
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
எழுத்தாளர் ஜெயமோகனுடைய வலைத்தளத்தை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது கோணங்கியுடனான அனுபவங்களை "கோணங்கி" என்னும் கட்டுரையில் சொல்லி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நாகார்ஜுனன் வலைதளத்தில் "கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது..." என்னும் பதிவையும் படிக்க நேர்ந்தது.
ஒருபுறம் தனக்குப் பிடித்த படைப்பாளியை (ஜெ.மோ) தேடிச்சென்று கதைக்கும் குணம், மறுபுறம் அவருடைய சிறுகதையை ஆண்டு மலரில் வெளியிட அனுமதி கேட்டு இந்திய அளவில் பிரசித்திபெற்ற ஒரு பத்திரிகையின் எடிட்டர்(வாஸந்தி) அனுப்பிய கடிதத்திற்கு சீரும் குணம். முரண்பட்ட இரண்டு கரைகளுக்கு இடையில் ஓடும் சலனமில்லா ஜீவா நதியாக இவர் எனக்குத் தோன்றினார்.
எஸ். ராமகிருஷ்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த 'கதாவிலாசம்' கட்டுரையில் தான் கோணங்கியைப் பற்றி முதன் முதலில் படிக்க நேர்ந்தது. ஆனால் அவருடைய படைப்புகள் என்று எதையும் வாசிக்காமலே இருந்தேன். தமிழின் 24 முன்னணி எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை 'முத்துக்கள் பத்து' என்ற தொகுதியாக 'அம்ருதா பதிப்பகம்' வெளியிட்டுள்ளார்கள். கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் அனைத்து எழுத்தாளர்களின் தொகுப்புகளையும் (ஜெயகாந்தனைத் தவிர) வாங்க நேர்ந்தது. அதில் எழுத்தாளர் கோணங்கியினுடைய தொகுப்பும் அடக்கம்.
"ஈஸ்வரி அக்காளின் பாட்டு, உலர்ந்த காற்று, மதினிமார்கள் கதை, மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம், நகல், கழுதையாவாரிகள், ஆறு, மணல் முகமூடி, உப்புக் கத்தியில் மறையும் சிறுகதை, நத்தைக்கூடெனும் கேலக்ஸி" ஆகிய பத்து சிறுகதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
முதல் ஏழு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. கடைசி மூன்று கதைகளும் மீள் வாசிப்பில் தான் சாத்தியமாகும். விளிம்பு நிலை மனிதர்களுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தானே வாழ்க்கை. அவற்றில் உறவுகளின் இழப்பு அவர்களின் பிரதானக் கொந்தளிப்பு. அதனை முழுவதுமாக உள்வாங்கி இலக்கியமாக்கியுள்ளார்.
குழந்தைகளின் விசேஷ உலகையும், வெகுளித்தனமான அன்பையும் இவருடைய எல்லாக் கதைகளிலும் பரவலாகக் காண முடிகிறது. சில இடங்களில் வட்டார மொழிச் சொற்களைப் பேசி திணற வைக்கிறார். அந்த ஓசையே சில இடங்களில் படைப்பிற்கான அழகைக் கூட்டுகிறது.
இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் தி.நகரிலுள்ள 'எனி இந்தியன்' மற்றும் 'நியூ புக் லேண்ட்' ஆகிய கடைகளில் கிடைக்கிறது.
அவுட்லுக்கின் பொன்விழா ஆண்டு மலரில் வெளியிடப்பட்ட இந்தியாவின் சிறந்த ஆளுமைகளில் கோணங்கியும் ஒருவர். இவரைப் பற்றி எஸ். சண்முகம் எழிதிய கட்டுரைகளைப் படிக்க கீழே செல்லவும்.
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 1
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 2