
"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர். வாலியை மறைந்து நின்று தாக்கும் காட்சியை அவர்போல் வேறொருவர் சொல்லக் கேட்டதில்லை. ராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் சண்டையின் நடுவில் மகாபாரதக் கர்ணன் வருவான். அவனிடம் யாசகம் கேட்க வந்தவர்கள் பற்றியெல்லாம் சொல்லுவார். யுத்தக் களத்தில் உயிருக்குப் போராடி வாடிவதங்கும் அவனிடம், செய்த புண்ணியங்களின் பலன்களை யாசகம் கேட்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தும் பொழுது ஐயாவின் குரல் நடுங்கும். வாலியும் கர்ணனும் புண்ணியம் செய்தவர்கள் என்பதை விளக்கும்பொழுது அவருடைய கண்களில் கண்ணாடிபோல நீர்த்துளிகள் பளபளக்கும்.
"ஓடியோடி சம்பாதிக்கறத கோயில்ல கொண்டுட்டு போயி கொட்டுறோம். முனிவர்கள் எல்லாம் வாயக்கட்டி வயித்தக்கட்டி தவமா தவம் இருக்காங்க. இதெல்லாம் என்னத்துக்காக? இந்த ஒரு பிறவி போதும்டா ஆண்டவா. எங்களோட உயிரை எமன்கிட்டயிருந்து நீ வாங்கிக்கோ... உன்பாதத்துல சேர்த்துக்கோன்னு செக்குமாடு மாதிரி கோயிலையும், கொளத்தையும், மரத்தையும், மலையையும் சுத்தி சுத்தி வரோம். சீண்டறாரா நம்மள. ஆனால் கடவுளே விருப்பப்பட்டு உசுர வாங்கினது வாலிக்கிட்டையும், கர்ணன்கிட்டயும் தான். அவர்களைத் தவிர வேற யார் அதிர்ஷ்டசாலிகள்." என்பார். ஐயாவின் கருத்துடன் பள்ளி வயதில் நான் முரன்பட்டதில்லை. புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.
தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்களான இராமனும் கிருஷ்ணனும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எதிரிகளைக் கொன்று குவிக்கிறார்கள். இதில் நயவஞ்சகம் வேறு பிரதானம். சிவபெருமான் உலகப் பிறவி எடுக்காதவர் என்பார்கள், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவி எடுக்காதவர் என்பார்கள், தேவையேற்பட்டால் மாயமாக வந்து அழிக்கும் தொழிலை தவறாமல் செய்துவிட்டுப் போவார். துதிபாடுபவர்களைத் தவிர தூற்றுபவர்களுக்கு இதுதான் நிலைமை. முகபது நபிகள் கூட வலியப்போய் சண்டை போட்டதில்லையே தவிர, எதிர்த்து வந்தவர்களுடன் மல்லுக்கட்டி கற்களை வீசி சண்டையிட்டதாகப் படித்த ஞாபகம். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஏசு கிறிஸ்து. "உன் எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு உன்னுடைய மறுகன்னத்தையும் காட்டு" என்று போதித்தவர். உலக மக்களைக் காக்கும் பொருட்டு துன்பத்தை ஏற்று சிறுவயதிலேயே இறந்தவர். அவரின் கதையைத் தழுவிய புனைவுதான் 'அன்பின் வழி'.
ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் என்பவன் கரடுமுரடான குற்றவாளி. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவன். ரோம அரசின் அளவுகோலின்படி சிலுவையில் அறையப்பட முற்றிலும் தகுதியானவன். அதிர்ஷ்ட்ட வசமாக விருந்து நாளில் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் வேறொருவனை சிலுவையில் அறைய ஏற்பாடாகிறது. அப்படிக் கொண்டுவரப்படும் அடிமைக் கைதி வேறுயாருமல்ல 'ஏசு கிறிஸ்து'. சிலுவையில் அறையப்படும் கிறிஸ்துவை கொல்கோதா மலையின் சரிவில் நின்று இமைகொட்டாமல் பார்க்கிறான் பாரபாஸ். சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியவனுள் மெல்லத் துளிர்க்கிறது குற்ற உணர்ச்சி. சந்தித்துப் பேசும் மனிதர்கள் எல்லாம் கிறிஸ்துவை புகழ்கிறார்கள். அவனுக்காக துக்கிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உளவியல் ரீதியாக மனதளவில் சிறைபட ஆரம்பிக்கிறான். மனக் கிலேசங்கள் அலைமோதுகின்றன. அதிலிருந்து விடுபட உதடுகள் பிளந்த அழகு குறைந்த பெண்ணை அரவணைத்துக் கொண்டு சல்லாபிக்க ஆரம்பிக்கிறான். காம இச்சைகளும், சிற்றின்பங்களும் அவனுடைய உறுத்தலைக் குறைக்கவில்லை. நாட்கள் செல்கின்றன.
எலியாஹூவின் கூட்டத்திலிருந்த நாட்களை நினைத்துக் கொள்கிறான். அது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று பிழைக்கக் கூடிய கூட்டம். எலியாஹூ தந்தையின் முறையிலிருந்து பாரபாஸை வளர்க்கிறான். என்றாலும் அவன் மீது உள்ளூர வெறுப்பு. ஏனெனில் இந்தக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட மோவபைட் ஸ்திரீக்கு பிறந்தவன் தான் பாரபாஸ். அந்தக் கூட்டத்திலுள்ள எல்லா ஆண்களுக்கும் வைப்பாட்டியாக இருந்தவள் அவள். பாரபாஸ் யாருக்குப் பிறந்தான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். இருந்தாலும் எலியாஹூ தந்தையாக இருந்து வளர்த்தான். ஒருமுறை நடந்த சண்டையில் பாறையின் இடுக்கில் தள்ளி எலியாஹூவைக் கொன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறான். வளர்த்த தந்தையைக் கொலை செய்தபோது கூட அவன் வருந்தவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாக அமைய நேர்ந்தது அவன் மனதை இம்சித்தது.
பிறிதொரு நாளில் அவன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டு அடிமையாகிறான். சிறைக்கூட்டத்தில் உள்ள கூட்டாளிகளில் ஒருவனுடன் இவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பிணைக்கப்பட்ட கூட்டாளியின் பெயர் ஸஹாக். அவனோ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவன். அடிமை ஒட்டிகளுக்குத் தெரியாமல் ஏசுவை நினைத்து ஜெபம் செய்பவன். தனக்குப் பதிலாகத்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பழகுகிறான் பாரபாஸ். ஸஹாக்கின் தன்மையான நடத்தை அவனைக் கவர்கிறது. ஊமைக்காயம் போல கிறிஸ்துவின் மரணம் அவனை வதைக்கிறது. ஸஹாக்கின் ஜப வழிபாடு அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. இருவரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
"ஏசு கிறிஸ்து - யார் அது?" என்று கேட்கிறார் ரோமாபுரியின் கவர்னர்.
"அவர் எங்களின் கடவுள். அவருடைய அடிமைகள் நாங்கள்" என்கிறான் ஸஹாக்.
"நீங்கள் ரோமாபுரிச் சக்ரவர்த்தி சீசரின் அடிமைகள் இல்லையா?" என்று கவர்னர் கேட்கிறார்.
"இல்லை... என் பிரபுவின் அடிமை. அவர் தான் எங்களின் கடவுள்" என்கிறான் ஸஹாக்.
"இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் கவர்னர். மௌனித்து தலை கவிழ்க்கிறான் ஸஹாக். "உன் கடவுளும் அவர்தானா?" என்று பாரபாஸைப் பார்க்கிறார்.
"இல்லை..." என்று தலையாட்டுகிறான். ஸஹாக் அதிர்ச்சியுடன் பாரபாஸைப் பார்க்கிறான். தன்னுடைய நண்பனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு சிலுவையில் அறைகிறார்கள். சித்ரவதை மூலம் ஸஹாக் கொல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்கிறான். யாருக்காகவும் கலங்காதவனின் கண்களில் ஈரம் கசிகிறது. துரோகம் செய்துவிட்டோமோ என்று யோசிக்கிறான். நாட்கள் உருண்டோடி கவர்னரின் பனிக்காலம் முடிகிறது. மாளிகை வாங்கிக்கொண்டு தலை நகரமான ரோமாபுரி செல்லும்போது பிடித்த அடிமைகளில் ஒருவனாக பரபாஸையும் அழைத்துச் செல்கிறார். தலைநகரில் மீண்டும் குற்றம் செய்து கைதியாகிறான். விசாரணைக்குப் பின் சிலுவையில் ஏற்றப்படுகிறான். ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டு விடுதலை ஆனது முதல், குற்றம் சுமத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுவது வரை பாரபாஸின் மனப்போராட்டத்தை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சொல்கிறார் பேர் லாகர் குவிஸ்ட். 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் நாவலான இதை மொழி பெயர்த்தவர் க நா சு. மொழிபெயர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தீவிர வாசகர்களால் கொண்டாடக் கூடிய படைப்பு.

பூங்குழல் பதிப்பகத்தில் 'அன்பின் வழி' என்ற பெயரிலும், மருதா பபதிப்பகத்தில் 'பாரபாஸ்' என்ற பெயரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். 'அன்பின் வழி'யில் ஏகப்பட்ட பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருக்கிறது. பதிப்பிற்கு முன் செம்மைபடுத்தி இருக்கலாம். அவன், அவள், அவர்கள் போன்ற வார்த்தைகளை வாரியிறைத்து வாசக அனுபவத்தை சோதிக்கிறார்கள். மருதாவில் நான் வாசித்ததில்லை. எனவே அதைப் பற்றிய கருத்தை சொல்வதற்கில்லை.
தொடர்புடைய பதிவுகள்:
1. அன்பின் வழி - கார்த்திக் சரண்
2. பாரபாஸ் - புத்தகம் கிடைக்கிறது
பேர் லாகர் குவிஸ்ட் 1891 - 1974
ஸ்வீடன் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நாடகாசிரியருள் "Par Lagerkvist" முக்கியமானவர். இவர் 1891-ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த "வாக்ஸ் ஜோ" என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புரட்சி மனப்பான்மையுடன் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், சிறுகதைகள் இயற்றித் தமது இலக்கியப் பணியைத் தொடங்கினார். கடுமையான நேரம் (1918), சொர்கத்தின் ரகசியம் (1919), மீண்டும் வாழ்ந்தவன் (1928), தூக்குக்க்கரன் (1934), ஆன்மா அற்ற மனிதன் (1938) போன்றவை இவருடைய முக்கியமான படைப்புகள். நாடக ஆசிரியராக மட்டுமல்லாமல் சிறந்த நாடகாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் விளங்கினார். 'அன்பு வழி' என்ற நாவல் அவருக்கான உலகப் புகழையும் பெற்றுத் தந்தது.
"நான் யார்?" - இந்தக் கேள்விக்கான பதில் அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்தது. ஒரே இடத்தில் உண்டு கழித்து ஊரை ஏமாற்றும் போலிகளுக்கோ, உச்சத்தைத் தொட்டு உலகப்புகழ் பெற்று தனிமை தேடும் வேஷதாரிகளுக்கோ மட்டும் இந்தப் புதிர்கேள்வி நிம்மதியைக் கெடுக்கவில்லை. தன்னை ஆணாகவும் சொல்லிக்கொள்ள முடியாமல், பெண்ணாகவும் சொல்லிக் கொள்ள முடியாமல் அல்லல்படும் அர்த்தநாரிகளைத் தான் பெரிதும் அலைக்கழிக்கிறது.
ஆணின் உடலில் பெண்ணின் உணர்வுகளை சுமப்பவர்கள் பூவுலகின் துருதுஷ்டசாலிகள். அவர்களின் உளவியல் சார்ந்த அகவலி சொல்லில் கடக்க முடியாத ஒன்று. இதிகாசத்திலிருந்தே அரவாணிகளின் இருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீஷ்மரை பழிவாங்கும் பொருட்டு பேடியாக சிகண்டி அவதரிக்கிறான், தேவ கன்னிகையின் காம உணர்வை நிராகரித்த காரணத்தினால் ஆண்மை நிரம்பிய அர்ஜுனன் ஒரு வருட காலம் நபும்சகனாக வாழ்கிறான், பஞ்சபாண்டவர்களைக் காக்கும்பொருட்டு மோகினியாக கிருஷ்ணன் மாறுகிறான், ஆயிரத்தொரு இரவுகளிலும் திருநங்கைகள் வருகிறார்கள், இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பொம்மைகளாக ஆட்டி வைத்த அலிகளைப் பற்றியும், மாலிக் கபூர் என்ற அலி அரசாண்டதைப் பற்றியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களுடைய வலி, சமூகச் சிக்கல், உளவியல் ரீதியான போராட்டத்தைத் தொட்ட படைப்பாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் - திருமூலர். (மேலும் படிக்க...)
வலியார் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை
அலியாகி ஆடியுண்பார் - நாலடியார்.
"அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது" என்றாள் ஓளவை.
திருநங்கைகள் வாழ்ந்து அல்லல் பட்டதற்கு இதுபோன்ற சங்க வரிகளே சாட்சி. திருமூலர் சொல்லவரும் விஷயத்தில் எதிர்மறை கருத்துக்கள் தோன்ற வழி இருந்தாலும், நாலடியாரின் வரிகள் ஆதிகாலத்திலிருந்தே அலிகள் வாழ நேர்ந்த அவல வாழ்க்கையை உணர்த்தும்படி உள்ளது. அதனைப் பளிங்குக் கண்ணாடிபோல தெளிவுபடுத்துகிறது ஓளவையின் வரிகள்.
கல்லூரி முதலாமாண்டு என்று நினைக்கிறேன். நா.காமராசன் அவர்களின் "காகிதப் பூக்கள்" பாடத் திட்டத்தில் இருந்தது. அலிகளின் அவல நிலையை எடுத்துரைத்த உருவகக் கவிதையின் சில வரிகள்...
மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?
மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்
ஊமை ஒரு பாடல் பாட, கையில்லாத ஒருவன் அதை எழுதிவைக்க, முழுக்குருடர் வாசிக்க நீங்கள் கேட்டதுண்டா. நாங்கள் ஊமையின் பாட்டானோம். முடவர்களால் எழுதப்பட்டு முழு குருடர்கள் வாசிக்கின்றனர் என்று செல்லக் கூடிய கவிதையின் இறுதிப் பகுதி கொடுக்கக்கூடிய படிமமும், அர்த்தமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.
தலைமீது பூவைப்போம்
தரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்
தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.
நாற்றம் மிகுந்த பூக்களை தலையில் சூடினாலும் உயிரற்ற பிணத்திற்கு சமமானவர்கள் நாங்கள். கல்லறைக்கு மலர் தூவி வணங்குவதும் முறைதானே? நாங்களெல்லாம் உயிர் சுமக்கும் கல்லறைகள். தாய்மை மனம் வீசுவதால் முலைப் பால் கொடுப்பவர்கள் முல்லைப்பூ போன்றவர்கள். குழந்தையில்லா ஏக்கத்தில் வாழும் பெண்கள் கூட தாழம்பூ போன்றவர்கள். அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கும். வார்த்தை ஜாலம் செய்யக் கூடிய நாங்களோ வாசனையில்லாத காகிதப் பூக்களைப் போன்றவர்கள் என்று கவிதை முடியும்.
பள்ளியில் படிக்கும்பொழுது சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியுடன் சேர்த்து "மஞ்சள், வெள்ளை, ரோஸ்" என்று பல நிறங்களில் காகிதப் பூக்களை சேர்த்துக் கட்டி கொடியேற்றிய ஞாபகம் இருக்கிறது. சேர்த்துக் கட்டிய கொடியானது உச்சத்தைத் தொட்டு, சுருக்கம் தளர்ந்து பறக்கும் பொழுது, காகித மலர்களும் காற்றின் திசையில் பறக்கும். விழாக்கால வண்ண மலர்கள் போல இந்தியத் திருநங்கைகளும் குடும்ப அமைப்பில் கட்டுண்டு தான் கிடக்கிறார்கள். நீரின் அடியில் அழுத்தி பிடிக்கப்பட்ட ரப்பர் பந்து போல எவ்வளவு நாட்கள் தான் இறுக்கத்துடன் வாழ்வது. பிடி தளர்ந்து மேல்பரப்பை அடைவது போல சிலரால் மட்டுமே சுதந்திரமாக வெளிவர முடிகிறது.
வீட்டை விட்டு வெளியேறி, ஆண் என்பதற்கு அடையாளமாக உள்ள உறுப்பை அறுத்தெறிந்துவிட்டு முழுப்பெண்ணாக மாறுகிறார்கள். சுதந்திரப் பறவைகளாக வாழ நினைக்கும் திருநங்கைகள் வாழும் இடம் எப்படிப்பட்டது? அவர்களுடைய உறவுமுறையாக யாரெல்லாம் அமைகிறார்கள்? அபாயகரமான அறுவைச் சிகிச்சையின் வழிமுறை என்ன? அவர்களுடைய கலாச்சாரம் என்ன? என்பது போன்ற நுண்ணிய சித்தரிப்புகளைக் கொண்டு தமிழில் வெளிவந்த நாவல்கள் இரண்டு. ஆனந்த விகடனில் சு சமுத்திரம் எழுதி தொடராக வெளிவந்த வாடாமல்லி மற்றும் நண்பர் பாலபாரதி எழுதி வெளிவந்த அவன்-அது=அவள். திருநங்கைகளின் யதார்த்த சிக்கல்களை அவர்களுடைய துயரங்களை ஆவணமாக்கிய விதத்தில் இரண்டுமே முக்கியமான நாவல்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயவரலாறும் இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான புனைவல்லாத முயற்சி.
வாடாமல்லியின் 'சுயம்பு' மேகலையாக மாறும்வரை பிரம்மிப்பு அகலாது. இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருக்கும். திடீர் பணக்காரி, இரண்டு போலீஸ் சண்டை, ஒரு புரட்சி, அரவாணிகள் எழுச்சி, அதைத் தொடர்ந்த போராட்டம் என்று மேகலையை தலைவியாக்கி முடித்திருப்பார். "யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?" என்று யோசிக்கும்படி இருக்கும். அவன்-அது=அவள் - கோபி, கோமதியாக மாறி எந்த புரட்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் அரவாணிகளின் யதார்த்தக் குறியீடாக நாவல் முழுவதும் வளர்ந்து வருவாள். கூவாகத்தில் வன்கலவி செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் கோபியை தனம் தத்தெடுப்பது முதல், மும்பைக்கு சென்று பிச்சை கேட்டு வாழ்வது, சேலாவாக தத்தெடுக்கப்பட்டு நிர்வாணம்(உறுப்பு நீக்கம்) செய்வது, பத்திரிகையாளரின் மீது காதல் ஏற்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதுவரை இலகுவான மொழியியில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் தன்மை வெளிப்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து வெளியில் வந்தவர்கள், குடும்பமாக வாழ ஆசைப்படுவதும், ஆண் துணைக்காக ஏங்குவதும், உண்மையான கணவன் அமைவது திருநங்கைகளுக்கு சாத்தியமில்லை என்பதையும் நுட்பமாக சொல்லியிருக்கிறார்.
அழுத்தமான சமூகப் பிரச்சனையின் துவக்க முயற்சி எனும் வகையில் நாவலில் சில குறைகள் இல்லாமல் இல்லை. பாலபாரதி முன்னுரையில் சொல்லியது போல, இந்தப் படைப்புகள் அரவாணிகள் குறித்த மரியாதையை இலக்கியச் சூழலிலும், சினிமா சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தினால் அதைவிட பெரிய சந்தோசம் படைப்பாளிகளான இவர்களுக்கு இருக்கப்போவதில்லை. மாறாக இலக்கியத்தின் உச்சப் படைப்பாக இவைகள் கொண்டாடப்படுவதால் பாலபாரதி போன்ற படைப்பாளிகள் உச்சிக் குளிரப் போவதில்லை. திருநங்கைகள் குறித்த சரியான அர்த்தத்தை தெரிந்தவர்களாக நாம் எப்போதும் இருந்ததில்லை. கூவாகத் திருவிழாவைக் கூட செக்ஸ் திருவிழாவாகத்தானே பார்க்கிறோம். மையத்தை உடைக்கும் விதமாக சந்தோஷ் சிவன் இயக்கி தேசிய விருது பெற்ற 'நவரசா' போன்ற திரைப்படம் அரவாணிகள் குறித்த யதார்த்தக் கருத்தை முன்வைக்கின்றன. என்றாலும் தேடித் பார்ப்பவர்கள் இருந்தால் தானே?
திருநங்கைகளான சக்தி பாஸ்கர், நர்த்தகி நடராஜன் ஆகியோரை ஸ்வீகாரம் எடுத்துள்ள நடிகை, பேச்சாளர், எழுத்தாளர் ரேவதி சங்கர் நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம். பிரம்மச்சரியத்தை பேசுபவர் கலவியில் ஈடுபடுவதையோ, யாராவது சாமியார் மாதிரி இமயமலை செல்வதையோ, அவர் எதில் பல் துலக்குகிறார்? அதை எங்கு கொப்பளிக்கிறார்? சாப்பிடுவது என்ன? கக்காவை எங்கே கழிக்கிறார்? எந்த பாறையின் இடுக்கில் தவம் செய்கிறார்? என்பதையும், அரைகுறை ஆடையுடன் பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சீமாட்டி பற்றியோ, விளையாட்டு வீரனின் சாகசத்தைப் பற்றியோ, செய்தியாக வெளியிட்டு முன்பக்கத்தை அலங்கரிக்கும் நாளேடுகளும், இதழ்களும், மீடியாக்களும் ரேவதி சங்கரனின் இது போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
"ஒம்போது, பொட்டை, 50-50, உஸ்ஸு, அலி, கொக்கரக்கோ" - போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அடுத்தவர் மனதினைக் காயப்படுத்தும் எனில் அவற்றின் பயன்பாடு தேவையா? என்பதையும் யோசிக்கலாமே.
தொடர்புடைய பதிவுகள்:
1. பாலபாரதியைப் பற்றிய விவரங்கள்...
2. பாலபாரதியின் இணையத்தளம்...
3. அவன் – அது = அவள் :: பாஸ்டன் பாலா பக்கம்
வெளியீடு: தோழமை பதிப்பகம்,
முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,
செல்பேசி: 94443 02967,
விலை: ரூ. 120.
சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.
அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.
கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.
காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.
உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?
"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."
நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...
"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."
உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?
"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."
இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.
"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."
ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?
"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."
Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.
"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."
அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...
"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."
அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?
"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."
அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...
"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"
அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?
"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"
அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.
திருநங்கை - பயணங்கள்
உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.
பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.
வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: லிவிங்ஸ்மைல் வித்யா.
தொடர்புடைய பதிவு:
நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்
‘நான் சரவணன் வித்யா’
ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா
விலை: 100 ரூபாய்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.
ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html
தஞ்சை வாழ் மக்களுக்கு கலையார்வம் அதிகம். கேபிள் சங்கர் மட்டும் விதிவிலக்கா என்ன? "சினிமாவின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.
"அதற்கு என் தந்தைதான் காரணம், மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அளவில்லா சினிமா காதல் உள்ளவர். நடிகர், நாடகாசிரியர், ஒரு திரைப்படம் இயக்கி அது பாதியில் நின்றிருக்கிறது. அவரின் ஆர்வம்தான் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது" என்று சொல்லியிருந்தார்.
இவர் படித்தது Diplomo in Mechanical Engineering. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் என்.வி.நடராஜன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பின் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனமும், கடா எனும் படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு பெயரிடபடாத படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
ப்ரான்ஸில் உள்ள 'டான்' எனும் தமிழ் சேனலுக்காக 'நிதர்சனம்' எனும் குறும்படமும், மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட 'மெளனமே...', அதற்கடுத்து எடுத்த ஆக்ஸிடெண்ட் எனும் குறும்படமும் இவருடைய குறிப்பிடத் தகுந்த படைப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சிறு வேடமேற்று நடித்தவர். 'உயிரே கலந்தது' - சென்னை ஏரியாவுக்கும், 'எங்கள் அண்ணா' - செங்கல்பட்டு ஏரியாவுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விநியோகஸ்தராக செயல்பட்டவர்.
வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, குறும்பட இயக்குனராக, நடிகராக ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் விநியோகஸ்தரான அவருடைய அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அவையனைத்தையும் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறார். வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது. பதிவுகளின் தொகுப்பு கிழக்கு வெளியீட்டின் மூலம் புத்தகமாகக் கிடைக்கிறது.
சினிமா வியாபாரம் - அறிமுகம், 1, 2, 3, 4, 5
தெருக்கூத்து, தப்பாட்டம், காவடிச் சிந்து, நாட்டியம், பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவத்தை விடியவிடிய கண்விழித்துப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அப்படி இருக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் காட்சி ஊடகமான சினிமா முதலிடம் வகிப்பதில் ஆச்சர்யம் இல்லை. 200 கோடியில் தயாராகும் சினிமா முதல், 2 கோடியில் தயாராகும் சினிமா வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் வெளியாகிறது. இவற்றில் வந்த சுவடு தெரியாமல் பெட்டியில் பதுங்குபவை சில. வெள்ளி விழா, வைர விழா என்று பாராட்டைப் பெறுபவை ஒரு சில.
இளைய தளபதி என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் நடித்த "காவலன்" திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே. திரைப்படத்தை வெளியிட அரங்குகள் கிடைக்கவில்லை. கார்போரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. லீனா மணிமேகலையின் "செங்கடல்" தணிக்கை குழுவினரால் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி, கதை திருடுதல், பைனான்சியர் பிரச்சனை போன்ற பல சிக்கல்களையும் தாண்டி ஒரு படத்தின் வெற்றி , தோல்வி நல்ல கதையம்சத்தாலும், பார்வையாளனாலும் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை... அது தவறு என்பதை விளக்க போதுமான ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
***************************************************************
பின்னட்டை வாசகம்:
பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவி-க்கு வந்துவிடுகின்றன. எனில், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர் யார்?
விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப் போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்க்ஷனை குவிக்க வேண்டுமா என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.
கோடி கோடியாப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது, வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சமன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ஒரு திரைப்படம் எப்படி எல்லாம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணனின் இந்தப் புத்தகம் திரைத் துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஓர் அத்யாவசியக் கையேடு.
முன்னட்டை வாசகம்:
தியேட்டரில் படத்தைத் திரையிடுவது, டிவி சேனலுக்கு விற்பது மட்டுமல்ல DVD/VCD உரிமை, ஆடியோ கேசட்/ CD உரிமை, இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமை, பிறமொழி மாற்று உரிமை, ரீமேக் உரிமை, பேருந்து / ரயில், விமான ஒளிபரப்பு உரிமை, மெர்சண்டைசிங் உரிமை, ரேடியோ ஒலிபரப்பு உரிமை என பல வழிகளிலும் தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கலாம். நான் நன்கு அறிந்த சினிமாவின் அறியாத வியாபாரப் பக்கங்கள்.
***************************************************************
"சினிமா என்பது மற்ற வியாபாரம் மாதிரி கிடையாது. வித்தியாசமான வியாபாரம். வீடு கட்டி விற்பது மாதிரி இல்லை. கோடி கோடியாய் சம்பாதித்து விடலாம் என யாரும் இந்த துறைக்கு வந்து விடாதீர்கள். கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம். சில வியாபாரங்களில் மட்டும்தான் சந்தோஷம் கிடைக்கும்" - இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் கமல்ஹாசன். இங்கு ஒரு சூஃபிக் கவிதையை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
"பாதுகாப்பு வேண்டுமென்றால், கரையில் நில்
பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுள் செல்."
-சூஃபி கவிஞர் சா' அதி
சினிமா என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் விஷயம். சினிமாவின் ஏதேனும் ஒரு கூறு நம்மை நொடிக்கு நொடி சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனினும் அவற்றை வியாபாரம் செய்வது அச்சுறுத்தல் நிறைந்தது. அதனைத் தெரிந்து கொள்ள உதவும் கையேடு தான் இந்தப் புத்தகம்.
தொடர்புடைய பதிவுகள்:
1. திரைப்படத் தொழில் - தினேஷ்
2. சினிமா வியாபாரம் - பரிசல்காரன்
3. சினிமா வியாபாரம் - அகநாழிகை
சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-
கே.பாலசுப்ரமணியன் தேனி மாவட்டக்காரர். எழுத்துலகில் பாலுசத்யா என்று அறியப்படுபவர். போடி நாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியில் படித்தபொழுது பாஸ்கர் சக்திக்கு சீனியர். கல்கியில் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராக பணியாற்றியவர். ஜூலி கணபதி போன்ற படங்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
பாலுசத்யா: http://balusathya.blogspot.com
அ-புனைவு சார்ந்த பாராவின் பயிலரங்கத்தில் தான் பாலு சத்யாவை முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு பின் இருக்கையில் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். நெற்றியின் குறுக்கில் ஓடிய திருநீர் சாந்தமான முகத்தை இன்னும் நெருக்கமாக்கியது. அன்று பேசியதென்னவோ ஒரு சில வார்த்தைகள் தான். அதன் பிறகு கடந்த புத்தகக் கண்காட்சியில் தான் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. வேறெதோ புத்தகம் தேடச்சென்று "கண்பூக்கும் தெரு" என்ற பாலு சத்யாவின் புத்தகம் வம்சி பதிப்பகத்தில் அகப்பட்டது. தொகுப்பிலுள்ள முதல் இரண்டு கதைகளை படித்துப் பார்த்தேன். சூழ்நிலைகளின் உடும்புப் பிடியில் சிக்கிக்கொண்டு இயல்பான தளர்வை எதிர்நோக்கும் எளிய மனிதர்களையும், அவர்களுடைய அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளையும் தனது படைப்பில் பதிவு செய்திருந்தார். கண்காட்சியின் அடுத்தடுத்த நாட்களில் பாலு சத்யாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கதா மாந்தர்களின் உரையாடலையும், சம்பவத்தைக் காட்சிப் படுத்துதலையும் சிறப்பாகச் செய்திருந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அம்ருதாவில் கிடைக்கும் என்று தெரிவித்தார். உடன் வருமாறு அழைத்துச் சென்று அவற்றையும் வாங்கினேன்.
கண்பூக்கும் தெரு (வம்சி பதிப்பகம் - 50 ரூபாய்.)
காலம் வரைந்த முகம் (அம்ருதா பதிப்பகம் - 65 ருபாய்)
பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா பதிப்பகம் - 80 ரூபாய்)
பிழைக்க வழியில்லாமல் விபசாரத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், தரகுப் பெண்களாக பிழைப்பவர்கள் (சந்தை, யாவரும் கேளிர்), மரபான ஆண்களின் ஒடுக்கு முறையிலிருந்து புது உலகைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் (புது மனுஷி, பாம்புகள்), தாயின் முகம் பதிந்த குழந்தை மனதின் தவிப்பு (நிழல் படிந்த மனம்), குழந்தைத் தொழிலாளியாக சிறுவன் அனுபவிக்கும் பாலியல் வேதனை (குருவிகளும் வலைகளும்), பதின் பருவத்தின் பாலியல் வேட்கையைத் தீர்ந்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள் (விமோசனம்), கனவுத் தொழிற்சாலையில் சாதிக்கத் துடித்து நிறம் மங்கிய வாழ்க்கையை வாழும் திரைக் கலைஞர்கள் (சர்க்கஸ், தினசரி நகரம், காலம் வரைந்த முகம்), பொருளீட்டுவதற்காக பெரு நகரம் சென்று அல்லல்படும் வெள்ளந்தி மனிதர்கள் (உங்கள் நண்பன், சீவன்) என்று பல்வேறு கலங்கிய மனம் சார்ந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்தரிக்கும் கதைகள் இவருடையது.
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும் "கல்கி, குங்குமம், த சண்டே இந்தியன், ஆனந்த விகடன், தீக்கதிர் - வண்ணக்கதிர், புதிய பார்வை, குமுதம் டாட் காம், தினமணி கதிர், குமுதம் ஜங்க்ஷன், க்ருஹ ஷோபா, காலம், தமிழ் டைம்ஸ், தீம் தரிகிட, தீபாவளி மலர்" போன்ற இதழ்களில் வெளியானவை. சிறுகதைகளுக்கான முக்கிய பரிசுகள் பெற்ற படைப்புகள் 'காலம் வரைந்த முகம்' என்ற தொகுப்பில் இருக்கிறது.
"விமோசனம்" - விபச்சார விடுதியில் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு கணேசன் தனது நண்பனான செல்வத்துடன் தேனிக்கு செல்கிறான். முதல் முறையாக பெண்களிடம் உறவு கொள்ளச் செல்லும் கணேசனின் உளவியலையும், பாதுகாப்பில்லாமல் பலமுறை பெண்களிடம் பாலியல் உறவு கொண்ட செல்வத்தின் அஜாக்ரதையான போக்கையும் மையப்படுத்தி எயிட்ஸ் விழிப்புணர்வு சார்பாக எழுதப்பட்ட சிறுகதை. இது தினமணி கதிர் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு & கட்டுப்பாட்டுத் திட்டம் (APAC-UHS-USAID) இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
"காலி நாற்காலி" - யதார்த்தமான கதை. முடிதிருத்தம் செய்யும் ஒருவன் மூப்பினை எட்டியதால், முடி திருத்தம் செய்ய சலூனுக்கு வரும் நபர்களால் ஓரங்கட்டப்படுகிறான். தொழிலை கற்றுக்கொண்டு தலையெடுத்த மகன் கூட எடுபுடி வேலைக்காக தந்தையை பயன்படுத்துகிறான். அன்பும் மரியாதையும் கிடைக்காமல் உள்ளுக்குள் குமுறும் வயோதிக சிகை அலங்காரக் கலைஞரின் அகச் சிக்கல்களைச் சித்தரிக்கும் கதை. இது இலக்கிய வீதி அமைப்பால் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
"விளிம்பு" - மதுவினைக் குடித்துவிட்டு, கடன் தொல்லையால் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தச் சிறுகதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இலக்கிய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று பிரசுரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை.
"உங்கள் நண்பன்" - தங்களுடைய சேமிப்பை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, நகர வாழ்வின் போக்கில் பயணிக்கும் சாதாரண மனிதர்கள் பற்றியது. மாதக் கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்ளும் அண்டை வீட்டாரை அங்கிருந்து மீட்டு வரும் நடுத்தர வர்கத்தின் கதை. இது அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.
பாலு சத்யா, அதிகம் கவனிக்கப்படாத நல்ல சிறுகதைப் படைப்பாளி. மூன்று தொகுப்புகளிலும் உள்ள 43 சிறுகதைகளில், ஒரு சில கதைகள் தொய்வாகத் தெரிந்தாலும் பெரும்பாலான கதைகள் அதன் போக்கில் நம்மை வசீகரிக்கின்றன. தற்போது இவர் புனைவல்லாத புத்தகங்களும் எழுதுகிறார். அவையனைத்தும் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.
இவருடைய ஒரு சில கதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது...
பழைய காலண்டரில் இரு தினங்கள் - ஆனந்த விகடன்
கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு - கல்கி தீபாவளி மலர்
தமிழில்: குளச்சல் மு யூசுப்
காலச்சுவடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூபாய் 150/-
கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.
விளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.

1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.
விடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.ஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன். "உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா? 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா? எத்தனை பல்கலைக் கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்? 930 -க்கும் மேல். உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்."புள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.
மூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.
ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.
தொடர்புடைய இதர பதிவுகள்:
1. பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்
2. ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா
எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை மாற்றுத் திறநாளிகளின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மேலும் தொடரவும்.
இருளில் - அ முத்துலிங்கம்
"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்" - அ.முத்துலிங்கம் (வியத்தலும் இலமே)
சிலருடைய கடுமையான உழைப்பைப் பார்க்கும் பொழுது வியக்கத்தான் முடிகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சில் க்ரியா பதிப்பகம் என்னுடைய நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டது. கவிஞர் ஆசைத்தம்பி நான் எழுப்பிய பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றும் அப்படித்தான் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பார்வை மாற்றுத் திறனாளி நடந்து வரவும் பேச்சை நிறுத்தினார். க்ரியா அரங்கினை நெருங்கவும் ஓடிச்சென்று அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ப்ரெயில் அகராதியை அவருக்குக் காண்பித்தார். அந்த நண்பர் கைகளால் தடவி அழகாக வாசித்தார். அருகில் இருந்த குழந்தை "உங்களால் வாசிக்க முடிகிறதா அப்பா? என்றாள்.
"பிரெய்ல் வடிவத்தில் 54 மொழிகளை வாசிக்க முடியும் குட்டி" என்று மகளுக்குக் கூறினார். புத்தகத்தைத் தடவிய விரல்கள் குழந்தையின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "செருப்பு தைக்கும்போது லூயிஸ் ப்ரைல்லே என்பவருக்கு ஊசி கண்ணில் பட்டுடுச்சி. பிறகு அந்த கண்ணு தெரியாம போச்சி. கொஞ்ச கொஞ்சமா அடுத்த கண்ணும் தெரியாம போச்சி. கண்ணு தெரியாதவங்க படிக்க ஒரு வடிவம் வேணும்னு இந்த டெக்னிக் கண்டுபிடிச்சாரு. அது சக்சஸ் ஆயிடுச்சி. அதனால இந்த மொழிக்கு ப்ரைய்ல்ன்னு பேரு வந்துடுச்சி" என்று குழந்தைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
"அவருடைய உறவினர் ஓடிவந்து வாங்கிக்கலாமா?" என்று கேட்டார்.
"இப்போ வேண்டாம். வெல அதிகம். வேணும்னா பிறகு வாங்கிக்கலாம்" என்றவாறு வேறு அரங்கிற்கு நகர்ந்தார். தற்போது இந்த அகராதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 53 தொகுதிகளாக இருக்கும் அகராதியின் விலை ரூ.15,000. இதர விவரங்கள் பின்வருமாறு...
பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008)
1) இந்தப் பதிப்பை மதுரையில் இருக்கும் Indian association for the blind சங்கம் வெளியிட்டிருக்கிறது.
2) இந்தப் பதிப்பின் தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் மானியமாக பதினோரு லட்சம் ரூபாயை IAB சங்கத்துக்கு காக்னிசென்ட் அறக்கட்டளை அளித்தது.
3) பிரெய்ல் வடிவத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான எண்வயப் பிரதியையும், காப்புரிமை அனுமதியையும் கட்டணம் ஏதுமின்றி க்ரியா IAB சங்கத்துக்குத் தந்துள்ளது.
4) இந்தப் பிரெய்ல் வடிவப் பிரதிகள் தமிழ்நாட்டில் பார்வையற்றோருக்கான 20 பள்ளிகளுக்கும், பார்வையற்றோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் 20 நிறுவனகள்/உயர்நிலைக் கல்வி நிலையங்களுக்கும் இலவசமாகத் தரப்படும்.
5) இந்திய மொழி ஒன்றில் பிரெய்ல் வடிவத்தில் அகராதி வெளியாவது இதுவே முதல் முறை.
6) பிரெய்ல் வடிவத்தில் க்ரியா அகராதி 53 தொகுதிகளாக இருக்கும்.
கோவில் மாடு மாதிரி கண்காட்சியைச் சுற்றிய இத்தனை நாட்களில் ஒருநாளும் இந்த வாசகங்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்படியெனில் நான் இன்னும் ஆபாசச் சுவரொட்டியை நோட்டம் விடும் மனநிலையில் தான் இருக்கிறேனா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. ரீமாசென் குமுதத்தில் எதனை விரும்பிப் படிக்கிறார். சொக்கனை விரும்பும் 2 பீஸ் வாசகி யார்? போன்ற விளம்பரங்கள் தானே கண்ணில் பட்டது. (திருமதி சொக்கன் இதனைப் படிக்காமல் இருக்க வேண்டும்).
குறைந்தது 20,000 பார்வை மாற்றுத் திறநாளிகள் நம்முடன் கல்வி கற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அரசே சிறு அகராதியை வடிவமைத்து விநியோகிக்கலாம். லட்சம் குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிக் கொடுத்து மக்களை மகிழ்விக்கும் ஸ்திரமான அரசு இயந்திரம் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தலாம்.
இந்த அகராதியைக் கொண்டுவர உழைத்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.