Friday, January 28, 2011

பாலு சத்யா சிறுகதைகள்

கே.பாலசுப்ரமணியன் தேனி மாவட்டக்காரர். எழுத்துலகில் பாலுசத்யா என்று அறியப்படுபவர். போடி நாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியில் படித்தபொழுது பாஸ்கர் சக்திக்கு சீனியர். கல்கியில் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராக பணியாற்றியவர். ஜூலி கணபதி போன்ற படங்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாலுசத்யா: http://balusathya.blogspot.com

அ-புனைவு சார்ந்த பாராவின் பயிலரங்கத்தில் தான் பாலு சத்யாவை முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு பின் இருக்கையில் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். நெற்றியின் குறுக்கில் ஓடிய திருநீர் சாந்தமான முகத்தை இன்னும் நெருக்கமாக்கியது. அன்று பேசியதென்னவோ ஒரு சில வார்த்தைகள் தான். அதன் பிறகு கடந்த புத்தகக் கண்காட்சியில் தான் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. வேறெதோ புத்தகம் தேடச்சென்று "கண்பூக்கும் தெரு" என்ற பாலு சத்யாவின் புத்தகம் வம்சி பதிப்பகத்தில் அகப்பட்டது. தொகுப்பிலுள்ள முதல் இரண்டு கதைகளை படித்துப் பார்த்தேன். சூழ்நிலைகளின் உடும்புப் பிடியில் சிக்கிக்கொண்டு இயல்பான தளர்வை எதிர்நோக்கும் எளிய மனிதர்களையும், அவர்களுடைய அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளையும் தனது படைப்பில் பதிவு செய்திருந்தார். கண்காட்சியின் அடுத்தடுத்த நாட்களில் பாலு சத்யாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கதா மாந்தர்களின் உரையாடலையும், சம்பவத்தைக் காட்சிப் படுத்துதலையும் சிறப்பாகச் செய்திருந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அம்ருதாவில் கிடைக்கும் என்று தெரிவித்தார். உடன் வருமாறு அழைத்துச் சென்று அவற்றையும் வாங்கினேன்.


கண்பூக்கும் தெரு (வம்சி பதிப்பகம் - 50 ரூபாய்.)
காலம் வரைந்த முகம் (அம்ருதா பதிப்பகம் - 65 ருபாய்)
பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா பதிப்பகம் - 80 ரூபாய்)

பிழைக்க வழியில்லாமல் விபசாரத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், தரகுப் பெண்களாக பிழைப்பவர்கள் (சந்தை, யாவரும் கேளிர்), மரபான ஆண்களின் ஒடுக்கு முறையிலிருந்து புது உலகைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் (புது மனுஷி, பாம்புகள்), தாயின் முகம் பதிந்த குழந்தை மனதின் தவிப்பு (நிழல் படிந்த மனம்), குழந்தைத் தொழிலாளியாக சிறுவன் அனுபவிக்கும் பாலியல் வேதனை (குருவிகளும் வலைகளும்), பதின் பருவத்தின் பாலியல் வேட்கையைத் தீர்ந்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள் (விமோசனம்), கனவுத் தொழிற்சாலையில் சாதிக்கத் துடித்து நிறம் மங்கிய வாழ்க்கையை வாழும் திரைக் கலைஞர்கள் (சர்க்கஸ், தினசரி நகரம், காலம் வரைந்த முகம்), பொருளீட்டுவதற்காக பெரு நகரம் சென்று அல்லல்படும் வெள்ளந்தி மனிதர்கள் (உங்கள் நண்பன், சீவன்) என்று பல்வேறு கலங்கிய மனம் சார்ந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்தரிக்கும் கதைகள் இவருடையது.

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும் "கல்கி, குங்குமம், த சண்டே இந்தியன், ஆனந்த விகடன், தீக்கதிர் - வண்ணக்கதிர், புதிய பார்வை, குமுதம் டாட் காம், தினமணி கதிர், குமுதம் ஜங்க்ஷன், க்ருஹ ஷோபா, காலம், தமிழ் டைம்ஸ், தீம் தரிகிட, தீபாவளி மலர்" போன்ற இதழ்களில் வெளியானவை. சிறுகதைகளுக்கான முக்கிய பரிசுகள் பெற்ற படைப்புகள் 'காலம் வரைந்த முகம்' என்ற தொகுப்பில் இருக்கிறது.

"விமோசனம்" - விபச்சார விடுதியில் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு கணேசன் தனது நண்பனான செல்வத்துடன் தேனிக்கு செல்கிறான். முதல் முறையாக பெண்களிடம் உறவு கொள்ளச் செல்லும் கணேசனின் உளவியலையும், பாதுகாப்பில்லாமல் பலமுறை பெண்களிடம் பாலியல் உறவு கொண்ட செல்வத்தின் அஜாக்ரதையான போக்கையும் மையப்படுத்தி எயிட்ஸ் விழிப்புணர்வு சார்பாக எழுதப்பட்ட சிறுகதை. இது தினமணி கதிர் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு & கட்டுப்பாட்டுத் திட்டம் (APAC-UHS-USAID) இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

"காலி நாற்காலி" - யதார்த்தமான கதை. முடிதிருத்தம் செய்யும் ஒருவன் மூப்பினை எட்டியதால், முடி திருத்தம் செய்ய சலூனுக்கு வரும் நபர்களால் ஓரங்கட்டப்படுகிறான். தொழிலை கற்றுக்கொண்டு தலையெடுத்த மகன் கூட எடுபுடி வேலைக்காக தந்தையை பயன்படுத்துகிறான். அன்பும் மரியாதையும் கிடைக்காமல் உள்ளுக்குள் குமுறும் வயோதிக சிகை அலங்காரக் கலைஞரின் அகச் சிக்கல்களைச் சித்தரிக்கும் கதை. இது இலக்கிய வீதி அமைப்பால் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

"விளிம்பு" - மதுவினைக் குடித்துவிட்டு, கடன் தொல்லையால் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தச் சிறுகதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இலக்கிய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று பிரசுரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை.

"உங்கள் நண்பன்" - தங்களுடைய சேமிப்பை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, நகர வாழ்வின் போக்கில் பயணிக்கும் சாதாரண மனிதர்கள் பற்றியது. மாதக் கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்ளும் அண்டை வீட்டாரை அங்கிருந்து மீட்டு வரும் நடுத்தர வர்கத்தின் கதை. இது அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.

பாலு சத்யா, அதிகம் கவனிக்கப்படாத நல்ல சிறுகதைப் படைப்பாளி. மூன்று தொகுப்புகளிலும் உள்ள 43 சிறுகதைகளில், ஒரு சில கதைகள் தொய்வாகத் தெரிந்தாலும் பெரும்பாலான கதைகள் அதன் போக்கில் நம்மை வசீகரிக்கின்றன. தற்போது இவர் புனைவல்லாத புத்தகங்களும் எழுதுகிறார். அவையனைத்தும் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

இவருடைய ஒரு சில கதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது...

பழைய காலண்டரில் இரு தினங்கள் - ஆனந்த விகடன்
கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு - கல்கி தீபாவளி மலர்

4 comments:

Prasanna Rajan said...

பாலு சத்யாவை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரின் சிறுகதை அறிமுகத்திற்கு மிக்க நன்றி கிருஷ்ணா...

Unknown said...

திருகல் நடையில்லாத எளிமையான, அதே சமயத்தில் நுண்ணிய சித்தரிப்புகள் கொண்ட பாதிக்கக் கூடிய கதைகள். அவசியம் படித்துப் பாருங்கள்.

உதாரணமாக, பதிவில் சுட்டியுள்ள "கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு" என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

பாலு சத்யா கதைகளைப் படித்திருக்கிறேன் மா. எளிமையும் புரியும் விதத்தில் அமைதிருக்கும் வரிகள் வார்த்தைகள். அவரை மீண்டும் அறிமுகம் செய்து கொள்வதில் பெருத்த மகிழ்ச்சி. நன்றி மா. கிருஷ்ண பிரபு.

Sakthi said...

emathu valai pakkathirkku vanthamaikku nandri, ungaludaya padaippugalai pdikka thodangi ullen, karuthai eluthuven.