Thursday, December 30, 2010

மயிரு - யாத்ரா

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

உயர் நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் மக்கள், தலையிலிருந்து விழுந்த மயிரின் நிலையைப் போல கருதப்படுவர் என்பது வள்ளுவன் வாக்கு.

குளிர்ச்சியான எண்ணெய், வேதிக்களிம்பு என பராமரிக்கும் தலைமுடி வாருகோலின் இழுப்பில் உதிரும்போது சுருட்டி எறிந்துவிடுகிறோம். திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற கோவில்களில் நேர்த்திக் கடனுக்காக கொடுக்கப்படும் முடி மாதத்திற்கு டன் கணக்கில் சேர்க்கிறது. ஆண்களின் முடி பெரும்பாலும் சாக்லேட் (chocolate) தயாரிக்க உப பொருளாகப் பயன்படுகிறது. பெண்களின் கேசம் அதனுடைய நிறம், நீளம், தன்மை போன்றவற்றைக் கருதி நல்ல விலைக்குப் போகிறது. இந்திய கூந்தலுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை இருப்பதால் பெரும்பாலும் ஏற்றுமதியாகிறது.

லட்சக் கணக்கான சிகை அலங்காரக் கலைஞர்கள் சிறுதொழிலாக முடி வெட்டுவதைத் தானே செய்கிறார்கள். மயிர் வியாபாரம் என்பது ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டக் கூடிய தொழில். 'மயிர்' என்பது குபேர சம்பத்து. என்றாலும் பொது இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியாக இருக்காது.

மயிரு என்ற தலைப்பு முடிவானதுமே சலசலப்புடன் கூடிய கவனத்தைப் பெற்றது யாத்ராவின் கவிதை நூல். இவருடைய "எப்டியிருக்கிங்க" என்ற கவிதையை மட்டுமே இதுநாள் வரை வாசித்திருக்கிறேன். ஏனெனில் கவிதை என்ற நிறுத்தத்தில் என்னுடைய பேருந்து நிற்காது. வாகனம் பழுதாகி நின்றால்தான் உண்டு. நண்பர்கள் கவிஞர்களாக இருக்கும் பொழுது சாதகமான தயக்கங்களுடன் நிற்க வேண்டி இருக்கிறது. அதுவே தற்செயலான சந்தோஷங்களுக்கும் வழிவகுக்கிறது.

தொகுப்பை வெளியிட்டு பேசிய திரு.ராஜசுந்தரராஜன் கவிதைகள் மீதான ஈர்ப்பையே ஏற்படுத்திவிட்டார். நான்கு வரியே கொண்ட கவிதை கூட எவ்வளவு அழகான, ஆழமான விஷயங்களை அடக்கியிருக்கிறது என்று கவித்துவமாக பேசினார். அடுத்து பேசிய திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் நிறைகுறைகளை குறிப்பிட்டுப் பேசினார்.

தொகுப்பு கைக்குக் கிடைத்தவுடன் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். பல கவிதைகளும் பிடித்தமாக இருந்தது. குறிப்பாக,

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல
உயர்த்த
முயல
எவ்வளவு குரூரம்
வீட்டு நாயாயிருக்கவே
சும்மா விட்டது...

செல்லப் பிரணியுடனான விளையாட்டாகவும், வதைக்கும் செயலாகவும் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் தேர்தல் கால சலுகைகளையும் அதன் பின்னர் ஏமாளியாகும் மக்களின் யதார்த்த குறியீடாகவும் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற பல கவிதைகளைக் குறிப்பிட முடியும்.

கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது என்று ராஜசுந்தரராஜன் கூறினார். அதற்கு "இருப்பு" என்ற கவிதையை உதாரணமாக சொல்லலாம். ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளன் பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள மிகப்பிடித்த கவிதை இது.

"மயிர் என்னை ஏதோ செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை எனக்கு சொல்கிறது.தத்துவங்களை கூட சொல்வது போல சமயத்தில் தோன்றும். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் தொகுப்பில் கூட 20 முறை பயன்படுத்தப்பட்டு இருக்கும்" என்று தனது நன்றியுரையில் யாத்ரா கூறினார். எதுவுமே உறுத்தக் கூடிய இயல்பில் சேர்க்கப்படவில்லை. அதன் பொருள் கருதியே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

"எப்டியிருக்கிங்க" கவிதை மனதை ஏதோ செய்யக்கூடிய ஒன்று. ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி வைத்த குமுறலின் வெளிப்பாடு. இதில் கூட ஓர் இடத்தில் முடி இருக்கும்.

"விழுந்த புத்தகமெடுக்க குனிய
கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி"

இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் "பொதுவாகவே கவிதைகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரிவதில்லை என்று வருந்துபவன். இந்தக் கவிதை புரிந்தது மட்டுமல்லாமல் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது" என்று யாத்ராவிற்கு சொல்லியிருந்தேன்.

முதன் முதலில் யாத்ராவை நேரில் பார்த்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. சென்னை சிறுகதைப் பட்டறையில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவன் ஒரு நோட்டை நீட்டி பேனாவைக் கையில் கொடுத்தான். உங்களோட "மின்னஞ்சல் முகவரியும், விவரங்களும் எழுதித் தாருங்கள்..." என்றார்.

இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு "என்னோட விவரங்கள் உங்களுக்கு எதற்கு?" என்று கேட்டேன்.

"தொடர்பில் இருக்கத் தான்..." என்று சிரித்துக் கொண்டே மென்மையாகக் கூறினார்.

அன்று பார்க்க நேர்ந்த குறும்புச் சிரிப்பும், மகிழ்ச்சியும் அவருடைய முதல் புத்தக வெளியீட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தது. அவருடைய மகிழ்ச்சியான பயணம் இன்னும் தொடர வேண்டும் என்று நண்பனாகப் பிரியப்படுகிறேன்.

மென்மையான நண்பனின் புத்தகத்தை வாங்கிப் படிக்குமாறு நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். யாத்ராவின் புத்தகம் அகநாழிகை பதிப்பகத்தில் கிடைக்கிறது. புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 274-ல் அகநாழிகை புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

யாத்ராவின் வலைப்பூ முகவரி: http://yathrigan-yathra.blogspot.com

4 comments:

CS. Mohan Kumar said...

Very nice. Both about the book and the poet.

ஆதவா said...

நான் மிகவும் எதிர்பார்த்தவரது புத்தகம்!! விமர்சனத்திற்கு நன்றி

யாத்ரா said...

ரொம்ப நன்றி நண்பா, ரொம்ப மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கு, புத்தக கண்காட்சியில் சந்திப்போம் :)

Sugirtha said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, ஒரு முழுமையான பதிவு!