Monday, October 11, 2010

பரத்தை கூற்று - CSK

காட்டுப் பூக்களால் தொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு வாலியுடன் துவந்த யுத்தத்தில் இருக்கிறான் சுக்ரீவன். வாலியின் அடி ஒவ்வொன்றும் பாறையென சுக்ரீவன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த கூறிய அம்பு வாலியின் தேகத்தைத் துளைத்து இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. அம்பினை எடுத்துப் பார்த்து ராமபாணம் என்று தெரிந்துகொள்கிறான்.

"மறைவில் இருந்து தாக்குகிறாயே சூரியகுலத்தில் உதித்த உனக்கு இது தகுமா? உன்னுடைய குலத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிட்டாயே? என்று ராமனைப் பார்த்துப் பொருமுகிறான்.

"நீ மட்டும் சுக்ரீவனை துரத்திவிட்டு அவனுடைய மனைவியை அனைத்துக் கொண்டாயே அதுமட்டும் ஞாயமா?" என்று ராமன் கேட்கிறான்.

"ஒரு தார கற்பொழுக்கம் எல்லாம் மனித குலத்திற்குத் தான். வானரர்களுக்கு இல்லை. அதற்காகவா என்னைக் கொன்றாய்..." என்று வாலி கேட்கிறான். (அதன் பிறகு ராமனுக்கும், வாலிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யம் வாய்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதைப்பற்றி பேசலாம்...)

"குரங்கிலிருந்து மனிதன் பரிமாண வளர்ச்சி கண்டான்..." என்பது குட்டலினி கபாலத்தைத் தொட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்ட விஷயம். மனிதர்கள், யாரும் யாருடனும் வெளிப்படையாகப் புணரலாம் என்பது கலாச்சார ரீதியாக முகம் சுளிக்கக் கூடிய விஷயம். ஏனெனில் நாகரீகத்தின் நிழலைப் பின் தொடர்ந்து நாம் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோம். அதில் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும், திருநங்கைகளுக்கு ஒரு விதமாகவும் நம் சமூக அமைப்பு செயல்படுவது வேதனைக்குரிய உண்மை.

பெண் விபச்சாரிகளைக் கணக்கெடுத்துப் பார்க்கையில் ஆண் விபச்சாரிகளோ, திருநங்கைகளோ மிகவும் குறைவு. அதிலும் பெண் விபச்சாரிகளில் பலரும் நிர்பந்தத்தினால் தான் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களின் மனச் சோர்வும், மன உளைச்சலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் இறுதியாண்டில் இருக்கிறேன். சொற்சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆண்டுவிழாவில் பேச இருக்கிறார். ஆர்வமுடன் மாணவர் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வந்தவர் பேசினார். அது பேச்சல்ல... மாயவெளி... ஆம்... அவரின் பேச்சு என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. அதில் 'வேசியின் கல்லறையும்' அடக்கம்.

வேசியின் சமாதியைப் படிமமாக வைத்து கவிதை எழுதுமாறு கேட்டிருந்தார்கலாம். அதற்கு ஒரு கவிஞன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தானாம். எழுதியவன் கல்லூரி மாணவன் என்பதால் அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த வரிகள்...

'இன்றுதான் இவள் -
நிம்மதியாகத் தூங்குகிறாள்.
இனிமேலும் இப்படித்தான்...'
வேசியின் கல்லறை

மேலுள்ள நான்கு வரிகள் வேசிகளின் விழிப்பு நிலை வேதனைகளை, காமத்தின் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்பதை உணர்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஓய்வின் குளிர்ச்சியை, உறக்கத்தின் வாசனையை, தனிமையின் அழகை, வாழ்வின் நிம்மதியை பரத்தையின் சமாதி மட்டுமே அவளுக்குக் கொடுக்கிறது.

இந்தக் கவிதையை நான் கேட்டுக் கொண்டிருந்த வயதில் நண்பர் CSK வேசிகளின் உணர்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பரத்தையின் கூற்றாக 500 கவிதைகளை அப்பொழுதே எழுதியிருக்கிறார்.


அவற்றில் சிறந்ததெனத் தோன்றிய 150 கவிதைகளை அச்சில் கொண்டு வந்திருக்கிறார். மொத்தம் ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார். பாரா-வின் பயிலரங்கில் தான் முதன் முதலில் CSK-வைப் பார்த்தேன். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அந்த நட்பில் புத்தகத்தை தபாலில் அனுப்பியிருந்தார். தொகுதியிலுள்ள சில கவிதைகளை அவரின் அனுமதியுடன் இங்கே வாசிக்கக் கொடுக்கிறேன்...

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

0
விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய் -
எவனும் மனசு தொட்டதில்லை

முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

0
இன்றைய தேதியில் இங்கே
எவளுக்கும் சாத்தியமில்லை
பெய்யெனப் பெய்யும் மழை

0
எம் இனத்தின்
பாரம்பரிய உடை
நிர்வாணம் -
முழு நிர்வாணம்

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

0
காமமடக்கியதால்
ஞானமடைந்தனர்
யோகிசிலர் - யாம்
அது அலுத்ததால்

0
எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?

இதே போல நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்) பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்) கவிதைகளும் பரத்தைமையின் அங்கதக் குரலை உரத்துச் சொல்பவையாகத்தான் இருக்கிறது.

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

0
பள்ளிக்கூடம் சேர்க்கையில்
மகனின் குலம் கேட்கின்றனர்
சாதிச்சான்றிதழ் சரிபார்த்துச்
செய்வதில்லை விமச்சாரம்

அடிமைத்தனம், வெட்கம், இயலாமை, பிழைப்பு, மிடுக்கு, போலீசின் கெடுபிடி, இளக்காரம், அவமானம், ஆணாதிக்கம், கீழ்ப்பார்வை, வெறுப்பு, தேவை, நிர்பந்தம், கோவம், நடிப்பு என்று வேசிகளின் உணர்வுகளை கவிதையின் ஒவ்வொரு மூலையிலும் உணர முடிகிறது.

நீண்ட நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் நேர்முகத்தில் வைரமுத்து பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் "யாருடன் உரையாடுவது சுவாரஸ்யம் நிறைந்தது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. "காதலி, இலக்கிய நண்பர்கள், பால்ய சிநேகிதர்கள்" இதில் எதையாவது ஒன்றை சொல்லுவார் என்று அந்த நொடியில் யோசித்துவிட்டேன்.

அவருடைய பதில் என்னுடைய யூகத்தை பொடிப்பொடியாகச் சிதறச் செய்தது. "வேசி" - என்ற ஒற்றைப் பதிலை உதிர்த்துவிட்டுச் சிரித்தார். ஓர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் ரகசியங்கள் அவளிடம் தான் பொதிந்து கிடக்கும். அதையெல்லாம் அவள் சொல்லக் கேட்டால் நேரம் போவது தெரியாமல் உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றார். ரகசியத்தைத் தெரிந்து கொள்வதுதானே உலகிலுள்ள சுவாரஸ்யமான விஷயம்.

பரத்தைகளின் உணர்வுகளில் காமத்தை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் கூட ரகசியம்தான். அதைப் போட்டு உடைக்கும் கவிதைகள் தான் 'பரத்தை கூற்று'.

ஆசிரியர்: சி.சரவணகார்த்திகேயன் (http://www.writercsk.com)
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
விலை - ரூ.50/-

Thursday, October 7, 2010

உப பாண்டவம் - எஸ்ரா

புத்தகம் : உப பாண்டவம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
விலை : 150 ரூ

இதிகாசங்கள் அனைத்தும் புனைவிற்கும் அ-புனைவிற்கும் இடையில் திரிசங்குபோல தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மகாபாரதம் முக்கியமான ஒன்று. அதிலுள்ள கிளைக் கதைகளின் மீதான மீள் புனைவுதான் எஸ்ரா-வின் உப பாண்டவம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தைத் தேடி அலையாத இடமில்லை. துணையெழுத்தின் வசீகரம் அவருடைய இதர புத்தகங்களின் மீதான வேட்கையை அதிகப்படுத்தியபடியே இருந்த அற்புதமான நாட்கள் அவை. இலக்கிய நண்பர்களின் பரிட்சயமும் இல்லை. ஒரு புத்தகத்தின் உள் அட்டையில் அவருடைய முகவரியும், தொலைபேசி இலக்கங்களும் இருந்தன. கொடுத்திருந்த எங்களில் தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிதான் எதிர் முனையில் பேசினார்கள். எஸ் ராவைப் பற்றி விசாரித்தேன். 'அவர் வீட்டில் இல்லை' என்று கூறினார். உபபாண்டவம் எங்கு கிடைக்கும்? என்று விசாரித்தேன். 'திநகர் நியூ புக் லேண்ட்ஸ்' -ல் விசாரித்துப் பார்க்கச் சொன்னார். அங்கும் கிடைக்காமல் வேறெங்கோதான் வாங்கினேன். பல வருடம் கழித்து மீண்டும் உப பாண்டவத்தை படித்த பொழுது, புதுப்புது காட்சிகளை முன்வைத்த படியே பாரதக் கதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

அதோ பாஞ்சஜன்யத்தின் ஒலி என் காதில் துல்லியமாகக் கேட்கிறது.
கௌரவ பாண்டவர்களின் அக்ரோணிப் படைகள் எதிரெதிரே அணிவகுத்து நிற்கின்றன. படைகளின் சிறு அசைவு கூட புழுதியை எழுப்பி மணல் புயலாக காட்சியளிக்கிறது. எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. சங்கொலி மட்டுமே நடக்கவிருக்கும் அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அங்கிருந்து அஸ்தினாபுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். மெதுவாக திருதுராஷ்டனின் சயன அறைக்குச் சென்றேன். அரசனின் கண்களிலிருந்து இருள் இருளாக துக்கம் வழிந்துகொண்டிருந்தது. அவன் முன்னே சஞ்சயன் யோக நிலையில் இருந்தான். சஞ்சயனின் நிழல் என்மீது பட்டு குளிர்ச்சி தருவதாக இருந்தது. மௌனியாக நானும் அமர்ந்துகொண்டேன். நடப்பவை யாவற்றையும் சஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தான். திருதுராஷ்டன் அகக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். நான் ஓசை எழுப்பாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

'சண்டையிடமாட்டேன் என்று அர்ஜுனன் தளர்ந்துவிட்டான். சண்டையிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையை கிருஷ்ணன் எடுத்துச் சொல்லி அர்ஜுனனை தேற்றிக் கொண்டிருக்கிறான். எடு காண்டிபத்தை என்கிறான்.' என்ற சஞ்சயனின் விவரிப்பைக் கேட்ட அரசன் "அவன் தானே, அந்த சூழ்ச்சிக்காரன் தானே இந்த அழிவுக்குக் காரணம். அவனுடைய குலமே நாசமாகட்டும்..." என்று கிருஷ்ணனை சபிக்கிறான்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் மௌனத்தில் இருந்தேன்.

"கரண்ட் கட்"... தொலைகாட்சி தனது உயிர்த் துடிப்பை இழந்திருந்தது... திரும்பிப் பார்த்தேன் "யுதிஷ்டிரன் தானே எல்லாத்துக்கும் காரணம்!" என்று என்னுடைய அப்பாவின் உதடுகள் முணு முணுத்துக் கொண்டிருந்தன.

எனக்கும் என் தந்தைக்கும் ஏழாம் பொருத்தம். அவர் யோசிப்பதற்கு நேரெதிராகவே யோசித்துப் பழக்கப்பட்டவன். எனவே "எப்படி?" - என்று அவரிடம் கேட்டேன்.

"பரமபதம் (சூது) விளையாடக் கூப்பிட்ட பொழுது யுதிஷ்டிரன் நெனச்சிக்கினானாம்... கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு. அவன் வந்தால் விளையாட வேண்டாம் என்று தடுத்து விடுவான். திருதுராஷ்டன் கூப்பிட்டு எப்படி மறுப்பது என்று யோசிச்சானாம். ஒவ்வொரு முறை பகடையை உருட்டும் பொழுதும் கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு நெனச்சிக்கினானாம். அப்புறம் போனது பாஞ்சாலியோட மானம் தானே. அவ தானே சண்டையை இவ்வளோ தொலைவு எடுத்துட்டு வந்தா. எங்க இருந்தோ துணியக் கொடுத்தவன், பக்கத்துல இருந்திருந்தா சகுநியையே ஏமாத்தி இருப்பான் இல்ல... எல்லாத்துக்கும் காரணம் முட்டாள்பய தர்மன் தான்" என்று சொன்னார். இதுவரை கேட்டிராத விஷயத்தை என்னுடைய அப்பா சாதரணமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தற்போதைய நிலையில் பாரதக் கதையின் ஒரே சாட்சி 'அஸ்வத்தாமன்'. எங்கெங்கோ தேடி சாவற்ற அவனுடைய கைகளை காற்றின் துணையுடன் பற்றினேன். அவனுடைய நெற்றி புரையோடிக் கிடந்தது. காயத்தின் காரணம் கூட அவனுக்குத் தெரியவில்லை. எதையோ தேடிக் கொண்டிருந்தான்.மனோ வேகத்தில் அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டோம். வாழ்ந்த சுவடின் ஞாபகங்களே அவனிடம் இல்லை. இரவு குருதியின் கரைகளைத் தொலைத்திருந்தது. காலம் அதன் சாட்சியாக மௌனித்திருந்தது. என்னெதிரே அஸ்வத்தாமனை அமரச் செய்தேன். சிரம் தாழ்ந்து அமரும் பொழுது அவனுடைய ஒரு துளி இரத்தம் பூமியில் விழுந்தது. சொந்த மக்களின் ரத்தத்தை ருசி பார்க்க அஸ்தினாபுரத்தின் நாக்கு தனது சுவை மொட்டுக்களை தயாராகவே வைத்திருக்கின்றன. இந்த ஒரு துளி அதன் பழைய ஞாபகங்களை மீட்டிருக்கும். யாரின் இரத்தம் சுவையானதென அதன் ஞாபகம் பீரிட்டிருக்கும். அஸ்வத்தாமனின் கண்கள் சோர்வினை வெளிப்படுத்தியது. அது திருதுராஷ்டனின் இருள் கவிழ்ந்த கண்களை ஒத்திருந்தது. அவனுக்கு எதிரில் என்னை அமர்த்திக் கொண்டேன். சஞ்சயனின் நிழல் என்மேல் படருவதை நான் உணர்ந்தேன். என் கைகள் உப பாண்டவத்தின் பக்கங்களைப் புரட்டுகிறது. உதடுகள் தன்னிச்சையாக அசைகிறது.

"அஸ்வத்தாமா!, நட்சத்திரங்கள் பாண்டவ கௌரவர்களின் ஒற்றர்களைப் போல நம்மைக் கண்டு கொண்டிருக்கின்றன. உன் தேடுதல் நிரந்தரமானது. நீ சபிக்கப்பட்டவன். உன்னுடைய நிரந்த ஓய்வை நீயே கொடுத்துக் கொண்டாய். அதற்குக் காரணம் நீ வதம் செய்த பாரதப் புதல்வர்கள்... உப பாண்டவர்கள்..." என்று சொல்லிவிட்டு பாரதக் கதையின் முன்னுரையிலிருந்து ஆரம்பித்தேன். வால் நட்சத்திரம் எரிந்து விழுவது தூரத்தில் தெரிந்தது. அஸ்வத்தாமனிடம் காட்டினேன். தான் வாழ்ந்த சரித்தரத்தை நிராகரித்தவனாக நட்சத்திரத்தின் மரணத்தை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான். இல்லாமல் போவதன் வசீகரம் அவனைச் சுண்டி இழுக்கிறதோ என்னவோ? ஒவ்வொரு மரணத்தையும் அவன் ஏக்கத்துடன் பார்க்கிறானோ என்னவோ? அவனுடைய மரணத்தினை சுவைத்திட அஸ்தினாபுரமும் குருக்ஷேத்ரமும் அவனை பின்தொடர்கிறதோ என்னவோ?. நான் செயலற்று நின்று கொண்டிருந்தேன். என்னுடைய மனம் அஸ்வத்தாமனுக்கு சொல்ல நினைத்த பாரதக் கதையை அசைபோட்ட படியே இருக்கிறது...

பின்னட்டை வாசகம்:

**************************************************************
இந்திய மனதின் தொன்மையான நினைவுகள் மகாபாரதத்தின் வழியே கதைகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுகளின் ஊடாக மனிதர்களின் தீராத போராட்டமும் ஏக்கங்களும் பீறிடுகின்றன. காலத்தின் உதடுகள் என்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த மகாகாவியத்தின் இடைவெளிகளை தனது கதை சொல்லலின் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

மகாபாரதத்தின் உப கதாப்பாத்திரங்களின் வழியே அறியாத கதையும் வெளிப்படுத்தப்படாத துக்கமும் புனைவுருவாக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான நாவலாகும். வங்காளம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

வாசகர்களின் பெரும் கவனத்திற்கு தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த உப பாண்டவம் இப்போது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.

**************************************************************

நாவன்மையினால் பாரதக்கதை நாளுக்கு நாள் விசாலமாகிக் கொண்டே இருக்கிறது. காலம் கூட அதன் ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதன் நளினம் கூடுவது இதுபோன்ற விசாலத்திலும், ஒப்பனையிலும் தான் இருக்கிறது. தெரிந்த இடத்தின் அறியாத பாதைகளை கிளைவிரித்துச் செல்லும் எஸ்ராவின் இந்தப் புனைவும் அதுபோன்ற முயற்சிதான்.

தம்பி சேரலின் வலைப்பூவில் இந்தப் புத்தகத்தைப்பற்றிய சுவாரஸ்யமான இடுகை: http://puththakam.blogspot.com/2009/01/30.html