Saturday, August 28, 2010

கனக துர்கா - பாஸ்கர் சக்தி

வெளியீடு: வம்சி பதிப்பகம்
ஆசிரியர்: பாஸ்கர் ஷக்தி
விலை: 250 ரூபாய்

சென்னையில் முதன் முறையாக நடைபெற்ற
வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டில் தான் 'கனக துர்காவை' வாங்க நேர்ந்தது. விழா நடைபெறுவதற்கு முன்பாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகத்தில் ஒன்றை கையில் எடுத்தேன். மேற்புற அட்டையைத் தலைகீழாக ஒட்டி இருந்தார்கள். புத்தகத்தை நேராக வைத்து உள் அட்டையைப் பார்த்தேன். பாஸ்கர் ஷக்தி தலைகீழாக சிரித்துக் கொண்டிருந்தார். பவாவிடம் கொடுத்தேன். அவர் திருப்பிப் பார்த்துவிட்டு "யாருப்பா அங்க, இத மொதல்ல மறைச்சி வையுங்க... பாஸ்கர் பார்த்தா கொன்னுடுவான்" என்று யாருக்கோ பதில் சொல்லிவிட்டு, "இப்போ புத்தகத்தை எடுக்காதீங்க. வேற நெறைய புக்ஸ் இருக்கு, நல்லதா பார்த்து எடுத்துக்கோங்க..." என்றார்.

விழா முடிந்ததும் நல்ல புத்தகமாக ஒன்றை எடுத்துக்கொண்டு பாஸ்கரிடம் நீட்டினேன். "அவ்வளோ பெரிய ஆளா நான்! ஆட்டோகிராஃப் எல்லாம் கேக்குறீங்க?" என்று சிரித்துக் கொண்டே கையொப்பமிட்டார். அப்படியே, "இலட்சுமண பெருமாள், கா சீ சிவக்குமார் எல்லாம் என்னை விட நன்றாக எழுதுவார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். இந்த மென்மையான, உயர்ந்த குணம் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று.

அவருடைய மனிதத் தன்மை அவரைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லோருமே வியக்கக் கூடிய ஒன்று. அதைப் பற்றிய தமிழ்நதியின் சுவாரஸ்யமான பதிவு:

பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…


பாஸ்கரைப் போலவே அவருடைய கதைகளும் மென்மையான வாசிப்புக்கு உகந்தவை. கிராமத்து நினைவுகளை புன்னகையுடன் அசைபோச வைப்பவை. தொகுதியில் மொத்தம் 31 கதைகள் இருக்கிறது. எல்லா கதைகளுமே வாசிப்பவருக்கு நிறைவைத் தரக் கூடிய கதைகள். எள்ளல்களுடனும், நக்கல்களுடனும் கதை நகர்ந்து சென்றாலும் வாசிப்பின் முடிவில் எதோ ஒரு துக்கத்தை நம்மீது கவிழ்த்துவிட்டுச் செல்லக் கூடியவை. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் பொழுது சில அடிப்படை விஷயங்கள் சிதைக்கப்படுகிறது. நாகரீக வாழ்க்கை, உயர்ந்த வாழ்க்கை என்று நாம் நம்பக் கூடிய விஷயத்திற்காக தினம் தினம் சிதைத்துக் கொண்டிருக்கின்ற கிராமம் சார்ந்த வாழ்க்கையையும், மனிதர்களையையும் இந்தக் கதைகளில் பாஸ்கர் ஷக்தி அடையாளப் படுத்தியுள்ளார்.

கார்த்திகா வாசுதேவன் பதிவில் அழகர்சாமியின் குதிரை தொகுதியிலுள்ள பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் பற்றி சிறு குறிப்பு படிக்கக் கிடைக்கிறது: http://mrsdoubt.blogspot.com/2009/07/blog-post_28.html

பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, வேலப்பர் மலை, தம்பி லட்சுமணா, காளான், வீராச்சாமி பிகாம், எழுநாள் சூரியன் எழுநாள் சந்திரன், அழகர் சாமியின் குதிரை என்று ஒவ்வொரு கதையைப் பற்றியும் சிலாகித்துப் பேசலாம். இவருடைய அழகர் சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது உபரித் தகவல்.

தொகுதி முழுவதையும் வாசித்துவிட்டு பைத்தியக்காரனின் உதவியுடன் பாஸ்கரிடம் பேசினேன்.

"உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் பாஸ்கர். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் கிருஷ்ண பிரபு பேசுகிறேன்" என்றேன்.

"கேணிக்கு வருவிங்களே அவர் தானே. உங்களை எனக்குத் தெரியும். சொலுங்க..." என்றார்.

எனக்கான ஆச்சர்யத்துடன், "உங்களுடைய கனக துர்கா தொகுப்பிலுள்ள சிறுகதைகள் நன்றாக வந்திருக்கின்றன பாஸ்கர். நீங்க இந்த மாதிரி எழுதுவீர்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய பால்யகால வாழ்க்கையின் சிறுவயது அனுபவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. சந்தோஷமாக இருக்கிறது" என்றேன்.

"ஒ மொத்தத்தையும் படிச்சிட்டிங்களா. நன்றி..."

"உங்களுடைய எழுத்தில் இறுக்கம் இல்லை. ஆனால் எதையோ அசைத்துவிட்டுச் செல்கிறீர்கள்..."

"நம்ம கேரக்டர் அப்படி.... 25 வயசு வரை நடந்ததைத் தானே எழுதி இருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கே..." என்றார்.

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." என்று பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பார். டிவி சீரியல், திரைப்படம் என்று இதர பணிகள் அவருடைய காலை இழுத்தாலும், எழுதுவதற்கான அவகாசம் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றே வாசகனாக ஆசைப்படுகிறேன். பாம்பு அதனுடைய தோலை உரிக்கும் கால அவகாசமும், வலியும் என்னுடைய புத்திக்குத் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவருடைய இன்னுமொரு தொகுதியின் பக்கங்களை புரட்டுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்.

பாஸ்கர் சக்தியின் இதர பங்களிப்புகள்:

மெகா சீரியல்: மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம்
திரைப்படம்: எம்டன் மகன், வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல

Saturday, August 14, 2010

பீக்கதைகள் - பெருமாள் முருகன்

வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
விலை: 60 ரூபாய்

காலச்சுவடு பொறுப்பாசிரியர்களில் ஒருவரான பெருமாள் முருகனின் இந்தப் புத்தகத்தை வாங்கக் கையில் எடுத்தவுடன், சிறுவயதில் டவுசரை கழட்டிவிட்டு மலம் கழிக்க ஓடிய நாட்கள் ஞாபகம் வந்தது. எனக்கு 12 வயது முடியும் வரை என்னுடைய கிராமத்தில் ஒருவர் வீட்டில் கூட கழிப்பறைகள் இல்லை. வெயில் நாட்களில் வயல்வெளிகளை நோக்கியும், மழைக்காலங்களில் கல்கத்தா நெடுஞ்சாலையை நோக்கியும் ஓடிக்கொண்டிருப்போம். அரசாங்கத்தில் மானியம் தந்த பொழுதுதான் எல்லோரும் கழிப்பறை கட்டத் தொடங்கினோம். ன்று எல்லோர் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது என்றாலும் வயல்வெளியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மணிச் சத்தும் வருங்கால விவசாயமும் - என்ற கட்டுரையில் மனிதக் கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது என்று படிக்கும் வரை "ஏன்தான் இப்படி அகண்ட வெளியை அசிங்கம் செய்கிறார்களோ" என்று அங்காளி பங்காளிகளைப் பொருமிக் கொண்டிருந்தேன். இதன் மற்றொரு பக்கம் நகரத்தில் (சென்னை) முதன் முறையாக சிறுநீர் கழிக்க பணம் கொடுத்த பொழுது "இதக் கூடவாடா பணமாக்குவிங்க" என்று வருத்தப் பட்டிருக்கிறேன்.

முன்பிருந்த கிராமங்களில் கழிவு நீரை வீட்டிலுள்ள தோட்டத்திற்கும், இதர திடக் கழிவுகளை வயல்களுக்கு உரமாகவும் சேர்த்து விடுவார்கள். இன்று கிராமமோ நகரமோ கழிவு மேலாண்மை என்பது சவாலான விஷயம் தான். நம்முடைய வசதிக்காக அதனை அருகிலுள்ள நீர் நிலைகளிலோ அல்லது ஆழமாக பள்ளம் வெட்டி அதில் சேர்பித்தோ தற்காலிகமாக தப்பித்திக் கொள்கிறோம். இயற்கை சுழற்சி இங்குதான் தடைபடுகிறது. கருங்கடல் போல் காட்சியளிக்கும் மெரினாவில் கால் நனைப்பவர்கள், மலம் கலந்த சாக்கடையில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை என்றுதான் உணர்வார்களோ தெரியவில்லை. சென்னையின் மத்தியத் தர ஹோட்டல்களில் குடிநீர் காலங்களாகவே இருக்கிறது. அந்த நேரங்களிலெல்லாம் 'கிணறு வெட்ட பூதம்' என்ற பதிவு வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சென்னையில் 42.16 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்பொழுது 50 லட்சத்தைத் தாண்டி இருக்கலாம். இது தவிர வேலைக்காகவும், வியாபாரமாகவும், சுற்றுளாவுக்காகவும், இதர காரணங்களுக்காகவும் தினம் தினம் வந்து செல்பவர்கள் வேறு. சராசரியாக 50 லட்சம் லிட்டர் சிறுநீரும், அதற்கேற்ற மலமும், சளியும், எச்சிலும், துப்பாலும், வாந்தியும் என்று மனிதனால் மட்டுமே வெளியேற்றப்படும் கழுவுகள் நம்மைச் சுற்றித் தான் பயணிக்கின்றன. கூவமும், அடையாறும், மெரினாவும், ஆங்கிலேயன் கட்டிய பாதாளக் கால்வாயும் நம்முடைய கழிவுகளைத் தாங்கியே நோயுற்றுள்ளன. இன்று பல பேரூராட்சிகளும் சென்னையைப் போலவே பெருநகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் கூட இதேதான் கதி.

சிறுநீர் கழிக்கப்படாத கரண்ட் கம்பன்களைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். மலம் கழிக்கப்படாத நடை மேடைகளே சென்னையில் இல்லை. நான் ஒவொரு அடியையும் ஜாக்கிரதையாகவே எடுத்து வைக்கிறேன். அதைக் கழித்தவர்களுடைய அவஸ்தை எனக்குப் புரிந்தே இருக்கிறது. நான் மூச்சைக் கூட தயங்கித் தயங்கியே உள்ளிழுக்கிறேன். ஒவ்வொரு மூச்சிலும் சிறுநீரின் ஈரமும், மலத்தின் துர்நாற்றமும் சேர்ந்தே இருக்கிறது என்ற உண்மை என்னை பாடாய்ப்படுத்துகிறது. ஐம்பூதங்களில் வானையும், நெருப்பையும் தான் மனிதக் கழிவுகளை இட்டு நிரப்பாமல் மிச்சம் வைத்திருக்கிறோம்.

மனிதன் வெளியேற்றும் கழிவுகள் இயற்கையை நாசப்படுத்துகிறது. இயற்கை உபாதையோ மனிதனை சங்கடப்படுத்துகிறது. சில நேரங்களில் அவமானப்படுத்துகிறது.பயணத்திலோ, புதிய இடத்திலோ, தமக்குப் பழக்கமில்லாத முறையிலோ, மரணப் படுக்கையிலோ அவசரம் அழைக்கும் பொழுது செய்வதற்கு எதுவும் இல்லை. இங்குமங்கும் ஓடி, நெளிந்து சுருங்கி அடுத்தவர்களால் பரிகாசமாகப் பார்க்கப்படுகிறோம். ஒரு மனிதன் அவசரத்தில் ஒதுங்கி வைப்பது மட்டுமே மலம் அல்ல. அவசர வாழ்க்கையில் சக மனிதனை ஒதுக்கினால் அவனும் மலமே. சூழ்நிலைகளும் சங்கடங்களும் தான் அதனை நிர்ணயிக்கின்றன. அவைகளே இங்கு கதைகளுக்குக் கருவாகின்றன. 'மலத்தை' மையமாக வைத்த சங்கடங்களைத் தான் பெருமாள் முருகன் கதைகலாக்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அனுபவத்தை ஏற்படுத்திச் செல்கிறது. இங்கும் சில கதைகள் ஏதோ ஓர் இறுக்கத்தை இறக்கிவிட்டுச் சென்றன. அவையெல்லாம் மலச்சிக்களுக்கான உணர்வை ஏற்படுத்திச் சென்றன. சில கதைகள் என்னை இளகச் செய்தன. அவையெல்லாம் மலம் கழித்த உணர்வை ஏற்படுத்திச் சென்றன.

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளின் சிறு குறிப்பினை நண்பர் ஜெயகுமாரின் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.


நூலாசிரியரைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் பதிவு:



Saturday, August 7, 2010

சொல்லில் அடங்காத வாழ்க்கை - ஷாஜி

வெளியீடு : உயிர்மை
ஆசிரியர்: ஷாஜி
தமிழில்: ஜெயமோகன்
விலை: 120 ரூபாய்

இசை, கேட்பவர்களின் உணர்வுகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடிய விஷம். உணர்ச்சிகளின் வடிகாலாகவும், காயங்களின் ஆறுதலாகவும் உயிரினங்களை அற்றுப்படுத்தக் கூடிய விஷயம். எனவே ஆத்மாவுடன் இணைந்து ஒரு படைப்பைக் கொடுக்கும் பொழுதுதான் கலைஞர்கள் பிரகாசிக்கிறார்கள். ஆகவேதான் ரசிகர்களும் அவர்களின் பின்னால் ஓடுகிறார்கள். இசை பல பரிமாணங்களில் உலகமெல்லாம் ரசிக்கப்படுகிறது. 'கிளாசிக், செமி கிளாசிக், லைட் மியூசிக், பாப்,ராக்' என்று தனித் தனியாக இசையைக் கொண்டாடும் ரசிகர்கள் எங்கும் இருக்கிறார்கள். ரசிகர்களின் இசை மீதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலைஞர்கள் கால இடைவெளியில் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். சில உன்னதமான கலைஞர்கள் காலத்தால் மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

மகுடி ஊதும் பாம்பாட்டிகளும், நாதஸ்வரம் இசைக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களும் தான் எனக்கான சிறுவயது ஆதர்சனங்கள். ஒரு கைப்பிடி அரிசிக்காக மகுடி இசையும், நாதஸ்வர இசையும் எங்கள் தெருக்களில் வழிந்தோடி இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருமுறை எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுதும் எங்களுக்கான பிரம்மிப்புகளை சுமந்துகொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின்னாலுள்ள வலியினை, வறுமையினை, வாழ்க்கைப் பின்புலங்களை ஒருநாளும் அறிந்ததில்லை.

அடைகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டினை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவருவதைப் போல குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்ததும் என்னை பெரிதும் ஆக்ரமித்த விஷயம் திரையிசைதான். 'இசையமைப்பாளர்கள், பாடக பாடகிகள், பாடலாசிரியர், கருவிக் கலைஞர்கள்' என்று பிரித்தறியத் தெரியாமல் எல்லாவற்றையும் ஒன்றாக உள்வாங்கி சந்தோஷித்த ஆரம்ப நாட்கள் வானொலி முன்பும், தொலைக் காட்சி முன்புமே கழிந்திருக்கின்றன. கல்லூரி வாழ்க்கையில் தான் திரைப்படத்தின் பல்வேறு கூறுகளையும், திரையிசையின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மூலம் பல பரிமாணங்களும், பங்களிப்பாளிகளின் திறமைகளும் தெரியவந்தது. மகுடி இசையின் மயக்கத்தைக் காட்டிலும் போதையான நாட்கள் அவை. குறிப்பாக பாடகர்கள் மீதும், கருவி இசைக் கலைஞர்கள் மீதும் எனக்கு இருந்த போதை அளவிட முடியாத ஒன்று. அவர்களில் ஒருவரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று பல பெயர்களைக் குறித்து வைத்திருந்தேன். இறுதியில் நான் பார்த்த ஒரே பாடகி ஜானகி அம்மா மட்டுமே.

எனக்கு ஒருமுறை வாய்த்த அனுபவம் பன்னாட்டு இசை நிறுவனங்களில் வேலை செய்ததால் ஷாஜிக்கு பலமுறை கிடைத்திருக்கிறது. அந்த அனுபவங்களையும், அவருடைய சிறுவயதில் ரசித்த கலைஞர்களின் வாழ்க்கையையும் கட்டுரைகளாக்கி இருக்கிறார். சலில் சௌத்ரி, மெஹ்தி ஹசன், பாப் மார்லி, ஏ எம் ராஜா, ராஜ்குமார், மன்னா டே, ஃபிரெடி மெர்குரி, MSV, கீதா தத், S ஜானகி, போனிஎம், RK சேகர் என்று பலரைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஜெயமோகன் உயிர்மைக்காக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஷாஜியின் தமிழ் வலைப்பூவில் வாசிக்கக் கிடைக்கிறது. (http://musicshaji.blogspot.com)

ஷாஜியின் இளையராஜா பற்றிய கருத்துக்களுடன் கொஞ்சமும் ஒத்துவராதவன் நான். நாளை மதியம் (Aug 8 2010) கேணி சந்திப்பிற்கு செல்ல இருப்பதால் அவரைப் பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்குமென்று வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்து மறைந்த மேதைகளைப் பற்றிய மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புபோல் அமைந்துள்ள புத்தகம் என்பதால் டிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

Saturday, July 31, 2010

நண்பர்கள் தினம்

புத்தகம் தான் ஒருவனுடைய மிகச் சிறந்த தோழன் என்பார்கள். அது மட்டும் தான் நீ கையில் எடுக்கும் பொழுது குழந்தை போல ஓடிவரும். நான் ஒவ்வொரு முறை புத்தகத்தை கையில் எடுக்கும் பொழுதும் அதனை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே நண்பர்கள் கொஞ்சம் சிறப்பான உறவு தான் (Special relationship). அதனால் தான் "எங்க அப்பா எனக்கு ஃபிரண்டு மாதிரிடா" , "எங்க அம்மா எனக்கு ஃபிரண்டு மாதிரிடா", "என்னோட வாத்தியார் எனக்கு ஃபிரண்டு மாதிரிடா", "என்னோட முதலாளி எனக்கு ஃபிரண்டு மாதிரிடா" என்று சில உறவுகளை நண்பர்களை உதாரணமாக வைத்துச் சொல்கிறோம். ஓர் எல்லை வரை நம்முடைய வயது அதிகமாக அதிகமாக நண்பர்கள் வட்டமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

என்னுடைய பள்ளிப் படிப்பை முடிக்க மூன்று பள்ளிகளையும், இளங்கலை மற்றும் முதுநிலை படிப்பிற்காக இரண்டு வெவ்வேறு கல்லூரிகளையும், கூட்டுறவு பட்டயப் படிப்பிற்காக ஒரு நிறுவனத்தையும், இசைக்காக இரண்டு பள்ளிகளையும், மொழிக்காக ஒரு வகுப்பையும், நான் வேலை செய்துள்ள மூன்று அலுவலகங்களையும், ஏராளமான பயணங்களையும், பதிவுலகையும், இதர சந்திப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் எவ்வளவு அறிமுகங்கள்! எவ்வளவு நலம் விசாரிப்புகள்! எத்தனை புன்னகைகள் எனக்காகப் பூத்திருக்கின்றன. கண்களை மூடிப் பார்த்தால் என்னால் அடையாளப் படுத்தக்கூடிய முகங்கள் மிகவும் சொற்பமே. என்னுடைய தன்மையிலான குறுக்கீடு அவர்களுடைய வாழ்க்கையில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. (I mean special day wishes & Congrats)

எஞ்சியவர்கள் என்ன ஆனார்கள்!? என்னிலிருந்து எப்படி அன்யோன்யப் பட்டார்கள்.? அவர்களை என்னிடமிருந்து பிரித்தது எது? -என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர்களுடைய புன்னகையும், நல விசாரிப்பும் என்னை பாடாய் படுத்துகிறது.

எந்த தினமாக இருந்தாலும் சிறப்பு தின வாழ்த்துக்கள் சொல்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. வியாபார யுத்தியாகத்தான் அதனைப் பார்க்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் "Bathu" இறந்ததும் தான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். அவனுடைய இறப்பு எனக்கான பல விஷயங்களைப் புரிய வைத்தது. ஒரு வயது வரை குருவி சேர்ப்பதைப் போல நண்பர்களை சேர்க்கிறோம். காலம் இடைவெளி விட்டு அவர்களை அழித்துக் கொண்டு வருகிறது. சில நேரங்களில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. நம்மால் அடையாள படுத்தக்கூடிய முகங்கள் கூட மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கலாம். ஆகவே சாதாரண தினத்தைக் கூட ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து சிறப்பாகக் கொண்டாடலாம். வாழ்க்கையே கொண்டாட்டம் தானே!

அதே கொண்டாட்டத்துடன் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Sunday, June 27, 2010

அறிந்தும் அறியாமலும் - ஞாநி

வெளியீடு: ஞானபானு பதிப்பகம்
விநியோகம்: கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: ஞாநி
விலை: 99/- ரூபாய்

இது பாலியல் கல்வி சமந்தப்பட்ட புத்தகம். எனவே புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். 'தமிழகப் பள்ளியில் ஒரு மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றிருக்கிறாள்' என்ற செய்தியை நாளேடுகளில் படித்த பிறகே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

'ஆசிரியர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்'. 'மது அருந்தாதே என்று சொன்ன அத்தையை கொலை செய்து எரித்த மருத்துவக் கல்லூரி மாணவன்'. 'கல்லூரியில் டார்ச்சர் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்' - இது போன்ற செய்திகளை தினம் தவறாமல் படிக்க நேரும்பொழுது தொண்டையை அடைக்கிறது.

நான் சுட்டிக்காட்ட விரும்புவது தவறு செய்பவர்களின் மீதான குறையை அல்ல. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் பெரியவர்களாகிய நாம் எங்கு குறை வைக்கிறோம் என்பதைத்தான். ஒரு வேலைக்குச் சேர 15 வருடங்கள் படிக்கிறோம். குறைந்தது ஆறு மாத பயிற்சி (Training) எடுத்துக் கொள்கிறோம். வேலை உயர்வு பெற தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கிறோம். ஆனால் குழந்தை வளர்ப்பு மற்றும் மனோவியல் பற்றி துணுக்குச் செய்திகளைப் படிப்பதோடு சரி. அதைத் தவிர்த்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மூன்று வயதில் Play School. அதற்கு மேல் உலகம் புகழும் ஏதாவது ஒரு பள்ளியில் குழந்தையை சேர்த்துவிட்டால் எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதோடு பெற்றவர்களின் கடமை முடிந்துவிடுகிறது. உண்மையில் அங்குதான் வினையே ஆரம்பிக்கிறது.

சமீபத்தில் Outlook ஆங்கில இதழில் 'Teacher, leave our kids alone' - என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. தற்போதைய குழந்தைகளின் நிலையைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை. குழந்தையின் அறிவு வளரவேண்டும் என்பதற்காக அதிக கவனம் எடுத்துக் கொண்டு ஆயிரம் ஆயிரமாக செலவு செய்யும் பெற்றோர்கள், Abacus class, computer class, music class etc... என்று குழந்தைகளைப் பம்பரம் போல சுழற்றும் பெற்றோர்கள், அவர்களின் Emotional management & mind control - குறித்து யோசிப்பதே இல்லை (இந்த வரியைப் படித்துவிட்டு ஆன்மிகம், பூஜை, தியானம் அல்லது யோகா போன்ற வகுப்புகளில் குழந்தைகளைத் தள்ளாதீர்கள்).

Outlook இதழை படித்து முடித்ததும் Thinkrite Educations Pvt Ltd நிறுவனத்தின் - founder & chief trainer கீர்தன்யாவுடன் உரையாடினேன். அவரிடம் ஆலோசனைக்காக வரும் படிப்பில் சோபிக்காத குழந்தைகளின் முக்கியக் காரணம் அவர்களுடைய பெற்றோர்கள் தான் என்று கூறினார். காலையில் படுக்கையை விட்டு கொஞ்சம் தாமதமாக எழுந்துகொள்ளும் குழந்தையை 'சோம்பேறி...' என்பதில் ஆரம்பித்து, 'பக்கத்து வீட்டு பையனைப் பாரு என்னமா படிக்கிறான்! நீயும் தான் இருக்கியே' என்று குழந்தை படுக்கைக்குச் செல்லும் வரை அவர்களுடைய குறைகளை மட்டுமே பெற்றோர்கள் அதிகமாக பட்டியலிடுகிறார்கள். "குழந்தைகளை வளர்க்கக் கூடாது, அவர்களுடன் சேர்ந்து பெற்றவர்களும் வளர வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாம் நினைத்ததைவிட அதிகம் பிரகாசிப்பார்கள்" என்றார்.

'கோவம், படிப்பில் கவனமின்மை, பகல் கனவு, தாழ்வு மனப்பான்மை' - இவையெல்லாவற்றையும் தவிர்த்த முக்கியப் பிரச்சனை 'செக்ஸ்'.

செக்ஸ் என்பது 'பெரியவர்களாக இருந்தால் சிறியவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைக்கும் விஷயம், சிறியவர்களாக இருந்தால் பெரியவர்களிடமிருந்து மறைக்கும் விஷயம்' என்று எங்கோ படித்த ஞாபகம். சினிமா, டிவி, இன்டர்நெட் போன்ற ஊடகங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே, நமக்குத் தெரியாதவர்களின் மூலம் அவர்களுக்குத் தெரிய வரும் முன்பே, சில அடிப்படை விஷயங்களை (Good touch, Bad touch) நாசூக்காக பெற்றோர்களே சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: அறிந்தும் அறியாமலும்

'அறிந்தும் அறியாமலும்' தொடரை ஞாநியின் இணையப் பக்கத்தில் படிக்கக் கிடைக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

பின் குறிப்பு:
1. கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தினமலர் இதழில் கீர்தன்யா வாரவாரம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
3. கருவுற்ற பெண்களுக்கான 'Prenatal Parenting' என்ற முக்கியமான ஆலோசனையை இவர் வழங்குகிறார்.
2. 'படிக்காம சுற்றிக் கொண்டு இருக்கான், புருஷன் பொண்டாட்டி ஓத பட்டுக்குறாங்க...' என்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.

Friday, April 23, 2010

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை

ஏப்ரல் 23 - ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். புத்தகத்தின் மீதான தீராதக் காதலால் இந்த தினத்தின் மீதும், சரஸ்வதி பூஜையின் மீதும் எப்பொழுதுமே எனக்கு ஒரு மயக்கம் உண்டு.

யோசித்துப் பார்க்கையில், நான் (அரசுப்) பள்ளி வாழ்க்கையை முடித்து வெளியில் வரும் வரை பாட புத்தகத்தைத் தவிர்த்த வேறு எதையும் படித்ததில்லை. பாடப் புத்தகத்தைக் கூட முழுவதும் படித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, ஆசிரியர்களோ என்னை புத்தக வாசிப்பிற்கு ஊக்கப்படுத்தியதும் இல்லை. கல்லூரி வந்ததும் தான் ஒரு சில இதழ்களையும், புத்தகங்களையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கைசெலவிற்காக என்னுடைய அண்ணன் தரும் பணத்தைப் பிடித்தம் செய்து சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அருகில் வேலை கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சொந்த நூலகத்திலுள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியவைதான்.
புத்தகம் வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதால் நான் எதிர்கொண்ட சங்கடமான சில கேள்விகள் தான் புத்தக தினத்தில் எனக்கு ஞாபகம் வரும்.

நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பொழுது "எதுக்குடா இப்படி வீண் செலவு செய்யற?... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா?!... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்?(இது என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு படித்தவர் கேட்டது. அப்பொழுது கூட புத்தகத்தை இரவலாகக் கேட்கவில்லை)." இது போன்ற கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய பதில் இதுவரை புன்னகையாகத் தான் இருக்கிறது.

மேலுள்ளவற்றில் "ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடப் போரடா?!..." இந்தக் கேள்விதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தக் கேள்வி. என்மேல் இருக்கும் அக்கறையினால் தான் இந்தக் கேள்வி எழுந்தது என்றாலும் பொதுவான புத்தகம் படிப்பவர்களின் மீதான அவர்களுடைய பிம்பம் என்னை நிலைகுலைய வைத்தது. இந்த மாதிரியான மன பிம்பங்கள் கொண்ட குறுகிய மனப்பான்மை புத்தக வாசிப்பை மட்டுப்படுத்துவது குறைவுதான் என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை (பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பது), கணினி, செல் ஃபோன் போன்ற அறிவியல் வளர்ச்சி, சேட்டிலைட் சானல்களின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான பெரிய காரணங்களாக எனக்குப் படுகிறது. வாசிப்பு என்பது ஒரு சிலரால் கேலியாகவும், ஒரு சிலரால் பயங்கரமாகவும், ஒரு சிலரால் வீண் வேலையாகவும் பார்க்கப்படுவதை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய பிறப்பிடம் கிராமம் என்பதால், படிக்காத முந்தையத் தலைமுறையினர் வளரும் தலைமுறையினரைப் படிக்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட சமந்தப்பட்ட புத்தகங்களுக்கு ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்கின்றனர். கேபிள் இணைப்பிற்காக மாதம் தோறும் குறைந்தது 100 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பொது அறிவையோ, சுய அறிவையோ பெருக்கிக் கொள்வதற்காக ஒரு பைசாவைக் கூட அவர்கள் செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை.

என் தெருவில் உள்ள ஒரு குழந்தையாவது
ராஜா-ராணி
க் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மாயாஜாலக் கதைகள், இராமாயண மகாபாரதத்திலுள்ள சிறுவர் கதைகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர்களின் கதை உலகம் காக்கா-நரிக் கதையோடும், பாட்டி வடை சுட்டக் கதையோடும் நின்று விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினாலும், குடும்பச் சிதறல்களினாலும் தாத்தா பாட்டி கதைகளும் குழந்தைகளைச் சென்று சேர்வதில்லை. சிறுவர்களுக்கு கதைகள் சொல்வதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அவர்களுடைய கவன சக்தி பெருகும். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கம் வரும். நிறைய சொற்கள் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதினால் நம் மீதான அன்பு வளரும். ஒரு வயதிற்கு மேல் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்கள் மறைமுகமாக அவர்களுக்குத் தெரியவரும். "புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும். பிள்ளைகளின் அடுத்தகட்ட பருவத்திற்கு தயார் செய்யும் வேலையை பெரியவர்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளில் முக்கியமான ஒன்று "புத்தகம்". எனவே அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வாசிக்க ஊக்கப் படுத்துங்கள். தமிழில் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு புத்தகங்கள் வெளிவருவது குறைவுதான். கிழக்கின் ப்ரோஜிடி குழு அதனை சிறப்பாகவும், தரமாகவும் செய்கிறார்கள்.

என்னுடைய தோழிகளுக்கும், நண்பர்களின் தங்கைகளுக்கும், மனைவிகளுக்கும் "தயவு செய்து குழந்தைகளுக்கான கதைகளைப் படிங்க, உங்க குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்க" என்று எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். "போங்கண்ணா இதுங்களைக் கட்டி மேய்க்கவே முடியலை. அதான் டிவியிலயும், ஸ்கூல்-லயும் கத்துக்கராங்களே, அது போதாதா?" என்று பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
இன்று காலையில் கூட என்னுடைய நண்பர்களுக்கு "Today is the world book and copyright day. Buy anyone book written by your favorite author and discover the pleasure of reading. It’s my request. But don’t buy Vikatan, Kumudam, Kungumam, Rani magazines etc…. :-) Thanks & Love – Krishna Prabhu" என்று SMS அனுப்பியிருந்தேன். ஒரு சிலர் நல்ல SMS என்று பதில் அனுப்பியிருந்தார்கள். அதில் ஒளியவன் (சென்னை பல்கலையின் தமிழ் எழுத்துருவிற்கான ஆராய்ச்சி மாணவன்) அனுப்பியிருந்த பதில் சிரிப்பையும் வெறுமையையும் ஒருசேர வரவழைத்தது.

படித்தவன் பாடம் நடத்துவான்...
படிக்காதவன் பள்ளிக் கூடம் நடத்துவான்...!


இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.


Thursday, April 22, 2010

கவிதைப் பட்டறை - தஞ்சாவூர்



தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை
(TAMIL POETRY WORKSHOP)



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணைய தளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: உமா ஷக்தி (http://umashakthi.blogspot.com)