Wednesday, January 12, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - 8வது நாள்

2003-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரியில், மாலை நேர வகுப்பில் முதுநிலை கணிதம் பயின்றபோது பிரகாசம் அங்கிள் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சந்திக்கும்படி கேட்டிருந்தார். இதுபோன்ற அழைப்பு எனக்கு பலமுறை வந்ததுண்டு. இந்த முறை சற்றே வித்யாசமானது. நான் சென்றபொழுது சாய்வு நாற்காலியில் நினைவுகளை அசைபோட்டவாறு அரைமயக்கத்தில் இருந்தார். என்னைப் பார்த்ததும் விழிப்புத்தட்டி, "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இப்போ சொல்லலாம்னு தோணுது." என்றார்.

என்னுடைய அங்கிளுக்கு அப்பொழுதே 70 வயது. "எது வேணும்னாலும் எங்கிட்ட சொல்லலாம் அங்கிள். தாராளமா சொல்லுங்க." என்றேன்.

"Business Standard பத்திரிகையில் economics பத்தி சிவா editorial column எழுதறான். அத படிச்சி பாரேன்" என்று பத்திரிகையை நீட்டினார். எனக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. தினமணி தலையங்கத்தையே எழுத்தைக் கூட்டிப் படிப்பவன் நான். பொருளாதாரக் கட்டுரையை அதுவும் ஆங்கிலத்தில் என்றதும் பீதி கிளம்பியது. பத்திரிகையில் பொம்மை பார்த்துவிட்டும் ஏமாற்ற முடியாது. பிரகாசம் அங்கிள் MA (Economics) படித்தவர். உயர்நிலைப் பள்ளியில் பொருளாதார வகுப்பெடுத்து ஓய்வு பெற்றவர். நிபந்தனைகள் இன்றி சரண்டர் ஆனேன்.

"அங்கிள், எனக்கு பொருளாதாரம் பற்றி எதுவுமே தெரியாதே" என்று தயங்கித் தயங்கி தெரியப் படுத்தினேன்.

"அது எனக்கும் தெரியுமே. அதனால தான் இதுவரை சொல்லனும்னு தோணல."

"சரி கொடுங்க அங்கிள்" என்று இதழை கையுடன் எடுத்துச் சென்று, பல முறை வாசித்து மறுநாள் அவரைச் சந்திக்கும் பொழுது சிவா அண்ணன் எழுதி இருந்ததைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பேசினேன். நான் தவறாகப் பேசிய இடத்தில், என்னைத் திருத்தி கட்டுரையின் சாரத்தைப் பகிர்ந்துகொண்டார். சங்கதி இதனுடன் முடியவில்லை.

இரண்டு வருடம் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் சாரத்தைத் தொகுத்து 2009 ஆம் ஆண்டு இன்வெஸ்டிங் இன் இந்தியா'ஸ் எமெர்ஜிங் ரெசிலியான்ஸ் என்ற புத்தகமாக சிவா அண்ணன் எழுதி இருக்கிறார். புத்தக வெளியீடு மத்திய அமைச்சர்கள் புடைசூழ டெல்லியில் நடந்தது. மெக்மில்லன் பதிப்பகம் வெளியிட்டார்கள். பதிவு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டு வீடியோ காட்சியை நேரம் கிடைக்கும் பொழுது அங்கிள் போட்டுக் காண்பிப்பார். அப்பொழுதெல்லாம் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார். நான் சொல்ல வரும் சங்கதி இதுவும் அல்ல.

புத்தகக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தின் ஒரு பிரதியையாவது பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்காக இந்த இரண்டு வருடங்களில் லேண்ட்மார்க், ஒடிசி, ஹிக்கின்போதம், புக் பாயின்ட் என்று எந்த கடைக்குச் சென்றாலும் இந்தப் புத்தகத்தைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த மாதம் கூட Skywalk-ல் இருக்கும் லேண்ட்மார்க்கிற்கு அழைத்துச் சென்றேன். அதே தேடுதல் அதே ஏமாற்றம். புத்தகக் கண்காட்சிக்கான தேதி தெரிய வந்ததும் "சிவா எழுதின புக் மெக்மில்லன்ல இருக்கான்னு பார்த்துட்டு வந்துடலாம்பா..." என்றார்.

இடது பக்க ஆரம்பத்தில் தினத்தந்தி புத்தக அரங்கின் வரிசையில் மெக்மில்லன் இருக்கிறது. முந்திய நாட்களிலேயே சென்று புத்தகம் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டேன். 'இருக்காது!' என்பதை தெரிந்துகொண்டே அவருடன் சென்று ஏமாறுவது சங்கடமான விஷயம். எனவே வலது பக்கக் கோடியில் இருந்து ஆரம்பித்தேன். நாங்கள் எந்தப் புத்தகத்தையும் வாங்கவில்லை. செல்லும் வழியை விட்டு விலகினாலும், ஆசிரியரின் குரலைக் கேட்டு வரிசையைப் பிடிக்கும் குழந்தைகளையும், புத்தகங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிதானமாக நடந்தோம். மிதமான கூட்டத்தில் நாங்களும் நடந்து சென்றோம். எங்களுக்கான இலக்கு ஒரே ஓர் அரங்கு மட்டும் தான். அதுவும் எங்களுடைய பயண இறுதியில் இருக்கிறது.

கிழக்கின் வாசலைக் கடக்கும் பொழுது 'ரஜினியின் பஞ்ச்தந்த்ரா' என்ற புத்தகத்தை மாயா ஆண்டிக்காக வாங்கிக் கொண்டோம். ரஜினியின் ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர். புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட ஆண்டி நிச்சயமாகப் படிக்கமாட்டார். என்றாவது அவர்களுடைய வீட்டிற்குச் சென்றால் என்னிடம் வாசித்துக் காண்பிக்கச் சொல்வார். இல்லையேல் அங்கிள் தான் படித்துச் சொல்ல வேண்டும். புத்தகத்திற்கான பணத்தைச் செலுத்தும் பொழுது பாரா இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். மீண்டும் எங்களுடைய இலக்கை நோக்கி பயணப்பட்டு கடைசியாக மெக்மில்லன் அரங்கை அடைந்தோம்.

சிறு அரங்கின் சுவர் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள் இருந்தது. நின்றவாறு மூன்று பக்க சுவரையும் பார்வையிட்டார்.

"இங்கயும் இல்லையேப்பா?"

"உங்களுக்குத் தெரியாதது இல்ல. பொருளாதாரம் படிக்கறவங்க ரொம்ப கம்மி. தேவைப்பட்டா பதிப்பகத்தையே தொடர்பு கொண்டு வாங்கிடுவாங்க அங்கிள்."

"இல்லப்பா, இத எழுதறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காம்பா. இந்த மாதிரி விழாக்களில் அவனோட புக்கும் இருந்தா சந்தோஷமா இருக்கும் இல்ல."

"புரியிதுங்க அங்கிள். நான் முன்னமே பார்த்துட்டேன். அந்தப் புத்தகம் இங்க காட்சிக்கு இல்ல. பெரும்பாலும் Study materials தான் இருக்கு. இதுபோன்ற விழாக்களின் முக்கிய இலக்கே குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தான். அவர்களுக்கான புத்தகங்கள் தான் பெரும்பாலும் இருக்கு."

"சரிப்பா. நாம கொஞ்ச நேரம் வெளிய உட்கார்ந்து ஓய்வெடுத்துட்டு கெளம்பிடலாம்" என்று வெளியில் வந்தார். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் பெற்ற பிள்ளைகள் என்று வரும் பொழுது தாய்தந்தையர் வெகுளிகளாக நிற்கத் தயங்குவதே இல்லை. போதிய ஓய்விற்குப் பிறகு அவரை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்றாவது ஒரு நாள் மீண்டும் அங்கிள் என்னை அழைப்பார். அவருடன் புத்தகத்தைத் தேட வெளியில் செல்ல வேண்டும்.

7 comments:

shortfilmindia.com said...

அருமை.. பிரபு

priyamudanprabu said...

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் பெற்ற பிள்ளைகள் என்று வரும் பொழுது தாய்தந்தையர் வெகுளிகளாக நிற்கத் தயங்குவதே இல்லை
///

YES

priyamudanprabu said...

FOLLOW

BalHanuman said...

Investing in India's Emerging Resilience (Hardcover)
By Sivaprakasam Sivakumar (Author)

Cash On Delivery Available 15%
List Price: Rs. 325
Our Price: Rs. 276
You Save: Rs. 49 (15%)

http://www.infibeam.com/Books/info/sivaprakasam-sivakumar/investing-india-s-emerging-resilience/9780230636712.html

Unknown said...

அவர்களுடைய வீட்டில் கூட சில புத்தகங்கள் இருக்கிறது. என்றாலும் பொது இடத்தில் இந்தப் புத்தகத்தைப் பார்க்க அங்குளுக்கு ஆசை.

சென்ஷி said...

அருமையான மனப்பகிர்வு கிருஷ்ணா.. ரொம்பப் பிடிச்சிருக்குது. நீங்க கடைசியா குறிப்பிட்ட விஷயம் மிக அருமை.

அங்கிளின் ஆசையும் சீக்கிரம் நிறைவேறட்டும்.

நந்தா said...

நல்ல பகிர்வு. மனதிற்கு நெருக்கமாக இருந்தது.

http://blog.nandhaonline.com