Thursday, September 9, 2010

அலகிலா விளையாட்டு - பா ராகவன்

யுகம் யுகமாகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது. வாழ்வில் சிறந்தது சிற்றின்பமா? பேரின்பமா?. இரண்டையுமே கண்ணெதிரில் வைத்துவிட்டு எது என்று கேட்டால் பதில் சொல்லலாம். தேர்ந்தெடுப்பதிலும் பிரச்சனை இருக்காது. பரமாத்மாவுடன், மனித ஆத்மாவை சேர்ப்பதுதான் மேலான வாழ்க்கை என்கிறார்கள். ஆத்மாவையே உணர முடியவில்லை. பிறகு பரமாத்மாவை எங்கிருந்து கண்டடைவது.

ஆத்மாவைப் பற்றியும், தத்துவங்கள் பற்றியும் சிந்திப்பது திசைகாட்டியும் மாலுமியும் இல்லாமல் நடுக்கடலில் பயணம் செய்வதைப் போன்றது. பெரும்பாலும் இலக்கில்லா பயணங்கலாகவே அமையக்கூடும். தெளிவற்ற இலக்குகளாகவே அவைகள் இருக்கும். எதிரில் தென்படும் கலங்கரை விளக்கங்களே நம் பயணத்தின் முடிவைத் தீர்மானிக்கும். கரைகொண்டு சேர்ப்பது கூட மாலுமிகளின் சாமர்த்தியம் தான். உண்மை என்னவெனில் கலங்கரை விளக்கங்கள் போன்ற மார்கங்கள் நிறையவே இருக்கின்றன. சரியான வழிகாட்டிகள் தான் நமக்குக் கிடைப்பதில்லை. பலரும் மோசம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆன்மீகத்தையும், தத்துவத்தையும் அணுகுவது கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளைக் கொண்ட மாய வட்டத்தில் நுழைவதைப் போன்ற சிக்கலான செயல். அதன் மாயக் கரங்கள் தலையை வருடுமா? கழுத்தை நெறிக்குமா? கால்களை இடறி குப்புறக் கவிழ்க்குமா? என்பது அதில் நாம் எந்த அளவிற்கு சஞ்சரிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அமைகிறது.

பற்றில்லாத வாழ்க்கையின் சிக்கல்களே கதையின் முக்கியப் பிடிமானம். மாணவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பதையையே பிரதானமாக நினைக்கும் வேங்கட சாஸ்த்ரி, பொருலீட்டுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக நினைக்கும் கதைநாயகனின் குடும்பம், அகிம்சை மார்கத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி, இலவச கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு சுழன்று கொண்டிருக்கும் கோபாலகிருஷ்ண ஹெக்டே, கடைசி மூச்சு உத்ரகாசியில் தான் போக வேண்டும் என்று ஆசைப்படும் கதைநாயகனின்
அறைத் தோழர்கள், மனிதர்கள் மேலான நிலையை அடைய வழிகாட்டும் மடாலயத் துறவிகள் என்று எல்லோருமே ஒரு விஷயத்தைத் தீவிரமாக பற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மத்தியில் சுழன்ற 73 வயது பிரமச்சாரி தனது சிக்கலான வாழ்வின் தருணங்களைத் திரும்பிப் பார்ப்பதுதான் கதை.

தனக்கு வேதம் சொல்லிக் கொடுத்த வேங்கட சாஸ்திரி கடைசி வரை கஷ்டங்களைத் தானே அனுபவித்தார், "கற்றுக் கொடுக்கும் வேதம் அவரைக் காப்பாற்றும் என்றாரே!" கடைசி வரை நெருக்கடியான வாழ்க்கையைத் தானே வாழ்ந்து முடித்தார் என்கிற எண்ணம் வயோதிகரை வாட்டி எடுக்கிறது. வயது அதிகமாக அதிகமாக குருவின் கடைசி மகள் பூரணியின் மேல் கொண்ட காதலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் அவர் படுத்த படுக்கையாகிறார். கூட்டிலிருந்த பறவை இலகுவாகப் பறந்து ஆகாசத்தை அடைவதைப் போல வயோதிகரின் உயிரும் பிரியப் போகும் கனத்தை எதிர்பார்த்தபடி சுற்றி நின்று மந்திரம் ஓதுகிறார்கள் அவருடைய தோழர்கள். அந்த நேரம் பார்த்து பூரணி வந்து சேர்கிறாள். நங்கூரத்தின் பிடியில் சிக்கிய கப்பலைப் போல அவன் கட்டுண்டிருக்கிறான். அவனுடைய மனம் செல்லும் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. மனம் கடந்த காலத்தின் தொடுவானத்தை நோக்கிப் பயணிக்கிறது.

சிறுவயதில் திருவையாறில் வேதம் படித்தது, ஆசிரியரின் இன்னல்களுக்கு சாட்சியாக நின்றது, அவரிடமிருந்து பிரிந்து சென்றது, படித்து முடித்து போஸ்ட் மாஸ்டர் வேலைக்காக திருவையாறுக்கே சென்றது, பூரணியிடம் காதலைச் சொல்லி தோல்விகண்டது, காந்தி சென்னைக்கு வந்தபோது அவரை சந்திக்க நினைத்தது, கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் வேலைக்குச் சேர்ந்தது, கல்கத்தாவில் நூலகராக பணியாற்றியது, புத்தமடாலயத்தில் தத்துவ ஆராய்ச்சி செய்தது, முதன்முதலாக கைலாயம் சென்றது, மரணப் படுக்கையில் விழுந்தது என்று எங்கெங்கோ சென்று திரும்புகிறது மனம்.
பூரணியின் வரவு உற்சாகத்தை ஏற்படுத்த உடல்நலம் தேறுகிறார். ஒரு குழுவாக கைலாயம் செல்கிறார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் முடிவு.

பாராவின் எழுத்து நதி, பனிமலை, குளிர், வேதப்பள்ளி என ஒவ்வொன்றையும் கண்முன் கொண்டுவரும். கதையில் வரும் கங்காதரன் நாயர், பூரணி, வெங்கடராமன், கல்லிடைக்குறிச்சி பாட்டி, வேங்கடராம சாஸ்த்ரி, ராயலசீமா சூரிக் கிழவர், ஜான் ஸ்மித், அவனுடைய காதலி, விடுதி ஒனர் சிந்தி, கோபால கிருஷ்ண ஹெக்டே, மடாலய பிக்குகள், துறவிகள், வாத்தியாரின் அத்தை, மனைவி மற்றும் குழந்தைகள், ஆங்காங்கு வந்து செல்லும் சில நபர்கள் என எல்லோரும் மனத்தைக் கொள்ளை கொள்வார்கள்.


ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் முதல் பரிசு (அதைப் பற்றி - பத்ரி) பெற்றதால் 2004-ஆம் ஆண்டு இலக்கிய பீடத்தில் இந்த நாவல் தொடராக வந்தது. அந்த வருட ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் பொன்னேரி நூலகத்திற்கு நடையாய் நடந்தது நினைவிற்கு வருகிறது. இந்த நாவலின் பக்கங்களை இதழிலிருந்து திருடியது நேற்றுதான் செய்தது போல இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் திருடிய இதழினை புத்தகமாக பைண்டிங் செய்து பா ராகவனை நேரில் சந்தித்த பொழுது கையெழுத்து வாங்கினேன்.

"வெறிபிடித்த வாசகன் கிருஷ்ணபிரபுவுக்கு - நேசமுடன் பாரா" என்று கையொப்பமிட்டார். எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. அலகிலா விளையாட்டைப் பொறுத்தவரை நான் வெறிபிடித்த வாசகனாகத் தான் இருந்தேன். அதனை மீள் வாசிப்பிலும் என்னால் உணர முடிந்தது.

கடந்த ஆண்டு இலக்கிய பீடத்திற்கு சென்று பல பிரதிகளை வாங்கி நண்பர்களுக்குப் பரிசளித்தேன். திருடிய இடத்தை சும்மா விடமுடியுமா? பொன்னேரி நூலகத்திற்கும் சென்றிருந்தேன். நூலகர் பேநிக்கிடம் என்னுடைய திருட்டு விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டு கையில் எடுத்து சென்ற புத்தகத்தை பரிசாகக் கொடுத்தேன். நக்கலான சிரிப்புடன் வாங்கிக் கொண்டார்.

நாவலின் சில வரிகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது:

பாஸ்டன் பாலாவின் பதிவில்...
சிங்கப்பூர் பதிவர் சுரேஷின் வலைப்பூவில்...

பாரா எழுதிய புனைவுகளிலேயே இந்தப் புதினம் மிகச் சிறந்த ஒன்று. என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இவருடைய மற்ற படைப்புகளை கூட இதன் பின்னால் தான் வைப்பேன். ஏனென்று தெரியவில்லை அவரின் தீவிர வாசகர்கள் கூட இந்த புதினத்தைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள் என்பதுதான் வினோதமான உண்மை. வேத தத்துவத்தில் விருப்பமுள்ள நண்பர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய சுவாரஸ்யமான தமிழ் நாவல். இந்த நூல் பாராவின் வேறொரு முகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.

இந்த புத்தகத்தைப் பற்றிய என்னுடைய முதல் பதிவு. நாவலைப் படித்த பல வருடங்கள் கழித்து எழுதியதால் விவரங்கள் தெளிவில்லாமல் இருக்கும்.

அலகிலா விளையாட்டு - பா ராகவன் -1

வெளியீடு: இலக்கிய பீடம்
ஆசிரியர்: பா ராகவன்
விலை: 70 ரூபாய்
******************************************************************
கிடைக்குமிடம்:
முகவரி:
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033
இந்தியா
ஆசிரியர் : விக்ரமன்
தொலைபேசி :914423712485

3 comments:

சென்ஷி said...

:)))

நிச்சயம் நீர் வெறிபிடித்த வாசகர்தான் அய்யா... நல்ல பகிர்வு. விரைவில் வாசிக்க விரும்பும் புதினங்களின் வரிசையில் பெயர் குறிப்பிட்டுக்கொண்டேன்.

விமர்சனத்தில் பல இடங்கள் முத்துக்கள்... மிகவும் ரசித்துப் படித்தேன்.

CS. Mohan Kumar said...

கிருஷ்ண பிரபு, வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_18.html

J S Gnanasekar said...

கோபால கிருஷ்ண ஹெக்டே ஆசிரமத்தில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சியும் லங்குணி பூரணியின் முடிவும் மறக்க முடியாது.