Monday, March 8, 2010

பால்யகால சகி - பஷீர்

வெளியீடு: காலச்சுவடு
ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
விலை: 60/- ரூபாய்

காலைப் பனியின் மென்மை போலவும், அதிகாலை நேரத்தின் அமைதியான உதயத்தைப் போலவும் சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் குளத்திலிட்ட கல் போல தங்கிவிடும். முதல் நட்பும், முதல் காதலும் கூட அது போன்ற இதமான விஷயங்கள் தான். துருதிஷ்டம் என்னவெனில் இவையிரண்டும் நிறைய பேருக்கு கடைசி வரை நிலைப்பதில்லை. பாசிபடிந்த கல்லினை மீன்கள் சுரண்டுவது போல இழந்த உறவுகளையே மனித மனம் உரசித் திரிகிறது. 'போப்பூர் சுல்தான்' என்றழைக்கப்படும் பஷீரின் இளம்பருவத்து தோழியின் நினைவுகள் தான் பால்யகால சகி.

பஷீரின் ஆக்கங்கள் அனைத்துமே வாசகர்களால் கொண்டாடப்படும் படைப்புகள். அவருடைய புனைவுகள் அனைத்துமே எளிமையான வாசகர்களுக்கானது. புன்னகையுடன் அவருடைய மொழிக்குப் பின்னால் நம்மை அழைத்துச் செல்லக் கூடியது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் வெவ்வேறு தலைமுறையினரால் அவளுடைய இளம்பருவத்துத் தோழி ரசிக்கப்படுகிறாள். அவள் சொல்ல வந்த விஷயத்தை யோசிக்காதவர்களே இருக்கமுடியாது.
மஜீத்,சுஹரா -
இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கிறார்கள். மஜீதின் அப்பா பணக்கார மர வியாபாரி. நல்ல முறையில் தொழில் செய்து பணம் ஈட்டுபவர். சுகராவின் அப்பாவோ ஏழ்மையில் உழலும் பாக்கு வியாபாரி. முரண்பட்ட பொருளாதாரச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏது?. அப்படியே வந்தாலும் விளையாட்டும் கேளிக்கைகளும் சண்டைகளும் அவர்களை ஒன்று சேர்க்கிறது அல்லவா? உலகம் அறியாத வெகுளிப் பெண்ணான சுராவை சீண்டி விளையாடும் சந்தர்ப்பம் மஜீத்திற்கு அமைகிறது.

அவர்களுடைய வீட்டிற்கருகில் ஒரு மாமரம் இருக்கிறது.
பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிரும் பொழுது சுராவை முந்திக்கொண்டு மஜீது எடுத்துக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
மஜீதின் மீதான ஆரம்ப வெறுப்பிற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நகங்களை ஆயுதமாகக் கொண்டு அவனுடன் சண்டைக்குப் பாய்கிறாள். அவர்களுடைய சண்டை புன்னகையுடன் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல்கள். பழம் தனக்குக் கிடைக்காத ஏமாற்றத்தால் சுரா கண் கலங்குகிறாள். அவளைத் தேற்றுவதற்காக மஜீது மரத்திலிருந்து பறித்த கனிகளை சுராவிற்குக் கொடுத்துவிடுகிறான். அதிலிருந்து மஜீதின் இளம்பருவத்து தோழியாகிறாள் சுஹரா. அவன் அரசனாக வாழும் கற்பனை உலகின் தங்க மாளிகையில் அவளே ராஜகுமாரியாகிறாள்.

அதன் பிறகு அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல் நம்மை பல்யத்திற்கே அழைத்துச் செல்கிறது. இஸ்லாமிய மார்கத்தில் ஆண்களுக்கு சுன்னத் கல்யாணமும் (circumcise), பெண்களுக்கு காது குத்து விழாவும் (Ear piercing function) முக்கியமானது. அதைப்பற்றி நாவலில் வரும் சுவாரஸ்யமான உரையாடல்...

உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் சுன்னத்து செய்கிறார்கள். செய்யாதவர்களே கிடையாது? இருந்தாலும்... இந்த சுன்னத்தை எப்படிச் செய்வார்கள்? மஜீத் சுராவிடம் கேட்டான்.

அவளுக்கும் எதுவும் தெரியவில்லை. "என்ன இருந்தாலும் வெட்டி ஒண்ணும் எடுக்க மாட்டாங்கோ" என்று ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது.

கோலாகலமாக நடந்த சுன்னத் கல்யாணத்தில் இவன் மட்டும் வலியுடன் படுத்திருக்கிறான். அவன் படுத்திருந்த அறையின் ஜன்னலின் பின்புறத்தில் நின்று கொண்டு சுரா கேட்கிறாள்.

நீ பயந்தியா மஜிதே?

"நானா?..." நான் பயப்பட ஒண்ணுமே இல்லே...

அப்போது சுரா தனக்கு காது குத்தவிருக்கும் விஷயத்தைச் சொன்னாள்.

இது போன்ற வெகுளித்தனமான உரையாடல்களால் நாவல் இதமாக நகர்கிறது.

ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பதால் அவர்களுடைய அன்பு நாளுக்கு நாள் வளர்கிறது. மஜீத் ஆரம்ப வகுப்பில் தேர்ச்சி அடைய சுரா பெரிதும் உதவுகிறாள். அவளின் அப்பா இறந்துவிடவும் மஜீத் மட்டும் மேற்படிப்பிற்காக நகரத்திற்குச் செல்கிறான். எந்த வகையிலும் உதவ முடியாத நிலையில் வார்த்தைகளால் மட்டுமே மஜீதால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடிகிறது. ஒரு கட்டத்தில் அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நகரம் சென்று, பரதேசியாக சுற்றித் திரிந்து பல வருடங்கள் கழித்து சுராவை மணக்கும் ஆசையுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்புகிறான். வீட்டின் நிலைமை நினைத்ததற்கு மாறாக தலைகீழாக இருக்கிறது. அப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கித் தவிக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருந்த வீடு கூட அடமானத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். சகோதரிகள் வளர்ந்து திருமண வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சுராவுக்கு நகரத்திலுள்ள கசாப்புக் கடைக்காரனுடன் இரண்டாம் தாரமாக திருமணம் முடிந்து, அவனுடைய சித்திரவதையால் பல் உடைபட்டு, கன்னங்கள் ஒட்டி, மெலிந்து போய் ஊர் திரும்புகிறாள்.

பால்ய நண்பர்களான இருவரும் நீண்ட நாட்கள் கழித்து நேருக்கு நேர் சந்தித்து
க் கொள்கிறார்கள். வார்த்தைகளால் பூரணமான அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.

தங்கைகளின் திருமணத்திற்காகவும், இழந்த சொத்துக்களை மீட்பதற்காகவும் பணம் சேர்க்க
நகரத்திற்குச் செல்ல ஆயத்தமாகிறான் மஜீத். அனைவரிடமும் விடைபெற்று சுகராவிடம் செல்கிறான். அவள் ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இருந்துவிடுகிறாள்.

செல்லுமிடத்தில் சேல்ஸ்மேனாக வேலை கிடைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். எதிர்பாராத விதமாக accident-ல் ஒரு காலை இழந்து ஊனமாகிறான். அங்கஹீனத்துடன் சொந்த ஊருக்குச் செல்லத் தயங்குகிறான். ஆகவே ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவி வீட்டிற்குப் பணம் அனுப்புகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல், கற்பனையில் சுராவிடம் பேசிக்கொண்டு நாட்களைக் கடத்துகிறான். எதிர்பாராத தருணத்தில், நெஞ்சு வலியால் சுகரா இறந்துவிட்டாள் என்ற செய்தி அவனுடைய அம்மாவிடமிருந்து வருகிறது.

கிராமத்தைவிட்டுக் கிளம்பும் போது "அவள் சொல்லவந்தது என்ன?" என்ற வினாவுடன் நாவல் முடிகிறது. இயல்பாகவே ஓர் ஆணுக்கு பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் ஏற்படும் அன்பு அற்புதனானது. வாழ்க்கையில் இணையாவிட்டாலும் அந்த அன்பு ஈடு இணையற்றது. உலகம் தெரியாத குழந்தை மனதில் ஏற்படும் அன்பு, காதலாக மாறி கைதவறிப் போகும் ஒருவனின் ரணமான நினைவுகள் தான் பல்யகாலசகி.
0
0 00 00 00 00

பஷீரைப் பற்றி காலச்சுவடில் வெளியான கவிஞர் சுகுமாரன் மற்றும் ஜெய மோகனின் கட்டுரைகள்:

பஷீர்: பூமியின் உரிமையாளர் - கவிஞர் சுகுமாரன்
பஷீர் : மொழியின் புன்னகை - ஜெய மோகன்


2 comments:

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

ஜீவி said...

கு.ப.ரா.வின் 'நூருன்னிசா' சிறுகதையும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற பால்ய சிநேகம் வயது வந்து வளர்ந்த பிறகு
ஏற்படுகின்ற உணர்வுகளை அழகாகச் சொல்கின்ற கதை.

பஷீரின் 'பால்யகால சகி'யை எளிமையாக அழகாக மனத்தில் பதிகிற மாதிரி அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.