியோனிச அமைப்பிற்கு அளித்துள்ளனர்.

இந்த நேரத்தில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருக்கிறது. உலகப் போரின் முடிவில் இஸ்ரேல் யூத இனத்திற்கென்று தனி நாடுகேட்டு விண்ணப்பித்துள்ளது. அவர்களுடைய ஆசையிலும் குத்தமில்லை. இரண்டாம் உலகப் போரில் யூதர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனி நாடு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. (மறைமுகக் காரணம் அமெரிக்காவின் துருப்புகளுக்கு அரேபிய நிலத்தில் இடம் வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு)

ஐநா சபையின் ஆலோசனைப்படி 1948-ல் பாலஸ்தீன மண் இரண்டாக துண்டாடப்பட்டு பாலஸ்தீனாகவும், இஸ்ரேலாகவும் மாறியது. அது முதல் அங்கு பிச்சனைதான். இஸ்ரேல் பிரிந்து சென்ற ஓராண்டுக்குள் அருகிலுள்ள நாடுகளை ஆக்ரமித்துள்ளது. ஐநா தலையிட்டும் ஆக்ரமித்த நிலங்களை திரும்பித்தர மறுத்துள்ளது. இவை அனைத்திற்கும் மறைமுகக் காரணம் உலகின் பெரிய அண்ணன்(அமெரிக்கா).

முக்கியமான பிரச்சனை என்னவெனில் இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம் தான். இது யூத, கிறித்துவ மற்றும் முஸ்லீம்களுக்கான புனித இடம். யூதர்களின் தந்தையாக கருதப்படும் ஏப்ரகாம் பிறந்த இடம் இது, ஏசுவிற்கும் முக்கிய இடம், அதுபோல் முகமது நபி சொர்கத்திற்கு சென்று வந்ததாகக் கூறப்படும் குகை இங்குதான் உள்ளது. ஆகவே இது இடத்திற்கான பிரச்சனை என்பதையும் தாண்டி, மூன்று மதங்களையும் கடைப்பிடிக்கும் மக்களுடைய உணர்வுப் பிரச்சனை.

யூத, கிறித்துவ, இஸ்லாமிய மார்கத்தின் தொடக்கம், கிறித்துவ மதத்தின் பரவல், இஸ்ரேலின் தோற்றம் அதன் அடாவடித்தனம், அமெரிக்காவின் வஞ்ச வேலை, பாலஸ்தீன மக்களின் போராட்ட இயக்கம், உளவு அமைப்புகளின் வேலை என அனைத்தையும் சொல்லும் விறுவிறுப்பான புத்தகம்.

பி.கு: இஸ்ரேல் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் ஆகியோருக்கு இரு நாடுகளின் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக 1990 -களின் இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு வாங்கியவர்கள் இறந்துவிடார்கள், இன்றுவரை இருநாட்டு மக்களுக்கும் அமைதி என்பது உறக்கத்தில் கூட இல்லை.

பல யூதர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக பணக்காரரான வாரன் பபாட் ஒரு யூதனிடம் தான் ஆரம்ப காலத்தில் வேலை செய்துள்ளார்.

Wednesday, March 25, 2009

Indo-China border issues

இந்திய சீன எல்லை தகராறு - மறு ஆய்வும் தீர்வும்: டி. ஞானையா (Rs: 95)
வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்(NCBH)

இந்தப் புத்தகம் 2008-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தற்போது ஆசிரியருக்கு வயது 88. இந்த வயதிலும் கடுமையாக உழைத்து இந்திய சீன பிரச்சனைகளை ஆராய்ந்து, பிரச்சனைக்கான காரணம் என்ன? அதை தீர்க்க முடியுமா? அது சாத்தியமா? என பல கேள்விகளைக் கொண்டு சிக்கல்களை எடுத்துக்காட்டியுள்ளார். பல உடன் படிக்கைகளை ஆதாரமாக ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்புவரை நமக்கு இல்லாத அண்டை நாடுகளுடனான எல்லை அடையாளம், பிரிட்டிஷாரின் நாடு பிடிக்கும் ஆசையினாலும், அதை விரிவு படுத்தும் ஆசையினாலும் இந்தியாவிற்கான எல்லையினை ஊர்ஜிதம் செய்ய வேண்டியும் மக்மகான் எனும் ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார். எல்லைகளை வகுப்பதில் இவர் சில குளறுபடிகளை செய்துள்ளார். அதை சீன அரசு ஆரம்பத்திலேயே கண்டித்துள்ளது.

1913 -ல் மக்மகானால் வகுக்கப்பட்ட இந்த எல்லைக் கோடு இன்று வரை தீர்க்க முடியாத பல சிக்கல்களை துளிர்விட்டு வளரச் செய்துள்ளது. இந்த எல்லைப் பிரச்சனை இந்திய-பாகிஸ்தான் மற்றும் இந்திய-சீன நாடுகளுக்கிடையேயான ஓர் அணையாத நெருப்பாக, சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சிக்கல்கள் தீர்க்கப்படாமல், 1947-ல் சுதந்திர இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்ற நேரு அரசாங்கத்திடம் மக்மகான் வகுத்த எல்லைக்கோட்டுடன் நாட்டை ஒப்படைத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லையை பிரிட்டிஷ் அரசாங்கம் பலமுறை மாற்றியுள்ளனர்.

ஒரு நிலைக்குமேல் நேருவின் அரசு, எல்லைக் கோட்டை நோக்கி முன்னேறிச்சென்று ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி இருக்கிறது. அதை பல முறை சீனா கண்டித்து இருக்கிறது. பல முறை சமரசத்திற்கு அழைத்தும் இந்தியா அந்த வாய்ப்புகளை அலச்சியப்படுத்தி இருக்கிறது.

இந்த கண்டிப்பு ஒருவாறாக முற்றி 1962-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தப் போரில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், சீனாவிலுள்ள சில பகுதிகளை இந்தியா தனக்கு சொந்தம் என்று சொல்கிறது. இந்தியாவிலுள்ள அருணாச்சல பிரதேசம் வரையுள்ள சில பகுதிகளை சீனா தனது என்று சொல்கிறது. (இதுமட்டுமில்லாமல் சில வற்றாத ஜீவ நதிகள் சீனாவில் தொடங்கி இந்தியா வழியாக சென்று கடலில் கலப்பதால் இது தண்ணீர் பிரச்சனையாகவும், நதி நீர்ப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது.) இந்த மோதலுக்கான முக்கிய காரணகர்தாக்களில் C.I.A வின் பங்கு கணிசமானது என்பதையும், அதன் மூலம் அமெரிக்கா அடைந்த லாபத்தையும் சொல்லவே தேவையில்லை.

தேவையற்ற இந்த போரினால் இருநாடுகளுக்கும் ஏற்பட்ட இழப்பும், பரஸ்பர விரோத மனப்பான்மையும் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரு அவர்களின் தவறான அணுகு முறையையும் நூலாசிரியர் கடுமையாக சாடியுள்ளார். நாளேடுகளின் தவறான, நடுநிலையற்ற செய்திப் பிரச்சாரத்தையும், போரினைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்வத்தையும் ஆசிரியர் கடுமையாக சாடி இருக்கிறார்.

முழுவதுமாக இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து ஆதாரங்களுடன் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கவேண்டிய புத்தகம்.

Tuesday, March 24, 2009

Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

இந்தியப் பிரிவினை: மருதன் (Rs. 80)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

பா.ராகவன் எழுதிய மாயவலை என்ற புத்தகத்தில் அவருடைய முன்னுரையில் மருதனை தனது சீடனென்றும், மாணவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மேல் நான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. கல்கியில் எழுதத் தொடங்கிய இவர் இப்பொழுது கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.

இந்தியப் பிரிவினை பற்றி பள்ளிக்கூடத்தில் இரண்டு மதிப்பெண் வினாவிற்கான பதிலாக படித்ததோடு சரி. ஆனால் அதற்குள் இவ்வளவு பேருடைய கதறல்களும், ஓலங்களும் இருக்கிறதா என படிக்க படிக்க அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று உறுதியானவுடன், காந்திஜிக்கு ஒரு புறம் மகிழ்ச்சி மறுபுறம் துக்கம். முஸ்லீம் சிறுபான்மையினரான தங்களுக்கு பெரும்பான்மையினரான இந்துக்களால் எந்த நேரத்திலும் ஆபத்துதான். எனவே தனி மதம்,மொழி,கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கமுள்ள எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் ஜின்னா உறுதியாக இருந்தாராம். அதுபடியே பிரிந்து சுகந்திர நாடான பாகிஸ்தானையும், கிழக்கு பாகிஸ்தானையும் உருவாக்கினார். கிழக்கு பாகிஸ்தான் பிறகு பங்களாதேஷ் ஆனது தனிக்கதை.

"தேசம் பிரிக்கப்பட்டால் அது என் சடலத்தின் மீதுதான் துண்டாடப்படும்" என காந்திஜி முழங்கினாரம். இந்தியாவின் அப்போதைய வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் கூட இது குறித்து கவலையுடன் தான் இருந்தாராம். இதைப் பற்றி நேரு, படேல் மற்றும் ஜின்னாவுடன் பலவாறு ஆலோசித்தாராம். எந்த பேச்சு வார்த்தையும் பலன் தராததால் இன ரீதியிலான பகுதிகளை பிரிக்க வேண்டிய சூழல் வந்தது.

பிரிப்பது என்றால் அவ்வளவு சாதாரண காரியமா என்ன? தலைமுறை , தலைமுறையாக வாழ்ந்த இடங்களையும், வாழ்வாதாரங்களையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாபை ஒட்டிய சீக்கியர்களும், முஸ்லீம்களும் தான்.

பிரிவினையால் நடந்த கலவரத்தில் இழப்புகளை அதிகம் சந்தித்தது அப்பாவி மக்களும், பெண்களும்தான். அதுவும் பெண்களின் மீதான பாலியல் பலாத்காரம் சொல்லி தீராது.

அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் பிரிவினை பகுதிகளில் இருந்து மக்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்த ரயிலில், படுகொலையை கண்ட நிலைய அதிகாரி சாநிசிங்கின் ஓலக்குரலோடு இந்தப் புத்தகம் தனது அத்தியாயத்தை தொடங்குகிறது. அதன் பிறகு நடந்த சம்பவங்களால் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறது. தேசம் துண்டாடப்பட்டதால் தனது முகங்களையும், உறவுகளையும் இழந்த அப்பாவி மக்களின் கதறல்களை சொல்லும் சரித்திரம் தான் இந்த புத்தகம்.

பி.கு: இந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மருதனின் வலைத்தளத்திற்கு செல்ல இங்கு சுட்டவும் - Writer Marudhan

Monday, March 23, 2009

Thunai Ezhuthu - S. Rama Krishnan

துணையெழுத்து: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 110)
வெளியீடு: விகடன் பிரசுரம்

துணையெழுத்து கட்டுரைகளை வாசித்ததின் மூலமாகத்தான் எனக்கு எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன் அறிமுகமானார். அதன் பிறகுதான் அவருடைய பிற நூல்களின் வாசிப்பனுபவம் கிடைத்தது. எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், பண்டைய காலத்து கல்வெட்டுகள், நீருக்கு அடியில் ஈரமேரியிருக்கும் கூழாங்கற்கள், பால்ய கால குறும்புகள், சக மனிதனின் புறக்கணிப்பு, இமைய மலை பனிச்சாரல் என்று இவருடைய எழுத்துக்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் விஷயங்கள் ஏராளம்.

பயணங்களிலும் இதர பல இடங்களிலும் தான் சந்திக்க நேர்ந்த பலவிதமான மனிதர்களைப் பற்றியும், அவர்களுடனான மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றியும் அவரே அசைபோடுவதாக இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.

வாழ்வின் சில சொற்ப நேரங்களைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் சிறு சிறு கனவுகளும், ஆதங்கங்களுமே மனிதனை ஆட்கொள்கின்றது. நம்மையும் அறியாமல் நம் மீது படரும் அதுபோன்ற சம்பவங்களையும், உணர்வுகளையுமே எஸ். ரா தனது கட்டுரைகளில் அவருக்கே உரிய கூர்ந்த பார்வையுடன் முதன்மைப்படுத்தியுள்ளார்.

உடல் பருத்த யானை ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு செல்வதுதான் பயணமா என்ன! சிறிய கால்களைக்கொண்டு இயங்கும் நத்தை மேற்கொள்வதும் பயணம் தானே என உணரவைத்துள்ளார். பிரம்மாண்டமான விஷயங்கள் நம் கண்ணை மறைத்து விடுகிறது. அதுவே நாம் சின்ன சின்ன அழகிய விஷயங்களை இழப்பதற்கு காரணமாகிறது.

நாம் கணினி யுகத்தில், தொழில் மற்றும் இதர துறைகளில் முன்னோக்கிச் சென்றாலும் வாழ்வானுபவத்தில் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

பால்ய வயதில் மரங்களைச் சுற்றியும், வைக்கோல் புதரில் ஒளிந்தும் தாவிக்குதித்து விளையாடியதும் ஒரு கனவைப்போலவே வந்து கலைகிறது. இன்றைய குழந்தைகள் விளையாட்டிற்குக் கூட கணினியைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் உலகம் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றானவுடன் கிராமிய விளையாட்டுக்களும், கிராமிய வாழ்வும் அர்த்தமற்றுப் போனது உண்மையே.

அனைத்திற்கும் மேலாக அறுவடை செய்த பிறகு நிலத்திலுள்ள வைக்கோலுக்கு தீவைத்து பொசுக்குவதைப் பார்க்கும் போது பால்யத்தின் நினைவுகளையும் சுடுவதுபோல் உள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்கலைப் போல, அவசர வாழ்வில் நாம் ஒதுக்கி வைக்கும் விஷயங்களும் ஏராளம். தேசாந்திரியில் எஸ்.ரா குறிப்பிட்ட கவிதையைப் போல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.... (நா. விச்வநாதன்)

வாழ்க்கை என்பது அன்பு, குரோதம், அரவணைப்பு, புறக்கணிப்பு என ஆயிரம் உணர்வுகள் பிண்ணிப் பிணைந்த இடியாப்ப சிக்கல் போன்றது. சிக்கல்கள் சந்தித்துக் கொள்ளும் ஏதோ ஒரு புள்ளியில்தான் வாழ்வின் உண்மையான அர்த்தங்கள் வெளிப்படுகின்றது. அந்த அர்த்தங்களும், உணர்வுகளும் கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்களைப் போல சீண்டுவாரில்லாமல் சிதறிக்கிடக்கிறது.

சிதறிய முத்துக்களை இதிகாசத் தோழனைப்போல் "எடுக்கவோ? தொடுக்கவோ?" என கேட்பதுபோல் கேட்டு, கையிலெடுத்துக் கொடுத்து விளையாடும் குழந்தையாக நம்மை மாற்றிவிடுகிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான வாழ்வனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருவதுடன், நெஞ்சத்தை தொட்டுச்செல்வதால் நான் நேசிக்கும் நண்பர்களுக்கு காதலுடன் வாங்கித்தரும் புத்தகங்களுள் இதுவும் ஒன்று.

Friday, March 20, 2009

Katha Vilasam - S. Rama Krishnan

கதாவிலாசம்: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 150)
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த துணை எழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய படைப்புகள் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்ததே. அவற்றுள் கதாவிலாசம் சிறிது வித்யாசமான கட்டுரைகள் அடங்கிய புத்தக வடிவம்.

தனது வாழ்வில் நடந்த சுவைமிக்க சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தனக்குப் பிடித்த சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளார்.

பாரதி, புதுமைப் பித்தன், கி. ரா, சுரா தொடங்கி சம கால எழுத்தாளர்களான கோணங்கி, ஜெய மோகன் வரை அனைவரது எழுத்துக்களிலும் தனக்கு பிடித்த படைப்புகளை சிலாகித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த ஐம்பது எழுத்தாளர்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Monday, March 16, 2009

Thesandhri - S.Rama Krishnan

தேசாந்திரி: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 110)
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

அன்றாட வாழ்க்கையில் பயணங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் காணும் அனைத்துமே பயணம் செய்கிறது. பால் வெளியில் பூமி பயணம் செய்கிறது. பூமியில் சிறு ஜீவன்களான அமீபா, எறும்பு முதல் மிகப் பெரிய திமிங்கலம் வரை எல்லாமே பயணம் செய்கிறது.

ஓர் இலையிலிருந்து கீழே விழும் ஒரு துளி நீர் கூட தனது பாதையை வகுத்துக் கொண்டு, செல்லும் இடத்தை ஈரப்படுத்திச் செல்கிறது. சில நேரங்களில் விழுந்த இடத்திலேயே காணாமல் போகிறது. முடிவான கடலை அடைவது சில துளிகள் மட்டுமே.

ஒரு துளி மற்றொரு துளியுடன் ஒன்று சேர்ந்து ஆறாக, அருவியாக, ஏரியாக, குளமாக பல்வேறு நிலைகளில் தனது பயணத்தை தொடர்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பல மனிதர்களையும், நாகரீகங்களையும் கடந்து செல்கிறது. கடந்து செல்லும் துளிகள் தான் மனித வாழ்விற்கு ஆதாரம்.

மனிதனும் இந்த உலகில் ஒரு சொட்டுதான். அவனும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று பயணிக்கிறான். ஆனால் பயணிக்கும் எல்லோருமே தான் சார்ந்த இடத்திலுள்ள எல்லாவற்றையும் அவதானிப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது என்பதே நேரம் எடுக்கக் கூடிய விஷயமாக இருந்தது. இருந்தாலும் வழியிளிள்ள மரங்களில் புளி, மா, ஈச்சை என பறித்துச் சாப்பிட்டுக்கொண்டே நண்பர்களுடன் செல்வது அலாதியான விஷயம். இன்று நெடுஞ்சாலைகளில் மைல் கல்லையும், திசைப் பலகைகளையும் தவிர வேறொன்றும் இல்லாத நிலை.

அசோகர் சாலைகளில் மரம் வளர்த்தார் என்பதே வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் வரும் புனைவுக் கதையாகிவிடும் போலிருக்கிறது. அதே நிலைதான் கல்வெட்டுகளுக்கும், அழிந்து வரும் நிலையிலுள்ள நூற்றாண்டு பழமையுள்ள சித்திரங்களுக்கும்.

இன்று வாய்ப்புகள் வளர்ந்துள்ள நிலையில் கண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு செல்வது கூட சுலபமாகிவிட்டது. என்ன தான் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனிதர்களுடைய விசாலம் சுருங்கி விட்டது. அதனால் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரமான இயற்கை, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஒன்றுமில்லாமல் செய்கிறோம். எல்லா பயணங்களும் மகிழ்சியானவையே நாம் குற்ற உணர்சிக்கு ஆளாகாதவரை.

அவசர உலகில் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட, நம்மைச் சுற்றியுள்ள அழிந்து வரும் நிலையிலுள்ள சிறப்பான இடங்களை, தவறவிட்ட அரிய விஷயங்களை தனது தேசாந்திரி எனும் பயணக் கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். அனைத்து இடங்களுமே பயணம் செய்து பார்க்க வேண்டிய இடங்கள். படித்தாவது தெரிந்துகொள்வது நல்லது.

Wednesday, March 11, 2009

Oru trillianukku ethanai zero

புத்தகத்தின் முகப்பில் குற்றவாளிக் கூண்டில் IMF மற்றும் உலக வங்கி என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கிவிட வேண்டியது என்று முடிவு செய்தேன். இது ஏழை நாடுகள் பட்ட கடன், வளர்ச்சி மற்றும் கடனின் தாக்கம் பற்றி பேசுகிறது. சூசன் ஜார்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய இப்புத்தகத்தை பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து மொழிபெயர்த்துள்ளனர்.1987 வரையிலான காலகட்டங்களில் ஏழை நாடுகளின் நடந்த பொருளாதார சுரண்டல்களை ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள்.

ஒரு டிரில்லியனுக்கு எதனை ஜீரோ: சூசன் ஜார்ஜ் (Rs:130) பதிப்பகம்: பாரதி புத்தக நிலையம்.

நாள்தோறும் அரசியல்வாதிகளின் அறிக்கையின் மூலம் அறிவிக்கப் படும் தொகுதி மேம்பாட்டிற்கான உலக வங்கிக் கடன், பன்னாட்டு நிதி நிறுவனக் கடன் போன்றவற்றால் ஒரு நாடு தன்னிறைவு பெற்றாலும், அதனுடைய எதிர் விளைவுகள் என்ன? அதனால் பாதிக்கப்படுவது யார்? பயனடைவது யார்? போன்ற பல கேள்விகளுக்கான பதில் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

புத்தகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பகுதி பன்னாட்டு நிதி நிறுவனக்கள் ஒரு நாட்டிற்கு கடன் கொடுக்கும் போது எப்படி அணுகுகிறது எனவும், கொடுத்த கடனுக்கான சுமை எப்படி ஏழைகளின் தலையில் விழுகிறது என்பதைப் பற்றியும் விவரிக்கிறது.

இரண்டாம் பகுதி நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கடனாளி நாடுகளான ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இன்றைய நிலையையும், கடனை அடைக்க அது மேலும் மேலும் கடன் பெற்று எப்படி முதுகெலும்பின்றி அதல பாதாளத்திற்கு செல்கிறது என்பதையும் விரிவாக அலசுகிறது. மேலும் அந்நாடுகளின் கடன் சுமையால் அதன் இயற்க்கை வளங்கள் வளர்ந்த நாடுகளின் மூலமாக எப்படி சுரண்டப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது.

மூன்றாம் பகுதி கடனாளி நாடுகள் கடனை அடைக்க எடுக்க வேண்டிய தீர்வுகள் பற்றி விவரிக்கிறது.

கடன் பட்ட ஒவ்வொரு நாடும் கடனை அடைக்க அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆகவே ஏற்றுமதியை பெருக்கி இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏழை நாடுகளுக்கு ஏற்படுகிறது. ஏற்றுமதி அவசியம் என்ற பச்சத்தில் ஏற்றுமதிக்கான விலையை வல்லரசு நாடுகள் முடிவு செய்கின்றன. அதனால் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெருத்த நட்டத்தை அடைகின்றன. நட்டத்தை சரிக்கட்ட சாதாரண மக்களின் மேல் வரிச்சுமை ஏற்றப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் வாங்கும் சக்தி குறைந்து நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களுக்கும் இதே கதைதான்.

எனவே கடனானது நாட்டு மக்களை இருதலைக் கொல்லியைப் போல் இரு புறமும் சுரண்டப்படுவதை சூசன் ராஜ் அழகாக எடுத்துரைக்கிறார்.

வளரும் நாடுகளில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடன் வாங்கினால் தான் வளர்ச்சி என்பது சாத்தியம். சாதகமான விடயங்களை தெரிந்துகொள்ளும் நாம் அதன் பாதகங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் சில சாதகங்களையும், பல பாதகங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, March 4, 2009

Burma, Union of Myanmar

இந்த புத்தகத்தின் ஆசிரியர் தனது பதின் பருவத்தில் பர்மாவை விட்டு அகதியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். ஏனெனில் பர்மா சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்பும் போது இவருடைய பெற்றோரும் தமிழகம் வந்துள்ளனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் பர்மா அடைந்த சுதந்திரம், சர்வாதிகாரம் மற்றும் படுகொலைகளை ஆதாரத்துடன் முன்வைத்து பர்மாவின் நேச நாடுகளிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். அதில் இந்தியாவும் ஒன்று.

பர்மா: க.ம. தியாக ராஜன் (Rs.125)
பதிப்பகம்: காலச்சுவடு

ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பர்மா பிறகு ஜப்பானிடம் சென்றது. பின் ஜப்பானிடமிருந்து பிரிட்டிஷே பர்மாவைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.

இந்துக்களும் பர்மியரும் பூர்வீக பழங்குடியினரும் வாழ்ந்து வந்த பர்மாவை 1935 -ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவிலிருந்து பிரித்து விடுவதென தீர்மானித்து 1937 -ல் பர்மாவை ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு உட்பட்ட தனி நாடாக பிரகனப் படுத்தியது. மேலும் 1947 -ஆம் ஆண்டு வரை பர்மாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் பிறகு பர்மாவிற்கு சுதந்திரம் அளித்தது.

1948 -ஆம் ஆண்டு முதல் சுதந்திர நாடான பர்மாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும் இருப்பினும் கறீன்கள் முக்கியமான சிறு பான்மையினராக இருந்துள்ளனர்.

கறீன்கள் மலை வாழ் பழங்குடியாக இருந்து முழுவதுமாக கிறித்துவத்திற்கு மாறியதால், தனி நாடு வேண்டி புரட்சி செய்துள்ளனர். புரச்சியை அரசாங்கத்தால் அடக்க முடியாததால் ராணுவ ஆட்சிக்கு பர்மா கைமாறியுள்ளது.

அன்றிலிருந்து கடந்த 50 வருடங்களாக பர்மிய மக்கள் காண்பதெல்லாம் துன்பம், துன்பம், துன்பம் மட்டுமே. இருந்தாலும் 2007 -ஆம் ஆண்டு புத்த துறவிகளின் மீது நடத்திய ராணுவ தாக்குதல் உலக நாடுகளை பர்மாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இருந்தாலும் அதன் நேச நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்த், தென் கொரியா, மலேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்திற்காக மௌனம் சாதிப்பதும், பர்மிய ராணுவ ஆட்சிக்கு துணை போவதையும் நூலாசிரியர் கடுமையாக சாடுகிறார்.

அந்த துன்பத்தைப் போக்க, பர்மாவை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்க டோ அவுன் சான் சு கீ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் போராடுகிறார். பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்தாலும் அமைதியான முறையில், சத்தியாகிரக வழியில் போராடுவதால் இவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்திருக்கிறார்கள்.

பர்மாவை பற்றி தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது.