Tuesday, January 12, 2010

புத்தகக் கண்காட்சி 10-ஆம் நாள்.

வெள்ளிக்கிழமை இரவு அடர்த்தியான தூறல் விழுந்துகொண்டிருந்தது. நாளை மதியம் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் எனக்கும், முரளி பத்மநாபனுக்கும், கார்த்திகை பாண்டியனுக்கும் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. மறந்துவிடாமல் இருக்க குறிப்பெடுத்துக் கொண்டேன். சிறப்பு என்னவெனில் என்னுடைய மருமகனும் புத்தகம் வாங்க வரப் போவதாகக் கூறியிருந்தான். அதனால் தான் தூறல் பொழிகிறதோ என்னவோ!

மதியம் 1 மணிக்கு உள்ளே சென்றேன். நேராக NCBH சென்றேன். 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த புத்தகத்திற்கான தமிழக அரசின் விருது எழுத்தாளர் தமிழ் மகனின் சிறுகதைத் தொகுப்பான 'எட்டாயிரம் தலைமுறை' நூலுக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் NCBH வெளியீடு என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்தவர்கள் நான் விசாரித்த நூலைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது என்றார்கள். பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தமிழ் மகனுக்கே ஃபோன் செய்து குறைபட்டுக் கொண்டேன்.

"சிரித்துக் கொண்டே உங்களுடைய முகவரியைக் கொடுங்கள் தபாலில் அனுப்பிவிடுகிறேன்" என்றார்.

"ஒரு புத்தகத்தை தேடி வாங்குவதுதான் எழுத்தாளருக்கு செய்யும் நல்ல மரியாதை என்பது என்னுடைய எண்ணம். ஆகவே அதைப் படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன்" என்றேன்.

அங்கிருந்து வம்சிக்கு சென்று வலைப் பூக்களின் தொகுப்பாக வந்த புத்தகங்களை நண்பர்களுக்காக வாங்கச் சென்றேன். புத்தகங்களுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுது என்னைத் தள்ளிக் கொண்டு தாடி வைத்த ஒரு பையன் ஓடினான். அங்கு கவிஞர் முத்துக்குமார் உட்கார்ந்து கொண்டிருந்தார். பாடப் புத்தகத்தின் எழுதாத பக்கத்தைக் கொடுத்து அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். என்னைக் கடந்து செல்லும் போது அவனை குரோதத்துடன் பார்த்தேன். ஆதர்ஷ கவியைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் பறந்து கொண்டிருந்தான். பாரதி சொல்லியது போல இன்னும் நன்றாக குரோதம் பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். :-)

காலச்சுவடிற்கு சென்று புத்தகங்களை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் நின்று பூச்சி காண்பித்தான் மருமகன். அவனுடையறைத் தோழனும் உடன் நின்று கொண்டிருந்தான்.

"வந்துட்டயா... உனக்கு பிடிச்சப் புத்தகங்கள் எல்லாம் எடுத்துக்கோ!" என்ற சலுகையை வழங்கினேன். முதன் முறையா பெண் பார்க்கச் செல்லும் பொழுது வரும் சந்தோஷக் கூச்சத்தோடு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விருப்பத்திற்கே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளட்டும் என்று சுதந்திரமாக விட்டுவிட்டேன்.

'துணையெழுத்து' படித்ததிலிருந்து எஸ் ரா அவனுக்கு ஆதர்ஷம். 'பிஞ்சுகள்' படித்ததிலிருந்து கி ரா. 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' படித்ததிலிருந்து ஜெயாகந்தன். காலச்சுவடில் அவனுடைய ஆதர்ஷனங்கள் இல்லாததால் திணறிக் கொண்டிருந்தான்.

என்னருகில் நெருங்கிய ஒருவர் "உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே?" என்றார். அப்படியெல்லாம் இருக்காது நல்லா யோசிச்சிப் பாருங்க என்று பதில் கூறினேன். அவர் உயிரோசையில் கட்டுரைகள் எழுதுவதாகக் கூறினார். என்னுடைய மின்னஞ்சலைக் கொடுத்து எனக்கு அனுப்புங்கள் படிக்கிறேன் என்றேன். ஜி நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, என் பெயர் சிவப்பு போன்ற முக்கியமான 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உயிர்மைக்கு சென்றோம்.

உயிர்மையில் மருமகனுக்கு பிரச்சனையே இல்லை. அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறையவே இருந்தன. 'காளி நாடகம்' என்ற புத்தகத்தை அவனுக்காகத் தேடிக் கொண்டிருந்தேன். ஓரமாக நின்றிருந்த "ஒருவர் என்ன புத்தகம் வேண்டும்? நான் உதவி செய்யட்டுமா?" என்றார். அவர் பங்குக்கு தேடிவிட்டு மற்றொருவரை உதவிக்குக் கூப்பிட்டார். வந்தவரும் ஏமாற்றத்தை அளிக்கும் நேரத்தில் தனசேகர் வந்தார். உயிர்மையின் புத்தகங்கள் அவருக்கு அத்துப்படி என்பதால் உடனே எடுத்துக் கொடுத்தார். ஆரம்பத்தில் உதவி செய்ய வந்தவருக்கு நன்றி தெரிவிக்க நெருங்கிச் சென்றேன்.

"எனக்குப் புத்தகங்களைப் பற்றித் தெரியாதுங்க... சும்மா நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய கவிதை புத்தகம் உயிர்மையில் வெளிவந்துள்ளது. வாசகர்கள் எந்தப் புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள் என்று பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறேன்" என்றார்.

என்னை அறிமுகம் செய்துகொண்டு "உங்கள் பெயர் என்ன?" என்றேன்.

வா மணிகண்டன். கவிதை எழுதுவதில் விருப்பம் என்று பாரதி, பசுவய்யா, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், சுகுமாரன், வைத்திலிங்கம், நகுலன், தேவதச்சன், மு. மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா என்று பல கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்காகவே அவருடைய புத்தகத்தை வாங்கினேன். இதுதான் நான் வாங்கிய முதல் கவிதைப் புத்தகம்.

உலக சினிமா, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, மறைவாய் சொன்ன கதை, ஒன்பது ரூபாய் நோட்டு ஆகியவற்றுடன் இன்னும் சில புத்தகங்களை மருமகன் எடுத்துக் கொண்டான். "மறைவாய் சொன்ன கதைகளையும் எடுத்துக்கிட்ட போல" என்று கேட்டேன். வெட்கப்பட்டு சிரித்தான். எனக்காக வாங்கிய சில புத்தகங்களுக்கும் அவனே பணம் செலுத்தினான். புறப்படும் போது சாரு நிவேதிதா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற பிறகு திரும்பிப் பார்த்தேன். கழுதை பொதி சுமப்பது போல மருமகனும், அவனுடைய நண்பனும் வந்து கொண்டிருந்தார்கள்.

அடலேறு வருவதற்கு நேரம் ஆனதால் மருமகனைக் கிளம்பச் சொன்னேன். அவன் புறப்பட்டதும் பா ராகவன் தென்பட்டார். ஓடிச்சென்று அவரின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு, "பா ரா அவர்களே! பா ரா அவர்களே!" என்று கூப்பிட்டேன். 'கிருஷ்ணப் பிரபு' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவர் முன்பு வரச்சொன்னார்.

அவர் பேசுவதற்கு முன்பு, "உங்களுடைய வகுப்பிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி... உங்களுடைய மின்னஞ்சல் வார்த்தைகள் என்றும் என்னுடைய ஞாபகத்தில் பொக்கிஷமாக இருக்கும்" என்றேன்.

"ஞாயிற்றுக் கிழமை வந்துடு... பாத்துக்கலாம்" என்றார். புத்தகக் கண்காட்சியின் இறுதி நாட்கள் என்பதால் அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கென்னவோ கே.பி.சுந்தராம்பாள் அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துப் பாடிய "சென்று வா மகனே... வென்று வா...." பாடல் அசரீரி போல் கேட்டுக் கொண்டேஇருந்தது. அடலேறு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டிருந்த பாடலைக் கெடுத்தான்.

அவனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். நிலா ரசிகனும் உடன் இருந்தார். அவர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மேலும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். அப்பொழுதுதான் எழுத்தாளர் எஸ் ரா காலையில் அனுப்பிருந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. அவரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு 'ஆண்டான் சேகவ்' மொழிபெயர்ப்புப் புத்தகம் தற்பொழுது எங்கு கிடைக்கும் என்று விசாரித்திருந்தேன். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் புத்தகம் கிடைக்கவில்லை. அதை அவருக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். அதற்கான பதிலில் 'மகாபுல்வெளி' நெடுங்கதை இருவாட்சி பதிப்பகத்தில் கிடைப்பதாகக் கூறியிருந்தார். சென்று பார்த்த பொழுது வாங்கக் கிடைத்தது. மருமகனுக்கும் சேர்த்து இரண்டு பிரதிகளாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

அரங்கின் வெளியே ஏகப்பட்ட கூட்டம்.... வாகன நெரிசல். இனிமேல் இறுதி நாட்களில் கண்காட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். கூட்ட நெரிசலில் கிடைத்த சின்னச்சின்ன வெற்றிடங்களில் நுழைந்து முன்னேறிக் கொண்டிருந்தேன். மறுபடியும் அந்தப் பாடல் எனக்குக் கேட்டது " சென்று வா மகனே... வென்று வா...."

Tuesday, January 5, 2010

புத்தகக் கண்காட்சி - 5 ஆம் நாள்

ஞாயிறு காலை கொஞ்சம் வேலை இருந்ததால் மதியம் 2 மணிக்கு கண்காட்சியில் நுழைந்தேன். ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. திரும்பிவிடலாமா..! என்று கூட நினைத்தேன். சரி வந்துவிட்டோம்... வேடிக்கையாவது பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று உள்ளே சென்றேன். எனது திருப்பாதங்களை உள்ளே வைத்ததும் கரண்ட் கட். எலக்ட்ரிஷன் என்னைக் கடந்து வேகமாக ஓடினார். அவரை நோக்கி என்னுடைய தலை திரும்பிய போது 'உன்னதம்' பதிப்பகம் கண்ணில் பட்டது.

இதழின் பொருப்பாசிரியரை கேணி நிகழ்ச்சியில் ஓரிரு முறை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த அரங்கில் என்னென்ன புத்தகங்கள் தான் இருக்கிறது? என்று பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன். சயாம் பர்மா மரண ரயில் பாதை (சீ.அருண்) மற்றும் அதைத் தழுவிய வரலாற்று நாவல் (ஆர்.சண்முகம்) 'உன்னதம்' பதிப்பகத்தில் வாங்கக் கிடைத்தது. மலேஷிய நண்பர்களிடம் சொல்லி இந்தப் புத்தகத்தை இந்தியாவிற்கு அனுப்பச் சொல்லியிருந்தேன். சென்னை வரை அஞ்சலில் வந்த இந்தப் புத்தகம் எனது கிராமத்திற்கு வராமல் மலேஷியாவிற்கே திரும்பச் சென்றுவிட்டடது. மிகுந்த வருத்தத்திலிருந்த எனக்கு ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தடைபட்ட மின்சாரம் வராததால் ஆங்காங்கு இருள் திட்டு இருந்து கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் வாசக நண்பர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் முத்து சாமியும், விஷ்ணு குமாரும் தென்பட்டார்கள். அவர்களுக்கு முதுகு சொரிந்துவிட்டு தமிழினி பதிப்பகத்திற்குச் சென்றேன். அங்கு பைத்தியக்காரன் (சிவராமன்) இருந்தார்.

"ஹாய் சிவராமன் (பைத்தியக்காரன்)... "என்று கத்தினேன். புத்தகத்தை தேர்வு செய்துட்டு வாங்க என்றார். நெறிக்கட்டு மற்றும் வெள்ளெருக்கு ஆகிய புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேலோட்டமாக சில புத்தகங்களையும் பார்த்தேன். அதில் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பும், ஆழி சூழ் உலகும் அடக்கம். கடைசியாக முதலில் தேர்வுசெய்த இரண்டு புத்தகங்களுடன் "உங்களுக்கு நானே ஃபோன் செய்யனும்னு இருந்தேன்.... இந்தாங்க இந்த ரெண்டு புத்தகத்துக்கும் பில் போடுங்க சிவராம்..." என்று கூறிக்கொண்டே அவரின் அருகில் சென்றேன்.

அதற்கு மேல் என்னை ஒரு வார்த்தைக் கூட பேசவிடவில்லை. உள்ள போய் என்னென்ன புத்தகங்கள் வேணுமோ அதையெல்லாம் எடுத்துக்கோங்க. ஒன்னும் பிரச்னை இல்லை என்றார். நான் தயங்கி நிற்பதைப் பார்த்ததும் அவரே துரு துருவென:

1. நாஞ்சில் நாடன் கதைகள்
2. சூடிய பூ சூடற்க (
நாஞ்சில் நாடன்)
3. இராசேந்திர சோழன் கதைகள்
4. அங்கே இப்போ என்ன நேரம்? (முத்துலிங்கம்)
5. ஆழி சூழ் உலகு (ஜோ டி குரூஸ்)
6. வெள்ளெருக்கு (கண்மணி குணசேகரன்)
7. நெறிக்கட்டு (அழகிய பெரியவன்)
8. பேய்க்கருப்பு (பாதசாரி)
9. அன்பின் வழியது உயிர் நிழல்
(பாதசாரி)

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் ஒரு துணிப்பையில் போட்டு என்னிடம் கொடுத்தார். அதற்கான பணம் ஏறக்குறைய 1400 ருபாய். இராசேந்திர சோழன் கதைகள் இருக்க சொல்லவே வாங்கிடுங்க பிறகு கிடைக்காது என்று நாஞ்சில் நாடன் அறிவுரை கூறினார். "எல்லாம் சரிங்க சார்... இவர பணம் வாங்கிக்க சொல்லுங்க" என்று கூறினேன்.

"நீங்க வேற நிறைய புத்தகம் வாங்க வேண்டியது இருக்கும் கிருஷ்ண பிரபு. பிறகு பார்க்க சொல்ல கொடுங்க" என்று சிவராமன் கூறினார்.

"இல்லைங்க சிவராம். நான் இன்னைக்கு வேடிக்கை பார்க்க மட்டும் தான் வந்திருக்கேன். அதுவுமில்லாம என்னிடம் 'ஸ்மார்ட் கார்டு' ருக்கு. அதனால பிரச்சனை இல்லை. நீங்க மொதல்ல இந்த பணத்தைஎடுத்துக்கோங்க" என்றேன்.

"எதுவும் பேசாதீங்க... எடுத்துகிட்டு கிளம்புங்க..."

"ஐயோ சிவராம், நான் படைப்பாளியா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆகக் குறைவா வாசிச்சி படிப்பதை சீக்கிரமே மறந்துவிடும் சராசரி வாசகன் மட்டுமே. அதுவுமில்லாம இவ்வளவு பெரிய தொகையா வேற இருக்கு. தயவு செய்து பணம் வாங்கிக்கோங்க" என்றேன்.

வத்தல் காயப்போட்ட பெண்கள் காக்காவை விரட்டுவது போல சிவராமன் என்னை விரட்டினார். அந்தக் குறையை முத்துவுக்கு ஃபோன் செய்து கொட்டிக் கொண்டிருந்தேன். "மாமா... அன்பாதான கொடுக்கறாரு. அடுத்த முறை பார்க்கச் சொல்ல கொடுத்துடலாம்" என்றான். இல்லடா இவரு எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும் என்று சிவராமைப் பற்றி புறம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். சிவராமனுடன் நடந்த கலவரத்தில் தடைபட்டிருந்த மின்சாரம் எப்பொழுது வந்தது என்பது கூடத் தெரியவில்லை. பிரகாசமான புத்தக வீதியில் நடந்துகொண்டிருந்தேன்.

"கிருஷ்ண பிரபு" என்ற குரல் சன்னமாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் அதே குரல் கேட்டது. என்னை மையமாக வைத்து உலகத்தையே ஒரு சுற்றுச் சுற்றினேன். ஒரு மூலையில் ஞானியின் அரங்கு தென்பட்டது. அங்கிருந்து 'பிரபு' எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு மாதமும் கேணி சமந்தமான குறுஞ்செய்தியை எனது மொபைலுக்கு அனுப்புபவர். அரங்கினுள் சென்றுப் பார்த்தால் ஞானி எழுதிய ஒரு நாவலும் இல்லை. நாடகங்களும், ஒ பக்கங்களும் தான் இருந்தது. ஆகவே ஒரு புத்தகத்தையும் எடுக்க முடியாமல் வெளியில் வந்தேன்.

"இந்த முறை கேணிக்கு யார் வருகிறார்கள்... ஞானியின் இணையத் தளத்தில் அறிவிப்பு இன்னும் வரவில்லையே?" என்று கேட்டேன்.

இசைஞானி இளையராஜாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வர்ணிக்கும் ஒருவரின் பெயரைச் சொல்லி பெரும்பாலும் அவர்தான் வருவதாக இருக்கிறது என்று கூறினார்.

ஒ அவரா... அப்போ களைகட்டும் என்றவாறு கிழக்கு நோக்கிச் சென்றேன். முத்துவிற்காக அசோகமித்ரனின் 'கரைந்த நிழல்களும்', எனக்காக மாலனின் 'ஜனகனமன' நாவலும் எடுத்துக்கொண்டு பில் போடச் சென்றேன். வசந்த் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு முறை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிழக்கின் அலுவலகத்திற்குச் சென்று கிட்டத்தட்ட 1500 ரூபாய்க்கு பா.ராகவனின் நாவல்களும், வேறு சில முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்களும் வாங்கினேன்.

"சார் பில் போட்டுடட்டுமா?" என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

"நிச்சயமா கண்ணா...
வாங்கதான எடுத்திருக்கேன்..."

"இல்லைங்க சார்...
பைசா அதிகமா இருக்கு... போன வாரம் இதே மாதிரி ஒருத்தர் அதிகமான புத்தகம் வாங்கினாரு. பில் போட்ட பிறகு டிஸ்கவ்ன்ட் கேட்டு சத்தம் போட்டாரு..." என்று இழுத்தார்.

"இதுக்கு முன்னாடி இங்க வந்து புத்தகம் வாங்கியிருக்கேன். நீங்க சொல்ல வரும் விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். பில் போட்டுடுங்க" என்றேன்.

அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி உங்க கையாலேயே 10% டிஸ்கவ்ன்ட் போடவச்சேன் பார்த்தீங்களா என்று கலாய்ந்துவிட்டு காலச்சுவடு நோக்கிச் சென்றேன்.

நீண்ட நாட்களாக முத்து என்னிடம் புதுமைப்பித்தன் சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பாக இரண்டு புத்தகங்கள் வாங்கியதால் சுந்தர ராமசாமி சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு இலவசமாகக் கிடைத்தது. புதுமைப்பித்தன் மருமகனுக்கு சுரா எனக்கு.

திருவல்லிக்கேணி காலச்சுவடு அலுவலகத்திற்கு நேரில் சென்று பல முறை புத்தகங்கள் வாங்கியதால் அங்கிருக்கும் ஓர் அக்கா எனக்குப் பழக்கம். அவர்களிடம் ஒரு முறை "நிறைய புத்தகங்கள் வாங்கினால் எங்கம்மா திட்டுவாங்க, ஆனா நீங்க கொடுக்குற கனமான கட்டைப் பையைப் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதில் சென்றுவிடும். நான் தப்பித்து விடுவேன்" என்று கூறியிருக்கிறேன். ஆகவே இப்பொழுதெல்லாம் குறைவான புத்தகம் வாங்கினாலும் "இந்தாங்க உங்க அம்மாகிட்ட திட்டு வாங்காதீங்கன்னு" ஒரு கட்டைப் பையை இலவசமா கொடுத்துடுவாங்க.

சிவராமன் கொடுத்த புத்தகங்கள் துணிப்பையில் தொங்கிக் கொண்டிருக்க, மீதிப் புத்தகங்களை காலச்சுவடின் கட்டைப் பையில் போட்டுக் கொண்டு விஷ்ணுவைப் பார்க்கச்சென்றேன். எழுத்தாளர் பா ராகவன் ஒரு குட்டிப் பாப்பாவுடன் வந்துகொண்டிருந்தார். ஒதுங்கி ஓரமாக நின்றோம். அதே மானரிசம்... விக்கு வினாயக்ராம் கடம் வாசிப்பது மாதிரி அவருடைய தலையை ஒரு தட்டுதட்டி என்னைப் பார்த்து கையை நீட்டினார்.

"நீங்க கும்மிடிப்பூண்டி தானே?" என்ற வார்த்தையை உச்சரிக்கப் போகிறார் என்று நினைத்தேன்.

"நீங்க கிருஷ்ண பிரபு தானே?, உங்களைப் பற்றி யாரோ பதிவுல எழுதி இருக்காங்களே" என்றார்.

என்ன சொல்றீங்க ராகவன்? என்ன பத்தி யாரு எழுதப் போறாங்க என்றேன்.

ஹா... லக்கிலுக் (அவருடைய செல்லப் பெயரை கூறினார்...)

"ஒ கிரேட்... ஆனா ஒண்ணுங்க ராகவன்... உங்க கையாள என்னைப் பற்றி ஒரு நாள் எழுத வைப்பேன்" என்று சவால் விட்டேன். ஓவரா பேசிட்டோமோ என்று நினைக்கும் போது அவர் நட்புடன் சிரித்தார். அருகில் இவ்வளவு பேச்சையும் கேட்டுக் கொண்டு ஓர் அழகான குட்டிப் பெண் இருந்தாள். முத்துவும், விஷ்ணுவும் கூட அருகில் இருந்தார்கள். இந்த குழந்தை யாருங்க என்று கேட்டேன்.

"என் பொண்ணு தான்... அவள் பெயர் பாரதி..."

'பாரதி' என்ற பெயரைக் கேட்டவுடன் முத்துவும், விஷ்ணுவும் குழுவாக "ஓ" என்றார்கள். கவிஞர்களே இப்படிதான்.

"உங்களோட உரைநடை மாதிரியே குழந்தை ரொம்ப அழகா இருக்காளே!" என்று சொல்ல நினைத்தேன்.
தயக்கமாக இருந்ததால் சொல்லவில்லை. குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினேன். பாரதியும் பொறுப்பு மிக்க மகளாக பாராவின் விரல் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றாள்.

பேருந்தில் அடித்து பிடித்து புத்தகப் பைகளுடன் வீட்டிற்குச் சென்றேன்.

"டே இது என்னடா ஜோல்னா பை (சிவராமன் கொடுத்த துணிப்பை)... நல்லா இருக்குதே எனக்குக் கொடுத்துடேன்..." என்று என் அம்மா அவர்களுடைய காரியத்தில் கண்ணாக இருந்தார்கள். எங்க அம்மா எப்பவுமே இப்படிதான்.

Saturday, January 2, 2010

புத்தகக் கண்காட்சி - 2 மற்றும் 3 ஆம் நாள்

எழும்பூர் கன்னிமரா நூலகத்தின் அருகில் எனது அலுவலகம் இருப்பதால் வாரத்தில் நான்கு நாட்கள் நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு செல்லுவது வழக்கம். இதனால் மாதத்திற்கு 10 முதல் 20 புத்தகங்கள் வாங்க நேர்ந்துவிடும். எனவே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது கூடுமான வரையில் குறைவாகவே புத்தகங்களை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். "வீட்டில் புத்தகம் வைக்க இடமில்லையே ஒரு பீரோ வாங்க வேண்டியதுதான" என்ற அம்மாவின் புலம்பல் வேறு இன்னொரு காரணம்.

மகிழ்ச்சிமிக்க ஆங்கில வருடத்தின் கடைசி நாளும் வந்தது, அக்காவின் மகன் அகிலுடன் விளையாடிவிட்டு 'அன்டன் செகவ்' எழுதிய சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை தெரிந்த பதிவரிடமிருந்து வாங்க அவருடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிய பிறகு சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்குச் செல்வது தான் என்னுடைய திட்டம்.

உடன் வருவதாக
ச் சொல்லியிருந்த "வானவில் வீதி" கார்த்திக் அடுத்த வாரம் இணைந்து கொள்வதாகக் கூறினான். அடலேருக்கு அழைப்பு விடுத்தால் 'சாரு'வுடன் வெளியூரில் இருப்பதாகக் கூறினான். சரியென்று துவந்த யுத்தத்திற்குத் தயாரானேன்.

பேருந்தில் முகம் தெரியாத வட இந்திய நண்பர் அறிமுகமானார். அவரும் புத்தக கண்காட்சிக்குச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். சென்னை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராம். அவரை அழைத்துக்கொண்டு அரங்கிற்கு அருகில் வந்ததும் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தை காண்பித்துவிட்டு விடை பெறுவதாகக் கூறினேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டு வாங்கிக் கொண்டார். கிழக்கு பதிப்பகத்தில் பல நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்கும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

இரண்டாவது நாள் என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி மிதமான கூட்டம் தான் இருந்தது. நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு நேராக 'சாகித்ய அகாடமி' அரங்கிற்குச் சென்று 5 மொழி பெயர்ப்புப் புத்தகங்களை (மலையாள, ஹிந்தி மற்றும் தெலுங்கு) வாங்கிக் கொண்டேன். பொன்-வாசுதேவன் எதிரில் தென்பட்டார். அவரிடம் 'அகநாழிகை' புத்தகங்கள் கிடைக்குமிடம் பற்றி விசாரித்துவிட்டு 'காலச்சுவடு' அரங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். உள்ளிருந்து பா. ராகவன் - மருதனுடன் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்று 'வணக்கம் ராகவன்' என்றேன். கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தார்.

உங்களுடைய வாசகன் நான். உங்களோட "அலகிலா விளையாட்டு"... எவ்வளோ நல்ல நாவல்...(யாரோ எழுதியது போல அப்பாவித்தனமா சிரிக்கிறாரு) நீங்க நேரம் எடுத்து சிறுகதை மற்றும் நாவல் எழுதணும் என்ற கோரிக்கையை வைத்தேன்.

"கதையா..." என்று அருகிலிருந்த மருதனைப் பார்த்து சிரித்தார். "நீங்க என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க?" என்று கேட்டார்.

இணையம் தொடர்பான வேலை செய்கிறேன். கும்மிடிப் பூண்டி செல்லும் வழியிலுள்ள சிறிய கிராமத்தில் இருந்து தினமும் வேலைக்கு சென்னை வருகிறேன். உங்களை சிறுகதைப் பட்டறையில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். என் பெயர் கிருஷ்ண பிரபு.

"ஓ... உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் பார்த்தேன்." என்று கூறிய பொழுது வேறொருவர் வந்து அவரிடம் கைகுலுக்கினார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "இது என்னுடைய தினம்..." என்று எங்களிருவரையும் பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினார்.

காலச்சுவடு 15-வது ஆண்டு விழாவை முன்வைத்து இரண்டு புத்தகம் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம், மூன்று புத்தகங்கள் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம் என்ற சலுகையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். முத்துவிற்கும் எனக்கும் சேர்த்து கிளாசிக் வரிசை மற்றும் சிறுகதை புத்தகங்கள் (10) எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து உயிர்மைக்கு சென்று தமிழ்மகன், சாரு, எஸ் ரா, விஜய் மகேந்திரன் ஆகியோரது கதைகள் மற்றும் கட்டுரைகள் வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கவிதா பதிப்பகத்திற்குச் சென்று அசோகமித்ரனின் 'ஒரு பார்வையில்-சென்னை நகரம்' வாங்கிக் கொண்டேன். நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

முத்துவிற்காக அகிலனின் 'சித்திரப்பாவை' என்ற நூலினை வாங்குவதற்காக தமிழ் புத்தகாலயம் சென்றேன். உள்ளே நுழையும் போது ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவரை எங்கோ பார்த்த ஞாபகம்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துவிட்டு நீங்கள் கேட்ட புத்தகம் அங்கே இருக்கிறது பாருங்கள் என்று கை காட்டினார்.
புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பும் போது "நான் தான் எழுத்தாளர் அகிலனின் மகன்" என்றார். சில புத்தகங்களை வாங்குவதற்காக வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவருடைய வீட்டிற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு சென்ற ஞாபகம் வந்தது. அவருடைய பரிந்துரையின்படி அகிலனின் வேறுசில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு 'அகரம்' பதிப்பகத்திற்குச் சென்றேன். அரங்கு முழுவதும் கி ரா-வின் புத்தகங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. அங்கிருந்து 'அந்தமான் நாயக்கர், தங்கர் பச்சனின் சிறுகதைகள், பிஞ்சுகள்' ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு சுமையைத் தூக்க முடியாமல் வீட்டிற்குத் திரும்பினேன். நான் சென்றிருந்த போது வண்ணத்துப் பூச்சியார், அமித்துவின் அம்மா, துளசி ஆகியோரும் கண்காட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே.

ஆங்கிலப் புத்தாண்டிற்கு அலுவலகம் விடுமுறை என்பதால் உறங்குவதற்கு முன் அடுத்தநாள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை தயார் செய்தேன். 'காதுகள்' என்ற எம்.வி வெங்கட் ராமன் எழுதிய நாவல் பற்றி பா. ராகவன் நீண்ட நாட்களுக்கு முன்பு கல்கியில் எழுதியிருக்கிறார். "அந்தப் புத்தகம் இப்பொழுது எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கிறது?" என்று அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கச் சென்றேன்.

நாளை மற்றொரு நாளே என்பது போல் 2010-ம் தொடங்கியது. நெருங்கிய நண்பர்களின் அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பதிலளித்துவிட்டு சென்னையை நோக்கிக் கிளம்பினேன். அக்காவின் மகளுக்கு மரத்தினாலான தொட்டில் கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு மதிய நேரத்தில் கண்காட்சிக்குச் சென்றேன். விடுமுறை தினம் என்பதால் நல்ல கூட்டம்.

தமிழினி பதிப்பகத்தில் ஜெய மோகனின் 'காடு' (நீண்ட நாட்களுக்கு முன்பு சிவராமன் பரிந்துரை செய்தது) வாங்கினேன். அருகில் சா. முத்துவேல் (அகநாழிகை ஆசிரியர் குழு உறுப்பினர்) ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தார். பரஸ்பர விசாரிப்புக்குப் பின் நாஞ்சில் நாடனின் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு கவிதா பதிப்பகத்திற்குச் சென்று நேற்று வாங்கத் தவறிய சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கிழக்கு பதிப்பகத்தைக் கடந்து செல்லும் போது பா. ராகவன், சோம. வல்லியப்பனுடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் யுவகிருஷ்ணா நின்றுகொண்டிருந்தார்.

Excuse me Ragavan... நீண்ட நாட்களுக்கு முன்பு 'காதுகள்' நாவல் பற்றி
கட்டுரை எழுதி இருக்கீங்க... இப்போ அந்தப் புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?

குமிடிப் பூண்டி இல்ல நீங்க... உங்களோட ஈமெயிலை இரவு 1 மணிக்குப் பார்த்தேன். அதனால தான் Reply பண்ண முடியலை. "இப்போ எங்க கிடைக்கும்...?" என்று
யோசித்துக் கொண்டே விக்கு விநாயகராம் மாதிரி அவரோட உச்சி மண்டைல ஒரு தட்டுத்தட்டி நெத்திய தடவிக்கிட்டாரு. ஒரு யோசனையும் வராததால பக்கத்தில் நின்ற யுவ கிருஷ்ணாவிடம் "நீ ஏன்யா சும்மா நிக்கிற ஏதாவது பதில் சொல்லேன்...!" என்று கூறினார். அவருக்கும் தெரியாததால் "என்னிடம் ஒரு Copy இருக்கு... எங்கயும் கிடைக்கலன்னா வந்து வாங்கிக்கோங்க..." என்ற சலுகையை வழங்கினார்.

"ஐயோ ராகவன் நீங்க தப்பு பண்றீங்க. உங்களோட பரிசு பெற்ற நாவல் (அலகிலா விளையாட்டு) இலக்கிய பீடத்தில் வெளிவந்த போது நூலகருக்குத் தெரியாமல் திருடியவன் நான். என்ன நம்பி உங்களோட புத்தகத்தைக் கொடுக்கறதா சொல்றீங்களேன்னு" மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நிறைய பேர் 'பா. ரா' அவர்களை அரசியல் பற்றி மட்டுமே எழுதுபவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவருடைய நாவலை வாசித்தால் உங்களுடைய எண்ணங்கள் சுக்கு நூறாக உடைந்துவிடும். கிழக்கில் அவருடைய "ரெண்டு, குதிரைகளின் கதை, மெல்லினம்" போன்ற புத்தகங்கள் கிடைக்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பார்க்கவும்: பா ராகவன்

அவருடைய எழுத்தில் அவருக்கு மிகவும் பிடித்த படைப்பு 'அலை உறங்கும் கடல்' என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
தமிழினி பதிப்பகத்தில் அந்தப் புத்தகம் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' போன்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு கதாசிரியராகத் தான் பா.ரா என்னை வெகுவாகக் கவர்கிறார். அதனாலேயே அவரைப் பார்க்கும் போதெல்லாம் "நீங்க நேரம் எடுத்து கதையோ, நாவலோ எழுதலாமே?" என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறேன்.

எங்கு பார்த்தாலும்
இந்த நச்சரிப்பு தொடர்வதால் என்றாவது ஒரு நாள் அவரோட பீச்சாங்கையால ஓங்கி ஒரு போடு போடப் போறாரு. அதுவரைக்கும் நானும் அடங்கப் போறதில்லை. இதற்கு மேல் அவரிடம் அடிவாங்கிவிட்டு அதைப் பற்றி எழுதுகிறேன்.

பரிசல் பதிப்பகத்தில் பதிவர் நர்சிம் எழுதிய 'அய்யனார் கம்மா' வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். "எதற்காக எல்லோரும் அகநாழிகை பதிப்பகத்திலிருந்து இந்தப் புத்தகத்தையே கேட்கிறீர்கள்?" என்ற தொனியில் கேள்வி கேட்டார். "மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, என்னுடைய அளவில் கவிதை வாசிப்பது சிரமம். ஆகவே சிறுகதைத் தொகுப்பை வாங்குகிறேன்" என்றவாறு பதில் கூறினேன். கேள்வி கேட்டவரைக் காட்டிலும் அவருக்குப் பக்கத்தில் இருந்தவருக்கு குரோதம் வந்துவிட்டது. கோவப்பட்டவர் கவிஞர் என்பது எனக்கு எப்படித் தெரியும். ஒருவழியாக வழிந்து சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வம்சி பதிப்பகத்திற்குச் சென்று எழுத்தாளர் மாதவராஜ் தொகுத்த பதிவர்களின் புத்தகங்களை காணச் சென்றேன். எனக்குத் தெரிந்த பதிவர்களான முரளி, சேரல், சாரதா, சையது, பாலமுருகன், கார்த்திகைப் பாண்டியன், நிலா ரசிகன், உழவன், ரிஷான், யாத்ரா, பொன்.வாசுதேவன்... இன்னும் பலரது பெயர்கள் அந்தப் புத்தகத்தில் இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்தவர்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது. வம்சியிலிருந்து பாவா செல்லதுரையின் புத்தகமும், குழந்தைகள் சம்மந்தமான சினிமா புத்தகங்களையும் எனக்காக வாங்கிக்கொண்டு அன்றைய பொழுதை கழித்துவிட்டு வீடு திரும்பினேன்.

பின் குறிப்பு: பா.ராகவனின் இந்தப் (கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!) பதிவை படித்துவிட்டு மொழி தெரியாதவருக்கு தப்பான வழியைக் காட்டிவிட்டோமே என்று குற்ற உணர்வாகப் போய்விட்டது. தப்பான வழியைக் காட்டுகிறவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனையோ தெரியலையே!

Tuesday, December 29, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

ஆசிரியர்: நிலாரசிகன்
வெளியீடு: திரிசக்தி
விலை: ரூ.70

நிலாரசிகனைப் பற்றி தமிழில் பதிவெழுதும் நண்பர்களுக்கும், தமிழ் இணையப் பயனாளர்களுக்கும் அறிமுகம் தேவையில்லை. 2004ல் இருந்து தனது கற்பனைகளுக்கு கவிதை வடிவில் வலைப்பூக்களில் வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவையாவும் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்து அவருக்கான கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை.

கல்லூரி நாட்களில் வெளிவந்தது இவருடைய முதல்
கவிதைத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சிறுகதை என்று வரும்பொழுது 17 சிறுகதைகள் கொண்ட "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" தான் இவரது முதல் தொகுதி.

இதிலுள்ள கதைகள் யாவும் கடந்த இரண்டாண்டுகளில் எழுதப்பட்டு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் கண்டவை. இவரது சிறுகதைகள் யாவும் குழந்தைகளின் வெகுளித் தனமான உலகத்தையும், வெள்ளந்தியான கிராம மக்களையும், பெண்களின் அக எண்ணங்களையும் அதனால் உண்டாகும் புறச்சிக்கல்களையும் சித்தரிப்பவையாக இருக்கின்றன.

கீழுள்ள கதைகள் யாவும் அதற்கு உதாரணம்...

1. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
2.
வேட்கையின் நிறங்கள்
3.
அப்பா சொன்ன நரிக்கதை
4. வால் பாண்டி சரித்திரம்

புத்தகத்திலுள்ள மேலும் சில கதைகளைப் படிக்க அவருடைய இணையைப் பக்கங்களுக்குச் செல்லவும்: www.nilaraseeganonline.com

கதையைக் கச்சிதமாக ஆரம்பித்து கச்சிதமாக முடிக்கிறார். இடையில் வர்ணிப்பிலும், கொண்டு செல்லும் விதத்திலும் தான் சில கதைகளில் தொய்வு காணப்படுகிறது. வார்த்தைப் பிரயோகத்திலும், வர்ணிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி கதைகளைக் கொண்டு சென்றால் இன்னும் நல்ல படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் தீவிரமாக இயங்கி வரும் இளம் படைப்பாளியான இவர் தனது பக்குவமான உழைப்பின் மூலம் அவருக்கான இடத்தை படைப்பிலக்கியத்தில் எட்டிப்பிடிப்பார் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு:
1. புத்தகத்தில் இவர் எழுதிய
என்னுரையில் அவருடைய சகோதரிக்கும், கதைகளை பிரசுரித்த ஒவ்வொரு இதழின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். புத்தகத்தில் அவைகள் விடுபட்டு இருக்கின்றன. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார்.
2.
பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார். அந்த வகையில் இவர் பரவலான கவனத்தைப் பெறுவது மகிழ்ச்சியே.

Thursday, December 17, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்

ஆசிரியர்: பாரதி மணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூபாய் 100
/-

மேடை நடிகராகவும், திரைப்
படக் கலைஞராகவும் நமக்கு நன்கு அறிமுகமான பாரதி மணி, நட்சத்திரப் பிரமுகர்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி உயிர்மை, அமுதசுரபி, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது இலக்கிய நண்பர்கள் அறிந்ததே.

பல இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை மணியிடமே பரிசாக வாங்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் அவருடைய கட்டுரைகளில் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை 'நிகம்போத் காட்' பற்றியது. நான் இதுவரை வாசித்த அனுபவக் கட்டுரைகளில் என்னை மிகவும் வசீகரித்தக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

'செம்மீனும் தேசீய விருதுகளும்!' - இந்திய அரசால் வழங்கப்படும் சினிமாவிற்கான தேசிய விருது மலையாளப் படமான செம்மீனுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை. நீண்ட நாட்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குனர் TV சந்திரனின் நேர்முகத்தை குமுதம் தீராநதியில் படிக்க நேர்ந்தது. அதில் "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டில், சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத நடுவர்களால், சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..." என்று குறிப்பிட்டிருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது. (கட்டுரையின் முடிவில் அதற்க்கான தொடுப்பை படிப்பதற்குக் கொடுத்திருக்கிறேன்.)

'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற கட்டுரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான தொடர்புகளையும் அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்தும் விதத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறியிருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது.

'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' - கட்டுரையில் நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் பற்றி எழுதிய ரசமான தகவல்கள் எங்கும் படிக்கக் கிடைக்காதது.

'சுப்புடு சில நினைவுகள்' - இசைவிமர்சகராக மட்டுமே பரிச்சயமான சுப்புடுவை அரசாங்க குமாஸ்தாவாக, ஓய்வுபெற்ற பிறகு மணியின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்கடத்தில் ஆழ்த்தியது, அவரது வேலைகளில் நாணயமற்று நடந்து கொண்டது என சுப்புடுவின் வேறுபட்ட முகங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கர்னாடக சங்கீத கச்சேரிக்கு சென்னை வரும் போது சுப்புடுவுடன் ஒரே அறையை பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பகிந்துகொள்கிறார்.

'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்ற கட்டுரையில் பிரதமர் நேருவுடனான நிகழ்வுகளையும், 'அன்னை தெரஸா' - கட்டுரையில் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அன்னை தெரசாவுடன் பயணம் செய்ததையும் அவரிடமிருந்து பைபிள் புத்தகம் மற்றும் ஜெபமாலையை அன்புப் பரிசாகப் பெற்றதை இன்று வரை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதை எழுதியிருப்பார்.

()

நீல. பத்மநாபன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், வாஸந்தி, ஜெய மோகன், அம்ஷன் குமார், லால்குடி G ஜெயராமன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், டெல்லி கணேஷ், தியோடார் பாஸ்கர், சுகா போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியதும் புத்தகத்தில் இருக்கிறது.

அவருடன் நேரில் உரையாடியபோது நண்பர்கள் எல்லோரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும், தனக்கு வந்த இரங்கல் கடிதங்களை உயிருடன் இருக்கும் போதே படித்து மகிழ்வது போல இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.

அவற்றையெல்லாம் சொன்னால் டெல்லியில் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடமான திகார் ஜெயிலில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அதனால் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று கேட்கும் அவருடைய வாசகர்களில் நானும் ஒருவன்.

மணியின் தில்லி வாழ்க்கை, அதில் கிடைத்த பரந்துபட்ட அனுபவங்கள் என கட்டுரைகள் யாவும் தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் வரலாறையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களையும ஞாபகப்படுத்துவதே நூலின் சிறப்பாகப்படுகிறது.

புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கின்றது. அவற்றில் சில உயிர்மையில் படிக்கக் கிடைக்கிறது.

1. பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
2. அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
3. செம்மீனும் தேசீய விருதுகளும்!
4. காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனயர்களும்
5. ஒரு நீண்ட பயணம்
6. சிங் இஸ் கிங்

எல்லாவற்றிற்கும் மேல் பழகுவதற்கு இனிமையான நண்பர். எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர். அவருடைய கட்டுரைகள் பிடித்திருந்தால் 94440 03332- என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுவார். அவருடனான எனது நேரடி அனுபவத்தை திட்டிவாசலில் (மணியுடன் சில மணித்துளிகள்) எழுதியிருக்கிறேன்.

அவருடைய புத்தக வாசிப்பு எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திருந்தாலும், அவருடனான உரையாடல் மேலும் பல ரசமான அனுபவங்களைத் தந்தது. நீங்கள் நெருங்கினால் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, November 26, 2009

கரைந்த நிழல்கள்

ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
விலை: 60 ரூபாய்

இரவு நேரத்தில் எரியக் கூடிய நல்லெண்ணெய் விளக்குகளும், மண்ணெண்ணெய் விளக்குகளும் எங்களுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த காலமது. மாலை ஆரம்பித்தால் பெரியவர்களிடம் கதை கேட்பது, கண்ணா மூச்சு, ராஜா-ராணி ஆட்டம் விளையாடுவது என்று நாட்கள் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருக்கும். ரொம்ப சிறிய வட்டத்தில் எங்களுடைய வாழ்க்கை அழகாக, ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் 'ச்சே' இப்படி ஆயிடுச்சே என்று ஒருமுறையாவது சொல்லி சலித்திருப்போமா என்று தெரியவில்லை.

மெல்ல மின்சாரம் எங்கள் ஊருக்குள் தலை காட்டியது. பிறகு 'ரேடியோ, டேப் ரெக்காடர், டிவி' என்று பொழுது போக்கு அம்சங்கள் எங்களுடைய வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்டது. ஆரம்ப நாட்களில் வெள்ளிக் கிழமை தோறும் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' நிழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். 'மகா பாரதம், தெனாலிராமன் கதைகள், ஜுனூன், கானூன்' போன்ற மெகா தொடர்களுக்காக ஆளாய்ப் பறப்போம். ஒருசில நாட்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கரண்ட் கட்டாகிவிடும். அப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து 'ச்சே இப்படி ஆயிடுச்சேன்னு' ஆயாசப்படுவோம்.

அந்த நாட்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் டிவியில் சினிமா போடுவார்கள். அதுவும் பழைய படமாக இருக்கும். எனவே ஊரின் அருகிலுள்ள சினிமா அரங்குகளுக்கு (டென்ட் கொட்டா) புதுப்படம் வந்தால் தவறாமல் சென்று பார்ப்பது வாடிக்கை. அப்படிப் பார்த்த படங்களில் 'அதிசயப் பிறவி', 'என்றும் அன்புடன்' போன்ற படங்கள் எங்கோ ஞாபகத்தில் வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'புளி சாதம்' கட்டிக் கொண்டு போய் ஒரே நாளில் இரண்டு சினிமாக்கள் கூட பார்த்திருக்கிறோம். என்னோட சித்தப்பா மகள் (அக்கா) 'சர்மிளா' தான் எங்களுக்கு வழிகாட்டி.

இவ்வளவு மெனக்கெட்டு வெறித்தனமாக சினிமாவைப் பார்த்தாலும் அதில் என்னென்ன முன்வேலைகள் பின்வேலைகள் இருக்கிறதென்று ஒரு நாளும் யோசித்ததில்லை. கிசு கிசுவைத் தவிர்த்த சினிமா சார்ந்த ஏகப்பட்ட விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது அல்லது தெரிந்து கொள்ளாமலே விட்டு விடுகிறோம். அவுட்டோர், இண்டோர் ஷூட்டிங் நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள், படத் தயாரிப்பாளரின் மன அழுத்தம், ஸ்டுடியோ நிர்வாகம், விநியோகம், விளம்பரம், இன்னபிற சினிமா விஷயங்களும் அதற்கான தீர்வு காண போராடும் மனிதர்களின் உழைப்பும் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. இந்த முகம் தெரியாத, ஆனால் சினிமாவின் முக்கிய நபர்கள் வாழும் நாவல் தான் கரைந்த நிழல்கள்.

சினிமா என்னும் அதிசய ஊடகத்தின் மாய வலையினுள் உருக்குலைந்து போன மனிதர்களின் ஏமாற்றம், இழப்பு, வலி, இயலாமை, தோல்வி என்று நம்மால் சிறிதும் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையையும், பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல். படத் தயாரிப்பாளர் , புரொடக்ஷன் மானேஜர், டைரக்டர், காமிராமேன், நடிகைகள், துணை நடிகைகள், ஸ்டூடியோ கம்பனிக்கு கார் ஓட்டுபவர்கள் என பலரது வாழ்க்கையையும் ஆசிரியர் தனது இயல்பான நடையில் வாழச்செய்கிறார்.

இந்த நாவலைப் படிக்கும் போது, எனக்குத் தெரிந்த பலரும் நினைவில் வந்து சென்றார்கள். அவர்களில் 'கோட்டி மாமா' முக்கியமானவர். திரைக்குப் பின்னால் உள்ளவர்களின் வலியைத் தெரிந்து கொள்ளும் சந்தர்பமும் அவரின் மூலமாகத் தான் வந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா மகள் 'பார்வதி', என்னுடைய அம்மாவின் பெரியப்பா மகன் 'ருத்ர கோட்டி'யை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டாள். அந்த காலத்தில் எங்களுடைய குடும்பத்தில் சினிமா எடுக்கறேன்னு திரிஞ்ச ஆளு கோட்டி மாமா. அவருக்கு பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிச்சாங்க... "அவரை மனசார காதலிக்கிறேன்... கட்டினா அவரைத் தான் கட்டுவேன்" என்று பிடிவாதமாக இருந்து அவரையே கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.

சாதாரண டூயட் பாடினாலும் அந்த நடிகர் கையில மைக் இருக்கும். அவரை வைத்துப் படம் எடுக்கறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மற்றபடி இயக்குனர் யாரு? இசையமைப்பாளர் யாரு? -ன்னு கேக்குற பக்குவம் எல்லாம் அந்த காலத்தில் எனக்கு இல்லை. படத்தின் பெயர் மட்டும் 'மூன்றாம் மனிதர்கள்' என்று சொல்லியதாக ஞாபகம். சில நேரங்களில் அவர் கையிலுள்ள ஆல்பத்தைக் கண்பித்து இந்த பொண்ணுதான் எங்க படத்தோட நடிகைன்னு சொல்லுவாரு. பார்வதி அத்தையின் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணத்தை சீதனமா கொடுத்தாங்க. அதைக் கூட அவர் சினிமாவுலதான் போட்டாரு. இவரைப் பார்ப்பதற்காக அம்பாசடர் காரில் ஜிப்பா போட்ட ஒருத்தர் வருவாரு. அவரு கூட சேர்ந்துதான் சினிமா எடுக்கறதா பேசிக்கிட்டாங்க.

லோகேஷனுக்காக அந்த ஊருக்குப் போறேன், இந்த ஊருக்குப் போறேன்னு சந்தோஷமா சுத்திட்டு இருந்தாரு. இடையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் படம் நின்னு போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அவருடைய முகத்துல சந்தோசம் வத்தி போயிடுச்சி. கல்யாண வீட்டிற்கு வந்தாலும் எழவு வீட்டிற்கு வருவது போல் தான் வருவார். இப்பஇப்ப கல்யாண வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. ஊரில் கூட யாரிடமும் சகஜமாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த பலரும் இந்த மாதிரி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் "இந்த உம்மத்தனைக் கட்டிக்கிட்டேனே... இன்னும் எவ்வளவு நாள் நான் போராடனமோ? இத்யாதி இத்யாதி..." என்று என்னுடைய அத்தையின் வார்த்தைகள் காற்றில் பறந்து வந்து என்னுடைய செவிப் பறைகளை நனைத்த நாட்கள் ஞாபகம் வருகிறது.

விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ?

Friday, November 20, 2009

தோழர் நாவல்: தனுஷ்கோடி ராமசாமி

ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 130 ரூபாய்

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் நடைபெற்ற சென்னை சிறுகதைப் பட்டறையில் முரளிகுமாரை (அன்பே சிவம்) சந்தித்த போது இந்தப் புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்தான். அவன் மீது அன்பு செலுத்தும் ஒருவர் அவனுக்குக் கொடுத்த புத்தகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்.

அன்னாரின் மறைவிற்குப் பிறகு 'எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி டிரஸ்ட்' என்னும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது. அவரின் மகன் 'டாக்டர் அறம்' நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று சிறந்த சிறுகதை படைப்போருக்கு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ மாணவியருக்கு படைப்பிலக்கியத்தை பயிற்றுவித்தளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நாவலில் பிரதானப் பாத்திரமாக வரும் பழநிமுருகன் ஆசிரியராக நென்மேனிக்கு அருகில் வேலை செய்கிறவன். ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டவன். நேரம் கிடைக்கும் போது எந்த விதத்திலும் முன்னேறாத தனது உறவினர்கள் வாழும் கலிங்கல் மேட்டுப்பட்டிக்கு சென்று வருவது வழக்கம். ஊரின் மீதுள்ள பற்றுதலால் பழநி முருகன் என்ற தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான்.

ஒரு முறை
தனது சொந்த ஊருக்குச் செல்லும் போது பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். மாலை மங்கி இருட்டும் வேளையில் தனது ஊரைச் சுற்றிக் காட்டி பாதுகாப்பாக அவளிடைய இருப்பிடத்தில் சேர்ப்பிக்கிறான். இருவருக்கும் நட்பு மலர்ந்து தொடர்ந்து சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஷபின்னாவின் மூலம் அவளுடைய குழுவினருக்கும் அறிமுகமாகிறான் பழநி முருகன். அவர்களுடன் பிரியமுடன் பழகுகிறான். குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க இவன் பேருதவியாக இருக்கிறான். மேலும் இந்தியாவைப் பற்றியும் அவர்களுடன் கம்யூனிச சித்தாந்தத்தில் விவாதம் செய்கிறான். அவனுடைய நேர்மையான விவாதம் காயப்படுத்தும் படியாக இருந்தாலும் வெளிநாட்டு நண்பர்களைக் கவருகிறது.

எல்லோருக்கும் பழநி முருகனைப் பிடித்திருந்தாலும் ஷபீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துவிடுகிறது. பழநி முருகனுக்கும் பீனாவின் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது. சேவை செய்ய வந்தவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டிய நேரம் வருகிறது. அப்பொழுது பீனாவை இவன் எப்படி வழியனுப்புகிறான் என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

'தோழர்' நாவல் 1980-களில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் முகவுரையில் தமிழ் செல்வன் எழுதியுள்ள முன்னுறையிலிருந்து பார்க்கும் போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்புக் காண எழுத்தாளர் மாதவராஜின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. மாதவராஜ் தனது பதிவில் தனுஷ்கோடி ஐயாவைப் பற்றி எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்.

மதுமிதா அவர்களின் இந்தப் பதிவும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மறைவு பதிவும் ஐயாவைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.

Book Name: Thozhar
Author: Dhanushkodi Ramasamy
Book price: Rs. 130
Publishers: Bharathi Puthakalayam