Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை - புதிய இதழ்

புதிய இதழ், விற்பனைக்கு அல்ல தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு தபாலில் வந்திருந்தது.வார இதழா? மாத இதழா? என்ற எந்தக் குறிப்பும் இல்லை. விமர்சனத்தையும் வரவேற்பையும் பொறுத்து விலை மற்றும் கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டுரையே வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்! என்று அசத்தலாக இருந்தது. சாய்னா நெஹ்வால் (மேட்மின்ட்டன்), இளவழகி (கேரம்), மித்தாலி ராஜ் (கிரிக்கெட்), தீபிகா & ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), ஷாமினி (டேபிள் டென்னிஸ்) போன்ற விளையாட்டில் சாதனைப் படைத்த பெண்களைப்பற்றிய கவர் ஸ்டோரி. ஜி. கோமளா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

”உதவி காத்திருக்கு” என்ற பகுதியில் ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற ஆனால் கல்வி கற்பதில் ஆர்வமிருந்தும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு அரசும் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து உதவிகள் செய்ய முன்வந்திருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலதிக விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தொலைபேசி இலக்கங்கள் : 9900906338.

"எஞ்சினியரிங் கவுன்சலிங்" - கவுன்சலிங் என்றால் என்ன? அதை கிராமப்புற மாணவர்கள் எப்படி அணுகுகிறார்கள், தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து தரப்படுகின்றது என்று பதிவர் ஆதிஷா மற்றும் யுவன்கிருஷ்ணா எழுதி இருக்கிறார்கள்.

அடுத்து "வாமணன் திரைப்படம் பற்றிய விமர்சனம்" என்பதால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன்.

"கேள்வி நேரம்" என்ற பகுதியில் இயக்குனர் சீமானுடன் சென்னை லயோலாக் கல்லூரி ஊடகக் கலை மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊடக மற்றும் மார்க்கெட்டிங் துறை மாணவர்களும் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் சலிக்காமல் பதிலளித்துள்ளார்.கவின் மலர் இதனைத் தொகுத்துள்ளார்.

அடுத்து "கடவுள் எங்கே இருக்கிறார் - மின்னஞ்சலில் வந்த சிந்தனை" என்ற பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அப்துல் கலாம் - அவருடைய கல்லூரி நாட்களில் வகுப்பு பேராசிரியருடன் நடத்திய உரையாடல். ரிஷிகுமார் மூலம் இந்த ஆன்மீக உரையாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

"எச்சரிக்கை ஆபத்து நெருங்குகிறது" என்ற பகுதியில் இந்திய இளைஞர்களின் சக்கரைக் குறைபாடு விகித அதிகரிப்பும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய துணுக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

"பைக் வாங்குவது எப்படி?" - இருசக்கர வாகனகளை வாங்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பகுதியில் இருக்கிறது.

அடுத்துள்ள கவிதைப் பகுதியில் பதிவர் மற்றும் பகுதி நேர நிரூபர் உமாஷக்தி அவர்களின் "புத்தரும் நானும்" கவிதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

பொதுவாக வார, மாத இதழ்களின் நடுப்பக்கங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களால் அலங்கரிக்கப்படும். இந்த இதழில் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தை காஷ்மீரின் ஷேக் அப்துல்லா - ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவிலிருந்து, தமிழ்நாட்டில் கலைஞர் - ஸ்டாலின் -அழகிரி - கனி மொழி வரை இந்திய அரசியல் தலைவர்களின் ஜனநாயக விரோத செயலை விளக்குமாறு படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

"பைக்கில் ஒரு பயணம்" - நீலாங்கரை அடுத்துள்ள ஆலம்பறா கோட்டை பற்றிய கட்டுரை.

"கோடம்பாக்கத்தில் சுனாமி" - தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் பாய்ச்சல் என்ற கட்டுரை கிராமத்திலிருந்து வந்து தற்போது நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பாண்டியராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மற்றும் நாடோடிகள் சசிகுமார் பற்றிய சினிமா கட்டுரை. அழகாக எழுதி இருக்கிறார்கள்.

"அச்சத்தை வென்றது எப்படி?" - கவிஞர் வைரமுத்துவின் முதல் மேடைப் பேச்சையும், அதில் அவர் பட்ட கஷ்டங்களையும் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல பேச்சாளர் ஆனதையும் குறித்த அருமையான கட்டுரை.ஒவ்வொரு இதழிலும் சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து அருணா ஸ்ரீனிவாசின் "நிறைவு" சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

"தவறு செய்தவர் ஆசிரியர் - தண்டனை அனுபவிப்பது மாணவன்!" பகுதியில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவால் எந்த சலுகைகளையும் பெற முடியாமல், அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கும் மாணவரைப் பற்றிய கட்டுரை.

எல்லாமே ஓசி - இ-கலப்பை மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரை.

புத்தக அறிமுகம் (தமிழ் மொழி) - "எங்கே எனது அல்வாத் துண்டு?" கே.ர மணி மொழிபெயர்த்த பிரசித்தி பெற்ற Who moved mycheese? புத்தகத்தைப் பற்றிய பரிந்துரை என அசத்தியுள்ளார்கள்.

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பத்திரிகைத் துறையில் செயல்பட விரும்புவோர் புதிய தலைமுறை இதழினை அணுகலாம். திரு மாலன் அவர்களின் பத்திரிகைப் பணி அழைக்கிறது என்ற பதிவில் அதற்கான அறிவிப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை வெற்றியின் உச்சியைத் தழுவ வாழ்த்துக்கள்.

-கிருஷ்ண பிரபு

10 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல அறிமுகம் கிருஷ்ணா. பாண்டியராஜன் - பாண்டிராஜ் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன், பசங்க திரைப்பட இயக்குனரைக் குறிக்கும் பட்சத்தில்...

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

எனக்கு சினிமா அறிவு அவ்வளவாக இல்லை.கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் சேரல். மாற்றி விடுகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

புதிய தலைமுறைப் பற்றி இன்று படிக்கும் இரண்டாவதுபதிவு இது.

rvelkannan said...

நண்பரே
வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின்
பக்கம் வந்தேன் (நன்றி : சேரல்(இது இரண்டாவது முறை
முன்பு 'ராஜா சந்திர சேகர் கவிதைகாக) இன்னும்
சில தினங்களின் உங்களின் 3 வலைபூக்களையும்
படித்து விடுவேன்
படித்தவரை :
உங்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஒரு நூறு
பூச்செண்டு தரலாம். அவ்வளவு நளினம்.
தொடர்க...
இன்னும் தொடர்வேன்
மீண்டும் பயணத்தில் சந்திப்போம்
தோழமையுடன்
இரா.கண்ணன்

kannan said...

நண்பரே
வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின்
பக்கம் வந்தேன் (நன்றி : சேரல்(இது இரண்டாவது முறை
முன்பு 'ராஜா சந்திர சேகர் கவிதைகாக) இன்னும்
சில தினங்களின் உங்களின் 3 வலைபூக்களையும்
படித்து விடுவேன்
படித்தவரை :
உங்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஒரு நூறு
பூச்செண்டு தரலாம். அவ்வளவு நளினம்.
தொடர்க...
இன்னும் தொடர்வேன்
மீண்டும் பயணத்தில் சந்திப்போம்
தோழமையுடன்
இரா.கண்ணன்

RAGUNATHAN said...

அறிமுகத்திற்கு நன்றி. நல்ல பதிவு :)

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

நல்ல பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்.
தாங்கள் குறிப்பிட்ட திண்ணை தளத்திலிருந்த தேவதேவன் முகவரி மற்றும் தொலைபேசி அழைப்பு எண் இரண்டுமே பலன்தரவில்லை.. ஆனால் அந்தப் பதிவை வாசித்த நண்பர் ஒருவர் தன்னிடம் தேவதேவனின் அனைத்து நூல்களுமிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் "தேவமலர்" தான் ஏமாற்றுகிறது.. பெருநகரப் பாணன் விக்கிரமாதித்தியன் அவர்களை எப்படியேனும் தொடர்புகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அவரை எப்படித் தேடிப்பிடிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறேன்.

Unknown said...

@அமிர்தவர்ஷினி அம்மா - நன்றி
@ velkannan - நன்றி
@ ரகுநாதன் - நன்றி

@ ஷிஜுசிதம்பரம்

தேவமலரைப் பற்றி விக்ரமாதித்யனிடம் தெரிந்து கொண்டதாகவும், கோணங்கியின் நூலகத்தில் படித்ததாகவும் அல்லவா எஸ். ரா எழுதியிருந்தார். எனக்கு என்னவோ கோணங்கியிடம் இருக்குமோ என்று தோன்றுகிறது.

SIV said...

உபயோகமான வளை தளம். அடிக்கடி வராலாம்.... எந்த புத்தகம வாங்குவதாயினும் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது போலிருக்கிறது

Unknown said...

நன்றி சிவ்...நான் படித்த புத்தகம் எனில் நிச்சயம் பரிந்துரை செய்கிறேன். You are always welcome.

உங்களுடைய வலைப்பூவை சற்று முன் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்...